கடிதம் 4, மார்ச் 2004

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

அரவிந்தன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மத்தளராயனின் குறிப்புக்கு நான் ஆற்றிய எதிர்வினை குறித்து சூர்யா எழுதியதைப் படித்தேன். மத்தளராயனாவது கிண்டலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சூர்யா கேவலப்படுத்துகிறார். ‘பிழைப்பில் மண்ணைப்போட யாருக்கும் உரிமை இல்லை ‘ என்கிறார். இதைப் படிக்கவே அருவருப்பாக இருக்கிறது. மத்தளராயனின் சொற்களுக்கும் என் பிழைப்பிற்கும் என்ன சம்பந்தம் ? ‘காடு ‘ விற்றுக் கொழித்த பணத்தில் நான் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் மத்தளராயன் கிண்டலடித்து அதைக் கெடுக்க முயல்வதாகவும் பொருள்தரும் சூர்யாவின் வார்த்தைகள் கூசவைக்கின்றன. இதைவிட அபத்தமாக, சிறுபிள்ளைத்தனமாக, யோசிக்கவும் எழுதவும் முடியுமா என்று தெரியவில்லை.

காடு, விஷ்ணுபுரம் ஆகியவற்றோடு வேறு நூல்களையும் நான் சேர்த்துக்கொள்கிறேனாம். காடு, விஷ்ணுபுரம் ஆகியவை சிறப்பாக விற்றன என்பது ஒரு செய்தி. ஜே.ஜே., சிறகுகள் முறியும், நெடுங்குருதி முதலானவையும் சிறப்பாக விற்றன என்பது இன்னொரு செய்தி. இரண்டு செய்திகளையுமே ஆதாரபூர்வமாக நிரூபிக்க என்னால் முடியும். ‘சந்தடிசாக்கில் ‘ நான் சேர்ப்பதாக சூர்யா கருதும் ‘ஏழெட்டு பெயர்கள் ‘ தாங்கிய நூல்களின் விற்பனை சார்ந்த அவரது கருத்தை நிரூபிக்க சூர்யா ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறாரா ?

‘காலச்சுவடு அவர்கள் நடத்திய கூட்டத்தில் அவர்களுடைய நூல்களுடன் சேர்த்து விஷ்ணுபுரத்தையும் வைத்தார்கள் ‘ என்று ஆதங்கப்படும் சூர்யாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நூல் விற்பனையோ, விமர்சனக் கூட்டமோ – ஜெயமோகனுக்கு இணையாக எந்தப் பெயரையும் கொண்டுவரக்கூடாது என்கிறாரா ? ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் யாருக்கும் நாற்காலி போடாமல் இருக்கும் நடைமுறையை அல்லவா இது நினைவுபடுத்துகிறது ? விசுவாசம் என்றால் இப்படி ஒரு அடிமைத்தனமான விசுவாசமா ? ஜெயமோகனுக்கு இப்படிப்பட்ட விசுவாசிகள் வழக்கறிஞர்கள் அமைந்ததற்காக நான் உண்மையிலேயே அனுதாபப்படுகிறேன்.

‘அவர்களுடைய நூல்களுடன் சேர்த்து ‘ என்று சூர்யா கூறுவது தகவல் பிழை. மேற்படி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மூன்று நூல்களில் ஒரே ஒரு நூல்தான் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு. நானும் பாவண்ணனும் ‘ ‘நல்ல நாவல்தான் ஆனால் ‘ என்ற மாதிரி ‘ பேசியது நாயக பிம்பங்களை விழுந்து கும்பிடும் பிறவிகளுக்கு அபச்சாரமாகத்தான் தெரியும். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. காலச்சுவடில் வெளியான பதிவுகளைப் படித்துப் பார்த்தால் நானும் பாவண்ணனும் விஷ்ணுபுரம் பற்றி என்ன சொன்னோம் என்பது தெரியவரும். கோவை ஞானி, சூத்ரதாரி, ராஜமார்த்தாண்டன் ஆகியோரும் நாவலைப் பெரிதும் பாராட்டிப் பேசியவற்றின் பதிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன. எம். வேதசகாய குமார் நாவலை விமர்சித்திருந்தாலும் நாவலின் பல அம்சங்களை அவரும் பாராட்டத்தான் செய்கிறார். ஜூலை-செப்டம்பர் 1998 காலச்சுவடு இதழில் இந்தப் பதிவுகள் வந்துள்ளன. சூர்யா அவற்றைப் படித்துப் பார்க்க விரும்பினால் என் செலவில் ஒளியச்சு நகல் எடுத்து அனுப்பிவைக்கிறேன்.

வேதசகாயகுமார் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் விஷ்ணுபுரம் மீது நடத்திய ‘தாக்குதல்கள் ‘ காலச்சுவடு அலுவலகத்திலேயே திட்டமிடப்பட்டவை என்கிறார் சூர்யா. இது இவர்கள் இருவரு’கு சொந்த புத்தி இல்லை என்று சொல்லி அவமானப்படுத்தும் கூற்று. இதுபற்றி இவர்கள் இருவரும்தான் எதிர்வினையாற்ற வேண்டும்.

கூட்டத்தின் பதிவுகளுடன் ஒரு குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அதில் தேவதேவனின் உரை சதங்கை ஜூலை இதழில் பிரசுரமாகிவிட்டதால் அதைப் பதிவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயமோகன் சார்பில் பதில எழுதத் துடிக்கும் விசுவாசிகள் தாங்கள் முன்வைக்கும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது. காலம் மட்டுமல்ல; உண்மையும் பாரபட்சமற்றதுதான்.

– அரவிந்தன்

diaravindan@yahoo.co.in

Series Navigation

அரவிந்தன்

அரவிந்தன்