மீராவின் கவிதை

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

ஜடாயு


அன்புள்ள ஜெயபாரதன்,

நலமா? சமீபத்திய திண்ணை இதழ்களில் கண்ணில் பட்டதும் உடனே சென்று பார்த்தேன்.

அன்பிலும், பக்தியிலும், தவிப்பிலும் தோய்ந்த மீராவின் கவிதைகள் என் நெஞ்சில் கலந்தவை.. இவற்றின் மூல வடிவங்களை ஹிந்தி,வ்ரஜபாஷா, குஜராத்தி, ராஜஸ்தானி கலந்த அந்த மொழியிலேயே படித்து, கேட்டு அனுபவித்திருக்கிறேன்.

இவற்றை நீங்கள் படித்து, மொழியாக்கமும் செய்வது பாராட்டுக்குரியது..

மொழியாக்கத்தில் மூலக் கவிதையின் சாரம், அதன் உணர்ச்சி ஓரளவுக்காவது தொனிக்க வேண்டும். ஆனால் தங்கள் மொழிபெயர்ப்பு மிக மேம்போக்காக செய்யப் பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது, மூலம் இல்லாமல், ஆங்கிலக் கவிதையைப் பார்த்து நீங்கள் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்..

என்னைப் பிரிந்து செல்லாதே (http://www.thinnai.com/?module=displaystory&story_id=30801173&format=html ) என்கிற இந்தப் பாடலில்

“மீரா சொல்கிறாள்: மலைகளைத் தூக்கு பவனே !”

என்பதன் மூல வடிவம் “மீரா கஹே ப்ரபு கிரிதர நாகர்”.. “கிரிதரா, கிரிதரனே” என்ற சொல் தமிழுக்குப் புதியதல்லவே, அதற்குப் பதிலாக “bearer of the mountain” என்பதை இப்படி மொழிபெயர்ப்பது சரியல்ல என்று தோன்றுகிறது..

“கடைவீதியில் கிடைத்த கருமேனியான் ( http://www.thinnai.com/?module=displaystory&story_id=30801106&format=html) என்ற மொழியாக்கத்தைப் படித்து மிகவும் வருந்தினேன்.. மிக எளிமையான அந்தப் பாடலின் பொருளை மொழியாக்கம் மொத்தமாக சிதைத்து அபத்தமாக்கி விட்டது. “மாயீ மைன் தோ, லியோ ரமையா மோல்” என்பது இதன் மூலக் கவிதை (“மாயீ மைன் நே கோவிந்த் லீன்ஹோ மோல்” என்றும் ஒரு வடிவம் உண்டு). முதல் மூன்று வரியிலும் “லியோ” (வாங்கி வந்திருக்கிறேன்), கடைசி வரியில் “தீன்ஹோ, தியோ” (கொடுத்தேன்) என்று வரும் சொல்லடைவு தான் இந்தப் பாடலின் உயிர் நாடி.. அது மொழியாக்கத்தில் வரவே இல்லை..

தங்கள் மொழியாக்க முயற்சிகளுக்கு நான் தடங்கல் சொல்ல வரவில்லை.. ஆனால் என் உணர்வில் கலந்துவிட்ட ஒரு பாடல் இப்படி ஆவது கஷ்டமாக இருக்கிறது,.. கொஞ்சம் ஹிந்தி மொழியையும் கற்றுக் கொண்டு, பாடலை ஆழமாகப் படித்துத் தாங்கள் இந்த முயற்சியில் இறங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அன்புடன், ஜடாயு,

அந்தப் பாடல்: எனது எளிய மொழியாக்க முயற்சி:

விலைக்கே வாங்கி வந்திருக்கிறேன் அந்தக் கண்ணனை
ஓ அம்மா, விலைக்கே வாங்கி வந்திருக்கிறேன்

களவு என்று சொல்லட்டும், ஏமாற்று என்று சொல்லட்டும்
பறையறைந்து வாங்கி வந்திருக்கிறேன்.

கருப்பு என்று சொல்லட்டும், வெளுப்பு என்று சொல்லட்டும்
கண்ணைத்திறந்து பார்த்துத் தான் வாங்கி வந்திருக்கிறேன்

பாரம் என்று சொல்லட்டும், லேசு என்று சொல்லட்டும்
தராசில் நிறுத்துத் தான் வாங்கி வந்திருக்கிறேன்

உடம்பில் இருந்த நகை எல்லாம் கொடுத்தேன்
கைவளையையும் கழற்றிக் கொடுத்தேன்

பின்னே
மீராவின் பிரபு கிரிதரன்
பூர்வ ஜன்மத்திலேயே சொல்லி வைத்ததில்லையா?

————————

மூலம் ஹிந்தி வடிவம்:

लियो रमैया मोल

माई मैं तो लियो रमैया मोल।

कोई कहै छानी, कोई कहै चोरी, लियो है बजता ढोल।

कोई कहै कारो, कोई कहै गोरो, लियो है अखीं खोल।

कोई कहै हल्का, कोई कहै महंगा, लियो है तराजू तोल।

तन का गहना मैं सबकुछ दीन्हा, दियो है बाजूबन्द खोल।

मीरा रे प्रभु गिरधरनागर, पूरब जनम का कोल॥

மூலம் தமிழ் வடிவம்:

லியோ ர‌மையா மோல
மாஈ மை‍ம் தோ லியோ ர‌மையா மோல।
கோஈ க‌ஹை சா²னீ, கோஈ க‌ஹை சோரீ, லியோ ஹை ப​³ஜ‌தா டோ⁴ல।
கோஈ க‌ஹை காரோ, கோஈ க‌ஹை கோ³ரோ, லியோ ஹை அகீ²‍ம் கோ²ல।
கோஈ க‌ஹை ஹ‌ல்​கா, கோஈ க‌ஹை ம‌ஹ‌‍ம்கா³, லியோ ஹை த‌ராஜூ தோல।
த‌ன‌ கா க​³ஹ‌னா மை‍ம் ச​’ப​³குச‌² தீ³ன்​ஹா, தி³யோ ஹை பா³ஜூப​³ன்​த​³ கோ²ல।
மீரா ரே ப்​ர‌பு⁴ கி³ர‌த‌⁴ர‌னாக​³ர‌, பூர‌ப​³ ஜ‌ன‌ம‌ கா கோல॥

Series Navigation

ஜடாயு

ஜடாயு