கடிதங்கள் – ஏப்ரல் 22,2004

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஜெயமோகன் – ஹுமாயுன் – கார்த்திக் ராமசாமி – சொ.சங்கரபாண்டி


சென்ற இதழில் வெளியான என் கட்டுரைகள் சொல்புதிது மற்றும் மருதம் இதழ்களில் ஏற்கனவே வெளியானவை. கதை உயிர்மை இதழில் வெளிவந்தது.

மத்தளராயன் எழுதுவதை தேடி ஏமாற்றம் அடைந்தேன் . என்ன ஆயிற்று ? தொடர்வாரா ?

திண்ணை வாசிப்பதில் சமீபகால மகிழ்ச்சி அதி அமெரிக்கத்தேர்தல் பற்றி வரும் விஷயங்கள் நம் தேர்தல் பற்றிய சிறு ஆறுதலை அளிக்கின்றன என்பதே.

ஓர் அறிவிப்பு :

திண்ணை வாசகர்களில் மலையாளம் படிக்கத்தெரிந்த பலர் உண்டு என்பதை அறிவேன். குறிப்பாக இரா முருகன்.

மலையாளக் கவிஞரும் என் நண்பருமான பி.பி. ராமச்சந்திரன் மலையாளக்கவிதைக்காக ஓர் இணையதளத்தை தொடங்கியுள்ளார். இது வாசக கவனத்துக்கு வரவேண்டும் என விரும்புகிறேன்.

http://www.harithakam.com

ராமச்சந்திரனிின் 15 கவிதைகளை நான் தமிழாக்கம் செய்துள்ளேன். தமிழினி வெளியீடாக ‘இன்றைய மலையாளக் கவிதைகள் ‘ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com


அன்புள்ள ஜோதிர்லதா அவர்களுக்கு,

மிக குழப்பமான உங்கள் கட்டுரையில் நீங்கள் வலியுருத்தும் கருத்து எனக்கு புரியவில்லை. ஆனால் அதுவல்ல எனது இகடிதத்தின் பொருள். ஒரு முஸ்லிம் பெரியவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், எந்த வகையில் பெரியவர் என நீங்கள் குறிப்பிடவில்லை, வயதை வைத்து என்று கணித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இஸ்லாமிய

மார்க்கம் அறிந்த பெரியவர் என்றால் இத்தகைய கருத்தினை கூறி இருக்கமாட்டார். குரானை முழுமையாக அறிந்துக்கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறுவதென்பது மிக பாவமான செயலாக நபிகள் நாயகம் அறிவித்தி-ருக்கிறார்கள். மேலும் அவர்கள் தாய் நாட்டின் மீது தேசபக்திக்கொள்வது ஈமான் (ஏகத்துவ இறை நம்பிக்கை) பேணும் முஸ்லிம்களின் கடமையாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்திய தேசபக்தி பேணுவதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவில்லை, இது சில அறிவிலிகளுக்கு மட்டும் புரிவதில்லை. இஸ்லாம் மார்க்கம் உண்மையில் என்னதான் கூறுகின்றது என்பதை அறியாமல், தனக்கு தோன்றியவற்றையே இஸ்லாத்தின் கருத்தாக கூறுவதே பலருக்கு (முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவரும்) பிழைப்பாகிவிட்டது.

அன்புடன்,

ஹுமாயுன்

ருவைஸ் – யு ஏ இ

MKabir@takreer.com


ஜோதிர்லதா கிரிஜா அவர்களது இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம் என்ற கட்டுரையை படித்தேன். இவரது மற்ற சில கதைகளையும் படித்துள்ளேன், அறிமுகபடுத்துவதறகு திண்ணைக்கு ஒரு நன்றி.

ஒரு குட்டி கதை சொல்கிறேன். இரண்டு வீடுகள் உள்ளது. இரண்டும் ஒரே சமயத்தில் பற்றி எரிகிறது. ஒருவன் பக்கத்து வீட்டுத் தீயை அணைக்க ஓடினானாம். அதை அணைத்தபின்னர் பக்கத்து வீட்டுக்காரனிடம், பார் நான் உன்வீட்டு தீயை அணைக்க வந்தேன், எனவே என் வீட்டு பொருட்களெல்லாவற்றையும் இழந்து விட்டேன். நீதான் இதற்கு பொறுப்பாளி என்றானாம். அதைக்கேட்ட அவன் நான் என் வீட்டு தீயை அணைத்தது போல் உன் வீட்டு தீயை நீ அணைத்திருக்க வேண்டும், செய்யாதது உன் குற்றமா என் குற்றமா ? என்று திருப்பி கேட்டானாம்.

