அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

நண்பன்


தமிழ்ப் பெண்களின் பிரதிகளாகத் தங்களைக் கருதி கருத்துச் சொல்லும் பெண்கள் – அதை சொல்வதோடு நிறுத்திக் கொண்டால் கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் தாங்கள் பயின்ற வாழ்வையே தங்கள் கருத்தாக வழி மொழியும் பொழுது அதில் நமக்கு என்ன தடைகள் இருக்கப் போகிறது ? ஆனால் அவர்கள் கருத்து தனிமனித கருத்தென்பதையும் மீறி அனைத்துப் பெண்களின் மீதும் திணி க்கப்படும் பிரதிநிதித்துவமான கருத்தாக மொழியப்படும் பொழுது – பிற பெண்களின் மீதான கருத்துத் திணிப்பாகத்தான் அறியப்படும். அடுத்தவர் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்துத்தான் இந்த போலி பெண்ணியவாதிகள் தங்கள் கருத்து கற்பிதங்களை நிறுவுவார்களா ?

கருத்து சுதந்திரம் பேச முனைந்தவர்கள் – முதலில் பிரச்சினையின் முழுத் தன்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். வாஸந்தி சொல்லுகிறார் – இந்தியா டுடேயில் குஷ்புவின் கருத்தைக் கண்டு மிரண்டு பாய்ந்து விட்டனர் தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாவலர்கள் என்று. வாஸந்தி முழுப்பூசணிக்காயை சோற்று மூட்டைக்குள் மறைக்கப் பார்க்கிறார். தமிழ் வாசி க்கத் தெரிந்த அனைவரும் இதை அறிவர்.

குஷ்பு இந்தியா டுடேயில் கூறிய எந்த ஒரு கருத்தையும் பெரிய அளவில் தமிழக மக்கள் அறிந்திருக்கவில்லை. போராட்டம் அதற்காகத் தொடங்கப்படவில்லை. மாறாக தினத்தந்தியில் குஷ்பு பேசிய கருத்துத் திணிப்பை வாசித்துத் தான் அத்தனை பெண்களும் கொதித்து எழுந்தனர். இந்தப் பின்னணியை வாஸந்தி அறிந்திருக்கவில்லையா ? அல்லது பாமர மக்கள் படிக்கும் தினத்தந்தியை, தான் வாசித்ததை வெளியில் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறாரா வாஸந்தி ? இங்கேயே தன் சார்புத் தன்மையை வெளிப்படுத்தி விடுகிறார். தான் பாமர மக்களின் பக்கம் அல்ல என்பதை.

ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பக்கமிருந்து கொண்டு, மீதியுள்ள பெரும்பான்மையினரைப் பார்த்து, இழித்து இவர் பேசுவது கருத்து சுதந்திரமாகிவிடுகிறது. அதைக் கண்டித்துப் பேசும் மற்றவர்கள் எல்லாம் திராவிட வர்க்கத்தினர்!! என்ன ஒரு நியாயம் இது ? இவரது கோபமெல்லாம் – திராவிட இனத்தவர் மீது தானே தவிர – குஷ்பு விளக்கம் சொல்லும் பெண்ணியத்தின் சார்பாக நின்று அல்ல.

அடிப்படையிலே நேர்மைத் திறனுடன் பேசும் தகுதி இழந்த பின்னும் வாஸந்தியின் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டுமா ? ஒரு வாதத்திற்காக மேற்கொண்டும் வாஸந்தியின் கருத்துகளை விவாதிக்கலாம்.

அவரின் ஆதங்கமே – திராவிட இனத்தை வசை பாட வேண்டும். அதற்கு குஷ்புவின் கருத்து திணிப்பை பயன்படுத்திக் கொண்டு – சம்பந்தமேயில்லாத கருத்து கோவைகளை எடுத்து வருகிறார்.

ஒரு நிலைபாடு எடுத்து விட்டு, பிறகு அதில் நின்று, எதிர்கருத்துகளின்றி வெறும் வறட்டுக் கூச்சலினாலே வாதம் புரிவது தான் வாஸந்தியின் நோக்கம். பெண்ணியம் பற்றி பேசக் கிளம்பி பின் தேசியம் பேசுகிறார். தேசியம் என்பது ஒரு கற்பிதம். தமிழ் தேசியம் என்பது ஒரு பயங்கர கற்பிதம். அப்படியானால் கற்பிதமில்லாத ஒரு நியதியை எடுத்து வைக்கலாமே ? கற்பிதமில்லாத நியமம் என்று ஒன்று உண்டா ? பெண்ணியம் என்பது கூட ஒரு கற்பிதமாகத்தானே வளர்க்கப்படுகிறது ? ஒவ்வொரு பெண்ணும் தான் சுயமாக சிந்தித்தவற்றை வைத்து மட்டுமா பெண்ணுரிமை பேசுகிறாள் ? இல்லையே ? குஷ்பு, வாஸந்தி மற்றும் பிற பெண் படைப்பாளிகள் போன்ற வெளியே தெரியும்படியான அடையாளம் உள்ள பெண்கள் தரும் தகவல்கள், கருத்துகள் இவற்றைக் கொண்டு தானே கற்கிறார்கள் ? கற்பிதம் என்ற இயங்குதலில் ஈடுபட்டு நிற்கும் இவர்கள் தங்களை விலக்கிக் கொண்டு மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவது ஏன் ? ஒரு விரலை நீட்டும் பொழுது மற்ற விரல்கள் அனைத்தும் தங்களை நோக்கி குவிந்திருப்பதை அறிந்திருக்கவில்லையா ? இவ்வுலகின் எந்த ஒரு சித்தாந்தமுமே கற்பிதம் இல்லாமல் இயங்குவதில்லை. பிறகு தமிழ்த் தேசியத்தின் மீது ஏன் இந்த பாய்ச்சல் ? அது – ஆற்றாமை.

மக்களின் விழிப்புணர்ச்சியால் தங்களுக்கு ஆபத்து என்று நினைக்கும் ஆதிக்க இனத்தின் மன உளைச்சல். மாறாக பெண்களின் விடுதலை அல்ல.

இதே வீச்சில் பேசும் பொழுது – பெரியாரின் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். எந்தப் பெரியாரை தீவிரமாக எதிர்த்து வந்தார்களோ அந்தப் பெரியார் திடாரென்று இவர்கள் கண்களுக்குத் ஆபத்பாந்தவனாக – தீர்க்கதரிசியாகப் படுகிறார். இந்த வகையில் குஷ்பு கிளப்பிய இந்த விவாதம் ஒரு நன்மையில் முடிந்திருக்கிறது – ஆம் இன்று பெரியார் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டார். பதிவாக இருக்கிறது – இந்தியா டுடேயில். எந்தப் பத்திரிக்கையை வாசிப்பது தான் தங்கள் தர்மம் என்று வாஸந்தி போன்ற நேர்மையற்ற அறிவுஜீவிகள் கருதுகிறார்களோ அதே பத்திரிக்கையில் இருந்து நாளை எங்களாலும் மேற்கோள்கள் கொடுக்க முடியும் – இவர்களின் பெரியார் ஏற்புக் கொள்கையை.

ஆனால் இந்த மகிழ்வு – இவர்கள் பெரியாரை ஏற்று ஒரு ஆயுதமாக தமிழ் சமூகவியலாளர்களுக்கு எதிராக முன் வைக்கும் பொழுது வடிந்து விடுகிறது. பெரியாரைப் பற்றிய அறியாமை தான் இவர்களிடத்தில் இருக்கிறது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் – முதன்முறையாக பெரியாரை எடுத்துக் கொண்ட பொழுது கொஞ்சம் பிசகத் தான் செய்யும்.

பெரியார் கூறியது என்ன ?

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்றா கூறினார் ? அப்படி எங்கும் கூறியதே இல்லை. ஒழுக்கக் கேட்டை அவர் எங்கும் போதித்தது கிடையாது.

அவர் கூறியதெல்லாம் – எவற்றைக் கொண்டு பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்களோ அவற்றை பெண்கள் துணிந்து செய்ய வேண்டும் என்று!!! ஒரு ஆண்மகன் ஒருத்தியை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டால், அதற்குப் பதிலாக பெண்களும் ஆண்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படித் தானே கூறினார் ? ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகக் கூறியதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்வதாக இருந்தாலும் கூட, அவர் பேசியது திருமணத்திற்குப் பின் பெண்கள் தங்களை எப்படி நடத்திக் கொள்ளலாம் என்று தானே ? அவர் ஆண்- பெண் வர்க்கப் போராட்டத்தின் தாத்பரியத்தைத் தெளிவாகப் புரிந்திருந்தார்.

ஒரு பெண் எங்கு மிக அதிகமாக அடிமைப்படுத்தப் படுகிறாள் ? எந்த இடத்தில் அவள் தன் சுயமரியாதையை இழக்கிறாள் ? மனைவி என்ற முறையில் தான் அவள் சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் மிகுதியாக உள்ளாக்கப்படுகிறாள். ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு தாயாக சிறுமைப்படுத்தப்படுவதை விட – ஒரு ஆணிடத்தில் மனைவியாக அடிமைப்பட்டுக் கிடக்கும் பொழுது தான் அதிகம் சிறுமைக்கு ஆளாக்கப்படுகிறாள். அதனால் தான் பெரியார் பெண்ணியம் பேசும்பொழுது கணவனின் ஆதிக்கத்தை எதிர்க்க பெண்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

ஆனால் குஷ்பிசம் பேசும் பெண்ணியவாதிகள் எதை உரிமையாக – விடுதலையாகக் கேட்கிறார்கள் ?

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளும் உரிமையே பிரதானமாக!!!

கணவனுடன் (என்ற ஆணுடன்) இணைந்து இயங்கும் பொழுது இன்று இவர்களால் வலியுறுத்தப்படும் இந்த உடலுறவு உரிமை தேவையில்லையா ? தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண், தனது உரிமை என்று கருதும் ஒன்று – கணவனின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது தேவையில்லாத ஒன்றாகி விடுமா ? அப்படியானால் – இந்த பெண்ணியவாதிகளின் போராட்டமெல்லாம் தந்தையர்களை எதிர்த்துத் தானா ? வேறெதுவுமில்லையா ? எ

ன்ன ஒரு பித்தலாட்டம் ? பெண்ணியம் என்பதை ஒரு துளி கூட புரிந்து கொள்ளாது, வியாக்கியானங்கள் மட்டும் பேசினால் போதுமா ?

சங்க இலக்கியங்களையும் துணைக்கழைக்கிறார்கள் –

சங்க இலக்கிய காலத்தில் – தாலி என்ற ஒன்று இல்லை தான்.(தாலி என்பதே பிற்கால கற்பிதம் – வந்தேறிகளின் வழியான கற்பிதம்) ஆனால் அவர்கள் தலைவன் தலைவியாகத் தானே வாழ்ந்தார்கள் ? களவிலும் ஒழுக்கம் கண்ட மரபு அது என்பது சரிதான். ஆனால் களவு புரிந்தது யாரோடு ? தன் காதலனுடன். பின்னாளில் இணைந்து வாழப் போகும் ஆடவனுடன். இன்று இச்சைக்காக உடலுறவு புரிந்து நாளை வேறு ஒருவனை மண க்கப் போகும் நங்கை அல்ல அவள்.

எதையும் துணைக்கழைக்கும் பொழுது, அதன் பின்னணியை ஆராயாது அதை மேற்கோள் காட்டுவது என்பது தவறல்லவா ?

சங்க இலக்கியத்தில் தாலி இல்லை. காதலர்களுக்குத் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை. சாதிகள் குறுக்கிடாத சமூகம் அது. ஒருவரை ஒருவர் ஏய்த்துப் போகும் எண்ணமில்லை.

இதெல்லாம் இப்பொழுது நடக்கக் கூடிய சாத்தியம் உண்டா ? பெண்கள் ஏமாந்து போவதற்கு மிகுதியான வாய்ப்புகள் உண்டு. அதனாலயே பாதுகாப்பு கருதி உறை அணிய லோசனை சொல்கிறார்கள். இப்படிப்பட்ட உறவை எப்படி சங்க இலக்கியத்துடன் ஒப்பு நோக்குகிறார்கள் ? திருமண பந்தங்களே ஒரு ஒப்பந்தம் என்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருவரும் உறவு கொள்வதும், – எந்த ஒரு உறவிற்கும் உத்தரவா தமில்லாத உறவில் பாதுகாப்புடன் ஈடுபடும் இருவரும் ஒன்றா ?

இன்று இந்த குஷ்பிசத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பவர்கள் – அடிதட்டு மக்களே – வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கீழ்மையுற்ற நிலையிலிருந்து மேல்நோக்கிய ஏற்றத்தில் போராடி ஏறிவரவேண்டிய கட்டாயம். ஒரு அடிப்படை ஒழுக்கமிருந்தால் மட்டுமே இந்த மேல்நோக்கிய பயணத்தில் இயங்க முடியும். மேல்நோக்கிய பயணத்தில் இந்தப் பெண்கள் புறக்கணிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். சமூகத்தின் அடிதட்டிலிருந்து வரும் இந்தப் பெண்களை மேலிருக்கும் சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் மேல்மட்ட சமூக பெண்களுக்கு இந்த சிக்கல்கள் அதிகமிருக்காது. அவர்களை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு கீழிருப்பவர்களுக்கு அதிக சிரமமிருக்காது. ஆகையால் மேல்தட்டு மக்கள் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டு வழுக்கிவிட்டாலும் பாதகமில்லை. ஆனால் கீழ்தட்டு மக்களுக்கு அவ்வாறில்லை. ஆகவே தான் இத்தனை சீற்றம். இதை தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தின் தோல்வியாக நிறுவ முயல்வது மேல்தட்டு மமதையே அன்றி வேறெதுவுமில்லை.

ஆக குஷ்பி(வி)சம் பேசுபவர்கள் மூன்று விதத்தில் பெண்களுக்கு எதிரான கருத்தை சொல்கிறார்கள்.

1. சாதியம் நிறைந்த இந்த சமூகத்தில் களவு ஒழுக்கம் எடுபடாது. அத்தகைய நடைமுறையை ஏற்படுத்த முதலாக சாதியத்தை ஒழிக்க வேண்டும். குஷ்பு போன்ற மேல்தட்டு பெணகளுக்கு இந்த ஒழுக்கம் அவசியமேயில்லை. – (இந்த மேல்தட்டு சாதியத்தையும் மீறியது – பொருளாதார வளமை தந்த மேல்தட்டு வசதிகள்)

இதன் அடிப்படையிலேயே குஷ்பு அடித்தட்டு மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களால் எதிர்க்கப்படுகிறார்.

2. உடலுறவு சுதந்திரத்தை இவர்கள் ஒரு ஆயுதமாக தந்தை, தாய் என்ற குடும்பம் என்ற அமைப்பிலிருக்கும் பொழுது கேட்கிறாள். இவளே தனியாகக் கணவன் என்பவனுடன் இணைந்து குடும்பம் என்ற நிறுவனத்தை நிறுவும் பொழுது அதை உரிமையாகக் கேட்பதில்லை. ஒரு வயதில் விடுதலையாகக் கருதப்படுவது மற்றுமொரு வயதில் உரிமையாகப் பார்க்கப்படுவதில்லையே – ஏன் ? அப்படியானால் – antiestablishment trait – என்ற இளமையின்துடுக்கையும் நிறுவன எதிர்ப்பில் மதர்த்து நிற்கும் இளமையின் இச்சையையும் தீர்த்துக் கொள்ளும் வேட்கைக்கு மட்டும் தானா உரிமை ? இது தவறாகப்படவில்லை ?

3. உடலுறவு தான் உரிமை – திருமணத்திற்கு முன்னோ அல்லது பின்னோ என்று வைத்துக் கொண்டால் கூட, அது என்ன உரிமையைப் பெற்றுத் தந்து விடும். ? உரிமை என்று நினைக்கும் உடலுறவிற்காக ஒரு ஆணிடம் தானே போய் நிற்க வேண்டியதிருக்கிறது ? ஒரு ஆணிடம் சரணடைந்து – இணங்கி – ஒத்துழைத்து – எந்த உரிமையை நிலைநாட்டப் போகிறீர்கள் ? எங்கிருந்து வந்தது இதில் உரிமை ? இது கடைந்தெடுத்த அடிமைத்தனம் அல்லவா ? ஏன் இந்தப் பெண்ணியவாதிகள் – இன்று மேல்நாட்டில் பெண்ணியம் பேசும் பெண்களிடையே பரவலாக இருக்கும் இந்த ஓரின உறவைப் பற்றி பேசவில்லை ? ஆண்களிடம் தான் போய் நிற்க வேண்டுமா ?

ஆக குஷ்பு பேசியது – அவருடைய அளவில் சரியே தவிர – அது பெண்களின் – சுயமரியாதை உள்ள எந்த ஒரு பெண்ணின் கருத்தும் ஆகாது – உரிமையும் ஆகாது.

ஆமாம் – உரிமை என்பது உடல் சார்ந்த ஈர்ப்பில் மட்டுமே இருப்பதில்லை. அது ஒரு பெண்ணின் சுயமரியாதையில் இருக்கிறது. தனக்கு விருப்பமிருந்தால் மட்டுமே உடலுறவில் ஈடுபடுவேன் என்று நிறுவும் ஆளுமையில் இருக்கிறது – அது கணவனாக இருந்தால் கூட என்று சொல்லும் பக்குவம் பெறுவதில் இருக்கிறது – Empowering the self esteem is the freedom for the women. (for anyone, as a matter of fact)

இறுதியாக – பண்பாட்டுக் காவலர்கள் – யோனியின் காவலர்கள் – இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் இவர்கள் உரிமை என நினைத்து வீர்யம் பெற்ற யோனியை எவருடனும் பகிர்ந்து கொள்வோம் என்ற தங்கள் சொந்த விருப்பை எல்லாப் பெண்களின் மீதும் திணித்து ஒரு இனத்தின் பொதுக்கருத்தாக நிறுவ முயற்சிக்கும் கருத்தியல் வன்முறைக்கு – கருத்தியல் பாஸிசத்திற்கு உட்படுத்தும் பொழுது – அப்பாவிகளின் யோனிகளுக்கு காவல் தேவையாகத் தான் இருக்கிறது – போலி பெண்ணியவாதிகளின் யோனிகளுக்கல்ல.

— pmdshaji@yahoo.com

Series Navigation

நண்பன்

நண்பன்