வெட்சி – மறுப்புரை

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

மு. இளநங்கை


மு. இளநங்கை
முனைவர் பட்ட ஆய்வாளர்
சென்னைப் பல்கலைக்கழகம்

வெட்சி – மறுப்புரை

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் 2009-2010 கல்வியாண்டில் ஆய்வாளர்கள் நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு தான் வெட்சி என்ற நூல். இது குறித்த புதிய மாதவி கட்டுரையைத் திண்ணை வாசகர் என்ற முறையில் வாசிக்க நேர்ந்தது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் பயிலும் மாணவர் என்ற முறையில் அந்தக் கருத்தரங்கத்தில் நானும் பார்வையாளராகப் பங்குகொண்டேன். ஆசிரியர் வெட்சி நூல் குறித்த விமர்சனம் என்பது மேலோட்டமான கருத்துகளைத் தாங்கிய படியே வெளிவந்துள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் நூலின் தலைப்பு பற்றிய தன் எண்ணத்தைப் பதிவுசெய்கிறார். தொல்காப்பியம் முதல் ஆராய்ந்து தேடியும் வெட்சிக்கும் தமிழக தலித் ஆக்கங்களுக்கும் உள்ள தொடர்பு விளங்காமல் அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை அளித்ததாகப் பிரஸ்தாபிக்கும் போக்குக் கவலைக்கிடமாகவே தோன்றுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை ஆண்டுதோறும் ஆய்வாளர்கள் மட்டும் பங்குக் கொண்டு நடத்தும் கருத்தரங்கம் நூலாக்கம் பெறுவது என்பது கடந்த ஆறாண்டுகளாக நிகழ்ந்து வருவது. கடந்த ஐந்து கருத்தரங்கங்களும் முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை என்ற அகப்பொருள் சார்ந்த திணைகளின் பெயரினைத் தாங்கியே
நூல்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆண்டில் புறத்திணையான வெட்சி என்ற பெயரில் நூலாக்கம் பெற்றுள்ளது. வெட்சி என்ற நூல் குறித்து பேசும் ஆசிரியர் தலைப்புக்கான பின்புலத்தையும் அறிந்துகொண்டு இருந்தால் தலைப்பு குறித்து இந்த நெடும் விவாதம் தேவையின்றி நூல் விமர்சனம் முழுமையாக நடைபெற்றியிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் கட்டுரையில் தலைப்பிற்காகக் கழிவிரக்கம் ஏற்பட்டு பேசியுள்ளது தேவையா என்ற கேள்வி எழுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வுகுறித்த புரிதல் இன்றி நூலை விமர்சனம் செய்துள்ளது (தலைப்பை விமர்சனம்) அவர்மேல் தான் கழிவிரக்கம் கொள்ள செய்கிறது.

கட்டுரை ஆசிரியர் அவர்கள் தங்கள் கருத்துகளை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை சார்ந்து வெளிவந்த ஆய்வாளர்கள் பங்கேற்று நடந்திய ஐந்து கருத்தரங்க நூல்களையும் வாசித்து இருப்பின் தலைப்பில் உள்ள முரண்கள் பெரிதாகப்பட்டிருக்காது. மரபாக வழங்கி வரும் சொற்கள் அதே பொருளில் வெளிப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெயரில் புதுமை வைத்து கொண்ட இவர்களாலே ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற போது வருத்தமாகத் தான் உள்ளது. அகம், புறம் சார்ந்த திணைகளின் பெயர்களை நூலிற்குத் தொடர்ச்சியாக வைத்து வெளியீடுவது என்பது ஒருவிதமான ஒழுங்கைப் பின்பற்றியே.
வெட்சி நூலில் இடம்பெற்றுள்ள தலித் படைப்பாளிகளில் ஆசிரியர் முழுமையாக வாசித்ததாகப் பிரகடனப்படுத்தியுள்ள படைப்பாளர்கள் அனைவரும் வெகுசனதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தலித் படைப்பாளர்கள் என்ற முத்திரையை முழுமையாகப் பெற்று கொண்டவர்கள். அபிமானி, அழகிய பெரியவன், இமையம், அயோத்திதாசர், குணசேகரன், சந்ரு, சாணக்யா, சிவகாமி, யாழன் ஆதி, ரவிக்குமார், ராஜ்கவுதமன் போன்ற சிலரின் கட்டுரைகளை மட்டும் வாசித்திருப்பதும் தலித் படைப்பாளர்கள் பலரின் முகங்களை அடையாளப்படுத்திய வெட்சி நூலில் ஆசிரியரின் தேர்வு எத்தகையதாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தலித் படைப்பாளர் குறித்த முழுமையான பார்வையைச் செலுத்தாமல் தலித் படைப்பாளர்கள் யார்? என்று வெகுசன தளத்தில் கேள்வி கேட்டவுடன் பதிலாக வெளிவரும் ஒரு சில படைப்பாளர்களின் பெயர்களே இவரது வாசிப்பிலும் இழையோடிவதை அவதானிக்கமுடிகிறது.
தலித் இலக்கியத்தில் உள்ள பிரச்சனைகளான இடங்கள் பற்றி எதுவும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும், அது குறித்த விமர்சனத்தை இந்த நூலில் பேசுவதற்கான இடம் இருந்தும் அவை குறித்த விமர்சனம் எதுவும் இன்றி இக்கட்டுரையை முடித்திருப்பதும் வருந்ததக்கதே. தலித் படைப்பாளர்கள் என்று வெட்சியில் இடம்பெற்றிருக்கும் சிலர் தங்களைத் தலித் படைப்பாளர்கள் என்று முத்திரை குத்த வேண்டாம் என்று கூறுவோரை வெட்சியில் இடமளித்தும் வேறு சில தலித் படைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்தும் எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் மேலோட்டமாக வாசித்து தலித் ஆக்கங்களில் உள்ள நியாயமான குறைப்பாடுகளை முன்மொழியாது ஆய்வாளர்களின் அலட்சிய போக்கினை மட்டும் அலட்சியமாகச் சுட்டிக்காட்டி பேசியிருப்பது ஆழமான பார்வையின்மையின் குறைபாடு.

Series Navigation

மு. இளநங்கை

மு. இளநங்கை