இந்து மதம் ? ? – அப்படி ஒரு மதம் இருக்கா ? என்று கேட்டால் பெரும் பாலும் இந்துத்துவ சர்வ மத சமத்துவ சம்மதத்தில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. இல்லை எல்லா குட்டி குட்டி மதங்களையும் சேர்த்து ‘இந்து ‘ அப்படான்னு பேர் வச்சிக்கிட்டோம் என்கிறார்கள்.

அதுதான் கடவுள் சர்வ வியாபியாச்சே ஏண்டா கோயிலுக்கு போறே ?ன்னு கேட்டா

கடவுள் சர்வவியாபிதான். ஆனா நான் கோயிலுக்கு தான் போவேன் என்கிறார்கள் இந்துத்துவ சம தத்துவ சம்மதத்தில் இருப்பவர்கள்.

ஏண்டா இந்துத்துவ சம தத்துவ சம்மதத்தில் இத்தனை கடவுள்கள் ?ன்னு கேட்டா , அது எனக்கு சரியாக தெரியாது, எல்லாம் ஒரு வசதிக்குத்தான் என்கிறார்கள் இந்துத்துவ சர்வ மத சமத்துவ சம்மதத்தில் இருப்பவர்கள்.

‘சிறுபான்மையாய் இருப்பதால் , அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் ‘ எனபது

எந்த ஊர் நியாயம் ? ? ? இது, மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன்குடம் என்கிற மாதிரி வாதத்துக்கு துணைபோகிறது. இவ்வளவு யோசிச்சவங்க, இந்த இடத்திலையும் கொஞ்சம் சம தத்துவத்த யோசிச்சு எழுதியிருக்கனும்.

சிறுபான்மையாய் வாழ்ந்து பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

பெரும்பான்மை மக்கள் சர்வ மத சமத்துவ இந்துத்துவத்தில் வாழும் நாட்டில், சிறுபான்மையினருக்கு ஒரு சிறு இடத்தை தருவதில்

பெரும்பான்மை இந்துத்துவ பிரதமர் ஆட்சியிலும் செய்தாலும் முடியவில்லையே ?

//ஆனால், பிற மதித்தவரைப் பாவிகள் என்று கூசாது குறிப்பிடும் இவர்களிடம்

இப்படி ஒரு பண்பாட்டை எதிர்பார்க்கவே முடியாது//

இங்கு உங்கள் மத வெறிதான் சொற்களாய் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது எனக்கு.

பிட் நோட்டிஸ் கொடுத்தால் கேவலமா ? ? அதை வாங்கி பத்திரமாய் வைத்திருந்து தூக்கி எரிந்தால் இந்துக்கள் உயர்ந்தவர்களா ? ?

அது அப்படியல்ல!!! நற்செய்தியை பரப்ப அவர்களது மதம் போதிக்கிறது , அது தவறுமல்ல.

அவர்களாவது இந்த வேலையை தன் மதத்துக்காக செய்கிறார்களே என்று பெருமை கொள்ள வேண்டிய விஷயம் அது. மறுக்க உங்களுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. ஆனால் பிட் நோட்ட்ஸ் கொடுத்தல் கேவலம் என்கிற பார்வை இந்துத்துவ சம தத்துவ சம்மதத்தில் இருப்பவர்களிடம் மட்டும்தான் உள்ளது. சைவக்குரவர்களும், நாயன்மார்களும், ஸல் அவர்களும் இதைத்தான் செய்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

****முதலில் நான் என் பிரச்சினை என்ன**** என்று பார்க்கிறேன், பிறகு இஸ்லாமியனின் அல்லது கிருஸ்த்தவனின் பிரச்சினை பற்றி யோசிக்கிறேன். ஏனெனில் நான் இந்துத்துவ சம தத்துவ சம்மதத்தவன்.அன்புள்ள கிரிஜா இதை உங்களுக்காக எழுதவில்லை, எனக்காக எழுதிக் கொள்கிறேன், வாய்ப்புக்கு நன்றி.

கார்த்திக் ராமசாமி

karthikramas@yahoo.com


ரஜினி காந்தும், வன்முறையும்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வெளிப்பாடுகளைப் பற்றி கடந்த வாரத் திண்ணையில் வந்த மூன்று விமர்சனப் பார்வைகள் ஒன்றையொன்று முழுமைப்படுத்துவதாக இருந்தன. அவற்றையெழுதிய சுந்தரமூர்த்தி, தமிழ்மணவாளன், பி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். ரஜினியைப் பற்றிய வரதனின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நல்ல நகைச்சுவையாக இருந்தன. இவையனைத்திலும் விடுபட்டுப் போன ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ரஜினிகாந்தின் அறிக்கையில் உள்ள ஒரு பகுதி இது: “அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன்.”

