ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சித்ரா ரமேஷ்


‘ரோல்ட் டால் ‘ என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய ‘மெட்டில்டா ‘ கதையை படித்திருந்தால் எங்க ஸ்கூல் பற்றி விவரம் புரியும். அதில் ஒரு பயங்கர ஹெட் மிஸ்ட்ரஸ் வருவாங்க. அந்த ஸ்கூலும் ஏகப்பட்ட கெடுபிடிகளும் விதிகளும் கொண்ட பள்ளியாக இருக்கும். ஆனால் எந்த விதிமுறைகளும் ஹெட்மிஸ்ட்ரஸ் மேடத்துக்கும் அவங்களுக்கு நெருங்கியவர்களுக்கும் கிடையாது. கிட்டத்தட்ட இதே அமைப்பில் தான் எங்க ஸ்கூலும் இருக்கும். தலையில் எத்தனை லிட்டர் எண்ணெய் தடவ வேண்டும், எப்படிப் பின்னிக் கொள்ள வேண்டும், தாவணிக்கு எத்தனை மீட்டர் துணி வாங்க வேண்டும், எப்படி பொட்டு, வளையல், காதணி வகையறாகக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் அனைவரையும் கே பி சுந்தராம்பாள் ஸ்டைலில் ‘பழம் நீயப்பா ‘ பாடிக் கொண்டு வரச் சொல்லாத குறை. நிறைய பெற்றோருக்கும் இந்த விதிமுறைகள் ரொம்ப பிடித்திருந்தது. பெண் குழந்தைகளை வளர்ப்பதில்தான் அவர்களுக்கு ஏகப்பட்ட கவலைகள் ஆயிற்றே! ஆனாலும் யார் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டுமோ அவர்கள் கண்களுக்கு அழகிகளாகத் தெரிந்து கொண்டுதான் இருந்தோம். அந்த வயதும், இளமையும் அழகு! இது புரியாமல் என்னென்னெவோ செய்து அடக்க ஒடுக்கமாக மாற்றுவதாக ஒரு நினைப்பபு. ஐஸ்வர்யா ராய் தாவணியில் வந்தால் உலக அழகி இல்லை என்று ஆகிவிடுமா ? நிறைய பெண்கள் நல்ல பெண் என்ற இமேஜ் வர வேண்டும் என்று சாமி கும்பிடுகிறார்களோ இல்லையோ விபூதி வைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். என்னுயிர்த் தோழி கூட (அய்யங்கார்) விபூதியோடு வருவாள். நாமம் போட்டுக்க வேண்டியதுதானே! என்று விசாரித்தால் சீச்சீ! நிஜமாவே எங்க தும்பிக்கை ஆழ்வாரை வேண்டிண்டுதான் விபூதி! என்று சீரியஸாக கொஞ்சம் கூட சிரிக்காமல் பதில் சொல்வாள். அடிப்பாவி எங்க சைவப் பிள்ளையார் உங்களுக்கு ஆழ்வாராயிட்டாரா ? என்று ஆழ்வார்க்கடியவன், வீரசைவன் மாதிரி அடித்துக் கொள்வோம்.

இந்த இமேஜ் எவ்வளவு பெரிய விஷயம் என்பது சமீபத்தில் மெட்டி ஒலி டாம் இங்க வந்தப்பத்தான் புரிந்தது. அதில் செல்வமாக நடிக்கும் விஷ்வாவிடம் அனைவரும்(அனைவரும் என்பதில் ஒரு முக்கிய நபரும் இருக்கிறார்) கேட்ட, கேட்க விரும்பிய ஒரே கேள்வி ‘நீங்க நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப நல்லவரா ? ‘ . அதற்கு அவர் ‘அவ்வளவு ஐடியலிஸ்டிக்கா ஆமான்னு சொல்ல முடியாது. முடிஞ்ச வரைக்கும் நல்லவனா இருக்க முயற்சி செய்கிறேன் ‘ என்றார். விஷ்வா ‘ஆமா நிஜ வாழ்க்கையிலும் நான் ரொம்ப நல்லவன்தான் ‘ என்று சொல்லியிருந்தாலும் ஒரு புத்திசாலி பெண்கூட நம்பியிருப்பாள். அந்தக் காலத்துலே படிக்காத பாமர மக்கள் மத்தியில் தேவ தூதன் போல் ஒருவர் தோன்றி உங்களுக்கு நல்லது செய்யவே பிறந்திருக்கிறேன் என்று படத்துக்குப் படம் நல்ல இமேஜை கூட்டிக் கொண்டே போய் கடைசியில் பெரிய தலைவர் ஆனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.(கனவுக் காட்சிகளை மறந்துடுங்க) விஷ்வா அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு முயற்சி செய்யலாம் என்று ஆலோசனைக் கூறியிருக்கலாம். ஓட்டு போடமாட்டாங்க ? இத்தனை வாரம் என்னனென்னவோ பற்றி எழுதிகிட்டு வர்றேன். போன வாரம் அண்ணா என்று ஒரு வார்த்தை எழுதியவுடன் எடிட்டர் அண்ணா படத்தைப் போட்டுவிட்டார். மிஸ்டர் ராம் இந்த வாரம் எம்ஜியார் படமா ? கூடவே பாவம் விஷ்வா படத்தையும் போட்டுடுங்க! தமிழர்களுக்கு திராவிட அடையாளமும், மொழியுணர்வும் கொடுத்த பெருந்தலைவர் ஆயிற்றே! அவர் மீது இப்படி ஒரு மதிப்பும் இமேஜும் இருக்கும். ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி கிடைத்ததா ?யாராவது வாங்கி சமைச்சு சாப்பிட்டுருக்கீங்களா ? இந்த மாதிரி கவர்ச்சிகரமாக தேர்தல் வாக்குறுதி தருவதிலும் முன்னோடிகள்தான்!

காலையில் அசெம்பிளி நடக்கும் போது பேசிக் கொண்டே….யிருப்பார்கள். அந்த பிரசங்கத்தில் கண்டிப்பாக ‘if welath is lost nothing is lost, if health is not lost something is lost, if character is lost everything is lost ‘ என்ற பொன்மொழி கண்டிப்பாக இடம் பெரும். ஒழுக்காமாக இருப்பது எப்படி என்று மழலைத் தமிழில் மிழற்றுவார்கள் தலைமையாசிரியை. அரைகுறைத் தமிழ்த் தெரிந்த மும்பை இறக்குமதி நடிகை தமிழில் பேட்டியளிப்பது போல் நன்னடத்தையுள்ள பெண்களாக வாழ்வது எப்படி நன்மை பயக்கும் என்று ஏறு வெய்யிலில் நிற்க வைத்து அறிவுரைக் கூறுவார்கள்.தமிழ் சரியாக வராது.(சும்மா) எனக்கு முன்னால் நிற்கும் பெண்ணின் தலையில் ஊறும் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியை வேறு வழியில்லாமல் பார்த்து விட்டு கிளாஸிக்கு வரும் போதே கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்து விடும்.எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு கண்ணில் பெருமாள் தெரிந்தார். நல்ல வெய்யிலில் நின்று விட்டு தீடாரென்று இருட்டுக்கு வந்தால் மஞ்சள், ஊதா, பச்சை, நீல நிறங்களில் எல்லா சாமி தரிசனமும் கிடைக்கும். இப்படி வெயிலில் வறுபடும் வேதனையில் ப்ரேயர் பாட்டையெல்லாம் அவசர அவசரமாக ஆளுக்கு ஒரு சுருதியில் பாடி நாலா பக்கத்திலிருந்தும் டால்பி செளண்ட் இஃபெக்ட்டெல்லாம் கிடைக்கும்.

இந்த மாதிரி வெய்யிலில் நின்று சில பெண்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு போக நான்கு பெண்கள்! அவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நிற்போம். பெரிய பெண்கள் செய்யும் செட்டப்! பதினோராம் வகுப்பு படிக்கும் பெரிய பெண்கள் அன்று யார் மயங்கி விழுவது யார் தூக்கிக் கொண்டு போவது என்று ஒரு போர்த்திட்டமே தீட்டி இதை நடத்துவதாக எஸ்தர் என்ற பெண் சொன்ன போது சிரிப்பு வந்தது. மயங்கி விழற மாதிரி நடிக்கற பெண் சிரிச்சு காரியத்தை கெடுத்துட்டா ? அப்போதெல்லாம் நன்கு வளர்ந்த பெரிய பெண்ணாக இருப்பவர்கள் பதினோராம் வகுப்பு படிப்பார்கள். ஸ்கூல் சேர்க்கும் போதே லேட்டாக சேர்ப்பார்கள். இவங்க பங்குக்கு இன்னும் லேட்டாக்கி ஸ்கூல் முடிக்கும் போதே மண மேடை ஏறத் தயாராகி விடுவார்கள். ஆண்கள் படிக்கும் பள்ளியில் கூட வேஷ்டி கட்டிக் கொண்டு வரும் பெரிய ஆண்பிள்ளைகள் இருப்பார்கள். அம்மா திருத்தக் கொண்டு வரும் நோட்டு புத்தகங்களில் முதல் பக்கத்தில் பாடல் வரிகள் எழுதி வைத்திருப்பார்கள். ‘வசந்த மாளிகை ‘ படப் பாட்டுகள்தான். ‘கண்களின் தண்டனை காட்சி வழி… ‘இரண்டு மனம் வேண்டும் ‘ ‘மரணம் என்ற தூது வந்தது ‘ …. தேவதாஸ் டைப் காதல் எல்லா ஆண்களுக்கும் காதலின் உச்சக் கட்டக் கனவா ? இப்பொது கூட ஆட்டோக்களில் இதைப்போன்ற வாசகங்களைப் பார்க்கும் போது பெண்களை வெறுத்து எழுதுவதாகத் தெரியவில்லை. விரும்பி எழுதுவதாகத்தான் அவர்கள் பார்வை சொல்கிறது. ‘இந்தப் பசங்களுக்குப் படிப்பு மட்டும்தான் வராது ‘ என்று கோபத்தோடு அம்மா அந்த வரிகளை கறுப்பு மையினால் அடித்து விடுவாள்.

அது என்னவோ தெரியவில்லை. நான் போகும் வகுப்புகளுக்கு மட்டும் சரியான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடம் நிரப்பப் படாமல் காலியாக இருக்கும். இல்லை அந்த டாச்சர் தீராத வியாதியால் லாங் மெடிகல் லீவில் இருப்பார்கள். இதே போல் எழாவது வகுப்பிற்கும் தமிழ் ஆசிரியை கிடையாது. கணக்குக்கும் வர வேண்டிய டாச்சர் வரவில்லை. எனவே அந்த சிற்றன்னை டாச்சரே எல்லா வகுப்புக்கும் சும்மா கவர் பண்ண உட்கார்ந்து அவர்களுக்கும் எங்களுக்கும் பரஸ்பர வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போனது. நன்கைந்து பேர்களை ஹிட் லிஸ்ட்டில் போட்டு தினமும் ஒருவரையாவது அவமானப் படுத்துவதை பெரிய பொழுது போக்கு மாதிரி செய்து கொண்டிருந்தாள். சிவப்பு ரோஜாக்கள் கமலுக்கு கூட ஒத்தாசையாய் இன்னும் ரெண்டு கிறுக்குகள் சேர்ந்து கொண்ட மாதிரி இவங்களுக்கு உதவியாய் இரண்டு கிளாஸ்மேட்ஸ்! மாமியார்க் கொடுமையோடு நாத்தானார்க் கொடுமையும் சேர்ந்து கொண்டது போல இந்த ரெண்டு குட்டி தெய்வங்களும் நாங்க என்னிக்கு எந்த புத்தகத்தை மறந்து போய் கொண்டு வராமல் இருந்து விட்டால் உடனே போய் சொல்லி விடுவார்கள். ரொம்ப நியாயாமாய் நடந்து கொள்கிறார்களாம். குரூப் லீடர் என்ற பெயரில் வேறு கொடுமைகள்! சே! அதிகமாகத் திட்டக் கூட முடியவில்லை. நெருங்கிய தோழியாய் பழகி விட்டாள். சினிமாவில் பெரிய அடிதடிக்கு அப்புறம் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆற மாதிரி அப்போது வில்லிகளாகத் தெரிந்தவர்களெல்லாம் ‘விதியின் கைப்பாவைகளாகி உன்னை ஆட்டி படைத்து விட்டோம் ‘ என்று பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிறகு பெருந்தன்மையாகப் போவதைத் தவிர வேறு வழி ? மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி ?

