ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சித்ரா ரமேஷ் , சிங்கப்பூர்


பிழைத்தவன் தப்பித்தவன் இல்லை.இதுதான் ‘சர்வைவர் ‘ என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடப்பது.

நயவஞ்சகம், குழி பறித்தல், கட்சி மாறுதல், திட்டமிட்டு முதுகில் குத்துதல், பழி வாங்குதல்…. நம்மூர் அரசியல் கட்சிகளின் நிலையை பற்றியோ இல்லை நம் மெகா சீரியல்களின் குறிக்கோளையோ குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். ‘தப்பிப் பிழைப்பவன் ‘ நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெரும் சம்பவங்கள்தான் இவை.

சரி இதற்கு முன்னால் ஜோவின் கதையைப் பார்ப்போம்.ஜோ 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஐரோப்பா சாகச வீரன் போல வீர சாகசங்கள் செய்து தன் தோழி ஜேனுக்கு வினோதப் பரிசுகள் கொண்டு வந்து தருவான்.அமேசான் நதியில் கிடைத்த முத்து, ஆப்பிரிக்க காடுகளில் கிடைத்த காண்டாமிருகக் கொம்பு என்று கொடுத்து தன் வீர தீரப்பிரதாபங்களை அளப்பான். அந்த முறையும் வடதுருவம் போய் பனிக்கரடியோடு சண்டை போட்டதாக பெருமைப் பட்டுக் கொண்டான். பென்குவின் முட்டையை பரிசளித்தான். ஜேனுக்கு வெறுத்துப் போய் விட்டது. அந்த முட்டையை அவன் முகத்திலேயே வீசி எறிந்தாள். ஏன் ? விடை கடைசியில்.

நம் தப்பி பிழைப்பவன் கதைக்குப் போவோம்.பதினாறு பேர் தேர்ந்தெடுக்கபட்டு மிகக் குறைந்த அளவு உணவு,உடையுடன் ஆளரவமற்ற ஆப்பிரிக்கக் காடுகளுக்கோ, பசிபிக் தீவுகளுக்கோ அனுப்பப்படுவார்கள்.

முப்பத்தியொன்பது நாட்களில் ஒவ்வொருவராக கழித்துகட்டப் பட்டு இறுதியில் மிச்சமிருப்பவரே ‘சர்வைவர் ‘.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை நடுவர் வந்து வாக்களிப்பு நடத்தி ஒருவரை காடு அல்லது தீவு கடத்துவார்.வாக்களித்து தங்களுக்குள் ஒருவரை வெளியேற்றும் போதுதான் மனித மனத்தின் அழுக்கான மற்றொரு பக்கம் வெளிப்படும்.

குளிப்பதில்லை, ரொம்ப அழுக்காக இருக்கிறாள், ரொம்ப சுயநலவாதி, எரிச்சலை கிளப்புகிறான்,

ரொம்ப அதிகாரம் செய்கிறான், எங்களுடன் ஒத்துழைப்பது இல்லை, நிர்வாணமாகத் திரிகிறான்(!) முத்தமிட முயற்சி செய்தான் இப்படி ஏதேனும் காரணம் சொல்லி ஒருவரை ஆட்டத்திலிருந்து விலக்கி விடுவார்கள்.ஏதாவது வீர விளையாட்டில் வெற்றி பெற்றிருந்தால்

‘பாதுகாப்பு வளையம் ‘ கிடைக்கும். அந்த முறை வாக்களிப்பில் தப்பிக்கலாம். இப்படியே 39 நாட்களும் ஒருவரை ஒருவரை குழி பறித்துக் கொண்டேபோய் கடைசியில் மிஞ்சுபவரே ‘பிழைத்தவர் ‘.

நம் மெகா சீரியலில் மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார், சகலை, ஓரகத்தி, பாட்டி, தாத்தா, அண்ணன், அண்ணி, சித்தி, சித்தப்பா,மாமா, அக்கா, தங்கை, தம்பி, சக்களத்தி, அப்பா, அம்மா உட்பட உறவுகளுமே கண்களை உருட்டிக் கொண்டு பண்ணுகிற அத்தனை வில்லத்தனமும் இங்கே நடக்கும். இதையும் மீறி ஒரு சுவையான அனுபவத்தை பார்த்து ரசிக்கின்ற மனோபாவம் வந்து விடும்.

தப்பிப் பிழைத்தவனுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா ? ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர். ராஜா ஹரிச்சந்த்ரா கூட காசி தேசம்,சந்த்ரமதி,லோகிதாசன் எல்லாம் துறந்து ‘தப்பிப் பிழைத்தவனுக்கு ‘ இல்லை கோக்கோ கோலா, பெப்சி விளம்பரப் படங்களில் நடிக்க வந்து விடுவார். (சூர்யாவுக்கு இரண்டு கோடி! உண்மையா ?)

இறுதியாக ஒரு சிந்தனை. சராசரி அம்மாவாக நல்ல பெண்ணாக இரு என்று என் பெண்ணுக்கு புத்திமதி சொன்னால் நல்லவளாக இருப்பதன் அபத்தங்களைச் சொல்லி ‘மகாநதி ‘ கமலஹாசன் பாணியில் ஒரு நல்லவனுக்கு கிடைக்கும் அத்தனை மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்கும் போது எதற்கு கஷ்டப்பட்டு ‘நல்லவளாக ‘ இருக்க வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கிறாள். எல்லாவற்றிற்கும் மூளையை உபயோகிக்காமல் கொஞ்சம் மனதையும் பயன் படுத்தினால் புரியும்….

விடை: அடுத்த வாரம் (எழுதினால்) அதுவரை முழுபரீட்சை முடிந்தாலும் பரவாயில்லை உங்க அறிவியல் புத்தகத்தை புரட்டிப் பார்க்கவும். வேறு எதாவது ஒரு தொடர் என்னிடம் சிக்காமலாப் போகும் ? அதுவரை தொடரும்….

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்