சங்கமம் நானூறு

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

ஹெச்.ஜி.ரசூல்



சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 – 01 – 2011 அன்று நடை பெற்றது.கவிஞர்கலாப்ரியா தலைமை ஏற்றார். கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் ஞானக்கூத்தன் முன்னிலை வகித்தனர்.தலைமைஉரையும் முன்னிலை உரையையும் இக்கவிஞர்கள் துவக்கத்திலும் இடையிடையேயும் நிகழ்த்தினர்.தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற உறுப்பினர், செயலாளர் இளையபாரதி தனது வரவேற்புரையில் காஞ்சி முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ் நிலப்பரப்பின் பல்வகைவண்ணங்கள் கொண்ட கவிஞர்களால் இந் நிகழ்வு சிறப்புறுகிறது என்றார்.இக்கவிதை வாசிப்பின் நிகழ்வின் இடையிலே கலந்து கொண்ட கவிஞர் கனிமொழி கவிதை படைப்பனுபவம் பற்றிய பதிவையும், கவிதை சங்கமம் திரட்டியிருக்கிற பன்முகப்பட்ட கவிஞர்களின் ஒருங்கிணைப்பையும் தனது மெளனம் ததும்பிய மெல்லியப் பேச்சால் உணர்த்திச் சென்றார்.பல கவிஞர்களின் கவிதை வாசிப்பை நிதானமாக உட்கார்ந்து உள்வாங்கிக் கொண்டார்.

இக் கவிதை வாசிப்பில் தொடர்ந்து இடையறாத தமது கவிதை எழுத்தால் அதிகமும் கவனம் பெற்றிருக்கின்ற யவனிகாசிறீராம்,ரமேஷ்பிரேதன்,வெண்ணிலா,யாழின் ஆதி,ஹெச்.ஜி.ரசூல்,சக்திஜோதி,உமாதேவி என கவிதை வாசிப்பை கவிஞர்கள் தொடர்ந்தனர்.தமிழ் அடையாளம், தலித் அடையாளம், பெண்ணிய அடையாளம் என அடையாளங்களின் அரசியலாகவும், அழகியல் சார்ந்தும் எதிர் அழகியல் சார்ந்தும், தீவிரப் புனைவு வெளியிலும் வாசிக்கப்பட்ட கவிதைகள் மிகவும் காத்திரமாக இருந்தன.நிகழ்ச்சியின் நடுவே புலம் பெயர் ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச. ஜயபாலன்பங்கேற்று கவிதைகளை உணர்ச்சிப்பெருக்குடன் ஈழத் தமிழரின் துயரத்தின் பேரலையை பகிர்ந்து கொண்டார். அவர்தம் துணைவியார் வாசுகி ஜயபாலன் ஜயபாலனின் கவிதைகளை பாடலாக பாடினார்.

இந் நிகழ்வில் இணைய வலைப்பக்கத்தில் எழுதும் புதிய தலைமுறை கவிஞர்களும் பங்கேற்றிருந்தனர். மூத்த கவிஞர் நா.விச்வநாதன்,அகநாளிகை பொன்வாசுதேவன்,தேனம்மை லட்சுமணன் மற்றும் யாழினி முனிசாமி உள்ளிட்ட பல காத்திரமிக்க படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.சில கவிஞர்கள் அதிகபட்சம் 12 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். ஒரு நிமிடத்தில் வாசித்து முடித்த கவிஞர்களும் உண்டு.

அகநானூறு புதுநானூறு போல இதுவரை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் அனைத்தும் சங்கமம் நானூறு என தொகுக்கப்பட உள்ளன.நிகழ்ச்சி இணைப்பாளர்களாக கவிஞர் முத்தமிழ் விரும்பி, கவிஞர் உமா சக்தி செயல்பட்டனர்.

இந் நிகழ்வில் வாசிக்கப்பட்ட என் கவிதைகள்:

ஹெச்.ஜி.ரசூல் – நான்கு கவிதைகள்

கவிதை – 1

தனது அறைக்கு வந்திருந்த வாப்பா

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த

நள்ளிரவில்அது நடந்தது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த

சட்டகத்தின் கண்ணாடி வழியாக

புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி

தனது அறைக்கு வந்திருந்தார்.

அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்

மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.

அவன்மீதுகாலைத்தூக்கிப் போட்டு

பேத்தியும் படுத்திருந்தாள்.

பேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்

பிறரின் அந்தரங்கமான அறையில்

அத்துமீறி நுழைவது என்னவோ

வாப்பாவின் மனசுக்கு பிடிக்கவில்லை.

தனது மனைவியை அந்த அறையில்

தேடிவந்தவர் என்பதால்அதிகமொன்றும்

குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை

பீரோ பூட்டப்படாமல் திறந்திருந்தது.

கதவைத் திறந்துபார்த்தபோது

தான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்

கீழடுக்கு மூலையில்

அடுக்கு குலைய வைக்கப்பட்டிருந்தது.

துவைத்து வெளுத்திருந்தாலும் அதில்

தன்வியர்வையின்மணம் தங்கியிருந்ததை

அவரால் உணர முடிந்தது.

அறையின் ஒவ்வொரு பொருட்களும்

இடம் மாறிப் போயிருந்தன.

தானிருந்த வீடுபோல்தெரியவில்லை

தன் அனக்கம் கேட்டும்

உறக்கத்திலிருந்துவிழித்து தன்னை யாரும்

ஏறிட்டு பார்க்காத வருத்தத்தில்

விரக்திமேலிட நின்ற வாப்பா

புகைப்படத்திற்குள்

திரும்பிச் செல்லமுயற்சித்தபோது

உள்நுழையமுடியவில்லை.

நாற்புறகண்ணாடிபிரேமிலும்

மின்சாரம் பாய்ச்சப்பட்ட

முள்வேலி போடப்பட்டிருந்தது.

வெளியேறிய வாப்பா

இப்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.

கவிதை – 2

துரோகத்தின் தருணம்

என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்
வாசல் கதவுகளை
வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு
ஒரு துரோகத்தின் அரங்கேற்றம்.
சட்டைப் பாவாடை அணிந்திருந்த
விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய
அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன.
கிணற்றில் விழுந்த பொறி பரவி
நீரிலும் நெருப்பு வளர்ந்தது.
ஒவ்வொரு இரவுதோறும்
என் முத்தத்தாலும் கனவுகளாலும்
நிரப்பப்பட்டிருந்த தலையணை
பதறியடித்துக் கொண்டு
தப்பித்து ஓட முயன்று சோர்கிறது.
எனது புத்தக அலமாரியில்
மிகவும் பாதுகாப்போடு உட்கார்ந்திருந்த
மார்க்ஸும் செல்வாவும்
எரிந்து கொண்டிருந்தார்கள்
சாம்பலின் புதை மேட்டு அனலில்
உதிர்பிச்சிகளின் மரணவாசம்
இடைவிடாது துரத்த
விடாது நெருப்பு பரவுகிறது எங்கும்.
என்னுடலின் நெருப்பைக் கழற்றிஎறிய
பலதடவை முயன்றும் தோற்றுப் போகிறேன்.
கவிதை – 3

ஹவ்வா

தனது இடப்பக்க விலாஎலும்பை
தேடிக் கொண்டிருந்த ஆதம்
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து
மூர்ச்சையாகி விழுந்தான்
தன்னிடம் இல்லாத மார்பகங்கள்
ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..?

கவிதை – 4
சிங்கத்தை கொலைசெய்வதற்கு

என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன்
ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு
படுக்கையில் கிடந்திருக்கிறேன்
எனது இரவையும் படுக்கையையும்
பகிர்ந்து கொள்ள அது எப்போது
என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை
மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.
சிங்கத்தின் திமிருக்குள்
என்னுடல் நொறுங்கத் தொடங்குகிறது.
என்னை இறுக கட்டியணைக்கும்
சிங்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.
ரத்தவாடை கசிந்துபரவ
என்னை புணர்ந்து முடித்த
மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த சிங்கம்
என்னுடலை கடித்து தின்ன ஆரம்பித்தது.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்