மலர்களும் முட்களும்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

புதியமாதவி


மலர்மன்னன் கட்டுரைகளை முன்வைத்து…

‘அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான் அது உதவுமே யன்றி மனமாற்றத்திற்கு வழியே இராதுபோய்விடுமே! எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடம் அவரவர் அறிந்தவரையிலுமான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டு, தீர ஆராய்ந்து மெய்ப்பொருள் காணுதல். இம்மாதிரியான விவாதங்களில் வெற்றி என ஒரு சாரார்

எக்களிக்கவும், தோல்வியென மறு சாரார் மனம் குமையவும் இடமில்லை. அனைவருமே மெய்ப் பொருள் கண்டு தேர்ந்த மகிழ்ச்சியை அனைவருக்குமான வெற்றியாகக் கொண்டாடலாம். மேலும், தர்க்கம் என்கிற சாக்கில் எதிராளியைக் கிண்டல் செய்வதும், தனி நபர் தாக்குதலில் இறங்குவதும் அநாகரிகம் என்பதை அறிந்திருக்கிறேன். என்னை எவ்வளவுதான் ஆத்திரமூட்ட முயற்சி செய்தாலும் நிதானம் இழந்து அவர்களின் பாணியில் கேலி, கிண்டல் செய்வதும், தனிநபர் தாக்குதலில்

இறங்குவதுமான அநாகரிகத்தை மேற்கொள்ள மாட்டேன். இந்தப் பண்பைஎனக்குக் கற்றுத்தந்தவர் அண்ணா என்பதை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு ஒருசிறிதும் தயக்கமில்லை. ‘

மலர்மன்னன் அவர்களின் தெளிவான இக்கருத்துகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டதன் விளைவாகவே இந்தப் பக்கத்தை எழுத விரும்பினேன்.

பாபுஜி > நாதுராம் கட்டுரையில் அவர் கீழ்க்கண்டவாறு ஒரு ஸ்டேட்மெண்ட்டை முன்வைக்கிறார்.

‘போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன் ? அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது. ‘

எவ்வளவு ஆபத்தான விளக்கங்களைத் தரக்கூடியது என்பதை அவரைப்போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் கட்டாயம் உணர்ந்தே

இருப்பார்கள். அவருடைய இக்கருத்தை அப்படியே ராஜீவ் காந்தி கொலைவழக்கிலும் சொல்லமுடியும்தானே! பின்லேடன் கூட

சொந்தக்காரணத்தின் அடிப்படையில் உள்நோக்கம் எதுவுமின்றி ஒரு கடமையின் பாற்பட்ட கருமமாகவே காரியங்கள் செய்கிறான் என்றும் சொல்லலாம்தானே. அவரவர் கடமைகள் சரியா தவறா என்று முடிவு சொல்ல நாம் யார் ?

ஈ வெ ரா பற்றிய கருத்துகளைச் சொல்லும்போது ஓரிடத்தில்

‘ஹிரணியனுக்கு எப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாகவே இருந்ததுபோல அவருக்கு எந்நேரமும் ‘ ‘பார்ப்பான் ‘ ‘ ஞாபகம். ‘ என்று சொல்கிறார்.

பெரியார் எழுதிய விடுதலை அறிக்கை 01.01.1962 இவ்விடத்தில்நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

‘பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேகப் பார்ப்பனப் பிரமுகர்கள்- பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும் மதிப்புக்குரியவனாகவும்

நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்….

உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களூடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும் ‘

தந்தை பெரியார் எந்தப் பார்ப்பானையும் நேரம் பார்த்து சந்தர்ப்பம் பார்த்து ஒழித்துக்கட்டும் பார்ப்பனர்களின் விரோதி அல்லர்

அவர். அவரும் அவருடைய பார்ப்பன எதிர்ப்பும் எதன் அடிப்படையில் பற்றி எரிந்த நெருப்பு என்பது மலர் மன்னன் போன்றவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். காந்திஜியைத் துப்பாக்கியில் கொன்றது ஓர் இந்துதான்,இசுலாமியன் அல்லன் என்று மீண்டும் மீண்டும் அன்றைக்கு தன் வானோலி ஒலிபரப்பு அலைகளில் அலற வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு இருந்தது என்பதைப் பத்திரிகை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பார்ப்பன விரோதி என்று விமர்சிக்கப்படும் பெரியார் அந்தச் சூழ்நிலையைத் தனக்கு எவ்விதத்திலும் சாதகமாக்கிக்கொள்ளவில்லை, இன்றைய அரசியல்வாதிகளைப் போல. காந்தி மறைவுக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் இயக்கத்தோழர் ஒருவர் நாதுராம் குறித்து சாதி மத அடையாளத்துடன் பேச ஆரம்பிக்கவும் தன் கைத்தடியால் மேடையில் தட்டி அவருடைய பேச்சின் போக்கை அப்போதே கண்டித்தவர் பெரியார்.( இச்செய்திகள்

எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. என் தந்தைசொன்னதுதான். எந்த இடத்தில் நடந்தக் கூட்டம். யார் பேசியது என்பதெல்லாம் இப்போது நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை!).

