கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

நேசகுமார்


கடந்த சில வாரங்களில் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலை விமர்சித்து வந்த கருத்துக்களுக்கு பத்ரி சேஷாத்ரி பதில் சொல்லுமுகமாக இட்டுள்ள மடல் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆட்சேபனையும் இல்லை. எல்லோரும் என் கருத்தை ஏற்க வேண்டும் அல்லது ரூமியின் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் நான் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி வைத்தால் அது மற்றுமொரு அடிப்படைவாதமாகவே இருக்கும்.

ஆனால், எனக்கு கவலையளித்த விஷயம், இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளையே அறியாமல் பத்ரி சேஷாத்ரி எழுதியிருந்ததுதான். ரூமியின் புத்தகத்தை சரியாகப் படிக்கவில்லை பத்ரி என்றே எண்ணுகின்றேன். அப்படி படித்திருந்தால், அல்லாஹ்வின் வார்த்தைகளாக முஸ்லீம்கள் கருதும் திருக்குரானுடன், மானுடர்களால் எழுதப் பட்ட திவ்வியப் பிரபந்தத்தை ஒப்பிட்டு எழுதியிருக்க மாட்டார். ஹதீதுகளுடன் இவற்றை ஒப்பிட்டிருந்தால் கூட பரவாயில்லை, ஏனெனில் ஹதீதுகளும் ஆழ்வார்களின் பாடல்களைப் போல, மனிதர்கள் உருவாக்கியவையே என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

ஆனால் திருக்குரான் அப்படியல்ல, அது இறைவனின் வாக்கு, உத்தரவு, கட்டளை என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதுவே மனிதகுலத்திற்கு எல்லாக் காலத்திற்குமான இறுதி உத்தரவு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருப்பதால், அதில் காஃபிர்களைக் கொல்லுங்கள் என்று சொல்லியிருப்பதையும்[திருக்குரான் வசனம் 9:5], காஃபிர்களின் பெண்டிரெல்லாம் விபச்சாரிகள் என்று கூறியிருப்பதையும்[ திருக்குரான் வசனம் 24:3], அந்தக் காலகட்டத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுந்த ஆழ்வார்களின் பாடல்களோடு ஒப்பிடுவது சரியல்ல.

இதிலும் கூட ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்வை, வார்த்தைகளை விவரிக்கும் ஹதீதுகளுக்கும் பெரும் மரியாதை இஸ்லாத்தில் தரப் படுகிறது. ரூமி போன்ற அடிப்படைவாதிகளின் பார்வையில், முகமது நபியவர்கள் செய்த செயல்கள் எல்லாமே திருக்குரான் தான், உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் எல்லாக்காலத்திற்கும் பின்பற்ற வேண்டிய மாற்ற இயலா எடுத்துக் காட்டுகள் தாம். இதை நிரூபிக்கும் வகையாக அன்னை ஆயிஷா அவர்கள் கூறிய ஹதீஸான, நபிகளின் வாழ்வு திருக்குரானாகவே இருந்தது என்பதையும் நாகூர் ரூமி அவர்கள் தம் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், ஒரு முஸ்லீம் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் , அது இஸ்லாத்தின் வட்டத்துக்குள் இருக்கும் வகையில் அவற்றை திருக்குரான், சுன்னா (நபிகளின் வாழ்வு) ஆகியவற்றின் அடிப்படைகளிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார்.

இஸ்லாத்தின் வட்டம் என்ன என்பதை அவர் விளக்க வில்லை. ஆனால், அவர் ஷரியத், உடை, ஒழுக்கம், பெண்கள், படிப்பு போன்றவற்றைப் பற்றி தெரிவித்திருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது, அநேகமாக வாழ்வின் எல்லாச் செயல்பாடுகளையுமே இஸ்லாத்தின் வட்டத்துக்குள் இருப்பதாகத் தான் எண்ணுவதாகத் தெரிகிறது. அவர் மட்டுமல்ல, அடிப்படை வாத முஸ்லீம்கள் அனைவருமே இதையே கூறுகின்றனர்.

வைணவம் பற்றி நான் அறிந்தவரையில், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் கூறியிருப்பவை எல்லாவற்றையும் எல்லா வைணவர்களும், உலகம் இருக்கும் வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று விஷ்ணு கூறியிருக்கிறார் என்ற ஒரு மதக் கருத்து இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்போது சமணர்களைப் பற்றி ஆழ்வார்கள் கூறியிருப்பதை மேற்கோள் காட்டி, இன்று சமணர்களின் தலையை வெட்டும் வைணவர்களையோ, அல்லது அதை நியாயப் படுத்தும் வைணவ ‘அறிஞர் ‘ களையோ நான் இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் இஸ்லாத்தின் விஷயத்தில் இதுவல்ல உண்மை. நிதர்சனம் பத்ரி அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இந்த வருடத்தில் (2004) சென்ற வாரம் வரை [நவம்பர் 17], இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு உலகெங்கிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 5802! [ இஸ்லாமிய தீவிர வாதத்தால் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கையை இந்த வலைத்தளத்தில் போய் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் : http://www.thereligionofpeace.com/Default.htm#Attacks ]. விகிதாசாரம் வைத்துப் பார்த்தாலும் இதனுடன் ஆழ்வார்களின் அடியொட்டி நடப்பவர்களின் வன்முறையையோ அல்லது ஒட்டுமொத்த இந்து, கிறிஸ்துவத் தீவிரவாதிகளின் வன்முறையுடனோ இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலகட்டத்திலேயே, இந்த அளவுக்கு மனிதகுலம் முன்னேறியிருக்கின்ற தகவல் யுகத்திலேயே இவ்வளவு மனித உயிர்கள் பலியாகியுள்ளன என்றால், 1425 வருடங்களாக இஸ்லாத்தின் பெயரால் குடிக்கப் ப

ட்ட மனித உயிர்களின் எண்ணிக்கையை யூகித்துக் கொள்ளுங்கள். இத்தனைக்கும், இஸ்லாத்தின் கை சற்றே பின் தங்கியிருக்கும் காலகட்டம் இது. இதெல்லாம் பத்ரியின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லை.

மற்றபடி நன்கு படித்து, நிறைய அறிந்து வைத்திருக்கும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, இஸ்லாம் விஷயத்தில் அறியாமை பூண்டிருப்பதை அவரது வலைப்பதிவுகளை மேயும் போதும் காணமுடிகிறது. தியோ வான் கோக்களை கொல்பவர்கள் ‘நட் கேஸ்கள் ‘ என்று அவர் ஒரு பதிவில் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட ‘நட் கேஸ் ‘கள் எதோ விதிவிலக்கு மாதிரி அவர் குறிப்பிடுவது ஆச்சர்யம் அளிக்கிறது. இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே, முகமது நபியவர்களை விமர்சித்தவர்கள் தொடர்ந்து கொலை செய்யப் பட்டு வருகின்றனர். பெண்களை, கவிஞர்களைக் கூட தம்மை விமர்சித்தார்கள் என்ற காரணத்திற்காக, பின்பற்றிய கூட்டத்தாரை ஏவிவிட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டதை இஸ்லாமிய மத நூல்களிலேயே பார்க்க முடிகிறது.

அது போன்றே, ருஷ்டியைப் பற்றி ரூமியின் பார்வையையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எப்போதோ ருஷ்டியை ஆதரித்து ரூமி எழுதியதாகவும் அதனைத் தொடர்ந்து, அமளி ஏற்பட்டதாகவும், ரூமி தம் நூலில் ருஷ்டியின் மீது இடப் பட்ட ஃபத்வாவை ஆதரிக்கவில்லை என்பது போன்றும் எழுதியுள்ளார். இது சம்பந்தமாக, நான் ரூமி அவர்கள் இணையத்தில் எழுதியதை அப்படியே தருகிறேன்:

