அவரவர் திராட்சை..
கார்த்தி. என்
1)
நரிக்கதை
சொன்னவன்
வானம் பார்த்து
நகர்கிறான்..
கேட்டிருந்த
குழந்தை
எம்பிப் பறிக்கிறது
மரத்திலிருந்து
சில
மழைத்துளிகளை..
2)
கொஞ்சமேனும்
மழை வைத்திருக்கிறான்
நிழற்படக்காரன்..
நனையவியலாமல்
நிறையத்
தொலைத்தும்.
3)
தூரத்துத் துளியொன்று
துல்லியமாய்க்
குவிகிறது
பத்து
மெகா பிக்ஸலுக்குள்..
சுவாரசியமில்லை
அருகில் கொட்டும்
அதே மழையிடம்
4)
கூரை வீட்டின்
உள் நுழைந்தும்
ஓட்டு வீட்டை
உரக்கத் தட்டியும்
விளையாடிக் கொண்டிருந்தது
மழை..
மாடி வீட்டுக்காரன்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
…………………………………………………………………..