கிழிபடும் POAக்கள்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

வஹ்ஹாபி



சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய [சுட்டி-1] கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான்.

ஜீனா என்பது அவனுடைய இனிஷியல் அல்ல.

அவனுக்கு அபார நினைவாற்றல் இருந்தது. எத்தனை முறை எவ்வளவு தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாலும் ஒருமுறைகூட மறந்து விடாமல் ஜப்பானை “சப்பான்” என்றும் சீனாவை “ஜீனா” என்றும்தான் சொல்லுவான். அதனால் அவனுக்கு எங்கள் வகுப்பாசிரியர் வைத்த பெயர்தான் “ஜீனா கணேசன்”.(நாளக்கி ஜிவாசி படம் போடப் போறாங்கடா).

ஒருவரை இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட ‘முஸ்லிம்’ என்று ஒப்புக் கொள்வதற்கும் அல்லர் என்று மறுதலிப்பதற்கும் இஸ்லாத்தில் தெளிவான வரையறை உண்டு. அவற்றை மூன்றாவது தடவையாக இங்குப் பதிய வேண்டிய கட்டாயத்துக்கு நேச குமார் என்னைத் தள்ளி விட்டார்:

//ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்” என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் ‘முஸ்லிம்’ என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது ‘இல்லை’ என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.//

இயல்பான மனநிலையிலுள்ள, தமிழைப் படிக்கத் தெரிந்த எவருக்கும் எளிதாக விளங்கும்படி நான் எழுதியிருப்பது நேச குமாருக்கு விளங்கவில்லை; பாவம்!

“இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது என்பவரால் அரேபியாவில் தோற்றுவிக்கப் பட்ட புதிய மதம்” என்ற தவறான தகவல் அவருக்குப் பதிந்து போனதால் சரியானதைச் சொல்லிக் கொடுத்தாலும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, ஜீனா கணேசனைப் போல்.

மேற்கொண்டு படிப்பதற்கு முன் தொடர்புடைய சில குறிப்புகள்:
(*) ‘முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்’ என்ற தலைப்பில் மலர் மன்னன் ஒரு கட்டுரை [சுட்டி-2] எழுதியிருந்தார்.

(*) இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்களை ‘முகமதியர்’ என்று குறிப்பது வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில் “இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அரபு நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதமல்ல” என்று நான் மறுப்பெழுதினேன் [சுட்டி-3]. அதில்,

“சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது ‘முகமதிய மத’மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும்” என்று நான் சார்ந்திருக்கும் சமயம் பற்றிச் சுருங்கக் கூறியிருந்தேன்.

இன்னும் சுருக்கமான கூடுதல் விளக்கங்கள்:
“இபுராஹீமுக்கு நாம் இஸ்ஹாக்கையும் (அவரிலிருந்து) யஃகூபையும் வழித்தோன்றல்களாக அருளி, அவ்வனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். அவர்களுக்கு முன்னர் நூஹையும் அவருடைய வழித்தோன்றல்களான தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம் … [அல்குர்ஆன் 006:084].

“மீக்கூறிய அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர்; அவர்கள் ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்ராயீல் (ஆகிய நம் நபிமார்களின்) வழி வந்த நபிமார்களும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களுமாவர் … [அல்குர்ஆன் 019:058].

(*) மலர் மன்னனுக்குத் திண்ணையில் மறுப்பெழுதிய கோபால் இராஜாராமும், ‘இஸ்லாம் என்பது ஒரு புதிய மதம்’ என்று பிழையாகவே விளங்கினார். ஆயினும், “தம்மை இவ்வாறுதான் விளிக்க/குறிக்க வேண்டுமென்று கூறுபவர்களின் கூற்றுப்படியே விளிப்பது/குறிப்பதுதான் முறையாகும்” என்று ‘பெயர்கள் அடையாளங்கள் : முகமதியரா முஸ்லீம்களா?’ என்ற தலைப்பில் [சுட்டி-4] எடுத்துரைத்தார்:

//ஒரு சமூகக் குழு எப்படி பெயரிட்டு, எப்படி இனங்காணப் படுகின்றது என்பது, அந்தச் சமூக குழுவின் வரலாற்றையும் மற்றும் அந்த இனக்குழு மற்ற இனக்குழுக்களால் எப்படி அடையாளம் காணப்படுகின்றது என்பதற்கான வரலாற்றையும் பொருத்த விஷயம். முஸ்லிம்கள், “முகமதியர்கள்” என்று அழைக்கப் பட்டதற்கு ஐரோப்பிய வரலாற்றில் காரணங்கள் உண்டு. ஒரு புதிய மதத்தை அதற்கு வெளியே இருப்பவர்கள் அதன் தலைவர் அல்லது வழிகாட்டியை முன்னிறுத்தி அழைப்பது புதிய விஷயம் அல்ல. உலகம் பூராவும் அதுவே நடைமுறை. பௌத்தம் இன்றும் கூட அதனை ஸ்தாபித்தபவர்களின் பெயரால் தான் அறியப் படுகிறது. கிருஸ்துவம் யாரை முன்னிறுத்துகிறதோ அவர் பெயரால் தான் அழைக்கப் படுகிறது. 1965 வரையில் கூட ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி முகம்மதியர் என்ற வார்த்தையை பிரயோகம் செய்து வந்திருக்கிறது.

ஆனால் முஸ்லிம்கள் சமீப காலத்தில் இந்தப் பெயரைத் தவிர்த்து, முஸ்லிம்கள் என்றே அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே சரியாகும்.//

(*) எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது என்பதாக ‘முஸ்லிம்’ என்ற தன்மைப் பெயரை மிகச் சுருக்கமாக [சுட்டி-5] எழுதி இருந்தேன். எல்லாருக்கும் எளிதாக விளங்குவது நேச குமாருக்கு மட்டும் விளங்கமல் போய் விடுகிறது. கூடுதல் விளக்கத்துக்காகச் சில உவமைகள்:

“நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்று அழையுங்கள்” என்று கூறாதவரைக்கும் இஸ்மாயில் என்ற பெயரைத் தன் கையில் பச்சை குத்திக் கொண்டவனை முஸ்லிம் என்று குறிப்பது தவறாகும்.

ராமசாமி என்ற பெயரைப் பெற்றிருந்த பெரியார் எப்படி இந்து இல்லையோ அதுபோலவே மஸ்தான் என்ற பெயரை மட்டும் முன்னிறுத்தி குணங்குடியை முஸ்லிம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவ்வாறு அழைக்கப் படுவதை அவ்விருவருமே வெறுத்தனர்; மறுத்தனர்.

இதுவரைக்கும் பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்பதாகவே இருந்தது.

(*) ‘பாரதி தரிசனம்’ என்ற தலைப்பில் கற்பக வினாயகம் எழுதிய திண்ணைக் கட்டுரையில் பாரதியின் ‘முகமதிய’த்தை மேற்கோள் காட்டுவதற்காக நான் எடுத்தாண்டபோது அதிலிருந்த ‘பார்ப்பன’ரையும் ‘சங்கராச்சாரி’யையும் [சுட்டி-6] தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் தன்னை அபார்ப்பனர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளும் நேச குமார்.

பார்ப்பனர் என்பது சாதாரணச் சொல்லாயிருந்து இப்போது வசைச் சொல்லாக மாறிவிட்டதாம்; நேச குமார் சொல்கிறார். ஆனால், மாறிய தேதியையோ மாற்றம் கண்ட காரணத்தையோ அவர் சொல்லவில்லை. சங்க காலக் குறிப்புகளை ஒதுக்கி விட்டு, “நான் பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்தில் பெருமை பொங்க அறிவிப்புச் செய்து செருக்கி நின்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திற்குப் பிறகு மாறியிருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 15 ஆண்டு காலமாக அதன் காரணம் மர்மமாக இருக்க வேண்டிய தேவை என்னவென்று தெரியவில்லை.

பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல், வசைச் சொல்லாக மாறிய காரணத்தை விடுத்து அது மாறிய காலகட்டத்தைத் துல்லியமாக அறிய முடியா விட்டாலும் சான்றுகளின் அடிப்படையில் குத்து மதிப்பாகக் கணித்து விடலாம். பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல் வசைச் சொல்லாக மாறியது கடந்த சில மாதங்களுக்குள்ளாத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடச் சொல்லலாம். காரணம், மூச்சுக்கு மூச்சு, வரிக்கு வரி, ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன் படுத்தி, மலர் மன்னன் [சுட்டி-7] எழுதிய கட்டுரையான “தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்” திண்ணையில் வெளியானது 31 மே 2007இல்தான். ஆனால், வசையான சொல்லாக அது வகை பிரிக்கப் பட்டது யாரால்? எப்படி? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது!

***

“முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதிய மதம்தான் இஸ்லாம்” என்ற வரலாற்றுப் பிழை திண்ணையில் இடம் பெற்று, அதுவே வருங்காலத்தில் பிறரால் எடுத்தாளப் படும் ஆவணமாகி விடக் கூடும் என்ற காரணத்தை முன் நிறுத்தியே – அப்பிழையைத் திருத்தும் முயற்சியாகவே – நான் எதிர்வினைகள் ஆற்றி வருகிறேன். முகமதியர்/முகமதியம் என்பன பிழையான சொல்லாட்சிகள் என்பதைச் சொல்லி வைப்பதுதான் எனது எதிர்வினையின் நோக்கமேயன்றி அவை வசைச் சொற்கள் என்பதற்கான வெற்றுக் குமுறலன்று.

இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி, முதல் மனிதனில் தொடங்குவதாகும். பிறப்பால் உயர்வு-தாழ்வு என்பதே இஸ்லாத்தில் இல்லை. பிறக்கும்போதே எந்தக் குழந்தையும் சாதி-மத-வருணங்களோடு பிறப்பதில்லை. வளர்ப்பினால் அவை வலிந்து திணிக்கப் படுகின்றன. இதையே,
“எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்…” (புகாரீ 6110) என்று எங்கள் தலைவரும் இஸ்லாத்தின் இறுதி நபியுமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கமளித்தார்.

மேற்காணும் காரண காரியங்களோடு,
“நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்” என்று ஓர் அஹமதியோ,
“நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்” என்று ஒரு ஷியாவோ,
“நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்” என்று ஒரு பஹாயோ
இங்கு வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை ‘முஸ்லிம்’ என்று விளிப்பதில்/குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.

எனவே, அஹமதி, ஷியா, பஹாய் போன்றோரின் POA (Power Of Attorney)க்கள் இனிமேல் நேச குமாருக்கு உதவா என்பதால் அவற்றைக் கிழித்துப் போட்டு விடலாம். அஹமதி, ஷியா, பஹாய் ஆடுகள் நனைவது குறித்து அழ வேண்டிய தேவையும் இனிமேல் நேச குமாருக்கு இல்லாமலாகி விட்டது.

***

உலகில் எல்லோராலும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறதாம். தன் ஒருவரையே உலகம் என்று நினைத்துக் கொண்டு எழுதும் நேச குமார் சொல்கிறார். ஆனால், அவருடைய கருத்தை மறுக்கும் முகமாக, நேச குமாருடைய சென்னை முகவரிவரை அறிந்து வைத்திருக்கும் அவரின் நண்பர் திண்ணையில் [சுட்டி-8] மேற்கோள்களை அடுக்குகிறார்:

//இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் மாற்று மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:

“அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்” – நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.

“அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது” – ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.

“இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது” – சிஎன்என், டிசம்பர் 15, 1995.

“அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவன்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாகப் பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்” – ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.

“இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன்” Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள் – சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.

“அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளின் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது” – டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.

“மனிதர்களுக்கு இடையே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வைத் தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” – ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.

“வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன” – W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.

“இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்” – ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.

முஹம்மது நபி பற்றி, “இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்” – என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.

“இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது. மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது” – லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

“அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.
அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை – ஏன் – ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்” – ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

“சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்” – மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.

“அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது” – திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.

“போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்” – பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.

“அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும், அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது” – அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.

“கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது” – மகாத்மா காந்தி, ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

“ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்” – வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

“ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது” – தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840//

மேற்காண்பவை இஸ்லாத்தையும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள எழுத்துச் சான்றுகள்.

வெளிச்சான்றுகளும் நிறையவே உள. விரிவஞ்சி அவற்றை இங்குத் தவிர்க்கிறேன்.

சுட்டிகள் 9 முதல் 12 வரை ஓய்வு நேரத்தில் காண வேண்டிய காட்சிச் சான்றுகள்.

***

இறுதியாக,

இந்து மதத்தை, “சனாதனக் குட்டை” என்று நான் குறிப்பிட்டதாக அவதூறு எழுதிய நேச குமார், அதற்காகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையெனில், அவதூறு+ஆட்கொணர்வு வழக்குகளை – திண்ணை/திண்ணையர் சாட்சியாக – நீதிமன்றத்தில் அவர் சந்திக்க நேரலாம் என்பதை அன்போடு சொல்லி வைக்கிறேன்.

ஃஃஃ

to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogsopt.com

சுட்டிகள்:
01 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803135&format=html
02 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&edition_id=20080103&format=html
03 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801102&edition_id=20080110&format=html
04 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801241&edition_id=20080124&format=html
05 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&edition_id=20080207&format=html
06 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html
07 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20705314&format=html
08 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html
09 – http://www.youtubeislam.com/search_result.php?search_id=convert
10 – http://www.youtubeislam.com/search_result.php?search_id=reverts
11 – http://www.youtubeislam.com/channel_detail.php?chid=19
12 – http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=714&Itemid=119

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி