கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

ஹமீது ஜாஃபர்


இஸ்லாத்தில் பெண் விரோதபோக்கும், அடிமைத்தனமும் மலிந்து கிடப்பதாகவும், அடிப்படைவாதம் கருத்துச் சுதந்தரத்தை பாதிப்பதாகவும் அங்கலாய்க்கும் திரு ஆசாரகீனன் தனது மேதாவித் தனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லைதான், ஆனால் அதே நேரம் வரம்புமீறுவதற்கு அனுமதியும் இல்லை. எதற்குமே எல்லை என்று ஒன்று உண்டு. அதனை மீறும்போது விளைவுகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது திரு ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும்.

கருத்துச் சுதந்திரம் இஸ்லாத்தில் மீறப்படுவதாகவும் அதற்கு ஐரோப்பிய மற்றும் இந்திய இடதுசாரிகள் கண்டுக்கொள்வதில்லை என்று சாடுகின்ற பண்பாளர் எதை கருத்துச் சுதந்திரம் என்று நினைக்கிறார் ? தெளிவான ஒன்றை தான்தோன்றித்தனமாகத் திரித்து மூன்றாம்தர கண்ணோட்டத்தில் சொல்வதையா ? அல்லது இவர் எதையெல்லாம் நினைக்கிறாரோ அதெல்லாம் கருத்துச் சுதந்திரம் பெற்றது என்றா ?

ஐயா! யார் எதைவேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் வரம்புக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இது திரு. ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும். சுதந்திர இந்தியாவில்கூட குடியரசுத்தலைவரையோ, அரசியல் நிர்ணய சட்டத்தையோ அல்லது அவைகளை பாதுகாக்கும் அமைப்புகளையோ அவமரியாதையாக விமரிசிக்கக்கூடாது. அப்படி அவமதித்தால் அதர்க்கான தண்டனையை அனுவித்துதான் ஆகவேண்டும் என்பது ஆசாரகீனனுக்கு தெரியாதுபோலும். ஏன்! ஒரு கட்சித் தலைவரை தரக்குறைவாகப் பேசிப்பாருங்களேன் ? தொண்டர்கள் காலதாமதமில்லாது தங்களுக்கு வெஞ்சாமரம் வீசுவதைப் பார்க்கலாம். இல்லை தாழ்த்தப்பட்ட ஜாதியின் ஒருவரை அவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு ஏசிப்பாருங்களேன் விபரம் புரியும். சுதந்திர இந்தியாவில் இந்த நிலை என்றால் ராணுவ ஆட்சி, மன்னராட்சியுள்ள நாடுகளில் தங்களது பாணியில் சுதந்திரமாகக் கருத்துச் சொன்னால் கிடைப்பது அதிக பட்ச தண்டனை என்பது ஆசாரகீரனுக்கு தெரியாதுபோலும்.

இப்படி இருக்க உலக முஸ்லிம்களால் மதிக்கப்படுகின்ற, போற்றப்படுகின்ற புனித குர்ஆனிலுள்ள இறை வசனம் ஒன்றிற்கு தான்தோன்றித்தனமாக பொருள் கொடுத்ததோடல்லாமல் அந்த வசனத்தை ஒரு பெண்ணின் முதுகில் எழுதி கொச்சைப்படுத்திருப்பது தங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சித்தரக்கூடியதாக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையே புண்படுத்தியிருப்பது தங்களுக்குத் தெரியாது போலும்.

ஐயா! இறைவனை வணங்குவதற்கென்று ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது, அதில் உடையும் ஒன்று. இது எல்லா மதங்களிலும் கடைபிடிக்கக்கூடிய நற்செயலாகும். தன் உடம்பை விற்கும் விலைமகள்கூட ஆண்டவனை வணங்கும்போது தன் உடம்பு முழுவதையும் வெளியில் தெரியாத அளவுக்கு மூடிக்கொள் வாள். ஆனால் Submission ல் தொழுகையில் நிற்கும் பெண் தனது மர்ம உறுபுக்கள் தெரிகிறமாதிரி மெல்லிய உடை (பெயருக்காக) அணிந்திருக்கிறாளே அப்படி எந்த நாட்டு இஸ்லாமியப் பெண் தொழுகிறாள் ? அவளுக்கு பதிலாக ஹர்ஸி அலி நின்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஏன் நிற்கவில்லை ?

ஐயா! ஒன்று கேட்கிறேன் ? அந்தப்படத்தில் வருவதுபோல் உடையணிந்து அவளுக்கு ஆதரவுத்தருவர்களில் யாராவது ஒருவர் தனது மனைவியை இறை ஆலயத்திற்குச் செல்ல அனுமதிப்பாரா ? இல்லை அந்த பெண்தான் அணிவாரா ? இதை மீறி யாராவது சென்றால் சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா ?

ஹர்ஸி அலி நாடாளுமன்ற உறுபினரென்றால் அறிவில் சிறந்தவர் என்று அர்த்தமா ? இல்லை பண்பாட்டில் உயர்ந்தவர் என்று அர்த்தமா ? அவளது செயலைப் பார்க்கும்போதே தான் ஒரு தரங்கெட்டவள் என்று பறைசாற்றுகிறாள் என்று யாரும் கூறுவார்களே! இவளை போன்றவளால் நெதர்லாந்து பாராளுமன்றத் திற்கு அவமானமே தவிர பெருமையல்ல.

அவளுக்குத் துணையாக தனது திறமையை காண்பித்த இயக்குனர் தியோ வான் கோ கொல்லப்பட்டதற்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீரே, அவள் ஒட்டு மொத்த சமுதாயத்தை புண்படுத்தியிருப்பதற்கு அவரின் பங்கு தங்கள் கண்ணிற்கு தெரியவில்லையோ ? இதுபோல் என்னென்ன செய்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டாரோ! உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்.

ஒரு இமாலயப் புளுகை சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்கள் ஒரு நாட்டை குட்டிச்சுவராக்கியிருப்பது எந்த வாதம் ? காலில் குத்தும் நெருஞ்சி முள்ளை பிடுங்கி எறியத்தான் செய்வார் கள். தாங்கள் வேண்டுமானால் பஞ்சுமெத்தையில் வைத்துக்கொள்ளுங்கள்.

‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம் ‘ தறுதலைத்தனமான தவறுகள் செய்யும்போது இத்தகைய ஃபத்துவாக்கள் வரத்தான் செய்யும். இது குற்றம் செய்பவனுக்கும் பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்குமுள்ளது. எதுவுமே சம்மந்தமில்லாத தங்களுக்கு இடையில் என்ன தரகர் வேலை ? மனித குலத்தை சீர்திருத்தப்பார்க்கிறீர்களோ ?

மனிதர்குல மாணிக்கமே! உஹும், இது பண்டிதர் ஜவர்ஹலால் நேருவுக்குள்ள பெயர், தங்களுக்குப் பொருந்தாது. கேவலமான செயலுக்கு கிடைத்த பரிசை கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டால் அது நல்ல பத்திரிக்கை, இல்லாவிட்டால் அவை இடதுசாரி மாவோ பத்திரிக்கை. ஒன்று செய்யுங்களய்யா இவைகளைத்தான் முதல் செய்தியாக முக்கிய செய்தியாக வெளியிடவேண்டும் பத்திரிக்கை உலகிற்கு உத்திரவிடுங்கள், அப்போதாவது ‘முல்லைக்குத் தேர் கொடுத்த நவீன உலகின் பாரி வள்ளல் ‘ என்ற பெயராவது கிடைக்கும்.

இவண்,

ஹமீது ஜாஃபர்.

e.mail: maricar@emirates.net.ae

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்