கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

குரு அரவிந்தன்


தாகம் வந்தால் நீரைத்தேடுவது, பசிக்கும்போது உணவைத்தேடுவது, காதல் உணர்வின்போது இணையைத் தேடுவது, பக்தி உணர்வின்போது இறைவனைத் தேடுவது இப்படியே ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும் போது, இந்த நாவலில் வரும் கட்டுமரங்களுக்கும் ஒருவித தேடல் இருந்திருக்கிறது. கட்டுமரங்கள் கரையைத் தேடுவதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் தமது உயிரைச் துச்சமாக மதித்து ஆழ்கடலுக்குச் செல்லும் தொழிலாளர்களின் மனவோட்டத்தை, அவர்களின் வாழ்க்கை என்ற ஓடம் தத்தளிக்கும் போது கரைசேர்வதற்கான தேடல்களைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது இந்த கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல்.

ஈழத்து மூத்த கலைஞர்களில் ஒருவரான கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் அருமையான ஒரு படைப்பைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார். ஈழத்து வடபகுதியில் உள்ள, கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்து மக்களையும், அவர்களின் வாழ்க்கை நெறிகளைப் பற்றியதுமான இந்த நாவல் ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும். நெய்தல் நிலச் சூழலில் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றே சொல்லலாம். சின்ன வயதிலே தமிழில் வாசித்த தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், அதன்பின் ஆங்கிலத்தில் வாசித்த ஏணஸ்ட் ஹோமிங்வேயின் (நுசநௌவ ர்நஅiபெறயல) ஓல்ட் மான் அன் த சீ (வுhந ழுடன ஆயn யனெ வாந ளுநய) போன்ற நாவல்களில் வரும் அனேகமான பாத்திரங்கள் இன்றும் மனதைவிட்டகலாது நிற்கின்றன. தமிழில் இவ்வாறான சூழல் சார்ந்த சில படைப்புக்கள் வெளிவந்தாலும், இலக்கிய ஆர்வலர்களால் அவை பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஈழத்திரைப்படமான வாடைக்காற்று என்ற படத்தின் மூலம் ஏற்பட்ட அனுபவங்களை ஆசிரியர் தனது நினைவில் கொண்டுவந்து இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.

நெய்தல் நிலச்சூழலில், ஈழத்து மீனவக் குடும்பங்களைப் பற்றிய கருவைக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பல உண்மைச் சம்பவங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் இருப்பைக் குறிக்கும் ஒரு ஆவணமாகவும் இருப்பதற்குரிய தகுதியை இந்த நாவல் கொண்டிருக்கிறது என்பதே முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நாவலில் வரும் பாத்திரங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாமே நிஜமானவை. இந்த நாவலில் அவர்களது வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை எடுத்துச் சொல்லப்படுகிறது. இன்று நாடு இருக்கும் சூழ்நிலையில், இவற்றை எல்லாம் ஆவணப்படுத்த வேண்டிய தேவைகள் இருப்பதால் இவற்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏனென்றால் 1970ல் இந்த நாவலுக்குரிய களம் அமைதியான சூழ்நிலையில் இயற்கையோடு ஒன்றிப் போயிருந்தது. இந்தப் பகுதிகளில், குறிப்பாக இலங்கையின் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எல்லாம் மக்களின் சகஜமான வாழ்க்கை தங்குதடையின்றித் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த நாவலில் வரும் அனேக பாத்திரங்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் எமது மண்ணை ஆக்கிரமித்தபோது அந்த மண்ணில் வாழ்ந்த இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்த மதமாற்றங்கள் இடம் பெற்றன. இப்படியான சூழ்நிலையிலும் காங்கேயன்துறை, மயிலிட்டி போன்ற கரையோரத்தில் வாழ்ந்த மீனவர்கள்pல் அனேகமானவர்கள் இந்துக்களாகவே தொடர்ந்தும் இருந்தனர். அவர்களின் குலதெய்வமான செல்வச் சந்நிதி முருகனையே அவர்கள் வழிபட்டு வந்தார்கள் என்பதையும் ஒரு வரலாற்றுச் சான்றாக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். மதங்களிடையே எந்த வேற்றுமையும் இன்றி இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். இன்று இந்த மண்ணில் பெரும்பான்மை இனமான சிங்கள பொளத்த ஆக்கிரமிப்பு நடந்திருப்பதால் இனி வருங்காலங்களில் அவர்களின் மொழியும், மதமும் இந்த மண்ணில் திணிக்கப்படலாம், மதமாற்றங்கள் இடம் பெறலாம், இன்று புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழ் மொழியின் பாவனை வலுவிழந்தது போல இந்த மண்ணிலும் நடக்கலாம். வலுக்கட்டாயமாகச் சரித்திரம் கூட மாற்றப்படலாம் என்பதாலேயே இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாக ஈழத்தமிழருக்கு இருக்கவேண்டும், எதிர்கால சந்ததியினரிடம் இந்தத் தகவல் சென்றடைய வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.

இனி நாங்கள் நாவலுக்குள் செல்வோம். யாழ்பாணக் குடாநாட்டில் வடக்குத்திசையின் கடற்கரையோரத்தில் மேற்கேயிருந்து கிழக்காக மாதகல், கீரிமலை, காங்கேயன்துறை, மயிலிட்டி, பலாலி, மான்பாய்ஞ்சவெளி, தொண்டமானாறு, வளலாய், வல்வெட்டித்துறை, அல்வாய், பருத்தித்துறை போன்ற முக்கியமான கடற்கரையோர வதிவிடங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு மீனவ குக்கிராமமான மான்பாய்ஞ்சவெளி தான் கதைக்களமாக இந்த நாவலில் வருகின்றது. பலாலி, தொண்டமானாறு இராணுவ முகாங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்தக் குக்கிராமம் இன்று காணாமல் போய்விட்டது. ஸ்ரெல்லா, அந்தோனி, சில்வியா, மரியாம்பிள்ளை, மதலேனாள், எலிசபெத், மேரி என்று இதில் வரும் பாத்திரங்கள் அப்படியே மனதில் பதிந்து விடுகிறார்கள். நாவலை வாசிக்கும்போது நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது போன்ற உணர்வை ஆசிரியர் தனது எழுத்து வன்மையால் ஏற்படுத்துகின்றார். அவர்களையும் யுத்தம் தின்றுவிட்டதோ தெரியவில்லை. ‘முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சாய்ந்து, காலை மடித்து தென்னையில் ஊன்றி நின்று கொண்டு…’ எவ்வளவு அவதானமான கவனிப்பின் வெளிப்பாடு, ‘விடிந்தால் பொழுதுபட்டால் அடுப்புக்குள் நெருப்புத் தின்று…! என்பது போன்ற வார்த்தைப் பிரயோகம், செழியனின் அருமையான கவிதை வரிகள், ஆட்காட்டிக் குருவியின் வேதனைப் புலம்பல், இப்படியே ஒவ்வொரு அத்தியாயமும் தொடருகிறது. ஒரு சில இடங்களில் நாவலில் தொய்வு ஏற்பட்டாலும், மீனவர்களின் பாவனையில் இன்றும் இருக்கும் சொற்களையே பாவித்து மிகவும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்திச் செல்கிறார் கதை ஆசிரியர். புங்குடுதீவைப்பற்றி நிறைய விடையங்களை இந்த நாவல் மூலம் அறியமுடிகிறது. ஒருகாலத்தில் கடல் மார்க்கமாகவே செல்லக் கூடியதாக இருந்த புங்குடு தீவிற்கு, தரைப்பாதை போடப்பட்டதால் போக்குவரத்து இலகுவாக்கப்பட்டது. மீனவர்கள் தரைப்பாதை வழியாகவும் அங்கு சென்று வாடி அமைப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது. மொத்தத்தில் அருமையான ஒரு நாவலை ரசிச்சு வாசிச்சுப் பல விடையங்களைப் புரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்த கே. எஸ். பாலச்சந்திரனுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறவேண்டும் என்று தனது ஆதங்கத்தை நண்பர் பி.எச். அப்துல் ஹமீத் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. தங்கள் விமர்சனத்தில் இருந்து இந்த நாவலை வேண்டுமென்றே தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். அதுவும் கதை நாயகி தனது உணர்ச்சிகளை இத்தகைய வார்த்தைகள் மூலம் வெளிக் கொட்டுவது போல ஆசிரியர் கதையை நகர்த்திச் சென்றிருந்தால் எப்பொழுதோ இந்த நாவலுக்கு மகுடம் சூட்டப்பட்டிருக்கும். அப்படி வெளிக்காட்டக் கூடிய பல சந்தரப்பங்கள் இருந்தும் ஆசிரியர் அதைப் பயன்படுத்தவில்லை. ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் மீனவரின்; வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி. எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள்

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்