கடிதம் ஜனவரி 27,2005 – பெரியார் மதம்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

குண்டலகேசி


ராஜ் குமார் அவர்களின் கட்டுரை நன்றாக இருந்தது. குறிப்பாக பகுத்தறிவு இயக்கம் இப்பொழுது ஒரு மத நம்பிக்கை போல ஆகிவிட்டது. ஜெயேந்திரரின் பக்தர்கள் நம்பிக்கையினால் அவர் தவறு செய்திருக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். பகுத்தறிவாளர்கள் பகுத்து, ஆராயாமலே அடித்து சொல்கிறார்கள், அவர் குற்றவாளி என்று. இந்த உண்மை இவர்களுக்கு எப்படி தெரிந்தது ? எல்லாம் பகுத்தறிவு ஞானத்தால் தான்.

கிட்டத்தட்ட பகுத்தறிவு இயக்கம் ‘பெரியார் மதம் ‘ ஆக மாறியுள்ளது. அம்மனுக்கு சிவப்பு. பெரியார் மதத்திற்கு கருப்பு நிறம். வருடாவருடம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு செய்ய வேண்டும். சமீபத்தில் பெரியார் பெண்களை வேட்டி கட்டிக் கொள்ள சொன்னார் என்பதை கவிஞர் கனிமொழி விமரிசித்திருந்தார் என்று செய்தி வந்தது. உடனே ‘இல்லவே இல்லை. நானாவது பெரியாரை விமரிசனம் செய்வதாவது ‘ என்று அவசரமாக அவர் மறுப்பு வெளியிட்டார். பெரியாரின் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் பகுத்து அறிந்து விமரிசனம் செய்தால் பெரியார் மதத்தவர்கள் ஃபத்வா கொடுப்பார்கள்.

ஜெயலலிதாவிற்கு நன்றி

தமிழ் பத்திரிகைகளின் பாரபட்சமான செய்திகள் எரிச்சலூட்டுகிறது. இது உறுதிப்படுத்த முடியாத தகவல் என்று சொல்லியே விகடன் செய்திகளை வெளியிடுகிறது. உறுதிப்படுத்த முடியாத செய்தியை ஏன் வெளியிட வேண்டும். இவர்களும் பதவி, பணம் படைத்தவர்களையும், மற்றவர்களையும் ஒரே மாதிரி பாவிப்பதில்லை.

சதுர்வேதி விவகாரத்தில் அனைத்து பத்திரிகைகளும் கவனமாக ஒரு பெரும்புள்ளியின் பெயரை வெளியிடாமல் தவிர்த்தன. நல்ல விஷயம். இதே அக்கறை வீரப்பனின் மகளின் போட்டோவை போடும்பொழதும் இருந்த்திருக்க வேண்டும். சிறுமி என்று கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவர்கள் போட்ட செய்தியால் இன்னொரு பெண் தற்கொலைக்கே சென்று விட்டார் என்றும் செய்தி வந்தது. மீண்டும், மனித உரிமை இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உள்ளது.

வீரப்பனுக்கு மனித உரிமை ஆணையம் குரல் கொடுத்தால் கொலைகாரன் கொள்ளைக்காரனுக்கெல்லாம் பரிந்து கொண்டு வருவதுதான் இவர்கள் வேலையா என்று கேட்ட தினமலர் வாசகர்கள் இப்பொழுது ஜெயேந்திரர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டு விட்டது என்று புலம்புகிறார்கள்.

அடுத்தவன் வீடு பற்றினால் எனக்கென்ன என்று இருந்தவர்கள் இன்று காற்று திசை மாறி தங்கள் வீட்டிற்கும் பரவியதால் பதைபதைக்கிறார்கள். ஜெயேந்திரராவது ஒரு கோடி செலவு செய்து விளம்பரம் செய்ய முடியும். இந்திய போலீசில் சாதாரண மக்களின் கதி என்ன ஆகும். மனித உரிமையைப் பற்றி பணக்காரர்களுக்குc ஞானம்

வந்ததுக்கு ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லலாம்.

—-

kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி