மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சொதப்பப்பா


மூன் டிவியில் நடந்திருக்கக்கூடிய கற்பனை கலந்துரையாடல் முழுக்க முழுக்க கற்பனையான கற்பனை உரையாடல். (இந்த வரியை எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. உரையாடலில் தெரியும் அது)

பம்பம்பம்… வலைஞர் உங்களோடு பேசுகிறார்

வலைஞர் வலைஞர் வலைஞர்….

பம்பம்பம்….

வாலன் : அன்பர்களே நண்பர்களே. உடன்பிறக்காத உடன் பிறப்புக்களே. உங்கள் கேள்விகளுக்கு வலைஞர் பதிலளிக்க இசைந்துள்ளார். கேள்விகளைக் கேட்கும் முன்னர் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியைக் குறைத்துவிட்டுக் கேளுங்கள், இல்லையென்றால் நீங்கள் பேசுவது எங்களுக்குக் கேட்காது.

வாலன் எழுந்து நின்று வலைஞரை வரவேற்கிறார். தோளில் இருந்த துண்டை எடுத்து கட்கத்தில் வைத்துக் குனிந்து நின்று ‘வாங்கய்யா வாங்கய்யா ‘ என்று வரவேற்கிறார்.

வலைஞர் வாலனை ஆசீர்வதிக்கும் கருணைப்பார்வை பார்த்து உட்காரும்படி சமிக்ஞை காட்டுகிறார்.

வாலன் முகம்

வலைஞர் முகம்

வாலன் முகம்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்

வாலன் ‘ஆரம்பிக்கலாங்களா அய்யா ‘

வலைஞர் ‘ஆரம்பிக்கலாம் ‘

வாலன் : ஹலோ

தொலைபேசிக் குரல் ஹலோ

வாலன் ஹலோ

தொலைபேசிக்குரல் ஹலோ

வாலன் ஹலோ

தொலைபேசிக்குரல் ஹலோ யார் பேசறது ?

வாலன் ஹலோ யார் பேசறது ?

தொலைபேசிக்குரல் : நாந்தான் குமார், கொருக்குப்பேட்டையிலேர்ந்து பேசறேன்.

வாலன் வலைஞரிடம் : குமார் கொருக்குப்பேட்டையிலேர்ந்து பேசறார்

வலைஞர் பேசட்டும் பேசட்டும்

வாலன் குமார் நீங்க கொருக்குப்பேட்டையிலேர்ந்து பேசறீங்களா ?

குரல்: ஆமாம் நான் குமார் கொருக்குப்பேட்டையிலேர்ந்து பேசறேன்.

வாலன் நம்மிடம் திரும்பி : குமார் கொருக்குப்பேட்டையிலேர்ந்து பேசறார்.

வாலன் : குமார் கேள்வியைக் கேளுங்கள்

குரல்: நான் வலைஞரிடம் பேசணும்

வாலன் பேசுங்க

குரல் நான் வலைஞரிடம் பேசணும்

வலைஞர் : பேசுங்க பேசுங்க

குரல் அய்யா வணக்கமுங்க.

வாலன்: உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை குறைத்துவிட்டுப் பேசுங்கள்.

குரல் அய்யா வணக்கமுங்க

வாலன்: குமார், உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை குறைத்துவிட்டுப் பேசுங்கள்.

குரல் அய்யா வணக்கமுங்க

வாலன்: குமார், குமார், உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை குறைத்துவிட்டுப் பேசுங்கள். இல்லையெனில் நீங்கள் பேசுவது எங்களுக்குக் கேட்காது.

குரல் அய்யா வணக்கமுங்க

வலைஞர் : வணக்கம் வணக்கம்..

குரல் : அய்யா, இந்த தேர்தல்ல நீங்க ஜெயிச்சீங்கண்ணா, இந்த எலக்டிரிசிட்டி கட்டணத்தை குறைத்துவிடுவீர்களா ?

வலைஞர் : குறைப்போம்

வாலன்: ஹி ஹி.. இப்ப எலக்ட்டிரிசிட்டி பில்ல தொட்டாவே ஷாக் அடிக்குதுங்க… ஹி ஹி…

இதனை படம்பிடிக்கும் காமெராக்காரர் முனகுகிறார். தேர்தல் தமிழகத்து ஆட்சிக்கா நடக்குது ? மத்திய அரசு ஆட்சியில் காங்கிரஸே வந்தாலும் எப்படி தமிழ்நாட்டு மின்சார கட்டணத்தை குறைக்கமுடியும் ?

வாலன் அடுத்த உடன்பிறப்போடு பேசுவோமா ?

வாலன் ஹலோ ….

குரல் ஹலோ

வாலன் ஹலோ

குரல் ஹலோ

வாலன்: உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை குறைத்துவிட்டுப் பேசுங்கள்.

பெண் குரல் அய்யா வணக்கமுங்க

வாலன்: உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை குறைத்துவிட்டுப் பேசுங்கள்.

பெண் குரல் அய்யா வணக்கமுங்க

வாலன்: நீங்க யார் பேசறது ?

பெண்குரல்: துபாய்ல இருந்து மல்லிகா பேசறேங்க

வாலன்: ஹி ஹி துபாய்ல இருந்து மல்லிகா பேசறார்

வாலன் நம்மைப் பார்த்து: துபாயில் இருந்து மல்லிகா பேசுகிறார்

வாலன் கேளுங்க உங்கள் கேள்வியை

பெண்குரல்: ரொம்பத் தண்ணி கஷ்டமுங்க. நீங்க ஆட்சிக்கு வந்தா தண்ணிக் கஷ்டத்தை போக்கிடுவீங்களா

வலைஞர்: தண்ணீர் கஷ்டத்தைப் போக்குவோம்

வாலன்: ஹி ஹி தண்ணிக்கஷ்டத்தை நினைச்சாவே தண்ணில முழுகுறாப்போல இருக்குங்க

வலைஞர்: இப்போது வீராணம் திட்டம் என்ற ஒன்றை பேசுக்கொண்டிருக்கிறார் பாட்டியார். இதனை முதலில் பேசியவர் அண்ணா. பிறகு நான் பேசினேன். அப்போதே இது உதவாது என்று தெரிந்தும் குழாய்கள் எல்லாம் போட்டோம். இப்போது பாட்டியார் பேசுகிறார். இதில் எத்தனை குழாய்கள் இவர் போடப்போகிறாரோ தெரியாது. என் மகன் லெனின் ஆட்சிக்கு வந்துதான் இந்த திட்டத்துக்குக் இன்னும் கொஞ்சம் குழாய்கள் போட்டு பின்னர் நிரந்தரமாக கைவிடப்படப்போகிறது என்று நினைக்கிறேன்.

காமிராக்காரர் முனகுகிறார்: துபாய்ல தண்ணிக்கஷ்டத்துக்கு இந்தியாவில் சோனியா பிரதமராகி என்ன பண்ணமுடியும் ? ம்ம்ம்… எவன் கேக்கப் போறான்

வாலன் : அடுத்த நபரைப் பார்ப்போம்

வாலன் ஹலோ

குரல் ஹலோ

வாலன் ஹலோ யார் பேசறது ?

குரல்: நாந்தான் பேசறேங்க

வாலன் உங்க பெயர் என்ன ? எந்த ஊரில இருந்து பேசறீங்க ?

குரல்: நான் பூனாவிலேர்ந்து பொங்கல்சாமி பேசறேன். அப்ப அந்தக் காலத்தில….

வாலன் : பூனாவிலேயிருந்து பொங்கல்சாமி பேசுகிறார். உங்கள் கேள்வி என்ன ?

குரல்: அய்யா வணக்கமுங்க. நீங்க காமராஜர், பெரியார் அண்ணா போல பெரிய தலைவர்களோட அரசியலுக்கு வந்தீங்க. அப்ப இருந்த அரசியலுக்கும் இப்ப இருக்கிற அரசியலுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்கிறீங்க ?

வலைஞர்: அப்போது அரசியல் தெளிந்த நீரோடை போல இருந்தது. இன்று குழம்பிய குட்டையாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கியவன் நான் என்ற பெருமிதம் எனக்கு என்றுமே உண்டு.

வாலன்: அடுத்த நபரைப் பார்ப்போம் ஹலோ

குரல் ஹலோ

வாலன்: யார் பேசுறீங்க ? உங்க பெயர் என்ன ? ஊர் என்ன ?

குரல்: நான் சோனாப்பேட்டையிலேர்ந்து சுந்தரி பேசறேன். வலைஞர் இருக்காருங்களா ?

வலைஞர். வணக்கம். சொல்லுங்க

வாலன்: சோனாப்பேட்டையிலிருந்து சுந்தரி பேசுகிறார்

குரல்: அது வந்துங்க. என்னமோ இந்தியா ஒளிருது குளிருதுன்றாங்களே. அது ஒளிருதா இல்ல ஒழியுதா ? நீங்க இன்னா சொல்றீங்க ?

வலைஞர்: முதலில் அமங்கலமாகப் பேசக்கூடாது. ஒளிருது என்பது போன்ற அமங்கல வார்த்தைகளைப் பேசாமல், ‘சாவு ‘, ‘ஒழிந்து போ ‘, ‘சாவுக்கிராக்கி ‘ சரஸ்வதி உன் நாக்கில் பாத்ரூமா போறாள் ? போன்ற மங்கலகரமான வார்த்தைகளையே பேசி பெரியாரின் வழியில் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒளிருது போன்ற அமங்கலமான வார்த்தைகளை, எங்களோடு கூட்டணியில் இருந்து கொண்டே பேசியது ஒன்றே பாரதிய ஜனதா கட்சிக்கு கூட்டணி தர்மம் தெரியவில்லை என்பதற்கு உதாரணம். கடந்த நான்கு வருடங்களாக மாறன் தலைமையில் திமுக மத்திய அரசில் இருந்து இந்தியா ஒளிராமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குத் தெரியாதா ? இந்தியா ஒளிராமல் பார்த்துக்கொண்டதில் எங்களது பங்கு மிகப்பெரியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆகவே இந்தியா ஒளிரவில்லை. அது சும்மா தேர்தல் பிரச்சாரம். இந்தியா ஒளிராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்ததுபோலவே இந்த முறையும் திமுகவுக்கு வாக்களியுங்கள். நாங்கள் மீதத்தைப் பார்த்துக்கொள்கிறோம்.

வாலன்: ஆமா ஆமா ஐயா எனக்கு ஒரு கேள்வி

வலைஞர்: கேளுங்க

வாலன்: பத்திரிக்கையாளர்கள் மீது இந்த அரசில் ஏராளமாக அவதூறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பத்திரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்கள் மீது அவதூறு வழக்குகள் போடலாமே தவிர அரசு எழுத்தாளர்கள் மீது போடுவது சரியா ? இந்தக் கேள்வியை நானும் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் கேட்கிறேன்.

வலைஞர்: அவதூறு வழக்குகள்போடுவது தவறல்ல. ஒரு சில கெடுமதியினர் வேண்டுமென்றே பொய்களைத் திரித்து மேலும் பெரும் பொய்களாக்கி அவற்றைக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம். உண்மையை எழுதும் எழுத்தாளர்கள் மீதுதான் வழக்குப் போடக்கூடாது. அதனைத்தான் இந்த அரசு செய்துவருகிறது. நாங்கள் அரசுக்கு வந்தால் யார் உண்மை எழுதுகிறார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது இருக்கும் வழக்குக்களை நீக்கி யார் பொய் எழுதுகிறார்கள் என்று கண்டறிந்து அவர்கள் மீது கடும் அவதூறு வழக்குக்களைப் போடுவோம். அதாவது திமுக ஆதரவாக எழுதும் எழுத்தாளர்கள் மீது இருக்கும் வழக்குகள் நீக்கப்பட்டு அதிமுக மற்றும் இதர எதிர்க்கட்சிகள், அன்றைய தேதி எதிர்க்கட்சிகள் ஆதரவாக எழுதும் எழுத்தாளர்கள், திமுகவைக் கிண்டலடிப்பவர்கள் மீது வழக்குக்கள் போடப்படும்.

(இப்போது தெரிகிறதா ஏன் இந்த கலந்துரையாடல் முழுக்க முழுக்க உண்மை கலக்காத கற்பனை என்று முன்பே சொன்னேன் என்று ? – சொ)

வாலன்: அடுத்து தொலைபேசியைப் பார்ப்போம்… ஹல்லோ

குரல்: ஹலோ

வாலன்: உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் இருக்கும் ஒலியளவை குறைத்துவிடுங்கள். யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேண்டும் ?

வலைஞர் (வாலனின் பக்கம் குனிந்து) கொஞ்ச நேரம்தான் என்னோட பேசிக்கிட்டிருக்கீங்க அதுக்குள்ளயே அதிகாரத் தோரணை வந்துடுச்சே பலே பலே

வாலன்: ஹி ஹி ஹலோ சொல்லுங்க

குரல்: அய்யா இந்த அற்புதத்தை நீங்கள் கேட்டே ஆக வேண்டும்.

வாலன் : அற்புதமா அது என்ன ? வலைஞரின் ஆட்சி இல்லாத்போது எப்படி அற்புதம் நடக்க முடியும் ?

குரல் : என் மனைவி ஆறுமாதக் கர்ப்பமாய் இருக்கிறார். ஒரு நண்பர் வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் என்றெல்லாம் உங்களைப் பற்றிப் பேசாமல், உங்கள் அம்மாவும் அப்பாவும் உங்களுக்கு வைத்த பெயரைச் சொன்னார். எங்களுக்கு எல்லாம் ஒரே கோபம் . திடாரென்று என் மனைவியின் வயிற்றிலிருந்து ஒரு குரல். ‘வலைஞரின் அப்பா அம்மா வைத்த பெயரைச் சொல்லி வலைஞரை அவமதிக்கிறாயா ? செருப்பால் உன்னை அடித்துக் கடாசிவிடுவேன் ‘ என்று ஒரு குரல் எல்லோரும் திடுக்கிட்டுப் போய்விட்டோம். ஒரு கணம் எங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஆகா அற்புதம் அய்யா. பிறவாத குழந்தையையும் பேச வைத்த எம்பெருமானார் நீங்கள்.

வலைஞர் : ஆகா! அண்ணாவின் ஆவி நிகழ்த்திய அற்புதம் தான் இது.

வாலன் : இல்லை அய்யா, இது அண்ணாவின் ஆவியும் பெரியாரின் ஆவியும் இணைந்து நிகழ்த்திய அற்புதம் போலிருக்கிறது.

வலைஞர்: உண்மை. இந்த மங்கலகரமான கேள்வியுடன் பேட்டியை முடித்துக் கொள்ளலாமே. வயிற்றுக்குள் இருக்கும் கழகக் கண்மணிக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

வாலன்: இத்துடன் இந்த கலந்துரையாடல் முடிவடைகிறது. அனைவருக்கும் வணக்கம். வலைஞர் கூட்டணிக்கு வாக்களித்து எங்களுக்கெல்லாம் வாழ்க்கை அளியுங்கள். நன்றி

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா