சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

சுப்ரபாரதிமணியன்


பண்ணத்திர:
”சாயத்திரை” கன்னட மொழிபெயர்ப்பு
==========================================
தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000 ஆயிரம் கோடி போய் அந்நியச் செலவாநியைத் தரும் தொழில் நகரமாயிருந்தது. என்னுடன் படித்த பலர் ஏற்றுமதியாளர்களாகி இருந்தனர். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் நொய்யல் என்ற நதி காணாமல் போனதும், நொய்யல் சாயக்கழிவுகளின் ஓடையாகியிருந்ததும், ஐம்பதாயிரம் குழந்தைத் தொழிலாளர்களும், சுற்றுச் சூழல் கேடும் என்னை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு சுற்றுச் சூழல் குறித்த அக்கறையாக என்னுள் விதைவிட்டது.
தொழில் வளர்சிக்குப் பின்னால் இருக்கிற மனிதர்களின் இடர்பாடுகளும், சுற்றுச்சூழல் கேடும், மனித உரிமை பிரச்சனைகளும் படைப்பினூடே சமூக இயக்கங்களிலும் பங்கு பெறச் செய்தது. என் போன்றோர் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரமும் வலுப் பெற்றது. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது எதன் பொருட்டு என்ற கேள்வியும் தார்மிகமாய் முன் வைக்கப்பட்டு போராட்ட வடிவமானது.
அச்சூழல் “சாயத்திரை” நாவலை எழுத வைத்தது. சாயங்களை அப்பிக் கொண்டு திரிகிற மனிதர்கள். குழந்தைத் தொழிலுக்காக தங்கள் இளம் பருவத்தையும் கல்வியையும் இழந்த குழந்தைகள். காணாமல் போன நதி. இவை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டன. விளிம்பு நிலை மனிதர்களை பிரதானப்படுத்தி முன் வைக்கப்பட்ட இலகியப் பிரதியாக அது அமைந்தது. பின் நவீனத்துவ மனிதர்களும் உள்ளீடும் நாவலுக்கு பலமூட்டின. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. ஆங்கிலத்தில் புதுவை பா.ராஜா அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி அவர்களால் ரங்க் ரங்கிலி சாதர் மெஹெலி என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. தற்போது ஸ்டேன்லி அவர்களால் மலையாளத்திலும், தமிழ்ச் செல்வி அவர்களால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் என்றாலும் கன்னடம் வாசிப்பு இல்லாத குறை இப்போது இந்தப்பிரதியைக் காணும் போது ஏக்கமாக வடிவெடுக்கிறது .
தமிழில் இந்த நாவல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த நாவல் முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் என்ற அளவில் இதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்த திருமதி.தமிழ்ச் செல்விக்கும், வெளியிடும் ரவிக்குமாருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

சுப்ரபாரதிமணியணின் ‘சாயத்திரை’ அன்புடன்________________

நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை இது
(. ரூ100
நவயுக பதிப்பகம், பெங்களூர் )

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்