நாதுராம் செய்தது சரியா தவறா என்கிற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் நினைத்துப் பார்க்கிறேன்..இந்துக்களுக்கு காந்தியின் செயல்கள் எவ்வளவு எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதோ அதைவிட அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் அம்பேத்கரும் அவரை முன்னிறுத்தி தங்கள் உரிமைகளுக்காக போராடிய தலித்துகளும். அப்படியானால் அந்த

தலித்துகளில் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்திருந்தால்..! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது..! இந்த நாட்டின் வரலாறும் பத்திரிகையும் அறிவுலகமும் அதை எப்படி எழுதியிருக்கும்..இப்படி ஒர் கேள்வி எழுவதை இந்த நிமிடத்திலும் என்னால்

தவிர்க்கமுடியவில்லை.

இனி அண்ணா அவர்களைப் பற்றிய கருத்துகளுக்கு வருவோம்.

காமராசர் தோல்வி குறித்து அண்ணா அவர்கள் எவ்வளவு வருத்தப்பட்டார்கள் என்பதை மலர்மன்னன் எழுதியிருக்கிறார். நானும்

பிற்காலத்தில் பலர் சொல்ல இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதும் இப்போதும் ஒரு கேள்வி எழுத்தான் செய்கிறது.. அவ்வளவு அக்கறை இருக்குமானால் அண்ணா அவர்கள் காமராசரை எதிர்த்து யாரையும் நிறுத்தி இருக்ககூடாது தானே! போட்டிக்கும் ஆள்நிறுத்துவேன் தோற்றுப்போனால் வருத்தப்படுவேன் என்பதும் எவ்வளவு முரணாக இருக்கிறது. பெருந்தலைவர் காமராசர் தோறூவிடுவாரோ என்ற அச்சத்தில் தி.மு,க. தன் வேட்பாளரைப் போட்டியிலிருந்து விலக்கிக் கொள்கிறது என்று தனக்கே உரிய தமிழ்த் தோரணையில் அண்ணா தம்பிக்கு எழுதியிருக்கலாந்தானே!

தனிமனிதராக மிகச்சிறந்த குண இயல்புகளை உடைய அண்ணா அவர்களையும் அவர் கோவா விடுதலைப் போராட்டத்தில் போர்த்துகல் சிறையிலிருப்பவர்களுக்காக போப்பாண்டவரைச் சந்தித்த நிகழ்வையும் மும்பை சிவாஜிபார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோகன்ராணடே பேசினார். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதராக அண்ணாவைப் பற்றி

அவர் பேசிய கருத்துகள் அன்றைய மும்பை பத்திரிகைகளில் வெளிவந்தன.ஒரு தனிமனிதரின் குண இயல்புகள் இந்தச் சமுதாயத்தைப் பாதிப்பதைவிடஅதிகமாக அதே தனிநபரின் சமூகச் செயல்கள், பேச்சுகள், எடுக்கும் முடிவுகள் (அதிலும் குறிப்பாக அரசியல்/இயக்கத் தலைவர்களின் செயல்கள்) இந்த நாட்டையும் மக்களையும் பாதிக்கும். அப்படித்தான்

அண்ணாவின் சில செயல்களும் …

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி..இத்திட்டம் ஓர் அரசியல்வாதி ஓட்டுச்சேகரிக்கச் சொன்ன திட்டம் என்றால் இன்றைய சூழலில் அதிலென்ன தவறு என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் பொருளாதாரம் படித்த அண்ணா அவர்கள் இத்திட்டத்தை அறிவித்தது நெருடலாகத்தானே இருக்கிறது.

எம்.ஜி.ஆர் என்ற ஒரு சினிமா கவர்ச்சி அன்றைக்கு இதயக்கனியாக அரசியல் மேடையில் ஓட்டுச்சேகரிக்க அண்ணாவுக்கு தேவைப்பட்டிருக்கலாம்.ஆனால் சினிமா, ரசிகர் மன்றங்கள், நாற்காலி ஆசைகள்.. என்று தீர்க்கமுடியாத ஒரு சாபக்கேட்டை நம் மக்களிடம் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்தியதில் அண்ணாவுக்கும் பெரும்பங்குண்டு.

அறிஞர் அண்ணாவிடம் மலர்மன்னனுக்கு இருக்கும் மரியாதை, அன்பு எனக்கும் அண்ணாவிடம் உண்டு என்பதை மலர்மன்னன் அவர்கள் அறிவார். அண்ணாவிடம் நெருங்கிப்பழகி இருக்கும் மலர்மன்னனிடம் கேட்கப்படும் கேள்விகள் அல்ல இவை. சமகால சரித்திர நிகழ்வுகளையும் அதில் மறைந்து கிடக்கும் முரண்களையும் இன்றைய தலைமுறை

உணர்கிறது. இந்த உணர்வுகளைப் பதிவு செய்வது மட்டுமே என் நோக்கம்.

கண்ணில் கண்ணீர் மல்க நெஞ்சை ஈரப்படுத்தும் அண்ணாவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி.

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை