இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

வே.சபாநாயகம்.


1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன். நான் பொறுமையாக உலகின் பேச்சைக் கேட்கிறேன். அதை என் பார்வையில் உட்படுத்திப் பார்க்கிறேன். அதனால் கிடைக்கும் காட்சியைக் கலை வடிவம் கொடுத்துப் பாரக்கிறேன்.

2. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அவனது படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனிதவாழ்வின் பிரச்சினைகளே.

3. சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இன்டென்ஸ் செல்ஃப் ஃபீலிங்)இல்லை யென்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அலனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெற வேண்டும். உருவம் உத்தி முதலிய கலை நுட்பங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுதாயத்தின் வாழ்க்கை முறையினால், ஏற்றத் தாழ்வுகளினால், சட்ட திட்டங்களினால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன். இதை நீங்கள் என் எழுத்தில் காண்பீர்களானால் அதுவே என்னுடைய தனித்துவம் நிலை என்பேன்.

4. நான் எழுதுவதற்கு ஒரு URGE-ம் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு லட்சியமும் உண்டு. நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பலனுமாகும்.

5. நான் பணத்துக்காகவும் எழுதி இருக்கிறேன். நான் எழுதுவதன் முலம் பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் நான் எழுதுவதே பணத்துக்காக அல்ல. அப்படியென்றால், வேறு எதற்காக? புகழுக்காகவா? ஆம்! புகழுக்காகத்தான்…..நிரந்தர புகழுக்காக.

6. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியவை எல்லாம் ஆபாசமென்று என்னை ஏசியவர்கள் பலர். மனிதனுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதே பால் உணர்ச்சி. ஆகவே அதற்கும் நான் மதிப்பளிக்க விரும்பினேன். ஒரேயடியாக அதைப் பற்றி மட்டுமே எழுதுவவதோ அல்லது அதை அறவே வெறுத்து ஒதுக்குவதோ சரியல்ல என்று எண்ணுபவன் நான்.

7 . என் எழுத்துக்கள் எந்தத் தனிமனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை; அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும்.

8. என்னுடைய கதைகள் நஞ்சுக் கொடியோடு, நாற்ற நீரோடு, உதிரக் கவிச்சியோடு, உரத்த குரலுடன் பிறக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தமாக இருந்தால் போதும். மொழிச் சுத்தம் அவ்வளவு முக்கயமில்லை.

9. வாசகர்களுக்குப் பிடித்ததை நான் எழுதுவதில்லை. நான் எழுதுவதை விரும்புகிறவர்களே என் வாசகர்கள்.

10.எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். எழுதுவதனால் என் மொழி வளம் பெறுகிறது. எழுதுவதால் என் மக்கள் இன்பமும் பயனும் எய்துகிறர்கள். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை. இதற்காகவெல்லாம் நான் எழுதுகிறேன். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்