முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

மலர் மன்னன்


வெங்கட் சாமிநாதனை அவரது எழுத்தின் வாயிலாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது எழுத்தின் ஈர்ப்பாலேயே அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவும் அறிவேன். இலக்கிய மதிப்பீடு என்று வருகிறபோது விருப்பு வெறுப்பு, வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் பாராமல் படைப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு தனது முடிபுகளை நிறுவுபவர். இதன் காரணமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூடப் பகைக்கும் நிலைக்கு ஆளானவர். தமிழுக்கு விமர்சனப் பார்வை என்பது வெறும் பாராட்டுரைகள்தான் என்று விமர்சனக் கலை நன்கு வளர்ந்த மேற்கத்தியச் சூழலை அறிந்தவர்கள்கூடக் கருதிவந்தமையால் வெ சாவின் கறாரான விமர்சனம் ஏதோ தனிப்பட்ட விரோதம்போலப் பட்டுவிட்டிருக்க வேண்டும். முகமே முகமூடிகளாகப் பலரும் உலவிக்கொண்டிருக்கிற தமிழ்ச் சூழலில் சந்தர்ப்பத்திற்கேற்பப் பொருத்தமான முகமூடியொன்றைத் தரித்துக்கொள்ள வேண்டும் என்கிற பலவீனமோ அவசியமோ இல்லாதவர் வெ சா. முகமூடி என ஒன்று அவருக்கு இருந்தால் அல்லவா அது கிழிபடுவதற்கு!

தமிழ்ச் சிந்தனைச் சூழலை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது. குறைந்தபட்ச இங்கிதம்கூட இல்லாமற் போயிற்றே, தன் கருத்தை எடுத்துவைக்கிறபோது! வெ சா மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறவர்தான்; ஆனால் அதில் அபாண்டமாகப் பழி சுமத்தும் வக்கிரம் இருப்பதில்லை. தகுதியில்லாதவர்கள் கூச்சமின்றித் தமக்குத் தகாத அங்கீகாரங்களைப் பெறுகையில் தமிழ்ச் சிந்தனை உலகின் கவுரவம் பறிபோவதால் வரும் சீற்றம் காரணமாகக் கடுமையான விமர்சனப் பார்வையை வீசுகையில் சம்பந்தப்பட்டவர்கள் நாணித் தலை குனிவது உண்டுதான். ஆனால் தனிபட்ட வெறுப்பு எதுவும் அவருக்கு இருந்ததிதில்லை, அதற்கு அவசியமும் இல்லை, அவருக்கு. நீ என்ன அவருக்கு வக்காலத்தா என்று சிலர் கேட்டுக்கொண்டு வரக் கூடும். சிந்தனையாளர் சாமிநாதனை அறிந்த எவரும் தம்மீதான தனிப்பட்ட பழி சுமத்தல்களை அவர் பொருட்படுத்தமாட்டார் என்பதை அறிவார்கள். அவருக்கு அவ்வாறு பொருட்படுத்துவதற்கு அவகாசமும் இல்லை.
ஆகையால் கணக்கை நேர்செய்ய வேறு யாராவதுதான் வந்தாகவேண்டும்.

நான் இதுவரை முகமதிய மதத்தையோ, அதன் தூதுவரையோ, அவர் வாயிலாக வெளிப்பட்டதாக அறியப்படும் இறைவன் பெயராலான கட்டளைகளையோ விமர்சனம் செய்ததில்லை. பொதுவாக மிகப் பெரும்பாலான முகமதியரின் சமய அடிப்படையிலான எண்ணப்போக்கும் செயல்களும் துரதிர்ஷ்டவசமாக எப்படி அமைந்துவிடுகின்றன என்பதைத்தான் எனக்குத் தெரிந்த அத்தாட்சிகளின் அடிப்படையில் சொல்லி வந்திருக்கிறேன். என்னுடையது சமூகப் பார்வை. சமயப் பார்வை அல்ல. என்னுடைய வீட்டு நூலகத்தில் எல்லாச் சமயங்களின் வேதப் புத்தகங்களும் உள்ளன. கம்யூனிசமும் ஒரு நவீன மதமாகையால் அதுபற்றியனவும் உண்டு. அப்படியிருக்க முகமதியர் தமது சமய நூலாகக் கொண்டுள்ள குரான் இல்லாதுபோகுமா? ஆனால் அதுபற்றி அறிவுபூர்வமான விவாதங்களுக்குத் தயாராகும் அளவுக்கு மனப்பக்குவமோ சகிப்புத்தன்மையோ என் முகமதிய சகோதரர்களுக்கு இல்லாததால் அந்த விவகாரத்தில் நான் நுழைவதே இல்லை.
ஆகையால் நான் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு முகமதிய மதத்தின்மீது குப்பைகளை வீசிக்கொண்டிருப்பதாக மனத்தாங்கல் கொள்வதற்கு நியாயமே இல்லை. முகமதியரின் சமூகப்போக்கு முற்றிலும் அவர்களது சமயத்தின் அடிப்படையில், சமயத்தின் மேலாதிக்கம் இன்றி எமது சமூகப் பார்வை அமைவது சாத்தியம் இல்லை என அவர்கள் சொல்லக் கூடுமாயின் என்ன செய்வது?

