இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

வே.சபாநாயகம்.



1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும்
விரும்புகிறீர்களா?

பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும்.
பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம்
குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன்.

2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்?

பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே
என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று
வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். அந்த நாளில்
அதிகாலையில் எழுந்து எழுதுவேன். இந்த வழக்கத்தைப் பயிற்சியின்
மூலம் ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டு விட்டேன். குறித்த நாளில்
என்னிடமிருந்து அந்த அத்தியாயம் கண்டிப்பாக வந்து விடும் என்பது
அனுபவத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நன்கு தெரியும்.

2. கேள்வி: கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எப்படி அமைக்
கிறீர்கள்? கதைக்குக் கருப்பொருள் முக்கியமா? பாத்திரம் முக்கியமா?

பதில்: தொடர்கதைகள் என்றால் ஓரளவு மனத்திற்குள் தோராயமாக
ஒரு வடிவம் வைத்துக் கொள்ளுவது உண்டு. சரித்திரக்கதை என்றால்
ஆராய்ச்சிக் குறிப்புகளை விரிவாகச் சேகரித்து அவற்றையும் தொகுத்து
வைத்துக் கொள்வதுண்டு. மற்றப்படி அந்தந்த வாரம் அந்தந்த அத்தியா
யங்களை எழுதுவதுதான் என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது.
நினைவும் கற்பனையும் துணை செய்வதைப் பொறுத்து நிகழ்ச்சிகள்
சூடேறிச் செல்ல வேண்டும். அதை ஒட்டியே பாத்திரங்களின் செயல்களும்
அமையும். எல்லாவற்றிற்கும் ஓர் அடிப்படை மனத்துள் உருவாகி
இருப்பதால் எழுதுவது ஒரு வழக்கமாகி விடுகிறது.

3. கேள்வி: தொடர் கதைகள் நீங்கள் பிரசுரத்துக்கு முன்பாக முழுதும்
எழுதி வைத்துக் கொள்வதில்லையா?

பதில்: இல்லை.

4. கேள்வி: அப்படியானால் அவற்றின் ஒருமைப்பாடு கெடாதா?

பதில்: ஒருமைப்பாடு ஒரு தரம் உட்காருவதைப் பொறுத்ததா? அது
மனத்தின் உள்ளே உள்ள சிந்தனையின் ஒருமை உணர்வைப் பொறுத்தது
அல்லவா? ஒரே மொத்தமாக ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு பிறகு
தொடராக எழுதி வெளியிடுகிற எழுத்தாளர் கூட கதை முழுவதையும்
ஒரே மூச்சில் எழுதி முடித்து விடுவதில்லை. விட்டு விட்டுத்தான் எழுத
வேண்டி இருக்கிறது. ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும்
மத்தியில் மாதக்கணக்கில் கூட சில சமயங்களில் இடைவேளை ஏற்பட்டு
விடுவதுண்டு. எனவே ஒருமைப்பாடு என்பது மன உலகின் ஒருமை உணர்வு.
சிந்தனையின் மையம் அது. காலையில் உட்கார்ந்து மாலையில் முடித்து
விடும்ஒருமைப்பாடு இல்லை அது. என் வரையில் நான் ஒரு அத்தியாயத்
துக்கும் அடுத்ததற்கும் ஒரு வார இடைவெளி கொடுக்கிறேன். அவ்வளவு
தான் வித்தியாசம்.

5. கேள்வி: கவிதை, கட்டுரை, சிறுகதை, சமூக நாவல்கள் சரித்திர நாவல்கள்
சமைத்துள்ள தங்களுக்கு எதில் அதிக ஈடுபாடு? ஏன்?

பதில்: என்னுடைய ஈடுபாடு என்பது, வாசகர்களுக்கு அவ்வப்போது
என்னிடமிருந்து எது தேவை என்று கருதிப் பத்திரிகை ஆசிரியர்கள்
என்னிடம் கேட்கிறார்களோ அதுதான். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்