This entry is in the series 20050707_Issue

பாலு மணிமாறன்


நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான அவனது கவிதைகள்.

அவனைக் கேட்காமலே
தம்மைத் தாமே
எழுதியும் கொள்கின்றன.

அவன் உடுத்தி விடும்
ஆடைகளையெல்லாம்
கழற்றி எறிந்துவிட்டு
ஒரு குழந்தை மாதிரி
அவை
நிர்வாணமாய் சிரிக்கின்றன.

சில நடக்கும், சில நடனமிடும்
சின்ன சில்மிஷங்களோடு
ஓய்ந்து போகும் சில.

ஒரு வரியோடு
படுத்தே கிடப்பதுண்டு
சில சோம்பேறிக் கவிதைகள்.

வந்த சுவடின்றி வந்துவிட்டு
வனப்புக் காட்டி, உயிர்ப்பித்து
சதையோடும், வளைவோடும்
சரசமாடி
கலந்துவிட்டுப் போகும்
சில காமுகிக் கவிதைகள்.

அறைவதும் உண்டு சில.
தெளிய சில நாள் பிடிக்கும்.

தெளிந்ததாய் நினைக்கையில்
மறுபடியும் உச்சிமயிர் பிடித்து
உலுக்கும்.
அதுவும் கவிதையே.

இப்படித்தான் என்றில்லை…
நடுவிலிருந்து
கடைசியிலிருந்து
எப்படியிருந்தோ
துவங்கிவிடுகின்றன
அவனுக்கான அவனது கவிதைகள்.

ap_cholan@yahoo.com

Series Navigation