பிலாக்கோபோபியா

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

ராமசந்திரன் உஷா


இடம் – மனநல மருத்துவமனை
நேரம் – மாலை நேரம்
பாத்திரங்கள் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளினி ஏகாம்பரி

(அருமையான அறை. இதமான குளிர். கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல், பாசத்துடனும், அன்புட்னும், கருணைப் பொங்கும்
பார்வையுடனும் புன்னகைத்தார் மருத்துவர்.)

மருத்துவர்- சொல்லுங்கம்மா உங்கள் பிரச்சனை என்ன?

ஏகாம்பரி- ராத்திரி சரியா தூக்கம் வரதில்லை. மண்டைக்குள்ள குடச்சலா இருக்கு டாக்டர்.

மரு- அப்புறம்…

ஏகாம்பரி- (குரலைக் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு) டாக்டர் என்னை பலர் வாட்ச் செய்கிறார்கள்

மரு- ம்ம்ம்.. ஏன் அப்படி உங்களுக்கு தோணுது.

ஏகா- இது எந்த போபியாவும் இல்லை.நான் சொல்வது உண்மை. என்னிடம் ·புரூப் இருக்கிறது

மரு- சரி, சரி

ஏகா- நான் என்ன சொன்னாலும் விமர்சனம் செய்கிறார்கள். சாதாரண பேச்சுக்கூட இரட்டை, நான்கு அர்த்தங்கள் கண்டுப்பிடிக்கிறார்கள்
பிறகு…

மரு- நீங்க உங்க இன்லாஸ் கிட்ட கொஞ்சம் சுமுகமாய் நடந்துக்கிட்டா எல்லாம் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

ஏகா- இன்லாசா? என் கணவரோட பேரண்ட்ஸ் காலமாகி பல வருஷம் ஆச்சு. அவருக்கு ஓரே அண்ணன், அவரும் கானடால செட்டில்
ஆயிட்டார். எனக்கு சொந்த பந்தங்களால ஒரு பிரச்சனையும் இல்லே.

மரு- நீங்க வேலை இடத்துல பிரச்சனையா?

ஏகா- இல்லே டாக்டர் நான் ஒரு ஹோம் மெக்கர். ஆனா நான் ஒரு ரைட்டர்.

மரு- வெரி குட் வெரி குட். இப்படி வீட்டுல சும்மா இல்லாமல், யூஸ்புல்லாக டைம்மை ஸ்பெண்ட் செய்யறது ரொம்ப நல்லது. என் ஓய்ப்க்கு கூட மங்கையர் மலர்னா ரொம்ப பிடிக்கும்…

(அவர் முடிக்கும் முன்பு சீறிக் கொண்டு எழுந்தது ஏகாம்பரியின் குரல்)
டாக்டர், பொம்பளைங்க எழுத்துனா சமையல், அழகுக்குறிப்புன்னு மங்கையர்மலர் வகையாதானா? நான் எழுதுவது எல்லாம்
சுய சிந்தனை எழுத்துக்கள். விளிம்பு நிலை வாழ்க்கையில் இருந்து பெண்ணீயத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சி. பெண்களை
அடுத்த நிலைக்கு நகர்ந்தும் சிந்தனைகள்.

மரு- (ஒரு மாதிரி பேஸ்த்து அடித்த முக பாவனையுடன்) சரிங்கம்மா. ஆனா நீங்க பேசுகிற தமிழ்தான் புரியலை. சரி, இப்ப உங்க
பிரச்சனைக்கு வருவோம்.

ஏகா- டாக்டர், நான் ஒரு முறை மார்சீச சிந்தனைகளில் பெண்ணீயம் என்று கட்டுரை எழுதினேன். அதற்கு பலராலும்
பாராட்டப்பட்டதற்கு சிலருக்கு பொறாமை. அதனால் தான் என்னை கரம் வைத்து அவமானப்படுத்துகிறார்கள்.

மரு- இருங்க, இருங்க கம்யூனிசமா? இது எல்லாம் கொஞ்சம் ஆட் சப்ஜெட் ஆச்சே?

ஏகா- டாக்டர் சார், உங்கக்கிட்ட சொல்ல என்ன? இண்டர் நெட்ல கூகுளில் போய் சர்ச் போட்டா கடவுளே கூட கிடைப்பார். அப்படி இருக்க, மார்சீச சிந்தனைகளை அகப்படாதா என்ன? அப்படியே படிச்சி, அங்கங்க நம்ம சரக்கையும் தூவி, ரைட்டிங் ஸ்டைல மாத்தி எழுதினா ஆச்சு.

