This entry is in the series 20040715_Issue

தேவன் மலர்


பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன்
என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள
முத்தமிட்டு முத்தமிட்டு
மகிழ்கிறேன்.

பள்ளியறை பஞ்சனையில்
பாவையவள் முகமேந்தி
பவழவாய் முத்தமிட்டு
கதைகள் பலபேசி கவலையின்றி
துயில்கிறேன்.

மணியடிக்கும் ஒலிக்கேட்டு
திடுக்கிட்டு விழித்தால்
கைக்கெட்டும் தூரத்தில்
அலறுகிறது கடிகாரம்!

மறுபடியும் மறுபடியும்
அதே கனவு..
அவளொரு தேசத்தில்
நானொரு தேசத்தில்..

நிகழ்கால நிஜம் வந்து
நினைவினில் நிழலாட
விருட்டென்று எழுந்து
வேலைக்கு ஓடுகின்றேன்..
எண்ணங்கள் நினைவுகளாய்
நினைவுகள் கனவுகளாய்..!

-தேவன் மலர். சிங்கப்பூர்-

Series Navigation