கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பிறைநதிபுரத்தான்


இந்தியர்களால் சாதிக்க முடியாததை இத்தாலிய பாஹூ சோனியா சாதித்து விட்டார் – உருட்டுக்கட்டை மற்றும் சூலம் சகிதமாக உலா வந்தவர்களை ஒரு சில நாட்களுக்காவது ‘தேசியக்கொடியை ‘ பிடிக்க செய்துவிட்டார்! காவிக்கொடிக்கு மட்டும் ‘சலாம் ‘ போட்டுக்கொண்டிருந்த ஏமாற்று கலாச்சார பாதுகாவலர்களை – ஒரே ஒரு பிடி வாரண்ட் கொடுத்து – தேசிய கொடியை ‘கவ்வி ‘ பிடிக்கவைத்து விட்டர்.

நாட்டுப்பற்றின் ‘மொத்த ‘ வியாபாரிகள் கேட்கிறார்கள் ‘பட்டொளி வீீசிப் பறக்கும் தாயின் மணிக்கொடி சற்றே உங்கள் மேனியில் பட்டால் ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா ? ‘ என்று. இரத்தக்கறை படிந்த காவிக் கைகளில் கொடியை கண்டு இத்தாலிய சோனியா மட்டுமல்ல, அகண்ட பாரதத்தில் ஜீவிக்கும், ஆச்சரியத்தில் சிலிர்த்து விட்டது. முந்தா நாள் கொடிபிடிக்க ஆரம்பித்துவிட்டு பல கேள்விகள் கேட்கிற இவர்கள், ஒரு வேளை உண்மையிலேயே சுதந்திரப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு பிடித்திருந்தால் எத்தனை கேள்வி கேட்பார்களோ ? நல்ல வேளை தேசம் தப்பியது (திண்ணையும் தப்பியது). சரி விசயத்துக்கு வருவோம்.

கொடி பிடிக்க காரனமென்ன ?

தேச பக்தர்கள் தற்போது மூவர்ணக் கொடிப்பிடிக்க உண்மையான காரணம் என்ன ? நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பதவி உருவப்பட்டதால் ஏற்பட்ட தலைகுனிவை போக்க – மிஞ்சியிருக்கும் ‘கொஞ்ச நஞ்ச ‘ மானத்தை காக்க – ஏதாவது செய்ய வேண்டுமே ? அரசியல் வாழ்வு தந்த ராம ஜென்ம பூமி பிரச்சினையும் வலுவிழந்துவிட்டது – ‘சோனியா ஜென்ம பூமி பிரச்சினையும் ‘ புசுக்கென்று போய், ஆட்சியை பிடுங்கி நடுத்தெருவுக்கு துரத்தி விட்டது என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

திவாலாகி திஹாருக்கு போகிறவனுக்கு ‘திபெத் லாட்டரியில் ‘ ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்தது போல அமைந்துவிட்டது செல்வி உமாபாரதிக்கு அனுப்பப்பட்ட ‘கர்நாடக கூட்டணி அரசின் ‘ பிடிவாரண்ட்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் சங்பரிவாரத்தால் பிடிக்கப்பட்டதேயில்லை இந்த தேசியக் கொடி -. ‘காவி ‘ வந்தேறிகள் – ஆங்கில வந்தேறிகளோடு கைக்கோர்த்து கொண்டனர். ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி – – ஒத்து ஊதினர் என்பது வரலாறு. விடுதலை போராட்ட காலத்தில் செய்த தேச துரோகத்திற்கு பிரயசித்தமாகவும், கடந்த பாரளுமன்ற தேர்தலில் சங் பரிவாரின் அரசியல் ஆசையை படுகுழியில் தள்ளி இந்தியாவின் இத்தாலிய மருமகள் சோனியாவை எதிர்க்கவும் வேறு வழியில்லாததால் தேசியக் கொடியை பிடித்திருக்கிறார்கள்.

பிடி வாரண்டின் பின்னனி

இந்தியா முழுவதும் முஸ்லிம்களை சீண்டியே வளர்ந்ததுதான் RSS-BJP-VHP. மாநில சங் பரிவார் கும்பல், கர்நாடகத்தில் செல்வி. உமாபாரதி, சாத்வி ரிதம்பரா போன்ற பென் துறவிகளின் துனையோடு முஸ்லிம் எதிர்ப்பு கருத்துக்களை பரப்பியது. இந்து-முஸ்லிம் பகைமை தீயை வளர்க்க தன்னால் இயன்ற அனைத்து வகையிலும் முயன்றது. அதன் ஒரு அங்கமாக, பாபா புதாங்கிரர் என்னும் இடத்தில் உள்ள சூபி வழிபாட்டிடத்தை – இந்து கோயிலாக்க முயற்சித்து முஸ்லிம்களை சீண்டி விட்டது. அதே போல், ஹூப்ளி ஈத்கா மைதானத்தை முஸ்லிம்கள் அபகரித்து விட்டதாக – அபாண்டமாக வதந்தியை பரப்பியது. அதன் விளைவாக மத ஒற்றுமை சீர் குலைந்து பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ‘தேசியக்கொடி ‘ ஏற்றுகிற போர்வையிலே – – முஸ்லிம் எதிர்ப்பு கலவரத்தை திட்டமிட்டு தூண்டியது. தேசிய கொடி ஏற்ற வந்த உமா பாரதி – முஸ்லிம்களை பற்றி மிகவும் கீழ்தரமாக ஆபாசமாக பே(ஏ)சினார். அதை தொடர்ந்த கலவரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதெல்லாம் நடந்து முடிந்து பத்தாண்டுகளாகிவிட்டது.

தேசிய கொடி ஏற்றியதற்கா பிடிவாரண்ட் ?

மக்கள் என்ன அடிமுட்டாள்களா ? மதக்கலவரத்தை தூண்டுவதற்கும் – தேசியக்கொடியை ஏற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாமல் போக ? ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர, குடியரசு தினங்களன்று இந்திய ஜனாபதியிலிருந்து – மாவட்ட கலக்டர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், சாதி சங்க தலைவர்கள், முசுலிம் ஜமா அத் தலைவரகள் தேசியக்கொடியை ஏற்றி வருகிறார்கள். தேசியக்கொடியேற்றிய இவர்களில் ஒருவருக்கும் கைது வாரண்ட் அனுப்பப்படாத போது – உமா பாரதிக்கு மட்டும் பிடி வாரண்ட் அனுப்ப வேண்டிய அவசியமென்ன ?

வரலாற்று திரிபர்கள் ஒப்பாரி வைப்பது போல் தேசியக்கொடி ஏற்றியதற்காக அவரை பிடித்து வரச்சொல்லவில்லை. ஹூப்ளியில் வசிக்கும் முசுலிம்கலின் கருவறுக்கப்போவதாக ஏ(பே)சியதற்கும் – இந்திய முசுலிம்களுக்கெதிராக, இந்திய இந்துக்களின் வெறியை தூண்டி ஆற்றிய உரைக்காகவும், காவல் துறை தடை உத்தரவை மீறியதற்காகவும், வன்முறை பேச்சின் விளைவாக ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு மூலகர்த்தாவாக விளங்கியதற்காகத்தான்.

உமா பாரதிக்கு மட்டும் ஏன் பிடிவாரண்ட் ?

இந்து முசுலிம் கலவரம் ஏற்படுத்தி கட்சியை வளர்க்கும் கொள்கையடிப்படையில், மாநில பா.ஜ.க வின் வேண்டுகோளை ஏற்று கர்நாடகம் அழைத்து வரப்பட்டார் செல்வி உமா பாரதியால் திட்டம் நிறைவேறி பத்தாண்டுகளாகி விட்டது. கர்நாடகத்தை ஆண்ட எந்த அரசும் கலவரத்திற்கு காரணமானவர்களை எதுவும் செய்யவில்லை. சங் பரிவாரத்தால் சிறுபான்மையினரின் நன்பராக முத்திரைக்குத்தப்பட்ட காங்கிரஸ் அரசு என்ன செய்தது தெரியுமா ? கலவர மூலகர்த்தாக்களான கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர்கள் அனைவரையும் ‘கப்சிப்பென்று ‘ வழக்குகளிலிருந்து விடுவித்தது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் கர்நாடக பா.ஜ.க தலைவர்களான அனந்தக்குமார், பி.எஸ். யெடியுரப்பா (பா.ஜ.க சட்டசபை தலைவர்), மற்றும் ஜெகதீஷ் ஷெத்தார் போன்றவர்களும் அடங்குவர். தங்களின் விடுதலைக்கு மட்டும் பேரம் பேசிக்கொண்ட மாநில பா.ஜ.க, தன்னை நம்பி வந்த உமா பாரதியை நட்டாற்றில் தவிக்க விட்டு காங்கிரஸ் தயவோடு தப்பித்து கொண்டது. அதற்கு பிறகும், உமா பாரதியை வழக்கிலிருந்து விடுவிக்க மாநில பா.ஜ.க முயற்சி எடுக்கவில்லை. மாநில பா.ஜ.க தலைவர்களை விடுதலை செய்த கர்நாடக காங்கிரஸ் அரசு, உமா பாரதியையும் விட்டிருக்க தயக்கமா காட்டியிருக்கும் ?.

மீரட், மாலியானா, மொராதாபாத், பம்பாய், கோயம்பத்தூர், குஜராத் போன்ற இடங்களில் இஸ்லாமியர்களுக்கெதிராக கலவரம் தூண்டி உயிரிழப்பும் பொருளிழப்பும் ஏற்படச் செய்த மதவெறியர்கள் எவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படாமல் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால்தான், இந்திய அரசியல் அமைப்பின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால், திடுதிப்பென்று, கர்நாடகத்தில் பதவியேற்றுள்ள காங்கிரஸ் கூட்டனி அரசு, முந்தைய மாநில அரசுகள் நிறைவேற்றத்தவறிய கடமையை செய்ய முயற்சித்திருப்பதாக கூறிக்கொண்டு மேற்கண்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்படாத உமா பாரதியை கைது செய்ய அரைகுறை மனதோடு நடவடிக்கை எடுத்தது.

இந்திய இஸ்லாமியர்களை பொறுத்தவரை காங்கிரஸும் – சங்பரிவாரமும் ஒன்றுதான் என்பதை இனிமேலாவது முஸ்லிம்கள் உணரவேண்டிய தருணம் வந்துவிட்டது.

ஏன் இந்த ராஜ மரியாதை ?

கடமையை ஆற்றுவதாக கூறும் கர்நாடக சட்ட – காவல் துறைகள் ஹிந்துத்வவாதிகளை மட்டும் ஏன் கனிவோடு நடத்துகிறது ? பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதற்காக தடையுத்தரவை மீறி, மதக்கலவரத்தை தூண்டி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உமா பாரதியை, தர்வாட் விவசாய பல்கலை கழக விருந்தினர் மாளிகையில் வைத்து இராஜ உபசாரம் பண்ணுகிறதுதே இது நியாயமா ? (நல்ல வேளை மைசூர் அரண்மைணையில் அமர செய்து காங்கிரஸ் கூட்டனி முதல்வர் தாராசிங் வென்சாமரம் வீசவில்லை!)

உமாபாரதி – தங்கியிருக்கும் வசதி மிக்க விருந்தினர் மாளிகையில், பஞ்சனையில் உறங்காமல் (அனுதாபத்திற்காக போடும் ஸ்டண்ட்) தரையில் பாய் போட்டு தூங்குவதாகவும். எளிமையான உணவான இரண்டு ரொட்டிகள், காய்கறிகள் உண்டு மோர் மட்டும் அருந்தி வருகிறாராம். (ஹூம்…. வாஞ்சிநாதனுக்கோ, கொடி காத்த குமரனுக்கோ இந்த வசதியும் .வாய்ப்பும் கிடைத்ததில்லை.) தூங்கும் நேரம் போக மீதி நேரத்தில் தியானத்திலும், பூசையிலும் ஈடுபடுகிறாராம். பூசைப்பொருட்களான மலர்கள் மற்றும் துளசி இலைகள் உள்ளூர் பா.ஜ.க-வி.எச்.பி தலைவர் இல்லத்திலிருந்து அனுப்பப்படுகிறது – இது செய்தி (http://www.hindu.com/2004/08/28/stories/2004082808550400.htm).

உமாபாரதிக்கு தரப்படும் இத்தகைய உபசரனைகள் இதே வகையான குற்றங்களை புரிந்த மற்றவர்களுக்கு வழங்கப்படுமா ? கர்நாடகத்தை ஆள்வது காங்கிரஸ் கூட்டணியா அல்லது காவிக்கூட்டனியா ? பாட்ஷாவுக்கு (அல் உம்மா) ஒரு சட்டம் – பாரதிக்கு (உமா) ஒரு சட்டமா ? பாரத தேசத்தில் ஏன் இந்த பாகுபாடு ? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் கேலிக்கூத்தா ?

கைதை தொடர்ந்த நாடகம்

உமாபாரதியின் கைதை தொடர்ந்து பா.ஜ.க நடத்திவரும் உணர்ச்சி பூர்வமான நாடகங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மூவர்ணகொடியை ஏற்றியதற்காகத்தான் கைது செய்யப்பட்டார் என்ற பொய் பரப்பிகளின் வாய்களுக்கு பூட்டும் – எழுதும் கரங்களுக்கு விலங்கும் மாட்டப்படவேண்டும். சரன் அடைய வந்த உமா பாரதியை வரவேற்க வந்தவர்கள் கட்சி கொடியை போல தேசியக்கொடியை பயன்படுத்துகின்றனர். அதை கையாலாகாத காங்கிரஸ் கூட்டணி அரசு வேடிக்கை பார்க்கிறது.

மந்திரி சபையில் இருக்கும் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று போர்க்கொடி பிடித்து மக்களவை – மாநிலங்கலவைகளை ஸ்தம்பிக்க செய்த சங் பரிவார கும்பல் – அதே அடிப்படையில் உமா பாரதி மீது நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கும் போது ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறது. இரட்டை வேஷம்தான் இயக்கத்தின் உயிர் மூச்சு எனபதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

ஹூப்ளி நீதிமன்றம் அளித்த முதல் வாரண்டிலேயே சரனடைந்தது போல இன்றைக்கு நாடகம் போடுகிறவர்கள், இதுவரை அனுப்பப்பட்ட 100 க்கும் மேலான நீதி மன்ற அழைப்பானைகளை எடுத்து தூர எறிந்து நீதிமன்றத்தை அவமதித்ததை மறைக்க முயற்சிக்கிறார்கள். வாரண்ட் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் சரண்டராகியதாக இன்றைக்கு பீற்றிக் கொள்பவர்களுக்கு – சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ‘புத்தி ‘ பத்து ஆண்டுகளுக்கு பிறகுதான் வந்ததா ? இத்தனை ஆண்டுகாலம் ‘புத்தி ‘ எங்கே போயிருந்தது ?

குற்றம் சாட்டப்பட்டதால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக ‘வீறாப்புடன் ‘ அறிவித்த உமா பாரதி தனது இராஜினாமா கடிதத்தை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுக்கு அனுப்பியது ஏன் ? அவரென்ன மத்திய பிரதேச கவர்னரா ? உமா பாரதிக்கு இந்திய அரசியல் சட்ட அடிப்படைக்கூட தெரியாதா ?

சங் பரிவாரின் – உமா பாரதியின் தே(வே)சப்பற்றை பற்றி நாடு நன்றாக அறியும். அதனால் தயவு செய்து மதவாத அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் போடும் நாடகங்களை – காந்தியடிகளின் – பகத் சிங்கின் – கொடி காத்த குமரனின் – தியாகங்களோடு ஒப்பிட்டு உண்மையான சுதந்திர போராட்டவீரர்களை அவமதிக்காதீர்கள்.

தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட காவி பச்சோந்திகள் – சட்டத்தை சந்திக்க திராணியில்லாது – தாங்கள் செய்த ‘காலித்ததனத்துக்கு ‘ மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும். காங்கிரஸுக்கும் – பா.ஜ.க வுக்கும் நடக்கும் சுயலாபத்துக்கான கீழ்தர அரசியல் சண்டையில் தேசியக்கொடி ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது! உமா பாரதியை செயிலில் போட்டேனே என்று காங்கிரஸும் – உமா பாரதி மீது போட்ட வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதே என்று பா.ஜ.க வும் பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் இருவராலும் சின்னாபின்னமாகி சிறுமைப்படுத்தப்பட்டது தேசியக்கொடிதான்! வாழ்க உலகிலேயே மிகப்பெரிய (!) இந்திய சனநாயகம்.!

நிறைவாக, ராஜேஸ் மற்றும் வரதன் சொல்வது போல, உண்மையிலேயே தேசிய கொடியேற்றம் கேள்விக்குறியானால், ஒட்டு மொத்த இந்தியாவே கிளர்ந்து எழும் – ஒவ்வொருவரும் வாஞ்சி நாதன்களாக மாறுவோம் – எதிரியை சுட்டு பொசுக்கி விட்டு வீரத்தோடு தூக்கு மேடையேறுவோம் – உண்மைதான். ஆனால் வீர சவர்க்கார் இங்கிலீசு அரசாங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தது போல் இத்தாலிய (சோனியா) அரசுக்கும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வர மாட்டோம். இது உறுதி.

say_tn@hotmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்