அழியத் துடிக்கும் அப்ரஹாக்கள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்.


1425 வருடங்களாக இஸ்லாம் என்ற அமைதியான கோட்டையை இடிக்க ஆயிரமாயிரம் கரசேவகர்கள் அப்ரஹாவின் ஆசையோடு வந்து முயன்று அபாபீலிடம் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதோ அவர்கள் முயன்றதும் முட்டியதும்

பெருமானாரை குறை சொல்லி பார்க்கலாமா ? எப்படி குறை சொல்லலாம் ?

அவர்கள் பண மோசடி செய்பவர் என்று கூறலாமா ?

முடியாது-

அவர்களை ஒழிக்க நினைத்த கொடியவர்களே கூட பெருமானாரிடம் தான் அவர்களது பொருட்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

அவர்களை பெண் பித்தர் என்று கலங்கம் கற்பிக்கலாமா ?

முடியாது-

அவர்கள் இளமையில் மணமுடித்தது அவர்களை விட வயதானவரும் விதவையுமான தூய்மையானவர் என்ற புகழுடையவரை. அன்னாரின் மறைவிற்கு பிறகு கூட மணமுடித்தவர்கள் அனைவரும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை தவிர அனைவருமே விதவைகள் அல்லது விவாகம் முறிந்தவர்கள்.

ஆட்சியை விரும்பும் சர்வாதிகாரி என்று வாதிட்டு பார்க்கலாமா ?

முடியாது-

ஆட்சிபீடம் காலடியில் வந்த போதும் ‘செங்கதிரும் தன்மதியும் சேர்த்து கையில் தந்திடுனும் எம் கொள்கை விட மாட்டோம்’ என்று வீர முழக்கமிட்ட மாபெரும் அரசர் அவர்.

செல்வத்திற்கு புகழுக்கு ஏங்கியவர் என்று பொய்யுரைக்கலாமா ?

முடியாது-

ஏழையாய் வாழ்ந்தவர்- அதுவும் துறவியாய் இருந்து ஏதோ காடு பக்கமோ அல்லது மலையின் உச்சிக்கோ சென்று அல்ல- அரேபியாவையும் அதன் பக்கத்து நாடுகளையும் ஆண்ட அரசர் ஓர் ஏழையாய் அதுவும் களிமண் குடிசையில் பேரீச்சம் பழ கூரை வேயப்பட்ட சிறிய வீட்டில் வாழ்ந்து இதயங்களை வென்றவர்.

மதுபானம், சூதாட்டம் இப்படி ஏதாவது கதை கட்டி விடலாமா ?

முடியாது-

தீய செய்கைகளான இரண்டையும் தடை செய்தவர்- அதில் வெற்றியும் பெற்றவர். மொடா குடிகாரர்களையே ஒழுக்க சீலர்களாக மாற்றி அமைத்தவர்.

இப்படியாக யானை குறையோடு புறப்பட்டு சிறிய பறவைகள் எறிந்த சுடப்பட்ட கற்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பலியாகி தின்னப்பட்ட கதிர்களைப் போல் காணாமல் போன அப்ரஹாக்கள் ஏராளம்.

இப்பொழுதும் கூட ,

‘வாளோடு வந்து தான் மதம் பரவியது’ என்று மதம் பிடித்தவர்கள் கூறுகிறார்கள். அந்த திரும்ப திரும்ப கூறப்பட்ட பொய்யில் சிறிதளவு கூட உண்மை இல்லை என்பது தான் உண்மை.

டெல்லியை ஆண்ட சுல்தானை எதிர்த்து பாபர் வர வேண்டிய அவசியமென்ன ?. இரண்டு பேருமே முஸ்லீம்கள் தான். இரண்டு பேரும் வெவ்வேறு இஸ்லாத்தையா போதிக்க வந்தார்கள்.

சரி நம்ம அரசர்கள் ராஜராஜனும், ராஜேந்திரனும் கீழ்த்திசை நாடுகள் மீது படையெடுத்தார்களே அப்படி என்றால் இவர்கள் இந்த மதம் பரப்பவா படை எடுத்தார்கள்.

இன்றைக்கும் முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் பாலி, ஜாவா, சுமத்ரா போன்ற பகுதிகளின் இங்குள்ள மதத்தின் சுவடுகள் உள்ளதே ? மற்றுமொரு முஸ்லீம் நாடான மலேஷியாவில் கெடா போன்ற மாநிலங்களில் இங்குள்ள அரசர்களின் வரலாறு காணப்படுகிறதே.

அங்குள்ளவர்கள் வரலாற்று ஏடுகளில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வைக்காமல் நாட்டின் மீது படையெடுப்பது என்பது அந்த கால ராஜ நெறி; அரச தர்மம் என்று விளங்கி வைத்திருந்தார்களே.

நெசமான செய்திகள் நேச வேஷம் போட்டவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி ?

இன்னும் சில நெருப்புகள்:முஸ்லீம்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்கிறார்கள்- ஷியா, ஸன்னி என்று- இதை சொல்பவர்கள் சார்ந்திருப்பதை பார்த்தால் ‘ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளை’ என்ற மொழி தான் நினைவிற்கு வருகிறது.

எங்கள் வீட்டில் மனிதர்கள் விபரம் புரியாமல் அடித்துக் கொள்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் கடவுள் இரண்டு என்று அல்ல.. அரசியல் சண்டை அது. சரி உங்கள் வீட்டில் கடவுளே அடித்துக் கொள்கிறார்களே ..

தமிழக வரலாற்றில் ‘சிவ-விஷ்ணு’ சண்டை மிகவும் பிரபலம். விஷ்ணுவை நம்பிய வைணவரான நாமாநுஜரின் சீடர் கூத்தாள்வான் என்பவரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

சமண-சைவப் போரில் சிந்தப்பட்ட ரத்தங்கள் கடவுள் தின்று மிருகம் வளர்ந்த கதையல்லவா ?

அப்பர் என்ற திருநாவுக்கரசர் சமணராய் இருந்து சைவராய் மாறினார் என்பதற்காக அவர் கல்லால் பிணைக்கப்பட்டு கடலில் வீசப்பட்டார் என்று சைவ மத சரித்திரம் கூறுகிறது.

மதுரையில் ஞானசம்மந்தர் காலத்தில் எண்ணாயிரம் சமணர்கள் கழுமரங்களில் ஏற்றப்பட்டு உயிர் துறக்கச் செய்யப்பட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

முகலாயர்கள் வரலாற்றை திரித்து எழுதியவர்களின் கூற்று உண்மை எனும் பட்சத்தில் 800 ஆண்டுகள் ஆண்ட முகலாயர்கள் உண்மையிலேயே கழுவேற்றி, கண்கள் தோண்டி மதம் மாற்றியிருந்தால் இன்றைக்கு காசி எல்லாம் காசிம் நகராகவும் ராமேஷ்வரம் ரஹ்மான் நகராகவும் மாறியிருக்கும்.

நல்ல வேலையாக 1980களிலேயே மீனாட்சிபுரம் மாறிவிட்டது. இப்பொழுது மாறியிருந்தால் அதிபர் மாத்தி விட்டார் என்று பொக்ரானில் குண்டு போட்டவருக்கே பொய்யர்கள் குண்டு போட்டிருப்பார்கள்.

ஆக உண்மை என்னவெனில் அரசன் சார்ந்திருக்கும் மதத்தின் மீது மக்கள் சாய்வது இயற்கை. தென்னாட்டில் சமணர்கள் மன்னரானதால் சமணம் பெருகியது. பெளத்தர்கள் அரசனானதால் புத்த மதம் பெருகியது. சைவர், வைணவர் என்று வந்த போதும் தலைவன் சார்ந்த மதத்தின் மீதே மக்களும் சாய்ந்தார்கள்.

மாட்டை தெய்வம் என்றும் மனிதனை தீண்டத்தகாதவன் என்றும் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து டாக்டர் அம்பேத்கார் போன்றோர் தாங்கள் அடிமையாகி கழிவுகள் எடுப்பதற்கும் பிணங்களை எடுப்பதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டதை எதிர்த்து சுய மரியாதையுடன் வெளியேறினார்கள். இன்னமும் அப்படி அடிமையாக இருப்பவர்களை பார்த்து கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும் கதை அல்ல ஆடு ஓநாயிடம் மாட்டிக் கொண்டுள்ளதே என்று அழும் சக ஆட்டின் கவலை தான் இது.

பெண்கள் உரிமை பறிக்கப் படுவதாக வாதிடுபவர்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள், பெண்களை பொட்டு கட்டி விடும் ஜாதி என்றும், தேவதாசி என்றும் களங்கப்படுத்தி அவமானப் படுத்தியது எந்த சாஸ்திரம் ?

குத்து விளக்கேற்றி யாராவது கள்ளுக்கடையை திறந்து வைப்பார்களா ?

உங்கள் தமிழறிவை வைத்து அடுத்தவர்கள் வீட்டு குறையை சொல்வதை தவிர்த்து உங்கள் வீட்டு குறைகளை நீக்க வழி காணுங்கள்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற நிலை மாறி நாளை கடவுள் சிறையிலும் இருப்பார் நீதிமன்றத்திலும் இருப்பார் என்று யாரும் குறை சொல்லிவிடா வண்ணம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள்.

உங்களது சாந்திக்கும் சமாதானத்திற்கும் எங்களால் எந்த வித பங்கமும் ஏற்படாது-

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்.

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்