இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

வே.சபாநாயகம்


1. இலக்கியதாகம் கொண்டவனாக நான் என் வாழ்க்கையை ஆம்பிக்க
வில்லை. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆணாதிக்கத்தின்
உச்சகட்டம்தான் என் அப்பா. இங்கே என் அம்மா மட்டுமல்ல, என்னைச்
சுற்றி உள்ள என் சித்தி, அத்தை, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரிகள்
போன்ற எல்லா பெண்களுமே ஆணாதிக்க சமூகத்தில் அழுத்தப்பட்டு
வேதனைப்படுகிறவர்கள். இதற்கெல்லாம் புகலிடமாக வேறு வழி இல்லாமல்
இலக்கியத்தில் போய்ச் சேர்ந்தோனோ என்று தோன்றுகிறது. அதனால்
எனக்கு நானே வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு நல்ல அப்பாவைக்
கற்பனை செய்து கொள்வேன். எங்கம்மாவுக்கு வேறு ஒரு நல்ல அப்பாவைக
கல்யாணம் செய்துவைத்துப் பார்ப்பேன். இதனுடைய விளைவுதான் நான்
கதை எழுத ஆரம்பித்தது.

2. ‘கசடதபற’வில் சேர்ந்தபோது இலக்கியம் கற்க வேண்டும் என்ற,
நல்ல இலக்கியம் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னை
அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருந்தது.
என் பேரு எப்படியாவது வெளியே வர வேண்டும். அதுவே எனக்கு
முக்கியமாய் இருந்தது அப்போது!

3. பணம் சம்பாதிப்பதற்காக எழுதவில்லை. நான் எழுதுவது ஜனங்களுக்குப்
பிடித்திருக்கிறது. அதே சமயம் நான் என்ன எழுத வேண்டும் என்று
விரும்புகிறேனோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படி எழுதக்கூடாது
என்பதைக் ‘கசடதபற’வில் கற்றுக்கொண்டேன்.

4. நாவல் எழுதும் பிராயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பெரிய பனிக்கட்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த பனிக்கட்டி
என் நாவல் மூலம் உடைய வேண்டும் என்று எண்ணினேன். ஆண்களைக்
கண்டு அச்சப்படும் பெண்கள். பெண்களைத் துச்சமாக மதிக்கும் ஆண்கள்.
இவர்கள் மூலம் பிறக்கின்ற குழந்தைகள் இந்த தேசத்தில் எந்த
யோக்கியதையுமற்று நல்ல அரசியலோ, நல்ல கலை இலக்கியமோ, நல்ல
வாழ்கையோ, நல்ல மதமோ கொள்ள முடியாமல் வீரியமில்லாத
வித்துக்களாக இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை என் நாவல் இந்த ஒரு விஷயத்தைப்
பற்றித்தான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

5. எனக்குக் கிராமம் அதிகமாகத் தெரியாது. எனக்கு என்ன தெரிந்ததோ
அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைத் தவிரவும் என்னுடைய
கதையை இந்த மத்தியதர வர்க்கத்து நகர்ப்புற குடும்பங்கள்தான் அதிகம்
படிக்கின்றன. யார் என்னைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு நான்
என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

6. திருப்தி என்பது மனதுக்கு ஏற்பட்டால் காரியம் நின்றுவிடும். என்
எந்த ஒரு நாவலும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்பதுதான்
உண்மை. எந்த நூலையும் திரும்பப் படிக்கும்போதும் இன்னும் நன்றாகச்
செய்திருக்கலாமே என்று நினைக்கிறேன். ஆனால் எந்த ஒரு நாவலையும்
நான் ஆன்ம ஈடுபாட்டோடுதான் செய்கிறேன். I am a very sincere and
a very hard worker. எந்த ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலும் நான்
ஒரு வெறியனைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்வேன். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்