இதே கருத்தைத்தான் அவர் முதல் முதலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு, முதல்வரைப் பார்த்து கையை நீட்டி முழக்கினார். சுந்தரமூர்த்தி ஏற்கனவே சொன்னபடி முதல்வர் ஜெயலலிதா வருகைக்கான போலீஸ் கெடுபிடியில் ஒருமுறை டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ரஜினி அரை மணி நேரம் காக்க வைக்கப் பட்டார். அதற்கு முன்னால் எத்தனையோ வன்முறைச்சம்பவங்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டங்களில் நடத்தப்பட்டன. மிரட்டல்கள் சசிகலாவிடம் சொத்துக்களைத் தாரை வார்க்கத் தவறியவர்களின் இல்லங்களில் நடத்தப்பட்டன. அவற்றையெல்லாம் ரஜினிகாந்த் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அந்த சம்பவத்திற்குப் பின்னால், இயக்குனர் மணிரத்தினம் வீட்டுக் குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் காரணம் காட்டி பாட்சா பட வெற்றி விழாவில் குரல் எழுப்பினார். அதன் தயாரிப்பாளர் அமைச்சர் இராம வீரப்பன் முன்னிலையில் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு, வன்முறை அதிகமாகி விட்டதாகக் கூறினார். ஏன் அதற்கு முன்னால் அவர் கேட்கவில்லை என்பதை விட, அப்பொழுதாவது அவர் துணிச்சலாக குரல் கொடுத்தாரே என்று பாராட்டலாம். (அதன் பலனாக வீரப்பன் அமைச்சர் பதவி வ்ிலக நேர்ந்தது தனிக்கதை).

ஆனால் இப்பொழுது போலவே அப்பொழுதும் ரஜினியிடம் ஒரு கேள்வி எழுப்பப்படவில்லை. அது, வன்முறைக் கலாச்சாரத்தைப் பற்றி விமர்சிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு என்ன தகுதியென்று. ரஜினியுடைய படங்களில் பெரும்பாலானவை வன்முறையையும், ஒழுக்கக் கேட்டையும், தனிநபரின் பரோபகார செயல்களை முன் வைத்து நியாயப்படுத்துபவை. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சியின் வன்முறைக் கலாச்சாரத்தை அவர் விமர்சித்த மேடை பாட்சா பட வெற்றி விழா மேடை. அந்தப் படம் முழுவதும் பார்க்க சகிக்க முடியாத வன்முறைகள் தலைவிரித்தாடும். அதைப் பற்றி அந்த மேடையிலேயே ஜெயலலிதா திருப்பி கேட்க வில்லையே என்று அப்பொழுது எண்ணினேன். அதே போல்தான் இராமதாஸ் இப்பொழுது திருப்பிக் கேட்கவில்லையே என்றும் எண்ணுகிறேன். வருமானம் வருகிறது என்பதற்காக இவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார். வன்முறைக் கலாச்சாரத்தையும், சட்டத்தைத் தன் கையில் எடுத்து பழிவாங்குவதையும் ஊக்குவித்து நடிப்பார். இது தான் சாத்தான் ஊதும் வேதம் என்பது!

படம்தானே என்று சால் சாப்பு சொல்வதையும், இரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று கூறுவதையும் ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் கூறலாம். அவர்களுக்குப் பதிலாக எனக்கு எம்ஜியாரின் படங்களைக் கூற விரும்புகிறேன். ரஜினிகாந்தை விட பல மடங்கு கண்மூடித்தனமான இரசிகர்களைக் கொண்ட எம்ஜியாரின் படங்களில் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கும். யதார்த்தமாக இல்லாவிடினும் அவருடைய கதாநாயகன்கள் ஒரு போதும் தனிமனித ஒழுக்கக் கேட்டைத் தூண்டுவதாகவும், அனாவசியமான தனிநபர் வன்முறையைத் தூக்கிப்பிடிப்பதாகவும் இருந்ததில்லை. எனவே வன்முறையை விரும்பாதவராகப் பீற்றிக்கொள்ளுமுன், ரஜினிகாந்த் தன்னுடைய படங்களை விமர்சனம் செய்து மக்களிடம் மன்னிப்புக் கோரட்டும்.

– சொ.சங்கரபாண்டி

sankarpost@hotmail.com


Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்