மா ‘வடு ‘

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

மாது


=======

அப்போது, மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை

பெட்டி தூக்கும் மத்திய அரசு வேலையாதலால், அப்பாவிற்கு கோவை வாசம்.

வருடத்திற்கு ஒரிரு முறை விடுமுறைகளில் கோவை பயணம். கோடை விடுமுறையாக

இருந்தால் ‘மறக்காம மாவடு வாங்கிட்டு வா ‘ என்று அம்மாவின் கடிதம் வந்திருக்கும்.

காய்கறி வாங்குவதில் எனக்கு அவ்வளவு சூட்டிகை இல்லை என்று அம்மாவிற்கு

நம்பிக்கை. ‘மயிலு மாமவ கூட்டிட்டு போய் வாங்கித் தர சொல்லு ‘ என்று

எழுதியிருப்பாள். மயில்சாமி மாமா எங்கள் அப்பாவின் நண்பர். வாரம் ஒரு முறை விடுதி

உணவிலிருந்து எனக்கு விடுதலை அளிப்பவர்.

கோடை விடுமுறை விட்ட நாளன்று நேராக மயிலு மாமா வீட்டிற்கு சென்று விடுவேன்.

அடுத்த நாள் விடியற் காலை பைக்கில் என்னை ஏற்றிக் கொண்டு மார்க்கெட்டிற்கு

செல்வார் மாமா. அவருக்கென்று ஒரு வாடிக்கை கடை இருக்கிறது. மூட்டை

மூட்டையாக மாவடு வைக்கப் பட்டிருக்கும். நாங்கள் கொண்டு சென்ற அழுக்கு நிறப்

பையில் மாவடு நிரப்பிக் கொண்டு திரும்பி வருவோம். மாமா வீட்டிற்கு வந்தவுடன்

துணிப் பையை மற்றொரு தோள் பைக்குள் வைத்து மறைத்துக் கொள்வேன். தூக்கிச்

செல்வதற்கு இலகுவாக இருக்கும் என்றா அல்லது துணிப்பை தூக்கிச் செல்வது

கேவலம் என்று நினைத்ததாலா தெரியவில்லை (இரண்டாவது காரணமாகத்தான்

இருக்கும்).

இரவு என்னை கோவைப் பேருந்தில் ஏற்றிவிடுவார் மாமா. பேருந்து நகர

ஆரம்பித்தவுடன் சக பயணிகளில் சிலர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பார்கள். ஒரு

சிலர், ‘என்ன தம்பி வடு வாங்கிட்டு போறீங்களா ‘ என்று வாய்விட்டு கேட்டு

விடுவார்கள். அப்போதுதான் மதுரை மலை வடுவின் பெருமை எனக்குப் புரியும்.

பேருந்தைத் தூக்கும் வாசனை. விடுமுறை முடிந்து மதுரை திரும்பும் போது, என்

மூட்டைகளுடன் இரண்டு ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மாவடு ஊறுகாய்களைச்

சேர்த்திருப்பாள் அம்மா – மாமா வீட்டிற்கு ஒன்று எனக்கு ஒன்று.

இப்போது, அமெரிக்க வாசம். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்தியா பயணம்.

போன வருடம் சென்ற போது மதுரை செல்ல முடிந்தது. மயிலு மாமாவிற்கு

வயதாகிவிட்டாலும் பைக் ஓட்டுகிறார். ‘வாங்க மாமா மார்க்கெட்டுக்குப் போகலாம் ‘

என்று என் காரில் மாமாவை ஏற்றிக்கொண்டு சென்றேன். வாடிக்கையான கடைக்கே

சென்றார் மாமா. மாவடு இல்லை, மா வத்தல் தான் இருந்தது. ‘நல்ல வடுவெல்லாம்

ஊறுகா கம்பெனிக் காரங்களுக்கு போயிடுது தம்பி எங்களுக்கு கிடைக்கறதெல்லாம்

இதுதான் ‘ என்று காரணம் சொன்னார் கடைக்காரர். மாவடு இல்லாமல் சென்னை

திரும்பினோம் (அப்பா இப்போது சென்னையில்). அமெரிக்கா திரும்பும்போது, எவ்வளவு

சொல்லியும் கேட்காமல், ஒரு ஸ்ரீபெட் பிளாஸ்டிக் டப்பாவில் எலுமிச்சை ஊறுகாய்

கட்டிக் கொடுத்தால் அம்மா.

இன்று, அமெரிக்காவில் சன் டாவி பார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒரு பெண்மணி

அழுது கொண்டிருந்தாள். அழுகைக்கு இடையே பளிச்சென்று ஒரு தேங்காய்

எண்ணெய் விளம்பரம். ‘என்னப்பா ஒரு தேங்கா கூட காணோம், அவ்வளவும் வித்து

போச்சா ‘ என்ற மகளின் கேள்விக்கு, ‘இல்லம்மா எல்லாத் தேங்காயும் VVD காரங்க

வாங்கிகிட்டு போயிட்டாங்க ‘ என்று பெருமையுடன் பதிலளித்துக் கொண்டிருந்தார்

தேங்காய்க் கடைக்காரர்.

அடுத்த தடவை ஊருக்குப் போகும் போது அம்மாவை தேங்காய் எண்ணெயில்

தேங்காய்ச் சட்டினி செய்து தரச் சொல்லவேண்டும்.

Series Navigation

மாது

மாது