ஹிந்து மதத்தின் மீதான துவேஷம் விவரம் தெரிந்தவர்களைக்கூட எப்படியெல்லாம் முரணாகப் பேசத் தூண்டுகிறது! வன்முறையாக முகமதிய மதம் திணிக்கப் பட்டிருப்பின் பாரத தேசத்தில் முகமதியர் இன்றளவும் சிறுபான்மையினராக இருக்க மாட்டார்களாம். ஹிந்து மதத்தில் மேல் சாதியினரின் அடக்குமுறைகளைத் தாங்கமாட்டாமல்தான் கீழ் சாதியினர் அவர்களாகவே முகமதியராக மதம் மாற நேரிட்டதாம். அப்படியென்றால் கீழ் சாதியினர் அனைவருமேயல்லவா முகமதியராக மாறிப்போயிருக்க வேண்டும்? கீழ்ச் சாதியினரில் ஒரு சிலர்தானா மேல்சாதியினரின் கொடுமைகளுக்கு ஆளானார்கள்? சரி, முகமதியந்தான் சமரச நோக்கும் வறியவருக்கு உதவும் கடமையை வலியுறுத்தும் விதியும் உள்ளது என்கிறார்களே, பின் ஏன் முகமதிய சமுதாயத்தில் ஏழைகள் ஏராளமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்? புறக்கணிப்பை சகிக்கமாட்டாமல் தாமாகவே விரும்பி முகமதியரான ஏழை எளிய கீழ்ச் சாதியினர் தொடர்ந்து ஏழைகளாகவே உழல்வானேன்?

வரலாற்றைத் தலைகீழாக மாற்ற முற்படுவதல்தான் நடந்துபோன சங்கதிகளைப் பேச வேண்டியதாகிறது. பாரத தேசத்தில் ஏறத் தாழ எண்ணூறு ஆண்டுக் காலம் பரவிக்கிடந்த முகமதியர் ஆட்சியின்போது வலுக்கட்டாயமாகவும் ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப் பட்டதுண்டு, ஹிந்துக்கள் அவர்களின் தாயகத்திலேயே இரண்டாந்தரக் குடிமக்களாய் நடத்தப் பட்டதால் அந்த இழிவிலிருந்து விலகத் தாமாகவே முகமதியராக ஆனதும் உண்டு.
குற்றங்கள் இழைத்துவிட்டு, விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிப்பதற்காக முகமதியாரான குற்றவாளிகள் நம் காலத்திலேயே உண்டு. மேல்சாதியினர் கொடுமை தாளாமல் மதம் மாறியவர்களும் உண்டுதான். யார் இல்லை என்றது? முகமதியராக மதம் மாற ஒப்புக்கொண்டால் சித்திரவதைக்குப் பிறகான மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஆசை காட்டப்பட்டதுண்டு, அதனை ஏற்று மதம் மாறியவரும் உண்டு. அதேபோல் சுயமரியாதையுடன் மரண தண்டனையை ஏற்று ஹிந்துவாகவே இறந்தோரும் உண்டு. எத்தனை சோதனை வந்தாலும் தாய் மதத்தைவிட்டு வெளியேறுவதில்லை என்கிற உறுதிப்பாடும் சுயமரியாதையும் மிக்கவர்கள் பாரத மண்ணில் கூடுதலாக இருக்கப்போய்த்தான் இன்றளவும் பாரதம் ஹிந்துக்கள் பெரும் பான்மையினராக உள்ள தேசமாக நீடித்து வருகிறது. எத்தனைதான் மேல் சாதியினர் கொடுமையும் அலட்சியமும் இருந்தாலும் எமது தாய் மதத்தைவிட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியாக எமது தலித் சகோதரர் இருப்பதால்தான் மிகப் பெரும்பாலான தலித்துகள் இன்றளவும் ஹிந்துக்களாகவே நீடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினருக்குப் பிரத்தியேகமான சலுகைகள் இருப்பதால் அதற்கு ஆசைப்பட்டுப் போனவர்களும் உண்டு. அதிகாரப் பூர்வமாய் ஒன்றுக்குப் பதில் மூன்று கட்டலாம் எனப் போனவரும் உண்டு. இவ்வளவும் இருந்தும் எவ்வித ஆதாயமும் இல்லை எனத் தெரிந்தும் தாம் பிறந்த ஹிந்து மதத்திலேயே இருப்பதுதான் முறையென உணர்ந்து எவ்விதக் கட்டாயத்திற்கும் மசியாதோர் மிகுதியாக இருந்தமையால்தான் இந்த தேசம் சமரச மனப்பான்மையினை இயற்கையாகவே பெற்றுள்ள ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள தேசமாக இருக்க முடிந்துள்ளது. இந்தப் பெருமையினையும் கவர இச்சிப்பது என்ன நியாயம்?

சமயத்தையும் சமூகத்தையும் ஹிந்துக்கள் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை. சமுதாயக் கேடுகளை அவர்கள் சமயத்தின் குறைபாடாகக் கருதுவதுமில்லை. ஒரு ஹிந்துவின் சமூக வாழ்வில் சமயம் தலையிட்டு நாட்டாண்மை செய்வதில்லை. ஒரு ஹிந்துவானவன் தனது செயலுக்கு சமயத்தின் பெயரை இழுப்பதுமில்லை, சமயத்தைக் காரணமாகக் காட்டுவதுமில்லை. ஹிந்துக்கள் சமயம் சார்ந்து சமூகஅரசியல் தளங்களில் இயங்குபவர்களாயிருப்பின் ஹிந்து மஹா சபைதான் நம் தேசத்தின் மிகப் பெரிய தேசிய அரசியல் கட்சியாக உருவாகியிருக்கும். இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹா சபை போன்ற ஹிந்து சார்புள்ள அமைப்புகளில் உள்ளவர்கள் அனைவருமே சமய நம்பிக்கை உள்ளவர்களோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்களோ அல்ல. ஸாவர்கருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. லால் கிஷன் அட்வானிக்கு விக்கிரக ஆராதனையில் நம்பிக்கை கிடையாது. ஹிந்து தீவிரவாதி என்று வர்ணிக்கப்படும் நான் ஆன்மிகத்தில் சில படிகள் கடந்து சமய நம்பிக்கைக்கும் இறையுணர்வுக்கும் தொடர்பில்லை என்றாலும் இறையுணர்வின் தேடலுக்கு அதுவே முதற் படியாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறேனேயன்றி, பூஜை புனஸ்காரம், சமயச் சடங்குகள் என்றெல்லாம் பொழுதைக் கழிப்பதில்லை. ஹிந்துக்களிடையே சமூக ஒற்றுமையை ஒரு கட்டுப்பாடாக உருவக்கினாலன்றி விமோசனம் இல்லை என்பதால்தான் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றின் வாயிலாக சமூக உணர்வைத் தோõற்றுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

முகமதுவானவர் தமது கரம் வலுப்பெறு முன்னர் மாற்றுக் கொள்கையினருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த காலத்தில் இறங்கிய வசனங்களைக் குறிப்பிட்டு உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு என்று முகமதியம் விட்டுக் கொடுப்பதாகப் பேசுவதில் வலு இல்லை. முகமதுவின் வாயிலாக வெளிப்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப வெளிப்பட்டவை. வெளிப்பட்ட பல வசனங்களை இல்லையில்லை, அவை இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவையல்ல என்று முகமதுவே மறுத்ததும் உண்டு.

மாற்றுக் கருத்துள்ளவர் மீதான வன்முறையைப் புறந்தள்ளும் போக்கு சமய அடிப்படையிலேயே கூட முகமதியத்தில் இல்லை என்கிற கசப்பான உண்மையைக் கூறத்தான் வேண்டியுள்ளது. இப்படியொரு தன்மை அதற்கு இருப்பதால்தான் மாற்றுக் கருத்தினைச் சொல்பவர்கள் மீது சர்வ சாதாரணமாக மரண தண்டனையே விதிக்கிற ப்த்வா என்கிற சமயம் சார்ந்த உத்தரவைப் பிறப்பிக்க முடிவதுபோல் தங்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் நிராயுதபாணியாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டவரை நிதானமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்வதும் அதனைத் தொலைக்காட்சியில் காண்பிப்பதுமாக இருக்கையில் அதனை எதிர்த்து அதற்குப் பொறுப்பான நபர்கள், இயக்கங்கள் மீது பத்வா எதுவும் பிறப்பிக்கத் தோன்றுவதேயில்லை. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கோபப்படத் தெரிகிறது, ஆனால் தங்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களிலீடுபடுபவர்கள் மீது சமயத்தை இழுக்காதே என்று கண்டித்து, மீறினால் கொல்லப்படுவாய் என பத்வா விடுக்க முன்வரத் தோன்றுவதில்லை.

சாமிநாதன் மீது பொங்கிக் கொண்டு வரும் கோபம் நியாயப்படி யார் மீது வரவேண்டும்? தங்கள் மதத்தின் பெயரால் வன்முறையில் இறங்குபவர்கள், தங்கள் மதத்தை வலுக்கட்டாயமாகப் பிறர் மீது திணிப்பவர்கள் மீதல்லவா வரவேண்டும் கோபமும் தாபமும், குறைந்த பட்சம் நடப்பு நிலவரம் அறிந்து சிந்திக்கும் ஆற்றலும் இருப்பவர்களுக்கு?

பாரத மாதாவை சிங்கத்தில் அமர்ந்து திரிசூலம் தாங்கிய தேவியாக உருவகப்படுத்திவிட்டார்களாம், அதனால் வந்தே மாதரம் பாட மாட்டார்களாம்! ஒரு சாமானியன் சொன்னால்கூடப்பரவாயில்லை, புரியவைக்க முனையலாம்; நுட்பமான புரித லுள்ள ஒரு கவிஞனா இப்படிப் பாமரத்தனமாகப் பேசுவது? சரி, அப்படியே இருந்தாலும்
ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தில்தான் பாரத தேசத்தை அப்படி உருவகப்படுத்தும் வழக்கம் உள்ளது. வந்தே மாதரம் என்ன ஆர் எஸ் எஸ் பேரியக்கத்திற்கே உரித்தான கீதமா? பாரதத்தின் அரசியல் சாசனம் அதனை தேசிய கீதத்திற்கு இணையானதென்றே குறிப்பிடவில்லையா? பாரதத்தின் அரசியல் சாசனத்தை மதிப்பதும் தமது மதத்திற்கு உடன்பாடானது அல்ல என்று சொல்லப்போகிறீர்களா? தேசிய நீரோட்டத்தில் கலவாமல் ஒதுங்கிப் போவதன்றி வேறென்ன காரணம் இதற்கு? பாரத தேசத்தின் வரைபடங்கூட வைத்துக்கொள்ளாமல் பாடியிருக்க முடியாதா மனம் இருந்தால்? ஆக இங்கே கிழிபடுவது யாருடைய முகமூடி?

சாமிநாதன் மிகவும் சாந்தமாக ஒரு கசப்பான உண்மையைச் சொன்னால் அதைப் பொறுத்துக்கொள்ளும் அளவுக்குக் கூட சகிப்புத்தன்மை இல்லை. பாரசீகத்தின் தொன்மையான நாகரிகம் இன்று எங்கே? பாபிலோனும் மெசபடோமியாவும் மறைந்து போனது எங்ஙனம்? நம் காலத்தில் ஆப்கனில் இருந்த புத்தர் சிலைகள் என்ன ஆயின? என்ன காரணம் சொல்லப்பட்டு அவை நொறுக்கப்பட்டன? அதனைக் கண்டித்து வந்த பத்வாக்கள் எத்தனை? கலைகளை ஆராதிக்கும் ஒரு விமர்சகன், மிக துர்லபமாகவே தமிழுக்குக் கிடைத்திருக்கிற ஒரு கலை இலக்கிய சிந்தனையாளன், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சிந்தனையுலகின் பாமரத் தன்மையைக் களைவதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளன், மனம் வருந்திச் சில உண்மைகளைச் சொன்னால் அவன் தனது முகமூடியைக் கிழித்துக் கொள்வதாக வர்ணிப்பது எந்த அளவுக்குச் சரி?

எழுதத் தொடங்கியது முதலாவே இடுப்புக்குக் கீழே தாக்குபவர்களைச் சந்தித்துப் பழகியவர்தான் வெ. சாமிநாதன். இந்த முகமூடி சமாசாரம் எல்லாம் அவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்லைதான். இருந்தாலும் அவருக்கு ஏதோ தைரியம் சொல்வதுபோல நீங்கள் கவலைப்படாமல் உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருக்கலாம் என எகத்தாளமாக அவரிடம் துடுக்குத்தனம் செய்வதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க இயலவில்லை.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்