எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

லதா ராமகிருஷ்ணன்


கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன.

கடந்த 3.4.2011 அன்று சென்னை எழும்பூரிலுள்ள இக்ஸா மையத்தில் புதுப்புனல் சார்பாக வெளியீட்டு விழா நடந்தேறியது. முதலில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நூலை பூமா ஈசுவரமூர்த்தி வெளியிட கிருஷாங்கினி பெற்றுக்கொண்டார். கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி, கவிஞர் ரிஷி(யாகிய நான்!) கவிஞர் கிருஷாங்கினி ஆகியோர் துவாரகை தலைவனின் கவிதைகள் குறித்த தங்களுடைய பார்வைகளை முன்வைத்தனர். இந்தத் தொகுப்பு குறித்து பேசிய கவிஞர் பூமா ஈசுவரமூர்த்தி இந்த வருடத் துவக்கத்திலிருந்து புத்தக்ச் சந்தை வழியாக நம்பிக்கையூட்டும் கவிதைத் தொகுப்புகளைப் பெற முடிந்ததாகத் தெரிவித்தார். ஸ்ரீநேசன், பெருந்தேவி, சுகிர்தராணி, கடற்கரை என சிலருடைய கவிதைத் தொகுப்புகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியவர் துவாரகை தலைவனின் கவிதைத் தொகுப்பு நம்முடைய ’பெர்சனல் லைப்ரரி’யில் இடம்பெறத் தக்க ஒன்று’ என்றார். இந்தத் தொகுப்பு குறித்து முக்கியமாகச் சொல்லவேண்டிய விஷயம் இதில் ஆருடைய சாயலும் இல்லை; இது அரிய அம்சம் என்றார்.

துவாரகை தலைவனின் கவிதைகளில் உறவுமுறை குறித்த புகார்கள், புளகாங்கிதங்கள் அதிகமில்லை என்ற பூமா ஈசுவரமூர்த்தி வண்ணத்துப்பூச்சி, சர்ப்பம் ஆகிய பொதுப்படையான சொற்பிரயோகங்கள் இவருடைய கவிதைகளில் அதிகம் இருக்கின்றன, எனில் இப்படிப் பொதுமைப்படுத்தல் சரியல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், இரண்டாயிரம் வருடங்கள் பாரம்பரியமுள்ள தமிழில் கவிதை புனையும் போது அதிகம் பயன்படுத்தப்பட்டு நைந்துபோன சொற்களையே நாமும் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும். இது நவீன கவிதைக்கு மிகவும் இன்றியமையாத அம்சம் என்றார்.

“படிமம் இருந்தால் சமூகம் இருக்காது, இருண்மை தான் இருக்கும் என்ற குற்றச்சாட்டைஇவரும் உடைத்திருக்கிறார்”, என்று ‘உம்’இல் அழுத்தம் தந்து குறிப்பிட்ட கிருஷாங்கினி துவாரகை தலைவனின் கவிதைகளில் உள்ள சமூகப் பார்வையை எடுத்துக்காட்டினார். “படிமத்தை நமக்குள் வசப்படுத்துவது யானையைக் கட்டிப்போடுவதைப் போன்றது. ஏனெனில், படிமம் பிரம்மாண்டமானது. கயிறால் கட்டுவதும், சங்கிலியால் கட்டுவதும் நம் கையில் தான் உள்ளது. இத்தகைய நுண்மையான படிமங்களை துவாரகை தலைவன் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார் என்று தகுந்த எடுத்துக்காட்டுகளோடு சுட்டிக்காட்டினார்.