எனக்குப் பக்கத்தில் ராணி கிரிஜா என்ற மலையாளப் பெண்குட்டி. நிஜமாகவே குட்டியாகத்தான் இருப்பாள். அவளும் ஏழாம் கிளாஸில் வந்து சேர்ந்த ஹிட் லிஸ்ட் விக்டிம்!இருவரும் ஒடுக்கப் பட்டவர்கள் என்ற ஒற்றுமையினால் இணைந்தோம். அந்த டாச்சருக்கு யாராவது தலைக்கு குளித்து விட்டு லூசாகப் பின்னிக் கொண்டு வந்தால் ‘அருள் ‘ வந்து விடும். இந்தப் பெண் எப்போது பார்த்தாலும் தலைக்கு குளித்து விட்டு வருவாள். தலை காய்ந்து இறுக்கிப் பின்னிக் கொள்ளும் வரை வகுப்புக்குள் நுழைய முடியாது. வெளியில் தான் நிற்க வேண்டும். தினமும் அவளுக்குக் தண்டனை. போதாக் குறைக்கு சபரி மலை போவதற்கு மாலை போட்டுக் கொண்டு வந்து விட்டாள். அந்த மாலையை கழட்டினால்தான் கிளாஸிக்குள் விடுவேன் என்று டாச்சர் மிரட்ட விம்மி விம்மி அவள் அழுததை வேடிக்கைத்தான் பார்க்க முடிந்தது. ஒரு பன்னெண்டு வயதுக் குழந்தை மீது ஐம்பது வயது பெரியவங்களுக்கு அப்படி என்ன ஆத்திரம் ? அந்தக் கிரிஸ்டியன் டாச்சருக்குத்தான் இதைப் பற்றியெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஊர் வம்பெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் யாராவது அந்த டாச்சரிடம் சொல்லியிருக்கலாம். நான்தான் கிட்ட போகவே முடியாது.போனால் பாம்பு போல் சீறுவாள்.உண்மையிலேயே சிவப்பு ரோஜக்கள் ஹீரோ மாதிரி நான்தான் சைக்கோபத் ஆகியிருக்க வேண்டும். டாச்சர்களைக் கண்டால்…. கொலை வெறியுடன் அலையும் சைக்கோபத். அப்படி கொலை செய்தால் தண்டனை கூட கிடையாதுதானே! ரொம்ப நாட்களுக்கு அந்த டாச்சர் போட்டுக் கொண்டிருந்த பவுடர் வாசனையை எங்காவது உணர்ந்தாலே மூட் அவுட் ஆகிவிடும். சிறுமைக் கண்டு பொங்குவதெல்லாம் பெண்களுக்கு கிடையாதே! நம்பத் திட்டு வாங்காம தப்பித்தால் போதும்ங்கற எண்ணம்தான் எல்லோருக்கும் இருந்தது.

இப்போது கூட நன்கு படித்த பெண்கள் பாரதியின் கனவுப் பெண்கள் தனக்கு நல்லது நடந்தால் போதும் அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் சுயநலவாதிகள். சிறுமைக்கண்டு பொங்குவதெல்லாம் கிடையாது. நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் குணம்தான் இருக்கிறது. இதற்குக் காரணமும் நாம்தான்! உனக்கு எதுக்கு வம்பு ? கெட்ட பேர் வந்தா என்று பயமுறுத்தி வளர்ப்பதுதான்.

திட்டுவது, அடிப்பது என்பது வேறு. துன்புறுத்துவது என்பது வேறு. இதுவே பெண்களுக்குச் சற்று சென்ஸிடிவ் விஷயம். நன்றாகத் தெரிந்த விஷயங்களை கூட செய்ய விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே வந்தால்… நன்றாகத் தெரிந்த தமிழ்க் கூட காலை வாரி விடும். பி யி கிளாஸிக்கு அனுப்ப மாட்டாள். உட்கார்ந்து படிக்க வேண்டும். இதனால் அந்த குரூப் லீடரும் போக முடியாது. தப்பு தப்பாக தமிழும், கணக்கும் சொல்லிக் கொடுத்தால் சும்மாயிருக்க முடியுமா ? நாங்களும் நல்லா படிக்கிறவங்கதானே! அப்படியில்லை இப்படித்தான் என்று சொன்னால் உடனே அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவங்க எல்லோரும் என்னை மதிப்பதில்லை என்று கோள் சொல்லி எல்லாம் நேரக் கொடுமைதான்! வாயை மூடிக் கொண்டு சும்மாயிருந்தாலும் திட்டு. மற்ற டாச்சர்ஸ் எதாவது கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூப்பிட்டால் ஸ்கூலுக்கு எதுக்கு வர்றே ? இதமாதிரி

ஆட்டம் போடவாங்க்ற மாதிரி ஒரு பார்வை. இதுங்கள்ளாம் எதுக்கு ஸ்கூலுக்கு வந்து அப்படின்னு எதோ மந்திரம் ஜெபிப்பது போல் உள்ளுக்குள் புலம்பி

நாடகமெல்லாம் கண்டேன் உன் ஆடும் விழியிலே!

மாத்ஸ், ஹிஸ்டரி, ஜியாகரஃபி, தமிழ் இப்படி ஏதாவது சப்ஜெக்ட்டுக்காவது வேற டாச்சர் வந்து இவங்கக் கிட்டேந்து தப்பிக்கலாம்னு பாத்தா நாள் முழுக்க அவங்க எங்க முகத்திலும், நாங்க அவங்க முகத்திலும் முழிப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. அந்த டாச்சர் என்னிக்காவது வராமா இருக்க மாட்டாங்களா ? இல்லே வரும் வழியில் எதாவது…. வேணாம் குருவை நிந்தித்த பழி பாவத்திற்கு ஆளாக வேண்டாம். நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். சாதாரண எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள் என்று யாரோ சொன்னது போல (யார் சொன்னது ?) நல்ல குணம் படைத்த அருமையான ஆசிரியர்கள் நீண்ட மருத்துவ விடுப்பில் போவதும் இதைப் போன்ற ஆசிரியர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருந்து வதைப்பதும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று! இங்கிலிஷ் கிளாஸ் மட்டும் நடக்கும். மிச்ச நேரமெல்லாம் கேள்வி பதில் எழுதக் குறித்துக் கொடுத்து விட்டு சும்மாதான் உட்கார்ந்திருப்பாங்க. ஒண்ணுமே இல்லேன்னா மேப் டிராயிங் நோட்டில் கலர் பண்ணச் சொல்லிடுவாங்க! இவங்களும் தையல் சொல்லித்தர டாச்சரும் நெருங்கிய தோழிகள். அதனாலே தையல் வேலையை செய்ய அனுமதி உண்டு. ஜீஸஸ் பத்தின பாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்து மகிழ்வாங்க!இவங்களோட கடுகடுப்புலேந்து தப்பிக்க ஏழுகடல், ஏழுமலைத் தாண்டத் தயாராக இருந்த எனக்கு இந்த ஜீஸஸ் பாட்டெல்லாம் பெரிய பிரச்சனையாகவே இல்லை. யார் சொன்னது ஜீஸஸ் காப்பாற்ற மாட்டார் என்று! ஜீஸஸ்தான் என்னைக் கொஞ்சமாவது இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றினார். ‘சைலண்ட் நைட் ஹோலி நைட் ‘ ‘ஜிங்கில் பெல்ஸ் ‘ ‘ஜீஸஸ் சேவ்ஸ் யூ ‘ பொன்ற பாட்டுக்கள். இதில் பிரபலமான பாட்டு அந்த வருடத்து எங்கள் சாய்ஸ் பாட்டு ‘வாட்ச் யுவர் ஐஸ் வாட்ச் யுவர் ஐஸ் வாட் தே சீ ‘ ஐ ஹாவ் டிசைடட் டு ஃபாலோ ஜீஸஸ் ‘ என்ற இரண்டு பாடல்கள்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எங்களை மதம் மாற்றும் முயற்சியில் இருப்பதாகத் தோன்றாது. எதோ நர்ஸரி ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பதாகத்தான் தோன்றும்.

அடுத்த தற்காலிகத் தப்பித்தல் பக்கத்துலே இருந்த பல்கலைக்கழகத்தால் வந்தது. பெரிய கலாட்டா நடந்து எங்க ஊர் ஸ்கூல் எல்லாவற்றையும் மூடச் சொல்லிட்டாங்க! அப்பாடா! ஒரு மாதமாவது தப்பித்தோம்! அந்த பல்கலைக் கழகத்தில் எப்போது வகுப்பு நடக்கும் ? பரீட்சை நடக்கும் என்பது யாருக்கும் புரியாது.ஆனால் எப்போதும் ஸ்ட்ரைக் நடக்கும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ‘நாளைக்கு காலேஜ் திறந்துடராங்க! இதோ இப்ப ஒரு மாசம் பாம்பே கிளம்பிட்டு இருக்கேன்! ‘என்று விடுமுறைப் போவதற்கு திட்டம் போடுவார்கள். ‘நாளைக்கு கிளாஸ் போக வேண்டாமா ? என்று ஆச்சரியப் பட்டுக் கேட்க வேண்டாம். கிளாஸ் ஒரு நாள்தான் இருக்கும். அப்புறம் ஒரு மாசம் லீவுதான் ‘ என்று குறி சொல்லி விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த யுனிவர்சிடி இந்த பிஏ பிஎஸ்ஸி பிடுங்கலே வேண்டாம் என்று இளங்கலைப் படிப்பையெல்லாம் மூடி விட்டு இப்பொது முதுகலைப் படிப்பு மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது.

முதல் டெஸ்ட் மார்க் பாத்துட்டு வெலவெலத்துப் போச்சு! சரி அடுத்த முறை எப்பாடு பட்டாவது மனப்பாடம் செய்து எழுதி விடலாம் என்ற நம்பிக்கையில் மனம் தளராத விக்கிரமாதித்யனாய் நான் இருந்தாலும் வேதாளம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்ததே!அது சரி தமிழ் உட்பட எல்லாவற்றிலும் எப்படி கேவலமாக மார்க் வாங்க முடிந்தது ? தமிழ் டெஸ்ட்டுக்கு ‘எங்கள் பள்ளி ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை! டெஸ்ட் வைப்பதே பாடங்களையெல்லாம் ஒழுங்காகப் படிக்கிறோமா ? என்பதை டெஸ்ட் செய்வதற்குத்தான்! ஆனா எந்த லாஜிக்கும் எடுபடாத இடம் ஆயிற்றே! டெஸ்ட்டுக்கு கட்டுரை எழுதச் சொன்னது கூடத் தப்பில்லை. ஏற்கெனவே கிளாஸில் எழுதி போடப் பட்ட கட்டுரை. அதற்கு 30 மார்க். அதை அப்படியே படித்து வார்த்தை மாறாமல் முத்து முத்தாக எழுதியவர்கள் தப்பித்தார்கள். நான்தான் அதி புத்திசாலி ஆயிற்றே! இந்த சூட்சுமம் தெரியாமல் சொந்தமாக ‘எங்கள் பள்ளி ‘ எழுதியதால் வந்த வினை. இரண்டு பகக்ங்களையும் அடித்து விட்டு மீசை முளைத்த மதிப்பெண். பன்மையில் கூட எழுத மனமில்லை. அவங்க சொன்னதை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தப்புத்தான் என்று இதை ஒப்புக் கொண்டால் கூட தமிழ் மீடியம் வகுப்புக்கு உபயோகப் படுத்தும் அதே ஆங்கிலப் புத்தகம்தான்! இதில் எப்படித் தோல்வியடைய முடியும் என்ற மர்மத்திற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை! இரண்டே வருடங்களில் மொத்த வகுப்பும் என் கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் முதல் விசிறிகள் ஆகி விட்டார்கள்! அதற்குக் காரணம் என் தமிழாசிரியைதான். என் கட்டுரைகளை சத்தமாகப் படித்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் முதல் மார்க் மட்டும் போடவே மாட்டார்கள். நன்றாகப் படிப்பது என்பது வேறு! நல்ல மதிப்பெண்கள் வாங்குவது என்பது வேறு! அப்படித்தானே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்