மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

இப்னு பஷீர்


இந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர் மன்னனுக்கு நன்றி!

மலர் மன்னன் முஸ்லிம்களை ‘முகமதியர்’ என விடாப்பிடியாக குறிப்பிடுவதன் காரணம்;

– லுதரன் திருச்சபையினரும் கால்வினியன் திருச்சபையினரும் ‘புராட்டஸ்டன்ட்’ என மொத்தமாக அழைக்கப்படுவதை பெரிது படுத்துவதில்லை என்பதாலும்,

– காந்திஜியும் முகமதியர் எனப் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதாலும்,

– “மொஹமடன் லா’வுக்கு எத்தனைதான் புதுப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் நீதிமன்றத் தாழ்வாரங்களில் மட்டுமின்றி கனம் கோர்ட்டார் அமரும் நியாய சபைகளிலும் வழக்கு மொழியாக “மொஹமடன் லா’ என்றுதான் பேசப்பட்டு வருவதாலும் அதை எவரும் ஒரு பிரச்சினையாக்குவதில்லை என்பதாலும்,

– இந்தியா என்ற ‘காலனிய அடையாளப் பெயரை’ பயன்படுத்துவதற்கு ஆட்சேபணை ஏதும் வருவதில்லை என்பதாலும் தானாம்.

நிற்க.

தமிழகத்தில் ‘மாயூரம்’ அல்லது ‘மாயவரம்’ என்ற பெயரில் ஒரு ஊர் அறியப்பட்டிருந்தது. ‘மயிலாடுதுறை’ என்ற அழகான தமிழ்ப் பெயர்தான் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாயூரம் எனக் குதறப் பட்டதாக உணர்ந்த அந்த ஊர்க்காரர்களும் தமிழார்வலர்களும் அரசினரிடம் முறையிட்டு அதன் உண்மையானப் பெயரை மீட்டெடுத்தனர். அரசு ஆவணங்கள் திருத்தப் பட்டன. நாளிதழ்கள் மயிலாடுதுறை என்று குறிப்பிடுகின்றன. பேருந்துகள் புதுப் பெயர்ப் பலகைகளுடன் ஓடுகின்றன. ஆனால் பழையப் பெயரை சொல்லியே பழக்கப்பட்டுப் போன சிலர் இன்றும் பேருந்துகளில் ‘மாயூரத்துக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா!’ என்று கேட்கின்றனர். ‘அந்தப் பெயரைத் தான் மாத்தியாச்சுங்களே’ என்று நினைவூட்டப் பட்டால், நியாயவான்கள் தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளத்தான் முயல்வர்.

‘மாயூரம்’ என்று சொல்வது ஏன் இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்பதை அறிவுப் பூர்வமாக ஆதாரங்களுடன் விளக்குங்களேன் பார்க்கலாம்’ என்று யாரும் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள்!

மாயூரம் போலவே,

பாம்பே மும்பை ஆகிவிட்டது
மெட்றாஸ் சென்னை ஆகிவிட்டது
கல்கட்டா கொல்கத்தா ஆகிவிட்டது
பெங்களூர் பெங்களூரு ஆகிவிட்டது

ஆங்கிலேயர்களும் இந்தியாவை விட்டுப் போய் 61 ஆண்டுகள் ஆகி விட்டன.
ஆனால் அவர்கள் செய்த தவறுகளின் தாக்கம் மலர்மன்னன் போன்றோரின் மனதை விட்டு இன்னும் அகலவில்லை போலும், பாவம்!

**********
மகாத்மா காந்திஜி ‘முகமதியர்’ எனக் குறிப்பிட்டதாக மலர்மன்னன் சுட்டிக் காட்டியிருக்கும் சொற்றொடர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ராமச்சந்திர குஹா என்ற வரலாற்றாய்வாளர் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (சுட்டி 1). அக்கட்டுரையின்படி, காந்திஜி இதை 1919-ல் எழுதியிருக்கிறார். காந்திஜியே ‘முகமதியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா, அல்லது அவர் ஹிந்தியிலோ குஜராத்தியிலோ எழுதியது மொழி மாற்றம் செய்கையில் ‘முகமதியர்’ என்று மாறியதா என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜி Mussalman என்று எழுதியதை தமிழாக்கம் செய்கையில் ‘முகமதியன்’ என்று திரித்து திருகுதாளம் செய்தவர் இதே மலர் மன்னன் தான். (சுட்டி 2)

ராமச்சந்திர குஹா தனது கட்டுரையில் காந்திஜி 1928-ல் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். (மலர்மன்னன் கண்ணில் இது படவில்லை போலும்!)

“We can only pray, if we are Hindus, not that a Christian should become a Hindu, or if we are Mussalmans, not that a Hindu or a Christian should become a Mussalman, nor should we even secretly pray that anyone should be converted [to our faith], but our inmost prayer should be that a Hindu should be a better Hindu, a Muslim a better Muslim and a Christian a better Christian. That is the fundamental truth of fellowship.”

இதில் வரிக்கு வரி முஸல்மான் என்ற பதத்தை காந்திஜி பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கையில் அவர் விடாப்பிடியாக mohammedan என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘சத்திய சோதனை’ தமிழ்ப்பதிப்பில் ஒரு இடத்தில்கூட ‘முகமதியர்’ என்ற பதம் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

******

முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுவது எதனால் அவர்களுக்கு இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்று அறிவுப் பூர்வமாக விளக்கினால் அதைப் பயன் படுத்துவதை நிறுத்திவிடலாம் என்கிறார் மலர்மன்னன். ‘முகமதியர்’ என்பது இழிவுக்குறிப்பு என்று அவருக்கு யார் சொன்னார்கள்?

– “சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது ‘முகமதிய மத’மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025]” – வஹ்ஹாபி (சுட்டி 2)

– முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. – வஹ்ஹாபி (சுட்டி 3)

‘முகமதியர்’ என்ற பதம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே பயன்படுத்தப் பட்டதில்லை. ஆங்கிலேயர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட பெயர் இது. இது வசைச் சொல் அல்ல என்ற போதிலும் முஸ்லிம்களின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சி என்பதாலேயே முஸ்லிம்கள் இந்த வார்த்தைப் பிரயோகத்தை எதிர்க்கின்றனர். – இப்னுபஷீர் (சுட்டி 4)

முஸ்லிம்களை முகமதியர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடும் மலர்மன்னனின் பிடிவாதம் சரியானதென்றாலோ, அதை மறுதலிக்கும் வஹ்ஹாபி போன்ற முஸ்லிம்களின் வாதம் தவறானதென்றாலோ, அவற்றிற்கான நியாயமான அறிவுப்பூர்வமான ஆதாரங்களை மலர்மன்னன் முன்வைக்கலாமே? புராட்டஸ்டண்ட் என்று அழைக்கப்படுவதை லுதரன் திருச்சபையினர் ஆட்சேபிப்பதில்லை, இந்தியா ஒரு காலனிய அடையாளப் பெயர் என்றெல்லாம் சிரிப்பு மூட்டுவது கதைக்கு ஆகுமா?

1. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=fbf5c6e5-48ea-48c5-9949-7e95d318eacf&&Headline=His+faith%2c+our+faith
2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801102&format=html
3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801242&format=html
4. http://www.thinnai.com/?module=displaystory&story_id=808032011&format=html


– இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்