ரிஷி: துவாரகை தலைவனின் கவிதைகளில் ஒரு நுட்பமான மனமும், அதன் தேடலும், கவிஞனின் ஆழ்ந்த வாசிப்பும் புலப்படுகிறது என்றே உணர்கிறேன். கவிதைகளுக்கெனத் தெரிவு செய்திருக்கும் வார்த்தைகளின் நயமும், ஆழமும் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, உள்நோக்கு’ என்ற தலைப்பிட்ட கவிதையின் ஆரம்பப் பத்தியைச் சுட்டலாம்:

தெளிந்த நீரோடையில்
தவறி விழுந்த சிறு கண்ணாடி
அசைந்து அசைந்து
கீழே கொண்டு செல்கிறது
பிரதிபலித்த முகத்தை

இந்த முழுக்கவிதையும் அடர்செறிவானது என்பது குறிப்பிடத்தக்கது. முறைமைகள் என்ற கவிதை தற்காலத்தைய தொழில்நுட்ப மனிதனைப் பற்றிப் பேசும் நுட்பமான கவிதை. கலைவழி, இருமையின் முகம், விலைப் பொருள்கள் என ‘உள்வெளிப் பறவைத் தொகுப்பில் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைச் சுட்ட முடியும். கவிதைகளில் பல ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியப்பாடுகளைக் கொண்டிருப்பதால் வாசகப் பங்கேற்பிற்கு வழியிருக்கிறது.

துவாரகைத் தலைவனின் கட்டுரைத்தொகுதியான ‘எழுதிச் செல்லும் நிகழ்கணங்கள்’ குறித்து வெளி ரங்கராஜன் விரிவான உரையாற்றினார். (அது இந்த மாத புதுப்புனல் இதழில் வெளியாகியிருக்கிறது). ”துவாரகைத் தலைவனின் இந்த கட்டுரைத் தொகுப்பில் பிரபஞ்ச இயக்கம் பற்றியும், மனித இருப்பின் அடிப்படையான உந்துதல்கள் பற்றியும் ஒரு புரிதலுக்காகவும், தெளிவுக்காகவும் சில பார்வைகளை முன்வைக்கிறார். வாழ்வின் பொருள் அதன் இயக்கம் தான் என்பதையும், அது நம்மிடமிருந்து தான் தொடங்குகிறது என்பதையும் அதன் மையம், புதிர், விடை எல்லாம் நாம் தான் என்பதையும் வலியுறுத்துகிறார். மனித விழைவுகள், லட்சியம், ஆவல், மகிழ்ச்சி, துயர், சமநிலை எல்லாம் பல்வேரு முரண்பாடுகளுக்குள் ஊசலாடிக் கொண்டிருப்பதையும், எந்த நிலைமையும் இறுதியானதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் துவாரகை தலைவன்” என ஆரம்பித்து இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் எளிமைப்படுத்தல்களையும், பொதுமைப்படுத்தல்களையும் தாண்டி இன்று நாம் ஒரு சிக்கலான வாழ்வுமுறைக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.சுலபமான தீர்வுகளற்று ரகசிய துயரங்களால் பீடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அவைகளுடன் உரையாடுவதற்கு இன்று நமக்கு ஒரு பிரத்யேகமான மொழியும், தொனியும் அவசியமானதாக இருக்கிறது”, என்று சுட்டிக்காட்டி, ’எந்தவொரு கருத்தையும், பார்வையையும் முடிந்த முடிவாக ஒரு தீர்மானமான தொனியில் வைத்தல் சரியல்ல. மாறாக, நம்முடைய சூழலின் சிக்கல்களை நெகிழ்வுத்தன்மையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு படைப்புமொழியே நமக்கு நெருக்கமானதாக இருக்கும்’ என்று தன் மென் தொனியில் அழுத்தமாக எடுத்துரைத்தார் வெளி ரங்கராஜன்.

எழுத்தாளர் தனது ஏற்புரையில் தனது கட்டுரைகள் குறித்தும், கவிதைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். ‘பறவை என்பது விடுதலையின் குறியீடு; அது பறக்கையில் புதுமைகளை இறைக்கிறது. எனவே, விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக்குருவியைப் போல என்பதே மனித இனத்தின் மிகப்பெரிய தேடல்’ என்றார் அவர். ‘கலை என்பது மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்காகத் தான். அதே சமயம் கவிஞன் எப்படிக் கவிதையில் தன்னை இழந்துபோகிறான் என்பதையும் நாம் கவனங்கொள்ள முடியும்’ என்று கவிஞர் துவாரகை தலைவன் குறிப்பிட்டது சிந்திக்கத்தக்கது.

இங்கே துவாரகை தலைவனின், கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தரப்பட்டுள்ளன.

துவாரகை தலைவனின் கவிதைகள் சில

1.முழுமை

அலைகளை வீசி
ஓய்வற்றிருக்கிறது
ஒரு கடல்.

எல்லாம் தன்னகத்தே வைத்து
விரிந்து பரவி
அசைவற்றுக் கிடக்கும்
மற்றொரு கடல்
முழு வானத்தையும்
வெறித்துப் பார்த்து
படம் பிடிக்கிறது.

அனைத்தும் கொண்ட
அதனோடு

இப்போது ஒரு வானம்.

2. அறிதலுக்கு அப்பால்

விதைச்சொல் விழும்
சட்டைப் பையில்
பத்திரமாய்…
நெஞ்சோடு உறுத்தியும்
மண்ணில் புதைக்கப்பட்டாலும்
பயனில்லை.

உள்ளம் குவிந்து
வித்துள் பாய
விளைவது – ஓர்

ஆகாயம்.

3.வாழ்க்கை

உன் மீது
கல்லெறிகிறேன்.

மீண்டும் ஒரு
கல்லை வீசுகிறேன்.

நீ எரிச்சலடைகிறாய்.

தொடர்ந்து உன் மீது
கல் வீசுவேன்.

உன் காலடியில் இருக்கும்
தங்கக்காசை
நீ பார்க்கும் வரை.

4.காலத் தொடக்கம்

முதல் வெளிச்சத்தின்
சிதறும் சிரிப்பில்
இருளுக்கொரு
பெயர் கிடைக்கும்.
வெடிப்பின் பக்கங்களில்
இருள் வரையும்
ஒளியின் படம்.

பரந்த வெளி யோவியத்தைச்
சுருக்கி உறிஞ்சிய தூரிகை
மீண்டும் வைத்த புள்ளியாய்
முதல் மனிதனின்
பிரக்ஞை.

5.உள் நோக்கு

தெளிந்த நீரோடையில்
தவறி விழுந்த சிறு கண்ணாடி
அசைந்து அசைந்து
கீழே கொண்டு செல்கிறது
பிரதிபலித்த முகத்தை.

நெருடும் அனுபவத்தின்
பல முகங்கள்
தண்ணீரின் மேலே
நெளிந்து செல்கின்றன.

நிழல்களைக் கழுவிச் செல்லும்
ஓட்டம்
புதுப்புது வடிவம் காட்டி
உடன் மாற்றுவதெல்லாம்
நீரின் மேல் திரையில் நடப்பவை.

தரையில்,
கண்ணாடி கொண்ட உண்மை முகம் காண
உரசிப் போகும்
நீர்ப்பாளங்களைத் தாண்டி
உள்ளே செல்கிறது பார்வை.

நீரில் உருண்டு வந்த கல் விழுந்து
உடைந்த மனக் கண்ணாடியின் மேல்
வாழ்வின் சமாதானக் கீறல்கள்.
அவற்றையும் தாண்டி
இன்னும் நம்பிக்கையோடு தேடும்
ஆழ்ந்த கட்புலனுக்கு அகப்படாமல்
தொடர்ந்து நழுவுகிறது சுயம்.

6.முறைமைகள்

அழகிய கோப்பைகளில்
குதித்துப் பொங்குகிறது
மகிழ்ச்சியினலை.
அதிநவீன உலகின்
இயந்திர விளை நிலத்தில்
சொர்க்கத்தின் வேர்களான
மாபெரும் திட்டங்களைப் பதிக்கும்
சிந்தனைக் கரங்கள்.
ஒன்றாய்ச் சேரும்
மெல்லிய கோப்பைகளின் மோதலில் எழும்
மனித குலத்தின் சிரிப்பு.

கணினியின் கீபோர்டில்
நடனமாடும் விரல்கள்
அதிநுட்பமாக
எதிர்கால வளர்ச்சியின் நிறங்களைத் தொட்டு வரையும்
ஓவியமாய்,
வெவ்வேறு நிர்வாக முறைமைகள்.

கட்டமைப்புச் சட்டங்களுக்குள்
பொருத்தப் பட்ட படத்தின் கோடுகள்
ராட்சதப் பாலங்களாய் எழும்.
மரத்தில் தெரியும்
பூக்களெல்லாம் வாகனங்களாய்
மகிழ்ச்சியை மட்டும்
அள்ளிக் கொண்டு
சாலைகளில் பறக்கும்.
காலத்தின் வேகம்
பொன்னொளியாய் கார்களின்
கண்ணாடிகளைத் தழுவிச் செல்லும்.

மனித குலத் தேவைகளாய்,
ஆராய்ந்து வார்த்தெடுத்த
சிறு உதிரிப்பொருட்கள்.
அனைத்தும் சோல்டர் செய்து
உருவாகிற பெரும்
சர்க்யூட் போர்டாக விரியும்
எண்ணிலடங்காத் துறைகள்.
படைப்பாற்றல் ஒளிர
மில்லி ஓல்ட் மின்சாரமாய்
இணைப்புகளில் பாயும்
மனித மூளை படைத்த
நவீன முறைமைகள்.

கட்டமைப்புகளுக்குள்
நிற்காமல் எங்கும் நுழைந்துலவும்
ராட்சதக் கரங்களாய்
மனிதனின் நிர்வாக முறைமைகள்.
உலகை உருவாக்கும்
ஒவ்வொரு செங்கலிலும்
முறைமை பதிக்கும்
ராஜமுத்திரை.

சோர்வற்ற மூளை உழைப்பின்
வெப்பம் மிதக்கும்
உலோகக் குழம்பின் வார்ப்புகள்.
அறிவாற்றலின் கற்பனை இணைப்புக ளசையும்
நிர்வாக முறைமைகளின்
இயந்திரக்கரங்கள்.

மனிதன் வகுத்த முறைமையின்
இயந்திரக்கரம்
ஒவ்வொரு சிறு பொருளையும்
எடைபார்த்து உருவாக்கும்
வாழ்வின் வசதிகளில்
எப்போதும் ஒரு மெல்லிய
இரும்பு மணம்.

மற்றொரு கரம் நீண்டு
மனிதனை சற்றே நெருங்கி வர
மனித உணர்வில் துளிர்க்கும்
கண்ணீர்த் துளியின்
கரிப்பை அக்கறையோடு ருசிக்கும்
இயந்திர விரல்நுனி.
சிறு கண்ணாடிக் கோப்பையின் சுவராய்
மனிதனின் மெல்லிய இயல்பான உணர்வுகள்.
விரித்து வைத்த இதயமான
பலகையின் மேல்
கண்ணீர்த் துளிகளைப் பதித்து
ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்த
கண்ணாடிக் கோப்பைகளின்
கோபுரம்.
முறைமையின் இரக்கம் நிறைந்த
ஓர் இயந்திரக் கரத்தின்
சமநிலையில் அசையும் கலையழகு.
ஒன்றோடு ஒன்று தொட்டபடி யிருக்கும்
கோப்பைகளின்
ஓரங்களின் வழியே செல்லும்
புவியீர்ப்பு விசையாக
சமுதாய விழுமங்கள்.

வாழ்வின் வசதிகளை
அள்ளி வழங்க
மேலும் மேலும் செம்மையாகும்
முறைமையின் முதன்மையான இயந்திரக்கரம்
சுழன்று வரும் வேகத்தில்
மற்றொரு கரத்தில் நின்ற
மெல்லிய உணர்வுக் கோப்பைகளின்
கோபுரத்தை யுரசும்.

உணர்வுகள் நிரம்பித் ததும்பும்
இதயங்களான கோப்பைக ளசைந்து
காற்றில் மிதந்து சுழல
சரியும் கோபுரம்.
மழுங்கிப் போன மனித நேயம்
முற்றிலும் நொறுங்காமல்
பிடித்து விட மின்னலாய்ப் பாயும்
இயந்திர விரல்களின் இறுக்கத்தில்
விழுவதற்கு முன்னே
தூளாகும் கோப்பைகள்.

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்