திகம்பர மாமியார்!

This entry is part [part not set] of 34 in the series 20070906_Issue

ஸ்ரீனி


அண்ணே..நம்ப அடுத்த சீரியல் மெகா தான்ணே!கத கூட ரெடியா இருக்கு…

என்ன கதை..

மர்மமான குடும்பத் தொடருங்க!

மர்மமான குடும்பம்…எப்படிய்யா..எடுபடுமா?

அண்ணே..குடும்பத் தொடர் மட்டும்தான் மெகா சீரியலாக வர முடியுமா,மர்மத் தொடர் வர முடியாதாங்குற அங்கலாய்ப்புடன் மர்மமா யோசனை செஞ்சு டெவலப் பண்ண கதண்ணே!

அப்படிங்கறே.

ஆமாண்ணே..இது ஒரு குடும்ப கம் மர்மத் தொடரு!
இதுவே டிஆர்பிக்கு பெரிய பிளஸ் பாயிண்டு.

சரி சொல்லு கேப்போம்!

முதல் எபிசோட் ஆரம்பத்தில ஒரு கிராமம்.வயற் காடு,அன்டர்வேர் தெரிய வேட்டி கட்டியவர்கள்,ஆடு,மாடு,
கோழி,தூரத்தில் ஒரு கோயில் கோபுரம் எல்லாத்தையும் காண்பிக்கணுமுங்க.

கிராமம் ஏம்பா?

அது தாங்க ரெடி மேட் ஆக கிடைக்குது.செட் போட வேண்டாம்.திருநெல்வேலி,மதுரைப் பக்கமெல்லாம் ரெடி மேட் கிராமம் பக்காவா ஆடு,மாடு,கோழி,கோபுரம்,அன்டர் வேர் சகிதமாய் கிடைக்குதுங்க.

அண்டர்வேருமா..?!கருமம்…கதயச் சொல்லு…

ஊர் ஷாட் முடிஞ்சு அடுத்த பிரேமில் ரெண்டு பொண்ணுங்க,தண்ணிக் குடம் தூக்கிக் கொண்டு போகுதுங்க.எதுத்தாப்போல வராருங்க ஒரு பஞ்சக் கச்ச கிழவனாரு…

ஆஹா பிக் அப் ஆகுது,அப்புறம்..!

அந்தப் பெண்ணுங்க பின்னாடி வேகமாக ஒரு மாடு!
அதுக்கும் பின்னால் சிகப்பு சட்டை போட்டு பட்டா பட்டி அண்டர்வேர் தெரிய சைக்கிள்ள ஒருவன்…

யப்பா டென்ஷன் தூக்குதே..மேலே சொல்லு!

அய்யோ மாடு முட்டப் போகுதுன்னு காமிரா பிரேமில் உள்ள எல்லோரும் அலற,அந்த ரெண்டு
பொண்ணுங்களுக்கு மட்டும் தெரியலங்க…

தெரியவும் கூடாதுப்பா!

கரெக்டுங்க!இதோ மாடு முட்டி விடப் போகுதுன்னு கிட்ட வரப்போ பார்க்கிறாருங்க நம்ப பஞ்ச கச்ச பார்ட்டி…

என்ன செய்யறாரு..நிறுத்தாம சொல்லுய்யா,மூச்சை முட்டுது!

கண்ணை மூடி,கழுத்து மாலையப் பிடிச்சுகிட்டு மந்திரம் சொல்லி, பஞ்ச கச்சத்தின் அஞ்சு பக்கத்தில ஒண்ணை மெதுவா அவிழ்த்து விடறாருங்க..!

என்னாச்சு அப்புறம்..டென்ஷன் ஏறுதுப்பா.

மாடு நின்னுருச்சுங்க!

ஏன்?பஞ்சக் கச்சம் அவிழ்ந்தது அசிங்கம்னா!!

அதாங்க சஸ்பென்ஸ்!இப்பொ காமிரா சிகப்பு சட்டை மீது போகஸ் செய்து ஜூம் போகணும்!

அப்படியா…அப்புறம்..

அது அடுத்த எபிசோட்டில் வரும்..இப்ப இந்த இடத்தில்
முதல் எபிசோட் முடிஞ்சுது!நீங்க டென்ஷன் ஆன இடத்துல எல்லாம் விளம்பர பிரேக் போட்டுடலாங்க.

செம பிக்கப்பு,வெளுத்துட்டே!டைட்டில் என்ன?

“திகம்பர மாமியார்”!!

என்னடா இது பெயரு..சரி வித்தியாசமா இருக்கு வெச்சிருவோம்.

திகம்பர மாமியாரா நம்ப நளினியைப் போட்டுருவோமுங்க.
சூப்பர் மாமிங்க,கிளப்பிறுவாங்க.

சபாஷ்,நல்ல செலெக்ஷன்.அப்புறம் டைட்டில் பாட்டு உண்டுல்லே,ஆறு நிமிஷம் குறையாம டைட்டில் ஓடணும்.இல்லாட்டி எபிசோடு எடுத்து மாளாது.

நம்ப நளினி மாமி பயமுறுத்தும் பெர்..ரிய குங்குமப் பொட்டு முகத்தை திருப்பி,கண்களையும் உருட்டராங்க.பத்து தலை காளி,முட்ட வரும் மாடு,குலைக்கும் வேட்டை நாய்,கண்ணை மூடும் பஞ்சகச்சம்,அவிழ்த்துவிடும் பஞ்சக் கச்சம்,ஹோமக்குண்டம்,முடி வளர்த்த கோயில் பூசாரி,இன்னும் வசதி போல எடுத்து வைச்சுகிட்டு,மாத்தி மாத்தி
சூப்பர் இம்போஸ் செஞ்சு டைட்டில்ல ரொப்பிரலாமுங்க.

அப்ப பாட்டு?

கவலையே படாதீங்க.தாயே மகமாயி சாமியாட வந்தவளே
மாயே உருமாரி மாமியாரா வந்தவளேன்னு போட்டா ஆறு என்ன அறுபது மினிட் ஓட்டிறலாமுங்க!

யாரு பாடுறது?

கொல்லங்கொடி & பரவையம்மா பின்னாடி லல்ல..ல..ஹா..ஹா..போடங்க.மெயின் பாட்டுக்கு நித்யஸ்ரீ அல்லது சௌம்யாவைப் போடலாங்க.ஏன்னா கொஞ்சம் ஓங்கின கீச்சுக் குரல் இருந்தாத்தான் எபக்ட் கிடைக்குமுங்க.

பிரமாதம் போ.அது சரி,அந்த இடத்துல எபிசொட் முடிஞ்சா எடுபடுமா?

என்னங்க..இந்த எபிசோட் முடிவு விளம்பரக் கும்பலை குலுக்கிறுமுங்க!டைட்டில்ல மாமியார்..அதுவும் திகம்பரமா.முட்ட வந்த மாடு பஞ்ச கச்சம் அவிழ நின்னு போகுது.அப்புறம் ஜூம் போகஸ் சிகப்பு சட்டை மேல..இது
போதுமேங்க!மாமியாரைப் பார்க்க மாமிகள்,மாமியாரை திகம்பரமாக பார்க்க மருமகள்கள்னுட்டு,டி ஆர் பி ஏகமா எகிறிடுமுங்க!

சரியப்பா,இதுக்கு மேல எப்படி போகப் போகுது?

அண்ணே,அந்த பிரேக்குக்குள்ளே எவ்வளவு சஸ்பென்ஸ் கேள்விகள்…ரெண்டு பெண்ணுங்களும் யாரு?அந்த மாடு ஏன் முட்ட வருது?அது யாரோட மாடு?சிகப்பு சட்டை யாரு?பஞ்ச கச்சத்தின் பாக்கி கச்சங்களை அவிழ்ப்பது எப்போ?யாருக்கு மாமியார்?ஏன் திகம்பரம்?எங்கே மாமியார்? இதுக்கெல்லாம் விடையை பஞ்சக் கச்சத்தோட சேர்ந்து அவிழ்த்து விட்டு கொண்டே போனால் 528 எபிசொடு ஆகிடுமுங்க.

யப்பா..மாமியாருக்குள்ளே இத்தனை இருக்கா?சூப்பரோ சூப்பரு!

சர்வம் திகம்பர மயம்!!


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி