கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

விஸ்வாமித்ரா


அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்னக் கருப்பன் அவர்களுக்கு

வணக்கம்

தங்களது சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்த கட்டுரை மிக கருத்தாழமிக்க ஒன்று. இன்றைய காலக் கட்டத்துக்கு மிக அவசியமான ஒரு பொருட்படுத்துதல் உங்கள் கட்டுரை. தேசத் துரோகிகளுக்கும், ஊழல் வாதிகளுக்கும், பிற மதத் தலமைகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு சொந்த தேசத்தையும், மதத்தையும் இழிவு படுத்தும் கூட்டத்தினருக்கும், ஒழுக்கக் கேடான வாழ்க்கையே ஆதர்சமாகக் கொண்டு வாழ்பவர்களுக்கும், தமிழின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் ஏமாற்றுக் காரர்களுக்கும், நயவஞ்சகம் புரிந்து காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகளுக்கும், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி பெற்றுக் கொண்டு, ஆராய்ச்சி செய்கிறோம் என்று பம்மாத்துப் பண்ணிக் கொண்டு, தேசத் துரோக சிந்தனைகளிலும் பிரச்சாரங்களிலும் ஈடுபடும் ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுக்கும், பிராமண எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை மட்டுமே உண்டு கொண்டிருக்கும் துவேஷக்காரர்களுக்கும், கடத்தல் காரர்களுக்கும், கொள்ளைக் காரர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும், நாட்டை விலை பேசி விற்றுவிடத் துடிக்கும் தரகர்களுக்கும் சோ என்ற பெயரும், துக்ளக் என்ற பத்திரிகையும், சிம்ம சொப்பனமாகவும், வெறுப்பின் மொத்த உருவமாகவும், பிற்போக்குப் பத்திரிகையாகவும் தோன்றுவதில் எவ்வித வியப்புமில்லை. சோ மீதும், துக்ளக் மீதும் வன்முறையும் அவதூறுகளும் அவர் பொதுவாழ்வில் புகுந்த நாள் முதலாக நடந்து வருபவையே.

வெறுப்புணர்வை முதலீடாக வைத்து, இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்தி வரும் ஒரு கும்பலுக்கு ஒரு சிறு தடையாக சோவும், கண்ணதாசனும், ஜெயகாந்தனும் செயலாற்றி வரும் உண்மையை மிகத் தெளிவாக அங்கீகாரம் செய்துள்ளீர்கள். பாரதியையே தமிழனாக ஏற்காத இந்தக் கழகக் கைக்கூலிகளுக்கு சோ, ஜெயகாந்தன் போன்றவர்கள் ஒரு கடினமான எதிர்ப்பை வழங்கியது தமிழக வரலாற்றில் போற்றுதலுக்குரிய ஒரு சேவையாகும். அடுத்த தலைமுறையில் சோவிடமிருந்து, ஜெயகாந்தனிடமிருந்து இந்த கடமையை எடுத்துச் செல்லப் போகும் சிந்தனையாளர்களை இன்றைய சூழ்நிலையில் காண முடிவதில்லை. முறையற்ற, ஒழுக்கமிழந்த வாழ்க்கையே சரியானது என்று ஒரு அழிவுப் பாதையில் செல்லத் தொடங்கிய தமிழ் நாட்டை, அந்தப் பாதை அழிவுப் பாதை என்று சுட்டிக் காட்டுவதற்காகவாவது நம்மிடம் ஒரு சோவும், ஜெயகாந்தனும், கண்ணதாசனும், நா பாவும் இருந்தனர். அவர்களது தார்மீகப் பலமும், நேர்மையும், தான் சரியென்று நினைத்ததில் காட்டிய நெஞ்சுறுதித் திறனும் மட்டுமே துணையாக இருந்தன.

உங்கள் கட்டுரையில் சோ, கழகத்தினரின் வன்முறைக்கு ‘அவருக்கு தி மு க மேலிடங்களில் உள்ள செல்வாக்கால் தப்பியிருக்கலாம் ‘ என்று எழுதியிருந்தீர்கள். அது உண்மையல்ல. 90ம் வருடம், மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சோ முக்கியப் பேச்சாளர். தமிழருவிமணியன் (தற்பொழுது காங்கிரஸில் இருக்கிறார்), நெல்லை ஜெபமணி போன்றவர்கள் பேசி முடித்தவுடன் சோ பேச வேண்டும். அப்பொழுது இருந்த தி மு க அரசின் மறைமுக உத்தரவின் பேரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டதிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் படவில்லை. கருணாநிதியின் தலைமையில் உள்ள போளீஸ் அந்தப் பெருங்கூட்டத்திற்கு ஒரு காவலரைக்கூட பாதுகாப்புக்கு அனுப்பவில்லை. திட்டமிடப் பட்டத் தாக்குதல் அது. சோ பேச ஆரம்புத்தவுடன், மதுரையில் உள்ள மாவீரன் ஒருவரின் அடியாட்களால் சரமாரியாக ஆசிட் பாட்டில்கள் அவர் மேல் வீசப் பட்டன. அவற்றில் ஒன்று வெடித்திருந்தாலும் சோ அன்று காலியாகியிருப்பார். ஒரு திறமையான கிரிக்கெட் ஃபீல்டருக்குரிய லாவகத்துடன் சட் சட்டென அனைத்தையும் பிடித்து சோ, கீழே மன்ணில் மீது எறிந்து கொண்டிருந்தார். சோவின் அபிமானிகள் பலர் அவரின் மேல் விழுந்து அவரின் உயிரை அன்று காப்பாற்றினார்கள். மேடையில் இருந்த பிறர் கடும் காயத்திற்கு உள்ளாயினர். ஆனால் சோவின் உயிர் அன்று தப்பியது கடவுள் புண்ணியமே. உயிர் தப்பிப் பிழைத்த மனிதருக்கு கொஞ்சம் கூட பட படப்பு இல்லை. அன்றைய தினம்தான் அமிர்தலிங்கமும் கொல்லப் பட்டிருந்தார். நான் தப்பித்துக் கொண்டேன் அமிர்தலிங்கம் இறந்து விட்டார் என்று சோ கூறினார். தீவீரவாதத்தை வளர்த்து வரும் இந்தத் தி மு க அரசு இனி ஒரு நொடியும் நீடிக்கக் கூடாது என்ற சோ, அடுத்த வாரமே டெல்லி சென்று ராஜீவ், சந்திரசேகர், சுவாமி போன்றோரை நிர்ப்பந்தித்து தி மு கவின் அசுர வேக தீவீரவாத வளர்ச்சியை நிறுத்தினார். தி மு க அரசு கலைக்கப் பட்டது. அதே தி மு க அரசை திருந்தியிருப்பார்கள் என்று நம்பியதும், பின் ஜெயலலிதாவை தவறினை உணர்ந்திருப்பார் என்று நம்பியதும் அவரது அரசியல் வாழ்வில் பெருத்த சறுக்கல்களே. ஒரு தீர்க்கதரிசி காலத்தின் கட்டாயத்தினால் சறுக்கிய தருணங்கள் அவை. ஆக, கழகக் கண்மணிகள் சோவை சும்மா விட்டு விடவில்லை. துக்ளக் அலுவலகத்தைப் பல முறை தாக்கியுள்ளனர். அவரைக் கொலை செய்ய முயலவும் தயங்கவில்லை. ஜெயலலிதாவும் கூட, இந்திராவே கைது செய்ய இயலாத சோவை நான் கைது செய்து விட்டேன் என்ற ஒரு வீம்புக்காக கைது செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. சோ வின் மீது தமிழக அரசியல்வாதளுக்கு என்றுமே பாசம் இருந்ததில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவரை அழிக்கத் தயாராகவேதான் உள்ளனர்.

