ஊசிப்போன உப்புமா கிண்டுதல்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

குசும்பன்


முன்னுரை: விகடனில் சுஜாதா எக்ஸ்டென்ஷியலிஸம் பற்றி எழுதியதும் வலைப்பூவில் தீ பற்றிக் கொண்டது. டா சூடு ஆறுவதற்குள் இதையே உப்புமா கிண்டுவது பற்றி அவர் எழுதியிருந்தால் என்றென் கற்பனைக் குசும்பைத் தட்டிவிட்டேன். இது முழுக்க முழுக்க பகிடியே!!! யாரையும் டா ‘ஸ் செய்யவோ காயப்போடவோ இல்லை.

அன்புள்ள பனாரஸ் பிரகாஷத்திற்கு,

வணக்கம்.

வலைப்பூவில் ஊசிப்போன உப்புமாவை கிண்டியுள்ளீர்கள். இது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அ. வலைப்பூக்களில் உப்புமா குறித்து திரு. பூண்டி புஸ்பராசு ஒரு பதிவிலிட்டிருக்கின்றார். அது கிரியா-ஊக்கியால் வெளியானது. பயிற்றம் பருப்பு, பயித்தம் பருப்பு என்று உப்புமாவாக்கம் (நன்றி திரு.சங்கட்) செய்யப்பட்டு, அச்சிறு சொல் பல பெரிய பத்திரிக்கைகளில் கையாளப்பட்டுகிறது. 1980 களிலும் பின்னரும் மீந்தஇட்லியிஸம் குறித்தும் அதனை வைத்து இட்லி-உப்புமா கிண்டுவதை பற்றியும் சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியிருக்கின்றீர்கள். உசிலியிசம், அதன் நீட்சியான மீந்தஇட்லியிஸம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது நீங்கள் கொடுத்துள்ள சொல் (ஊசிப்போனயிஸம்) பொருத்தமானதாக இல்லை.

ஆ. நீங்கள் ஊசிப்போனயிஸம் தெரிந்தது போல அடிப்படையை விளக்குகிறேன் என்று கிண்டியிருப்பவை குமட்டுதற்குரியவை. ஏனெனில் பருப்பு, சமாச்சாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு புது விளக்கம் தர முனைந்துள்ளீர். அந்த விளக்கம் அசுத்தமாக இருக்கிறது. பருப்பு, பருத்தல் போன்றதே உப்புமா உப்புமா ? (பெயராகவும், வினையாகவும் ஒரே சொல் என்பதையே தத்துவக் கண்ணோட்டத்தில் சமாச்சாரம் என்றேன்) எந்தக் கண்ணோட்டத்தில் காண்கின்றோம் (குவியமா குழியமா என்ற ஆடிகளின் (வ)கையிலும் வேறுபடலாம்) என்ற தெளிவு வேண்டும். உங்களிடம் அது இல்லை. மாறாக நீங்கள் உப்பு தேவையான அளவு எடுக்கச் சொல்லியிருப்பினும் அதைச் சமைக்கும் போது கலக்கச் சொல்லாத உங்கள் மனம் போன போக்கில் உப்பு-சப்பின்றி கொண்டு விளக்க முயல்கின்றீர்.

இ. சைடு-டிஷ் குறித்து எழுதியுள்ளதும் பொருத்தமற்றதாக உள்ளது. சைடு-டிஷ், ஆர்லிக்ஸ் பையன் முன் வைக்கும் தத்துவ பதார்த்தங்களை ஒரிரு வாக்கியங்களில் விளக்குவது கடினம். ஒரே கல்ப்பில் ஆரஞ்சு ஜூஸூ அடித்து விட்டு எழுப்பும் கேள்விகள், சைடு-டிஷ்ஷின் பிண்ணனி, போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஆர்லிக்ஸ் பையனைப் போல் ஒரே வாக்கியத்தில் ‘அப்படியே சாப்பிடுவேன் ‘ என்று உ(கி)ளறுவதாலோ, பாபுவின் அறுசுவை டாட் காம் குறித்த புகழ் பெற்ற உப்புமாவை குறிப்பிடுவதலோ தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. நீங்கள் செய்துள்ளது காரட் அல்வாவை கால் நிமிடத்தில் (காரட்டை நறுக்கிக் கொட்டு… ஜீனியைக் கொட்டு… கிண்டு… கிட்டியதே அல்வா என்று கூறி) செய்வதெப்படி என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பிரச்சினை என்னவென்றால் அல்வாவின் அரசியல் கோட்பாடுகளை பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் பெற வேண்டுமானால் ஹல்வாசிட்டி பாபு, ஹல்வாசிட்டி கம்மி, திருநெல்வேலி அயங்கரன் போன்றோர் கிண்டுதல் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். உமக்கு உப்புமாவும் கிண்டத் தெரியவில்லை. அல்வாவும் கிண்டத் தெரியவில்லை. சும்மாவா சொன்னார்கள் கால் நிமிடத்தில் காரட் அல்வா கிண்டத் தெரியாதவன், உத்திரம் மீதேறி உசிலை உப்புமா கிண்டப் போனானாம்…உமக்கு கிண்டுவது போல் நடிக்கத்தான் தெரிந்திருக்கின்றது

ஈ. மீந்தஇட்லியிஸம் வேஷ்ட் செய்யா பொறுப்புகளையும், மறுபயன்படுத்தல் (reuse ?) அறநெறிகளையும் குறித்துப் கிண்டிய/கிண்டும் தத்துவம், இட்லி உப்புமா வேண்டுமா என்ற தனிமனித சுதந்திரம், அட உப்புமாதானே தெரிவு, இருப்பு(மா), மதியீடுகள் போன்றவை முக்கியமானவை. உப்புமாவாதிகளை உசிலிசார் உப்புமாவா(வியா)திகளாகவும், உசிலி நம்பிக்கையற்ற, உசிலி வெறுப்பு இயல்பான ரவா நேசமிக்க உப்புமாவா(வியா)திகளாகவும், பிரிக்கலாம். உப்புமாவாதிகளை வெறும் கிண்டுபவர்கள் என்று சொல்வது அறிவிலித்தனம். அது அவ்வாறு கிண்டியவரின் பொறுப்பற்றதன்மையினை, அறியாமையினைக் காட்டுகிறது.

உ. கொள்ளுகாரப் பருப்பு, துளஸிஸ் ஸ்பெஷல் குருமா, முத்துப் புலவு, கோழிக்கறி பிரியாணி இவை குறித்தெல்லாம் விரிவாக எழுதியவர் பாபு. இன்னும் சொல்லப்போனால் கோங்குரா, கிச்சடி சோறு ஏன் காரட் பொங்கலையே கிண்டியவர் பாபு. ஆனால் உங்களுக்கு உப்புமா கூட சரிவர கிண்டத் தெரியவில்லை. கிண்ட முடியவில்லை என்றால் கூட பர்ருவாயில்லை. ஆனால் உப்புமா குறித்து ஏனிப்படி தப்பும் தவறுமான புரிதல்கள் ? இந்த லட்சணத்தில் முக்கியமான ஷோ ‘பிஸ்ஸான ‘ சேங்கரின் சமூக விஞ்ஞானி குறித்து வேறு எழுதுகிறார்.

ஊ. (ஊஊஊஊ இன்னும் கொஞ்சம் ஊளைகள்)

எ. (என்னயென்ன என்னயென்ன பெயர்களை உதிர்ப்பது என்னயென்ன என்னயென்ன)

ஏ. ஏன்னா மொத்ததில் நீங்கள் எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் பேர் படிக்கும் நடுநாயகமான உங்கள் பூவில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.

நான் எழுதியுள்ளது குறித்து உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். தயவு செய்து நான் தனியஞ்சலிலே கொடுக்கப் போகும் இணைய முகவரிகளில் உள்ளவற்றைப் பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு சரி என்பது உங்களுக்குப் புலப்படும். பாபுவின் வலைப்பதிவினையும் பாருங்கள். அதில் புளி அவல் உப்புமா http://www.arusuvai.com/blog/2005/06/blog-post_24.html குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. மேலும் மனோகரா போளி, கருப்பட்டிக் களி ஏன் பிள்ளை அல்வா குறித்தும் அவர் அதில் எழுதியிருக்கிறார்.

நீர் கிண்டியுள்ளது பதிவாகி வாசக/வாசகியர் வாயிலும் வயிற்றிலும், எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்தி கிண்டாமல் கிளறாமல் இருக்க வேண்டாம் என்றும், இத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் கிண்டியவர் என்ற முறையில் நீங்கள் மீண்டும் கிண்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (அட நொக்காமக்கா 🙂 மீந்தஇட்லியிஸம், ஊசிப்போனயிஸம் குறித்து வலைப்பூவில் யாரேனும் போட்டி வைக்கலாம். இக்கடிதம் என் தனிப்பட்ட முறையில் எழுதப்படுகிறது. இதற்கு எந்த ஒரு அமைப்பிற்கும், நிறுவனத்திருக்கும் தொடர்பில்லை.

இதைப் படித்தமைக்கு நன்றி

இவண்

Kவி கருணாதாஸ்

இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டது.

—-

இது போன்று எழுதுவது மகிழ்ச்சியினைத் தரும் காரியமல்ல. தமிழ் வலைப்பதிவுகளில் யாரேனும் இது குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.யாரும் எழுதவில்லை. பனாரஸ் பிரகாஷத்தின் பதிவு வெளியாகி 24 மணி நேரங்கள் கழித்(ந்)தே இதை எழுதி அனுப்பினேன். நேற்று வலைப்பதிவாளர் ஒருவர் முகமூடிக் கதிரில் கோஸ்ட்டா ராஜா என்பவர் எழுதியிருந்த கட்டுரையினை இட்டிருந்தார். அதிலும் இது போல் பல உப்புத், தப்புப் பிழைகள். அக்கட்டுரை ஒபன் கு(தி)ருமா குறித்தும், கூண்டு ரவா குறித்தும் தவறான தகவல்களைத் தருகிறது. இப்படிப்பட்ட சப்பை மேட்டரை தமிழில் வெளிவருவது வாசகர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். எளிமையாக கிண்டுகின்றேன், சாப்பிட சுவாரசியமாக பரி ‘மாறுகின்றேன் என்று எழுதும் போது பொறுப்புடன் தகவல்,கருத்துப் பிழைகள் இன்றி கிண்ட வேண்டும். நாம் கிண்டியது சரிதானா என்பதை குறைந்தது இரு முறையாவது ருசி பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட கேட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதே ஒருவிதத்தில் மேல்.தவறான கிண்டுதலை விட கிண்டாமையே பரவாயில்லை என்று கருக ‘க் கூடிய வகையில் கிண்டுதல்கள், கிளறுதல்கள் தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

podankho@gmail.com

http://kusumban.blogspot.com

Series Navigation

குசும்பன்

குசும்பன்