நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஆர் ஜெயக்குமார்



அன்புள்ள ஐயா,

வெங்கட் சுவாமிநாதன் அவர்கள், வாசகர்களை அரை நூற்றாண்டு பின் நோக்கி அழைத்துச்சென்று காண்பித்த, இருவாரம் முன்பு நிறைவு பெற்ற ‘வாழ்க்கை சுவட்டில்’ ஒவ்வொரு வாரமும் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. அவரின் நினைவுகளின் சுவட்டைப் படிப்பவர்களுக்கு ‘இந்த நாள் அன்று போல் இனிமையாய் இல்லையே’ என்ற எண்ணம் எழத்தான் செய்யும். வசதி, பணம், கணினி இருந்தும் இல்லாத வாழ்க்கையை, ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வைக்கின்றோம் என்ற ஏக்கம் தோன்றுகிறது. ‘நினைவுகளின் சுவட்டில்’ புத்தகமாக வெளிவந்து பெருவெற்றிபெற வாழ்த்துக்கள்.

இரா. முருகன் எழுதிய விஸ்வரூபம் உண்மையிலேயே கற்பனையின் விஸ்வரூபம்தான். வெங்கட் சுவாமிநாதன் எழுதியது உண்மையின் சுவை என்றால், இரா.முருகன் எழுதியது கற்பனையின் சுவை. இரா. முருகன் உருவாக்கிய மகாலிங்கய்யன் நம் திண்ணையின் ஹீரோவாகவே உலாவருகிறார். முன்னவர் ஐம்பது ஆண்டுகள் பின்சென்று யதார்த்தத்தைச் சொன்னால் பின்னவர் நூறு ஆண்டுகள் பின்சென்று கற்பனையை வடித்துள்ளார். கற்பனைக்கிடையில் மகாலிங்கையன் வழியாகவே ஒரு கேள்வி கேட்டுள்ளார். அது உண்மையில் இந்தியாவின் நூறு கோடி ஜனங்களையும் சொடேரென்று அடித்துக் கேட்கும் கேள்வி : ‘ஜன்ம எதிரி எந்த தேசம்? யாரெல்லாம் லோக மகா யுத்தத்துலே நமக்கு இஷ்ட மித்திரங்கள்? எதுக்காக யுத்தம்?’.. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நல்லுயிர் நீத்த வீரர்களை விட ஆங்கில அரசாங்கத்துக்காக உலகப்போரில் உயிர்விட்ட இந்திய வீரர்களே அதிகம். அதைத்தான் கற்பனையில் நடுவில் சொல்லியிருக்கிறாரோ ?

வெங்கட் சுவாமிநாதனுக்கும், இரா.முருகனுக்கும், வெளியிட்ட திண்ணை ஆசிரியருக்கும் மிக்க நன்றி.

Series Navigation

ஆர் ஜெயக்குமார்

ஆர் ஜெயக்குமார்