கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

எஸ்.கே


—-

அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

‘அலைகளை மன்னிக்கலாம் ‘ என்ற தலைப்பில் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள

கவிதையை முதலில் படித்தபோது எனக்கு அவர் எதைக் குறிப்பிட்டு

எழுதியுள்ளார் என்பது புரியவில்லை. ஏனென்றால், ஆழிப் பேரலையின் ஊழித்

தாண்டவத்தால் அழிந்த உயிர்களின் எண்ணிக்கை இலட்சங்களின் கணக்கிலேயே

பேசப்படும் நிலையில், இறந்த உயிர்களை நினைத்து அழுவதா, இல்லை

கதியற்ற நிலையில் தள்ளப்பட்டு எதிர்காலம் என்ன என்பதை சிந்திக்கக் கூடத்

தெரியாத இளம் குருத்துக்களை நினைத்து பயம் கொள்வதா என்று எல்லோரும்

வெதும்பி நிற்கும் வேளையில், இப்படியொரு கவிதையின் மூலம் ரூமி அவர்கள்

என்னதான் கூற விரும்புகிறார் என்று குழம்பிப் போனேன்.

இந்தப் பேரிழப்பை மறக்கடிக்குமளவுக்கு எந்த நிகழ்வுகளை எண்ணி, அந்த

வெறுப்பை மீளுவது எப்போது என்கிறார் அவர் என்ற கேள்வியுடன், மீண்டுமொரு

முறை வாசித்தபின் தான் அவர்தம் வரிகளின் ஆழமும் அதன் நோக்கமும்

விளங்கியது!

குஜராத் கலவரம் பற்றியும் அதில் மாண்டவர்கள் பற்றியும் ரூமி அவர்கள்

அனத்துக் கடவுட்களின் அலட்சியத்தை விவரித்து ஏற்கனவே ஒரு கவிதை

எழுதியது அனைவருக்கும் நினைவிருக்கும். அதனால், மீண்டும் மீண்டும்

குஜராத்தையே பேசி வெறுப்புணர்ச்சிக்கு தூபம் போடமாட்டார் என்கிற

தெளிவுடன் ஆராயும் போது தான் அந்தக் கவிதையின் ஆழமான உணர்ச்சிகள்

காணக் கிடைத்தன. அவருடைய நடுவு நிலை தவறாத நோக்கும் புலப்பட்டது.

சுமார் பதினைந்து வருடங்களாக சொந்த நாட்டிலேயே அகதிகளாகக் கேட்க

நாதியற்றுக் இடக்கும் கஷ்மீர பண்டிட் இன மக்கள் அநுபவித்த

கொடுமைகளையையும் வன்கொலைகளைகளையும் எண்ணி வெதும்பி ரூமி அவர்கள்

எழுதியுள்ள வரிகள்

கண்ணீரைப் பொங்க வைக்கின்றன.

இந்த வரிகளைப் பாருங்கள்:-

கண்ணெதிரே —

கண்ணியம் களையப்படும்போது

கணவன் கொல்லப்படும்போது

பிள்ளைகள் பறிக்கப்படும்போது

பெண்கள் எரிக்கப்படும்போது

அவர் சுட்டிக் காண்பிப்பது 1990-ல் ஒரு சூதுமறியாத அப்பாவி பண்டிட்டுக்களை

ஆடு வெட்டுவது போல் வெட்டி, அவர்களினப் பெண்களை சூறையாடி, அவர்களை

பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதாக எக்காளமிட்ட கொடுமைகளை எண்ணித்தான்

வேதனைப் படுகின்றார் ரூமி அவர்கள்.

கறுப்புத் தோல் கிழிக்கப்படும்போது

உறுப்புகள் அறுக்கப்படும்போது

பொறுப்புகள் மறுக்கப்படும்போது

இந்த வரிகளில் அவர் படும் வேதனை சூடான் நாட்டின் மேற்குப்பகுதியில்

(Darfur) நிகழும் இனப் படுகொலைகளை (genocide) எண்ணித்தான். அங்கு

‘ஜஞ்சவீதுகள் ‘ என்று அழைக்கப் படும் அரபு இன வெறியர்கள் ஆப்பிரிக்க

கறுப்பர் இன மக்களை

வேட்டையாடி வருகின்றனர் என்று ஐக்கியா நாடுகள் அமைப்புக்கள் மூலமாக

அறிகிறோம்.

சுமார் 70,000 கறுப்பர் இன டார்ஃபர் மக்கள் இதுவரை கொல்லப்

பட்டுள்ளதாகவும் ethnic clensing முறைகள் கையாளப் படுவதாகவும்

செய்திகள் வருகின்றன. ‘கறுப்புத் தோல் ‘ என்று எவ்வளவு துல்லியமாக இந்தக்

கொடுமையைக் கோடி

காட்டியுள்ளார் பாருங்கள்.

இந்தக் கவிதை மூலம் ரூமி அவர்கள் தம் நடுநிலை நோக்கையும், secular

credentials – களையும் ஐயம் சிறிதுமின்றி நிரூபித்திருக்கிறார்.

அலைகளை மன்னிக்கலாம்

ஆனால் கொலைகளை ?

ஆம், எந்த விதக் கொலையையும் மன்னிப்பது சரியல்ல.

அது எங்கு நடந்தாலும், யார், எக்காரணத்தை முன்னிட்டு செய்தாலும்.

அல்லது செய்வது சரி என்று வாதாடினாலும்.

எவ்விதக் காரணம் காட்டி நியாயப் படுத்த முயன்றாலும்.

ஆம்!

நன்றியுடன்,

எஸ்.கே

—-

s_kichu@yahoo.com

Series Navigation

எஸ்.கே

எஸ்.கே