தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

சூபி முகமது



1. “முகமது நபிகள் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழில்தான் அருளப்பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ்மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர்”. இது வகாபியின் அதியற்புத கண்டுபிடிப்பு. அரபுமொழி ஆதிக்கம் இஸ்லாத்தில் இல்லை என்றால் தமிழில் தொழுகை நடத்த வகாபியும் அவரது இயக்கத்தினரும் தயாரா? நேரிடையாக பதில் தேவையென கேட்டதற்கு அவர் சொன்ன “வழவழாகொழகொழா” பதில் இது.
பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள். சமகால உலகில் இது அரபுமொழியின் ஆதிக்கம் தவிர வேறென்ன?
நபி முகமதுவின் வழிமுறையை (சுன்னத்தை) உண்மையிலேயே பின்பற்றுகிறோம் என்று போலியாக பசப்பித்தி¡கிற இந்த வகாபிகள் இனி தமிழில் பேசக்கூடாது. ஏனெனில் நபிகள் நாயகம் பேசிய மொழி அரபு… நபிகள் நாயகம் பேசாத தமிழை எப்படி வகாபிகள் பேசமுடியும்….? தமிழில் பேசுவது நபிவழி இல்லையே….
அதுபோல தாங்கள் செய்து கொள்ளும் / நடத்தி வைக்கும் திருமணங்கள் எல்லாவற்றையும் நபி வழித் திருமணம் என்று புளகாங்கிதம் கொண்டு சொல்லித்திரிகிறார்கள். எது நபிவழித் திருமணம்? நபிகள் நாயகம் முதலில் திருமணம் செய்த கதிஜா நாயகியவர்கள் அடிப்படையில் ஒரு விதவைத் தாய். நபிகளை விட வயதில் மூத்தவர்…. இத்தகைய நபி வழித் திருமணத்தையா வகாபிகள் செய்கிறார்கள்… யாரை ஏமாற்ற இந்த பசப்பு வார்த்தைகள்…?
2. அரபு மொழியை யூதர்களும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பேசுகிறார்கள். மொழியால் ஒன்றுப்பட்டவர்கள் எனினும் சமய நம்பிக்கைகளால் வேறுபட்டவர்கள். உலக மக்களுக்கானது திருக்குர்ஆன் என்றெல்லாம் கோட்பாட்டு ரீதியாக வேண்டுமானால் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் நடைமுறை வேறாக இருக்கிறது. ஏனெனில் அரபுமொழி பேசும் யூதனும், கிறிஸ்தவனும் திருக்குர்ஆனை பின்பற்றவில்லை. அரபுமொழி பேசும் முஸ்லிம்களே பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களுக்கும் இது பொருந்தும். இங்கே மொழி மற்றும் சமயம் என்கிற இரு கருத்தாக்கங்கள் வினைபுரிகின்றன. சமய அடிப்படையில் முஸ்லிம்களாக இருப்பவர்களும், பிராந்திய அடிப்படையில் வெவ்வேறு மொழிகளை பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதுபோல் தமிழ்வழித் தொழுகையை நடத்துவதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அல்லா எல்லாமொழிகளையும் நன்கறிந்தவன் தானே… வகாபி குழுமம் தமிழ்வழித் தொழுகையை துவக்கட்டும். சூபியின் ஆதரவு நிச்சயம் உண்டு.
3. நபிமுகமது மூலமாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது. அல்லாஹ்வின் வஹியின் வழியாக திருக்குர்ஆன் அருளப்படுகிறது. இதை நவீனத்துவ இஸ்லாமிய அறிஞர்கள் ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் வழியாக வஹி வழங்க பெறவில்லை. நபிமுகம்மதுவின் உள்ளத்தில் அல்லா ஏற்படுத்திய உள்ளுணர்வு தூண்டலே வஹி என்பதாக அர்த்தப்படுத்துகின்றனர். எதுவாகவும் வைத்துக் கொள்ளலாம். திருக்குர்ஆன் வழியாகவே ஆதம் நபி முதல் இருபத்தைந்து நபிமார்களை உள்ளடக்கி ஏறத்தாழ 6,666 வசனங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இபுராகீம் நபி அராபியரா என்று வகாபி கேள்வி எழுப்பியிருக்கிறார். இபுராகிம் நபி எந்த ஆண்டு, எந்த தேதியில், எந்த குலத்தில் பிறந்துள்ளார் என்பதற்கு திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ வகாபி ஆதாரம் காட்ட முடியுமா? க·பத்துல்லாவை சுற்றி பழங்குடிமக்கள் மேற்கொண்ட மொட்டை போடுதல், பலியிடுதல், உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இபுராகீம் நபியின் வழி மரபுச் செயல்களை நபிகள் நாயகம் அவர்கள் உள்வாங்கி அரபு கலாச்சார நடவடிக்கைகளாக உருமாற்றம் செய்துள்ளார் என்பதுதானே வரலாற்றுரீதியான உண்மை. நோன்பு, தொழுகை, பிறப்புறுப்பின் நுனியை கத்தரித்தல் என எல்லாவித சடங்குகளும் மூசா நபி, ஈசாநபியைப் பின்பற்றி யூத, கிறிஸ்தவ கலாச்சாரப் பழக்கங்களை உள்வாங்கி வடிவமைக்கப்பட்டவைதானே…? எங்கேபோய் ‘சுத்த இஸ்லாத்தை’ இந்த வகாபிகள் தேடுவார்கள். இங்கு அரபுக்குலம் என்பது மக்காவில் வாழ்ந்த பதூயீன்கள் உள்ளிட்ட பலப்பல நாடோடி பூர்வ பழங்குடி இனக்குழுக்களையும், மதிநாவின் அரபுகளான வர்த்தகர்கள் மற்றும் அன்சாரிகள் உள்ளிட்ட குழுக்களையும் மொழி, இன அடிப்படையில் உள்ளடக்கிய ஒரு அடையாளச் சொல்லாடல’கும்.
4. காலத்திற்கு ஏற்றவாறு அல்லாஹ் வேதங்களை மாற்றி அருளியுள்ளான் என்பதை வகாபி ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் முந்தைய வேதங்களின் வார்த்தைகள் முழுமைத்தன்மை நிரந்தர தன்மையுமற்றது என்பதைத்தானே நிரூபணம் செய்கிறது. சரி அப்படி அருளப்பட்ட தவ்ராத், இஞ்சீல் உட்பட்ட வேதங்கள் எந்த வடிவில் யாரால் எங்கு பாதுகாக்கப்படுகிறது?
திருக்குர்ஆன் ‘முழுமை’ பெற்றுவிட்டது எனில் நூற்றுக்கணக்கில் குர்ஆனுக்கான விளக்கங்கள் தப்சீர்கள், தர்ஜுமாக்கள் ஏன் எழுதப்பட்டன? எழுதப்படுகின்றன…?
அஹமதியா இயக்கத்தின் மூலவரான மிர்சா குலாம், கறுப்பின மக்களுக்கு இஸ்லாத்தின் வழி விடுதலையை சாத்தியப்படுத்திய எலிஜா முகமது, திருக்குர்ஆனில் புதிய எண்கணித ஆய்வு முறையினையும் ஹதீஸ்களையும் மறுவாசிப்பு செய்த எகிப்திய அறிஞர் ரஷாத்கலீபா உள்ளிட்டோர் இறுதி நபி முகமதுக்கு பிறகு தங்களை மீண்டும் நபிகளாக அறிவித்தது ஏன்? நபித்துவத்திற்கும், தூதுவத்துக்கும் இடையிலான வேறுபாட்டை பேசியதேன்? திருக்குர்ஆனின் வசனங்களும் கால மாற்றத்திற்கு ஏற்ப பொருள் மாறுபாடடைந்து வருகிறது என்பதுதானே உண்மை. இதை ஏன் வகாபி போன்றோர்கள் புரிய மறுத்து பழமைவாத, நிலைபாட்டுக்கு தலைகீழாக நடக்க முற்படுகிறார்கள்.
5.தமிழின் 247 எழுத்துக்களையும் தெரிந்தவுடன் அவர்கள் எழுதுவதெல்லாம் தமிழல்ல வகாபியும் தான் எழுதுகிறாரே இங்கே முழு அறிவு, அரையறிவு, காலே முக்கால் அறிவு, என்பதல்ல பிரச்சனை. எழுதப்படும் தமிழ் எந்த விதமான சிந்தனையை கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். அப்படி என்றால் எழுதப்படிக்க தெரியாத ‘உம்மிநபி’ எப்படி அறிவின் ஆழங்களோடு சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியிருக்க முடியும்!
6. இஸ்லாமிய ஆடைவிதிகளைப் பற்றிய விவாதத்திற்கு கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாக தெரிகிறது போலும் என்கிறார் வகாபி. சூபிகள் அடிப்படையிலேயே கம்பளியை போர்த்திக்கொண்டு கிழிந்து போனவர்களாய் தேசாந்திரிகளாய் அலைந்து திரிந்தவர்கள்தான். முழுக்க அணிவதை ஒன்றும் சூபி முட்டாள்தனமாக கருதவில்லை. இன்றிலிருந்தே வஹாபி இயக்கவாத ஆண்கள் அனைவரும் பர்தாவை போர்த்திக் கொண்டு அலையட்டும். எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை.
7. திருக்குர்ஆன் அல்லாவின் வார்த்தைதானே…. ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்வது இறை ஆணையன்று – அனுமதிதான் என்று அலுத்துப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை காலம் இந்த வகாபிகள் பேசிக் கொண்டிருப்பார்கள்… இஸ்லாத்தின் கோட்பாடெல்லாம் சரியாக இருக்கிறது. அதைப் பின்பற்றும் முஸ்லிம்கள் தான் சரியாயில்லை என்று மக்களின் நடத்தை மீது திரும்ப திரும்ப குற்றம் சாட்டும் வகாபிய புரோகிதர்கள் பலதார மணம் உள்ளிட்ட இக்கோட்பாட்டின் உண்மையான தாக்கம்தான் மக்களின் இயல்பான நடத்தைகளை தீர்மானித்திருக்கிறது என்பது குறித்து என்றாவது மறுசிந்தனை செய்திருக்கிறார்களா?
8. ”தன்பிள்ளைகளின் அப்பன்பெயர் தெரியாத அம்மா பட்டியலை உள்ளடக்கிய பெண்ணிய இஸ்லாம்” என மிக மோசமாக தன் ஆணாதிக்க பாசிச பார்வையை திரும்பவும் வெளிக்காட்டியுள்ளார். அறிவுக்கொழுந்து வகாபியின் நல்லதொரு பாலியல் ஆராய்ச்சி இது. அப்படி எனில் அல்லாவின் வார்த்தையான திருக்குர்ஆன் கூறும் அன்னை மர்யத்தின் வரலாறு பற்றியும் இறைத்தூதர் ஈசா நபியின் பிறப்பு பற்றியும் வகாபி விஞ்ஞான பூர்வமாக இனி பேசுவார் என்று எதிர்பார்ப்போம்.

—————–
tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது