ஆயிரம் பொய்யைச்சொல்லி…….

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

கிரிஜா மணாளன்


()
‘நான் சதாசிவம் பேசறேன் சம்பந்தி……… சௌக்யமா இருக்கீங்களா?”

‘சௌக்யந்தானுங்க.. திடீர்னு இப்ப என்ன நடுராத்திரில போன் பண்ணுறீங்க?”

‘முக்கியமான ஒரு விஷயத்தை விசாரிக்கணும்னு இப்பத்தான் தோணிச்சு!”

‘இந்த நடுராத்தியிலேயா? என்ன விஷயம்? கேளுங்க சம்பந்தி!”

‘ஆமா……….உங்க பொண்ணு கல்யாணத்துக்காக நீங்க எங்கக்கிட்ட எத்தனை பொய் சொல்லியிருப்பீங்க?”

‘ஐயய்யோ..! என்ன இப்படி கேக்கறீங்க சம்பந்தி? எல்லாம் நீங்க சொன்னபடி கரெக்டாத்தானே பண்ணி முடிச்சேன்! ஒரு குறையும் வைக்கலியே!”

‘அதுக்கில்லே…….ஆயிரம் பொய்யைச் சொல்லித்தான் ஒரு கல்யாணத்த பண்ணமுடியும்னு சொல்வாங்க. அப்படி ஒரு பொய்கூட சொல்லாம உங்களால இந்த கல்யாணத்த நடத்தியிருக்க முடியாதுங்களே?”

‘அது……..வந்து……..”

‘நீங்க இந்த இழுப்பு இழுக்கறத பாத்தா ஏராளமா பொய் சொல்லித்தான் என் பையனை மாப்பிள்ளை ஆக்கிக்கிட்டீங்க!”

‘நீங்க என்னை தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க……..”

‘தப்பு என்ன தப்பு? எல்லாமே தப்புத் தப்பாத்தான் நடந்திருக்கு! ஆமா…….. மாப்பிள்ளை அழைப்பு விருந்துல பால் அல்வா போடறதா சொன்ன நீங்க, வெறும் பூந்திய புடிச்சிவச்சி ~லட்டு~ங்கற பேர்ல இலைக்குப் போட்டீங்களே..இதுவும் பொய் தானே?”

‘நீங்க தப்பா நெனச்சிக்கப்படாது….அன்னிக்கு வாங்கின பால் கெட்டுப் போனதால பால் அல்வா போடமுடியலே!”

‘பால் கெட்டுப்போச்சோ என்னமோ…….ஒங்க வார்த்தைதானுங்க கெட்டுப் போச்சு! இன்னொன்னு…..மாப்பிள்ளை அழைப்புக்கு ~ஏ ஒன்~ பார்ட்டியா நாதஸ்வரம் வைக்கறதா சொன்னீங்க……. கடைசில ஏதோ கரகாட்டத்துக்கு ஊதுறவனுங்க மாதிரி ரெண்டு பேர் வந்து ஊதிட்டுப் போனானுங்க! இதுல வேற பொய் சொல்லியிருக்கிங்க!”

‘அந்த தஞ்சாவூர் பார்ட்டிக்கு ட்ரை பண்ணியும் ~டேட்~ கிடைக்கலே சம்பந்தி……..”

‘கண்டிப்பா அதை வச்சாகணும்னு எண்ணமிருந்தா ஆறு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணியிருப்பீங்க…….எங்கக்கிட்ட ஏதோ ஒப்புக்குச் சொன்னதுதானே! சரி, அதை விட்டுத்தள்ளுங்க. தாம்பூலப்பைல தேங்காய்க்கு பதிலா எலுமிச்சம்பழ சைஸ_க்கு ஒரு காய்ஞ்சு போன சாத்துக்குடியை போட்டுச் சமாளிச்சிட்டீங்க!”

– 2 –

‘மார்க்கெட்ல வர்ற சைஸே அதுதான்ங்க சம்பந்தி….”

‘கல்யாண மார்க்கெட்டுல கஷ்டப்படாம என் பையனைக் கொத்திக்கிட்டுப் போன நீங்க இப்ப ஏன் இப்படி பேசமாட்டீங்க! அப்புறம்…… என் ஒய்ஃபுக்கு வச்சுக் குடுத்த சம்பந்தி புடவைல கண்ணுக்கு தெரியாத அளவுக்கு ஜரிகை பார்டர்……..”

‘சம்பந்தியம்மா தான் அந்த அளவுக்கு ஜரிகை போதும்னு சொன்னாங்க……”

‘ஒரு பேச்சுக்குச் சொன்னா அப்படியே எடுத்துடறதா? வீட்டுக்கு வந்ததும் அவக்கிட்ட டோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டது நான்தான்யா!…….அப்புறம்….கல்யாணத்துக்கு புரோகிதர் ஏற்பாடு பண்ணியிருந்தீங்களே……அந்த கெழவனுக்கு கண்ணும் தெரியலே …காதும் கேட்கலே……மாங்கல்யத்தை எடுத்து பொண்ணு கையில தர்றார்னா பாத்துக் குங்க!”

‘வருஷக்கணக்கா அவருதானுங்க எங்க ஃபேமிலியில எல்லாமே பண்ணி வைக்கறார்! கொஞ்சம் வயசாயிடுச்சு…அதான்…”

‘என்னவோ அவரை வச்சே ஒப்பேத்திட்டீங்க! இதையெல்லாம் சொல்லிக்கிட்டே போனா விடிஞ்சிடும்!”

‘சமயத்துல அப்படி இப்படின்னு……………”

‘எப்படியிருந்தா என்னங்க? நீங்க எந்தெந்த விஷயத்துல என்கிட்ட பொய் சொல்லியிருக்கீங்கன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.. இன்னும் எது எதுல பொய் சொல்லியிருக்கீங்கங்கற வௌரம் எனக்குத் தெரிஞ்சாகணும்!”
………..”
‘ஐயோ சம்பந்தி……..அப்படியெல்லாம் எதுவும் இல்லேங்க!”

‘சொல்லுறத கேளுமய்யா! எப்படியெல்லாம் பொய் சொல்லி ஒரு பொண்ண கட்டிக் குடுக்கலாம்கற வௌரத்த எனக்கும் சொல்லிக் குடுங்கஙடகறேன்!”

‘ஐயோ! எதுக்குங்க..?”

‘நானும் கல்யாண வயசுல ஒரு பொண்ணு வச்சிருக்கேனுல்ல சம்பந்தி! உங்க மாதிரி அதையும் நான் கரையேத்த வேணாம்?”

‘……………………………”


girijamanaalan2006@yahoo.co.in

Series Navigation

கிரிஜா மணாளன்

கிரிஜா மணாளன்