இந்து மதம் குறித்தான சோ எழுதும் தொடர்களுக்கு அவ்வளவாக தமிழ் நாட்டில் ஆதரவு இல்லையென்று குறிப்பிட்டிருந்தீர்கள், நான் அக்கருத்துடன் வேறு படுகிறேன். அர்த்தமுள்ள இந்து மதம் அளவிற்கு பிரபலமாகவில்லையெனினும், சோவின் மாஹாபாரதம் பேசுகிறது வால்யூம்களை நான் மிக முக்கியமான ஒரு படைப்பாகக் கருதுகிறேன். ஒரு காலத்தில் தமிழில் மஹாபாரதம், இராமயணம் என்றாலே இராஜாஜியின் வியாசர் விருந்தும், சக்ரவர்த்தித் திருமகனும்தான், மிக அதிகமாக விற்பனையாயின. இப்பொழுது அந்த இடத்தைச் சோவின் மஹாபாரதம், இராமயணம் புத்தகங்கள் பிடித்துள்ளன. நீங்கள் அல்லயன்ஸ் பதிப்பகத்தாரைக் கேட்டால் சொல்லுவார்கள். இது தவிர மதம் சம்பந்தமான அவரது கட்டுரைகளை, விரும்பிப் படிக்கும் அதற்காகவே துக்ளக் வாங்கும் பலரையும் நான் அறிவேன் (அவர்கள் யாரும் பிராமணர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது, எதை எழுதினாலும் இந்த பைனரி நிலையைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுத இயலாமல் இருப்பது மிகுந்த அயர்ச்சியைத் தருகிறது). அவரது ‘எங்கே பிராமணன் ‘ மற்றொரு குறிப்பிடத்தக்க நூல். அது போன்ற தர்க்க ரீதியாக எளிதில் புரியக் கூடிய, ஒவ்வொரு சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்த மத சம்பந்தமான நூல்கள் தமிழில் அதிகம் வரவேண்டும். அந்த விஷயத்தில் சோ எழுதியிருக்கும் நூல்கள் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் தொடர்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. மஹாபாரதம் சம்பந்தமாக ஒரு பாமரனுக்கோ, நாத்திகனுக்கோ வரக்கூடிய அனைத்துச் சந்தேகங்களையும் சோவே தக்க அனுமானங்கள் மற்றும் விளக்கங்களுடன் விளக்கியுள்ளார். தற்பொழுது துக்ளக்கில் வந்து கொண்டிருக்கும் ‘ஹிந்து மஹா சமுத்திரம் ‘ என்ற தொடரும் அற்புதமான ஒரு தொடராகும். என்னைப் பொருத்தவரை தமிழுக்கு சோ அளித்துள்ள கொடையாக, இந்து மதத்திற்கு செய்து வரும் தொண்டாகவே அந்தப் புத்தகங்களைப் பார்க்கின்றேன்.

சோ தமிழுக்கும், நாட்டிற்க்கும் ஆண்டவனால் அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம், ஒரு ராஜ ரிஷி, ஒரு தீர்க்கதரிசி. அவரது மேன்மை கயவர்களுக்கும், மூடர்களுக்கும், திருடர்களுக்கும், தேசத் துரோகிகளுக்கும் எந்தக் காலத்திலும் புரியப் போவது இல்லை.

****

நேசகுமார் அவர்களின் பாவங்கள் சினிமா பற்றிய விமர்சனம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, அமெரிக்காவில் பாதிரியார்கள் சிறுவர்களைப் பாலியல் கொடுமைக்கு ஆட்படுத்திய குற்றங்களுக்காக பல பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் தமிழ்ப் படங்களிலோ, பாதிரியார்கள் என்றாலே புனிதத் திரு உருவங்களாகக் காட்டப் பட்டு மக்களின் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர். கிறிஸ்துவர்கள் பலரும் பாதிரியார்கள் செய்து வரும் அக்கிரமங்களை மறுக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்தப் படத்தினை எதிர்த்துப் போரிட எவ்வித அருகதையும் கிடையாது.

மார்கரெட் ஸ்டார்பர்ட்டுடனான அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பேட்டி, இதுவரை பலரும் அறிந்திராத புதிய பார்வையை அளித்தது. மின்னஞ்சல் மூலமாக அவரது கலந்துரையாடலைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

விஸ்வாமித்ரா


viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா