வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

மலர்மன்னன்


பெண்களுக்கு இருப்பது மதிமுகம், கயல் விழிகள் என்றோ, இளைஞனைக் காளை என்றோ பழங் காலக் கவிகள் வர்ணனை செய்திருப்பதைப் படித்துவிட்டு அவற்றை முற்றிலுமாக அணு பிசகாமல் அர்த்தப் படுத்திக் கொண்டு குதர்க்கம் செய்யக் கூடாதுதான். பளிச்சென்று பிரகாசிக்கிற முகம் என்பதைச் சுட்டுவதற்குத்தான் மதியைச் சொன்னான் கவிஞன் என்பது தெரிந்த விஷயம். ஏன், கதிரவனைச் சொல்லியிருக்கலாமே, அது இன்னும் பிரகாசமாயிற்றே எனலாகாது. ஏனெனில் சூரிய ஒளி சுட்டெரிப்பது, சந்திரனிலிருந்து வருகிற ஒளி அதுவும் சூரியனிலிருந்து கிடைக்கிற பிரகாசம்தான் என்றாலும் அது மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மதி முகம் என்று சொல்வதுதான் பொருத்தம். ஏனென்றால் சூரிய ஒளியும் சந்திர ஒளியும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. கவிதை மொழியில், அதாவது இலக்கியச் சுவையோடு ஒன்றைச் சொல்லும்போது அதனை அப்படியே வரிக்கு வரி அர்த்தப் படுத்திக் கொள்ளாமால் சொல்லப்படுவதில் எவையெல்லாம் பொருத்தமாக உள்ளனவோ அவற்றை உள்வாங்கிக் கொண்டு மற்ற அம்சங்களை விட்டு விட வேண்டும். அதாவது, மதி முகம் என்று சொன்னால் அத்தனை களங்கமா அந்த முகத்தில் என்று கேட்கக் கூடாது. கயல் விழி எனில் எவ்வகை மீன், பொரித்துச் சாப்பிடலாமா என்று நாவைச் சொடுக்கக் கூடாது.

அதே சமயம், தனக்கு உசிதம்போல், ஒரு சொல்லுக்கு, அதிலும் வர்ணனையல்லாத ஒரு தகவல் அறிவிப்பிற்கு அல்லது மிகத் தெளிவாக இருந்தாக வேண்டிய அவசியம் உள்ள ஆணையில் காணப்படும் சொல்லுக்கு வசதிப்படி அர்த்தம் சொல்வது முறையாகாது. இவ்வாறெல்லாம் என்னை யோசிக்க உதவியது,

தங்கள் மனைவியர் அல்லது தங்கள் வலக் கரம் உரிமையுடைய பெண்களைத் தவிர வேறு எவரிடமும் உறவு கொள்ளாமல் கற்பொழுக்கம் பேணிக் கொள்கிற இறை நம்பிக்கையளர்கள் வெற்றியடைந்துவிட்டனர் (குர் ஆன்023001006)

என்று மிகத் தெளிவாகச் சொல்லப்படிருக்கிற வாசகத்திற்குத் தமது வசதிப்படி பொருள் சொல்லப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்ததால்தான் (வஹ்ஹாபியின் ஜூன் 11, 2009 நாளிட்ட திண்ணை கட்டுரை)!

சதாரணப் பேச்சு வழக்கில்கூட இலக்கிய நயம் சொட்டும் சுவையான மொழி அரபி என்பதை அறிந்துள்ளேன். அந்த அருமையன மொழியைக் கற்கும் வாய்ப்பினை இழந்திருக்கிறேனேயன்றி, அரபி மொழியிலும் பாரசிக மொழியிலும் உள்ள சொற்கள் விரவிக் கிடக்கும் உர்து மொழியினைப் புரிந்து கொள்ளவும் பேசவும் அறிந்துள்ளேன். அதன் இனிமையில் கிறங்கிக் கிடக்கிறவன்தான் நானும். ஹிந்துஸ்தானத்தின் அற்புதமான மொழிகளுள் அதுவும் ஒன்றே என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறவன்.

ஆங்கிலேயத் தளபதிகளிடம் சரணடைய நேரிடும் சுல்தான்கள், தங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறோம் என்று நேரடியாகக் கூறாமல் அதற்கு சங்கேதமாக எமது தலைப்பாகையை உங்களுக்கு அளிக்கிறோம் என்று இலக்கிய நயத்துடன் சொல்லப்போக, அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல் ஐயே அது எனக்கு வேண்டாம் என்று அவசர அவசரமாக ஆங்கிலேயர் மறுத்த வேடிக்கைகள் ஹிந்துஸ்தானத்தில் நடந்தது உண்டு. அதேபோல் தொப்பியை மாற்றிக் கொள்வோம் என்று சமாதானத்திற்கு அடையாளமாகச் சொல்லக் கேட்டுக் குழம்பிய சம்பவங்களும் உண்டு. துபாஷிகளின் வரிக்கு வரி பொருள் பிசகாத மொழி பெயர்ப்பால் ஏற்பட்ட சங்கடங்கள் இவை. ஆனாலும் சிறிது யோசித்தால் புரிந்து கொண்டு ரசிக்கத் தக்க வாசகங்கள்தாம் அவை. முற்றிலும் முரணான பொருள் கொள்ளத்தக்கவையாக அவை இல்லை. ஆனால் உரிமை, பொறுப்பு ஆகிய இரு சொற்களும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவையே அல்லவா? வலக் கரம் உரிமையுடைய பெண்கள் என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை நமது வசதிக்காகப் பொறுப்பிலுள்ள என்று எளிமைப் படுத்திக் கொள்வோம் என்று சர்வ அலட்சியதுடன் ஒருவர் சொன்னால் யார் கொடுத்த உரிமையின் அல்லது பொறுப்பின் அல்லது அதிகாரத்தின் பேரில் இவ்வாறெல்லாம் வசதிப்படி வார்த்தைகளுக்கு அர்த்தப் படுத்திக் கொள்ளுமாறு அவரால் அறிவுறுத்தப் படுகிறது என்கிற சினம் மார்க்க அறிஞர்களிடையே எழாதா? அதுவும் குர் ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மார்க்க அறிஞர்கள் கண்டிப்பு மிக்கவர்கள் அல்லவா? முகமதியர் அவரவர் விருப்பப்படி அவற்றில் உள்ள வாசகங்களை அர்த்தப் படுத்திக் கொள்வது சாத்தியந்தானா?

ஒருவர் தமக்குள்ள கடமையை ஒழுங்காக நிறைவேற்றி வர வேண்டிய பொறுப்புள்ளவர் ஆவார். ஆகவே கடமை என்பதைப் பொறுப்பு என்று அர்த்தப் படுத்திக் கொள்ள முடியும். அந்தப் பொறுப்பைக் குறிப்பிட்டு அவர் உரிமையை எதிர்பார்க்கலாம். ஆனால் உரிமையை அவருக்கு வழங்கும் அதிகாரம் என்கிற உரிமையைத் தம்மிடம் வைத்திருப்பவர் மிகுந்த பெருந்தன்மையுடன் அதனை வழங்கினால் உண்டு: இல்லையேல் இல்லை. அதன் விளைவாகக் கடமையைச் செய்யும் பொறுப்புள்ளவருக்கும் அதிகாரம் என்கிற உரிமையை வைத்திருப்பவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் உரசல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. உரிமை என்பது எனது பொறுப்பு; ஆகையால் என் விருப்பத்தின் பிரகாரம் எனது பொறுப்பைப் பயன்படுத்துவது எனது உரிமை என்று அவரவரும் சொல்ல ஆரம்பித்தால் குழப்பங்கள் மிகுந்து போகாதா?

ஆகையால் குர் ஆன் வசனத்தில் வரும் உரிமை என்கிற சொல்லுக்கு உரிமை என்றே பொருள் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அல்லது அரபு மொழிக்கே உரிய நயமான தன்மையில் அதிகாரம் என்கிற சொல்லுக்கு மாற்றாக உரிமை என்கிற கடுமை குறைவான சொல் பயன் படுத்தப்பட்டிருப்பதாகப் புரிந்துகொண்டு, உரிமை என்கிற சொல்லுக்கு அதிகாரம் என்று வேண்டுமானல் விளக்கம் தரலாமேயன்றி, உரிமை என்பதற்கு முற்றிலும் எதிரிடையான பொறுப்பு என்று பொருள் கொள்வது எப்படிச் சரியாக இருக்கும்?

மேலும், தங்கள் மனைவியர், வலக் கரம் உரிமையுள்ள பெண்கள், உறவு கொள்ளுதல், கற்பொழுக்கம் பேணுதல் என்றெல்லாம் மிகத் தெளிவாகவே குர் ஆன் வாசகம் பேசுகிறது. ஆக ஒரு வலக் கரம் உரிமைப் பெண்ணை மணப்பதோ, மகளாகக் கருதுவதோ, கான்குபைனாக, அதாவது காம வடிகாலுக்கான பெண்ணாகக் கொள்வதோ, எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்கிற உரிமை (பொறுப்பு!) ஆணுக்கு ஆண்டவரால் தரப்பட்டிருப்பதாக அவருடைய இறுதி தூதர் வாயிலாக அறியப் பெறுகிறோம். இந்த உரிமையை அவர் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமனாலும் மாற்றிக் கொள்ளவும் உரிமையுள்ளவராகிறார். அதாவது வலக் கரப் பெண்ணை மகளாக நேற்று வரை கருதியவர் இன்று திடீரென சபலப் பட்டு அவளை மணக்க முடிவு செய்து விடலாம். பிறகு சலித்துப் போய் தலாக்கும் செய்து விடலாம்!

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமும் உள்ளது. வலக் கரம் உரிமை என்பதெல்லாம் அவர்களுக்குள்ளாக நடக்கிற சண்டைகளில் பிடிபடுகிற பெண்கள் சம்பந்தமாகத்தான். பிறருடன் நடக்கிற சண்டையில் கைப்பற்றப் படுகிற பெண்கள் வெறும் அடிமைப் பெண்கள்தாம். அவர்களை எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நடத்திக் கொள்ளலாம். இந்தப் போக்குதான் இப்போதுங்கூட, சவூதியில் வேலைக்குப் போகிற இந்தோனேசியப் பெண்கள் விஷயத்தில், அவர்கள் முகமதியராகவே இருந்தாலும்கூட நடக்கிறது! சூடான் போன்ற வட ஆப்ரிக்க நாடுகளில் அராபியரால் முகமதியராகவே உள்ள மாற்று இன அழிப்பிற்கு ஒரு சுகமான வழியாக வன் புணர்வு நடப்பதும் இந்த அடிப்படையில்தான்! ஆராபியரிடையே உள்ள தாமே மேலானவர்கள் என்கிற மேலாதிக்க இனாபிமானம் மிகுந்து, பிற தேச முகமதியரை எவ்வளவு துச்சமாக நடத்துகிறார்கள் என்பது புதிய செய்தியல்ல. ஹஜ்ஜுக்குப் போய்த் திரும்புகிற மனத் துணிவுள்ள நம் ஊர் லப்பைகள் சிலர் அவர்களின் அனுபவங்களைக் கூறக் கேட்டால் வேதனையாக இருக்கும். உடனே யார் அவர்கள், பெயரைச் சொல் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடக் கூடாது. நானும் ஆதாரங்கள் கேட்டால் கொடுக்க வேண்டுமே என்று அவர்களின் பெயரைச் சொல்லப் போக, அவர்களை அவர்களின் சர்வ வல்லமை மிக்க ஜமாத்துகள் ஊர்க் கட்டுமானம் செய்தால் அப்புறம் யார் தொல்லைப் படுவது? நம் தேசத்தில் அரசாங்கம், நீதி மன்றம் என்றெல்லாம் இருந்தாலும் அவற்றைவிட அதிகாரம் மிக்கவையாயிற்றே ஜமாத்துகள்!

முகமதிய சம்பிரதாயத்தில் வலக் கர உரிமைப் பெண்களுக்கும் அடிமைப் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாகவே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வலக் கரப் பெண்கள் அடிமைப் பெண்களைவிட ஒரு படி மேலாக இருப்பவர்கள். அவர்களைவிட ஒருபடி மேலாக இருக்கிறவர்கள் மனைவி என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளவர்கள். ஆனால் பொதுவாகப் பெண்பிள்ளை என்று வருகிற போது எல்லாரும் ஆண் துணையில்லாமல் தனியாக வெளியே போக உரிமை இல்லாத, அதாவது உடமையாளன் கைத் தும்பில்லாமல் போக அனுமதிக்கப் படாத பசுமாடு அல்லது வேறு ஏதேனும் வீட்டு மிருகம்தான்.

மேலும் வலக் கர உரிமையை நியாயப் படுத்த இறைவனின் இறுதித் தூதுவர் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டப்படுகிற உண்மைச் சம்பவங்களை வஹ்ஹாபி எடுத்துக் காட்டுவதைப் படிக்கிற வாசகனுக்கு இறைவனின் இறுதி தூதர் பற்றி எம்மாதிரியான கருத்து உள்ளத்தில் ஆழமாகப் பதியும் என்று அவர் யோசிக்க வேண்டாமா?

கதீஜா அம்மையார் மகள் ஜைனபுக்குக் கொடுத்த பொன்னாரம் ஈட்டுப் பொருளாக வந்து மருமகன் அபுல் ஆஸின் விடுவிப்புக்கு விண்ணப்பம் செய்து கொள்ளப்படுகிறது. அதாவது இறைவனின் இறுதி தூதரின் மருமகன் தூதரின் வலக் கர உரிமைப் பொருளாகப் பிடிபடு
கிறார். அவரை ஈட்டுப் பொருள் ஏதும் வாங்கிக் கொள்ளாமலேயே விடுவிக்க இறுதி தூதர் விரும்புகிறார். பின்னர் அதற்கு தம் தோழர்களிடம் அனுமதி என்கிற சடங்கைப் பயன் படுத்தித் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். இதைக் குறிப்பிடுகிறபோது எவருக்காவது இன்றைய அரசியல் கட்சிகளின் மேலிடத் தலைவர்கள் எங்கள் செயற் குழு கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லிவிட்டுத் தமது விருப்பத்திற்கிணங்க முடிவை அறிவிப்பது நினைவு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இதே மாதிரி தாயிஃப் போரில் இறுதி தூதரின் சகோதரியே பிடித்து வரப்பட்டபோது அவருக்குத் தனி மரியாதை செய்து விடுவிக்கிறார் எனில், தூதர் தமது உறவின் முறை என்றோ வேண்டியவர்கள் என்றோ வருகிறபோது மட்டும் சிறிதும் தயக்கமின்றித் தமக் கென்று ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்று வைத்துக் கொண்டிருந்ததாக முடிவு செய்யும் படியாகிவிடாதா?
வலக் கர உரிமையுள்ள பெண்கள் யார், அடிமைப் பெண்கள் என்கிற நிலையில் நடத்தப் படுகிறவர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ள இதைக் காட்டிலும் எளிதான ஒப்புதல் இருக்க முடியுமா?

இதேபோல, ஓர் அடிமைப் பெண்ணுக்குக் கல்வி கொடுத்து, ஒழுக்கம் கற்பித்து, விடுதலை அளிப்பது அல்லது தானே மணம் செய்துகொள்வதால் இரட்டை நன்மைகள் கிட்டும் என்பதெல்லாம் மத மாற்றம்செய்வதற்கான ஊக்குவிப்பு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

+++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்