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மனைவிமார்கள் எங்களுக்கு அன்னையர். அவர்கள் பெயரில் விபச்சாரிகள் இருப்பதாக இஸ்லாமிய வரலாறு நன்றாக அறிந்த ரஷ்டி தனது ‘சாத்தானின் கவிதைகள் ‘ நாவலில் சொல்லிருக்கும் ஒரு விஷயமே போதும் அவன் ஒரு அயோக்கியன் என்பதை விளக்க. ஒருவன் சிறந்த எழுத்தாளனாக இருப்பது வேறு. பண்புள்ள மனிதனான இருப்பது வேறு. தாயைப்பழிப்பவனை வேறு என்ன சொல்வது ? அந்த நாவலில் இஸ்லாமிய வரலாறு எந்த அளவு நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறது என்று இஸ்லாமிய வரலாறு அறிந்தவர்களுக்குத்தான் நன்கு விளங்கும். ஜிப்ரீல் ஃபரிஷ்தா என்ற பெயரே ஒரு கிண்டல்தான். அது உங்களுப் புரிந்திருக்க நியாயமில்லைதான். தாயைப்பற்றியும் முஹம்மது நபி(ஸல்) பற்றியும் எந்த நாயாவது குரைக்குமானால் அந்த நாயைக்கொல்ல ஒரு கொமேனி தேவையில்லை. ஒரு சாதாரண முஸ்லிமே போதும். இஸ்லாமிய சட்டங்களைப்பற்றிப் பேசுகின்ற தகுதி அதைப்பற்றி ஆழமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆரோக்கியமான ஒருவனை நோக்கி அழுகி நாறிக்கொண்டிருக்கின்ற ஒரு தொழுநோயாளியின் விரல் நீள்வது வேடிக்கையானது! ‘

இப்படி அவர் எழுதியிருப்பார் என்று பத்ரி சேஷாத்ரி அவர்கள் நம்பவில்லையென்றால் கீழ்க்காணும் இணையக் குழுவில் நேரடியாக சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்:

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/4311

பத்ரி சேஷாத்ரியிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். தியோ வான் கோ இஸ்லாத்தைப் பற்றி அவதூறாகப் படமெடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்த இஸ்லாமிஸ்ட்டுகள் எல்லாம் நட்டு கேஸ்கள் என்றால், ‘முஹம்மது நபி (ஸல்) பற்றி எந்த நாயாவது குரைக்குமானால் அந்த நாயைக் கொல்ல கோமேனி தேவையில்லை, சாதாரண முஸ்லீமே போதும் ‘ என்று சொல்லும் நாகூர் ரூமியை எந்த பட்டியலில் சேர்ப்பது ?

நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது மாதிரி, அவரது புத்தகத்தில் சிலவற்றை வெளிப்படையாகச் சொல்லாமல் விட்டிருப்பது, அவரது பூடகமான ஜிஹாத் அனுகுமுறையையே காட்டுகிறது. வெளிப்படையாக அறிவித்து செய்வது தான் ஜிஹாத் என்று அவர் சொல்வது, மெளலானா மெளதூதியின் (1948 பாகிஸ்தான் நம்மிடம் தோற்றபோது அறிவித்த) நிலைப்பாடுதான். பின் அதனை மெளதூதி மாற்றிக் கொண்டு, ‘ இஸ்லாமிய சேவகர்கள் தனிப்பட்ட முறையில் ஜிஹாத்துக்கான தமது பங்களிப்பை தொடரலாம் ‘ என்று அறிவித்து, இத்தகைய புனிதப் போர் எனும் காட்டுமிராண்டித்தனத்தை நியாயப் படுத்தியதை நீங்கள் அறியாமலிருக்கலாம். ஆனால், இத்தகைய பூடகப் போர் முறையை, மெளதூதியின் வியாக்கியானங்களை அறியாமல் நாகூர் ரூமி இவ்வளவு விரிவான புத்தகத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை.

மேலும், புத்தகம் முழுவதும் மொளதூதியின் சிஷயராகவே பேசுகிறார் ரூமி. இஸ்லாம் பற்றி அவர் ஆய்ந்த நூல்களின் பட்டியலில், இந்தியாவை குலைக்க வேண்டும், அதை தாருல் இஸ்லாமாக மாற்றவேண்டும் என்று கூக்குரலிட்ட, மதவெறியர் மெளதூதியின் பெயரும் இடம் பெற்றிருக்கின்றதை இங்கே பத்ரி போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன்.

மேலும், ஜிஹாத் என்பது வெளிப்படையாக ஒரு இஸ்லாமிய அரசு அறிவித்து செய்யும் போர் என்று ரூமி சொல்லியிருப்பதை வைத்து அவர் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்கிறார் என்று பத்ரி எப்படி முடிவு செய்கிறார் என்று புரியவில்லை. இது விஷயத்தில் திருக்குரான் அமைதியாயிருப்பது உண்மைதான். சுன்னாவின் படி, முகமது நபியவர்கள் அறிவிப்பு செய்தபின்பே யூதர்கள் மீது ஜிஹாத் தொடுத்திருக்கிறார். ஆனால், ஷரியத்தின் படி அறிவிப்பு செய்தபின் போர் புரிவது விரும்பத் தக்கதாக குறிப்பிடப் படும் அதே நேரத்தில், இஸ்லாமிய அரசு இல்லாத இடங்களில் அமீராக அந்தந்த இமாம்களே அறிவிப்பை வெளியிட வழியிருக்கின்றது. அதிலும், நாகூர் ரூமி உணர்ச்சிமயமாக ஆதரிக்கும் ஷரியத் அறிவித்தே ஜிஹாத் தொடுக்க வேண்டும் என்று ஏன் கூறுகிறது என்றால், ‘ [முஸ்லீம் அல்லாதவர்கள் ] உணரவேண்டும், அவர்கள் இஸ்லாத்தை தழுவாதனாலேயே தாக்கப் படுகின்றனர் என்பதை. இந்த புனிதப் போரானது, அவர்களது பொருட்களை கவர்வதற்காகவோ, அவர்களது பிள்ளைகளை அடிமைகளாகக் கொள்வதற்காகவோ அல்லவென்று ‘ – [இஸ்லாமிய ஷரியத்- இமாம் ஹனீபாவின் கோட்பாடு – ஷேக் பக்ரூதின் அலியின் ஹிதாயாஹ் – ஹாமில்டனின் மொழிபெயர்ப்பு. புத்தகம் 9 : அத்தியாயம் 2] .

இப்படி மதத்தினால் மனிதர்களைப் பிரித்து, ஒருவரை மற்றொருவர் அழிக்கும் அல்லாஹ்வின் சட்டத்தை நியாயப் படுத்தி, அதில் ஒன்றை சரியென்றும் மற்றொன்றை (பத்ரி போன்றவர்களை சமாதானப் படுத்துமுகமாக) மறுப்பதையும் எப்படி ஒரு அமைதியான முறையாக, அமைதி மார்க்கமாக, அந்த அமைதி மார்க்கத்தின் விளக்கமாக ஏற்றுக்கொள்ள பத்ரி போன்றவர்களால் முடிகிறது என்று தெரியவில்லை.

பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் புரிந்து கொள்ளுமுகமாக, கூடிய விரைவில் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள், அடிப்படை வாதிகளின் கூற்றுகள் ஆகியவற்றை விரிவாக எழுதவிருக்கிறேன். எழுதும் போது நாகூர் ரூமி தமது புத்தகத்தில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் எப்படி இத்தகைய அடிப்படைவாதிகளின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறது என்பதையும் குறிப்பிடுகின்றேன்.

மற்றபடி, நான் ஏற்கெனவே முன்வைத்துள்ள பல கேள்விகளுக்கு இன்னமும் நாகூர் ரூமியிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன்.

– நேச குமார் –

http://islaam.blogdrive.com

(நீக்கங்கள் உண்டு)

Series Navigation

நேச குமார்

நேச குமார்