மரு- (யோசனையுடன்) உம்ம்ம்

ஏகா- கவிதைகள் கூட நிறைய எழுதியிருக்கிறேன் . அறுந்து தொங்கும் குறிகள் என்ற தலைப்புல…

(டாக்டர், கையில் உருட்டிக் கொண்டு இருந்த பேப்பர் வெயிட் கீழே விழுகிறது)
மரு- வாட்? அறுந்து.. .. தொ.. கூ கூ கூ…

ஏகா- அறுந்துத் தொங்கும் முலைகள் என்று பெயர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனால் இது ரொம்ப காமன் ஆயிடுச்சு. அதனால
பெயரை மாத்திட்டேன். இவை எல்லாம் மாஜிக்கல் ரியலிசம் வகையறா. அடுத்து தொடர்கவிதை இடானி பேய்களும் மூத்திரகடுப்பும்
என்ற தலைப்பில் வரும்.

(மூடி வைத்த டம்பளரில் இருந்த நீரை மடமடவென்றுக் குடிக்கிறார் டாக்டர். கைக்கூட்டையை எடுத்து அழுத்தி முகத்தைத்
துடைத்துக் கொள்கிறார்)

மரு- முதல்ல கம்யூனிசம் இப்ப பேய் , மாஜிக் …குழப்புறீங்களே..அது சரி, உங்களை யாரோ வாட்ச் பண்ணுராங்கன்னு சொன்னீங்களே??

ஏகா- ஆமாம் டாக்டர். நான் என்ன சொன்னாலும் கிரிட்டிசை செய்யராங்க. எப்போதும் என்னை வாட்ச் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

மரு- யாரூமா

ஏகா- சக பதிவாளர்கள் டாக்டர்.

மரு- யூ மீன் பப்ளிஷர்ஸா?

மரு- பிளாக்ர்ஸ் டாக்டர். இந்த இண்டர் நெட்ல பிளாக்ஸ் எழுதுவது…

மரு- ( நன்கு சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு) பிளாக்கா? (குரலில் அலட்சியம்) அப்ப நீங்க எழுதுவது எல்லாம் பிளாக்குலையா?
கொஞ்சம் எந்திரிச்சி உங்க பின்னால இருக்கிற ஜன்னல் ஸ்கீரினை திறந்துப் பாருங்க.

(ஏகாம்பரி அப்படியே செய்கிறாள்)

மரு- இந்த பில்டிங்குக்கு பின் பக்கம் இன்னொரு என்ட்ரன்ஸ் இருக்கு. சைட்டு ரோடுல பார்த்தீங்களா எவ்வளவு கூட்டம்?
எல்லாருக்கு உங்க வியாதிதான். பிலாக்கோ போபியா. என் ஓய்ப் இதுல ஸ்பெஷலிஸ்ட். இண்டர்னெட்டால ஏற்படும் அனைத்து
வியாதிகளைப் பற்றி படிச்சி லண்டல பி.எச்.டி வாங்கியிருக்காங்க. அதை தவிர பேஸ்மெண்டில் என் மாமனார், கவுன்சிலிங்
அலோபதி மருந்தால இந்த போபியா குணமாகலைன்னா, தாயத்து, ரட்சை, தகடு எல்லாம் மந்திரிச்சி தரார். அதுக்கும் ஏகப்பட்ட
டிமாண்ட். இந்தாங்க என்னோட கார்ட் நா அனுப்பினேன்னு சொல்லுங்க. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டு போங்க.

ஏகாம்பரி எழுந்துப் போனதும், சே.. வர பேஷண்டு எல்லாம் ஓரே கேஸ். முதல்ல நாமும் இந்த சப்ஜெட்டுல ஏதாவது படிச்சி,
நாமும் பொண்டாட்டி லைனுக்கே போயிடணும். இல்லாட்டி நம்ம கதை கந்தல்தான் என்று முணுமுணுத்துக் கொண்டு, வேறு
பேஷண்ட் யாரும் இல்லாததால், கடையை முடுகிறார்.
*****************

ராமசந்திரன் உஷா
1-8-2007

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா