குழந்தையின் கண்களால்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஹெச்.ஜி.ரசூல்


வள்ளுவர்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அறிவுஅச்சு ஊடகம் உருவான போது புத்தங்களில் இடம்பெயர்ந்தது.காட்சி ஊடக காலமாற்றத்தில் அவை சிடிக்களின் வடிவம் பெற்றன.இன்டெர்னெட்மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் அறிவையும் நாம் எளிதாக கற்றுக் கொள்ளமுடியும்.

என்றாலும் நமது தாத்தா பாட்டிகளிடம் புதைந்து கிடக்கும் அறிவும் அனுபவமும் பள்ளிக் கூடத்திலும் கிடைக்காதது.திடீரென பாட்டி ஒரு குப்பிக்குள் இரண்டு எண்ணெய் அது என்ன என விடுகதையைச் சொல்லி பதில் கேட்பாள். நாம் யோசித்து திணற வேண்டியிருக்கும். ஒரு குப்பிக்குள் இரண்டு எண்ணெய் அது என்ன..பதில் தெரியுமா… முட்டை.
முட்டையை உடைத்துப்பார்த்தால் வெள்ளக்கருவும் மஞ்சக்கருவும் என்ணெய் போல சேர்ந்திருக்கும். முட்டைத்தோடு குப்பியாக உருமாறுகிறது.எவ்வளவு அற்புதமான கற்பனை.

நமது மரபுவழிக்கதைகளையும் வெறும் கற்பனை என்று சொல்லி ஒதுக்கிவிடமுடியாது.வாழ்வின் உண்மைகளை அவை வேறொரு குறியீட்டு மொழியில் சொல்ல முற்படுகின்றன.

உடல் உறுப்புகளுக்கிடையே நீ பெரியவனா நான் பெரியவனா என்று கடும் சண்டை. கை சொன்னது நான் இல்லாமல் நீ சாப்பிட முடியாது. கண் சொன்னது நான் இல்லாதிருந்தால் எல்லாமே இருட்டுதான்.கால் சொன்னது நான் இல்லைன்னா அசையவே முடியாது மூலையிலதான முடங்கிக் கிடக்கணும்.திடீரென கண்கள் இருண்டது கால்கள் தள்ளம்பாறியது. அப்போது ஒரு குரல் கேட்டது என்ன மறந்த்து எல்லோரும் சண்ட போட்டீங்களே நான் யாருன்னு தெரியுதா.. எல்லா உறுப்புகளும் திகைத்து நிற்க அந்தக்குரல் சொல்லியது நான் யார் தெரியுமா.. நான் தான் வயிறு.. நான் பசிக்கத் தொடங்கினா நீங்களெல்லாம் காலி…

இந்தக் கதை என்ன் விசயத்தை கூறிச் செல்கிறது. மேல் கீழ் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என எதுவும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் சமம் என்னும் சமத்துவம் இதன் முதல் அர்த்தம். இந்த உடல் வெறும் உடல் அல்ல இது சமுதாய உடலாக உருமாறும்போது மேல் கீழ் பேதமற்று தலித்கள்,பழங்குடிகள் என அனைத்துமக்களும் சமம் என்பது இரண்டாம் நிலை அர்த்தம். ஒரு கதையை அர்த்தப்படுத்தும்போது வாசிப்பின் அரசியல் இவ்வறெல்லாம் உருவாகிறது.

நமது சிந்தனைகளை ,நமது குழந்தைகளின் மனசை ஆக்ரமித்து வைத்திருகின்ற ஆதவன்கள், வேட்டைக்காரன்கள் நாயகி பிம்பங்கள் தமன்னா, அனுஸ்காக்கள் ஒருபுறம். சின்னத்திரைகளில் ஜெட்டிக்ஸ். போகோ முதல் ராணி ஆறு ராஜா யாரு மறுபுறம். மந்திரக்கயிறால் கட்டிப் போட்டிருக்கும் இந்த மாய மான்களிடம் நமது குழந்தைகளின் உலகம் காணாமல் போய்விடுகிறது.நம்ம கன்னியாகுமரியைவைத்துகூட ஒரு பாட்டு பிரபலமாகி உள்ளது.

எம் பேரு மீனா குமாரி எம் ஊரு கன்னியாகுமாரி

போலாமா குதிர சவாரி செயலாமா சோபா கச்சேரி

நமதுகால மாற்றுசிந்தனை முறை இது போன்று பெண்ணுடலை நுகர்ச்சி பொருளாக வணிகம் செய்வதை கேள்வி கேட்கிறது. மேற்கத்திய இசை வெறும் பாலியல் நுகர்ச்சி இசைவடிவமாக சீரழிந்துவிட்டது.

மேற்கத்திய உலகில் ராக் அண்ட் ரோல், ஜாஸ், இசையின் தொடர்ச்சிதான் ரேப் மியூசிக். இது ஆப்ரோ அமெரிக்கர்களின் இசைவடிவம். அமெரிக்காவிற்குள் வாழும் கறுப்பின மக்கள் தங்களது விடுதலைக்கான இசையாக இதை வெளிப்படுத்தினார்கள்.
இசை வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் கொண்டதல்ல.

Rain Rain Go Awayஎன்றூ எப்போதும் பாடமுடியாது.ஏனென்றால் மழையை நம்பித்தான் நம் விவசாயக் குடிகளின் வாழ்வு இருக்கிறது.

நாம் கேட்டிருப்போம் குழந்தைக்கு அம்மா சொல்லி கொடுக்கும் பாடலை

காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா

குருவி கொண்டைக்கு பூ கொண்டுவா

கொக்கே குழந்தைக்கு பால் கொண்டுவா

கிளியே கிண்ணத்தில் தேன் கொண்டுவா

இந்த பாடலில் என்ன விசேசம் என்று நீங்கள் கேட்கலாம். ரொம்பவும் கூர்ந்து கவனித்து பாருங்கள் இந்த பாடல் வரிகளிலிருந்து காக்கா, குருவி,கொக்கு,கிளி என பறவைகள் பறந்து செல்கின்றன.காக்காவின் நிறம் கறுப்பு, கொக்கு வெள்ளை, கிளி பச்சை. நிறங்களைச் சொல்லித்தருகிறது. பால் தேன் மூலம் சுவையைச் சொல்லித்தருகிறது. இதை முறையாக குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகளின் அறிவின் நுட்பம் பகுத்தறியும் முறைவிரிவடையும்.

அமெரிக்க மான்சென்டோநிறுவனத்தின் பிடிகத்திரி- மரபணு மாற்று கத்திரி விதையின் இறக்குமதி இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியவகை கத்தரி இனங்களை அழித்துவிடுகிற அபாயத்தை படிக்கிறோம்.பெரு வெடிப்பு தொடர்பான எதிர்வினைகளை ஆற்றுகிறோம்.கூடவே நமது வாழ்வின் நெருக்கடியை கலை இலக்கியத்தில் பதிவு செய்கிறோம்.

குழந்தைகள் உலகம் அற்புதமானது.ஸ்கூலுக்கு போய்விட்டு வரும்
குழந்தைகள்வீட்டிற்கு வந்ததும் கையில் ஒரு கம்பை எடுத்து சுவரை போர்டாக மாற்றி எதிரே நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இருப்பதாக பாவனை செய்து கொண்டு டீச்சராக விளையாடும்.கொஞ்ச நேரத்தில் பார்த்தால் அக்கா கட்டியிருக்கிற தாவணியை எடுத்து உடம்பில் சுற்றிக் கொண்டு அம்மாவாக மாறும்.

கவிஞர் வெண்ணிலா இந்த அனுபவத்தை தன் கவிதையில் எழுதுவார்.

துண்டொன்றை கட்டிக் கொண்டு

குழந்தைகளால் அம்மாவாகமுடிகிறது

அம்மாக்களால்தான்

குழந்தையாக முடிவதில்லை.

அம்மாக்களால் மட்டுமல்ல அப்பாக்களாலும் குழந்தையாக முடிவதில்லை.என்றாலும் கூட குறைந்தபட்சம் குழந்தையின் கண்களால் இந்த உலகத்தை தரிசிக்க நாம் கற்றுக் கொள்வோம்.

(ஜனவரி 12 தக்கலை அமலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி 36வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்..)

.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்