வதிரி கண. எதிர்வீரசிங்கத்தின் ‘சிறுவர் கவிச்சரம்’

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

புலவர் சீடன்


கிராமங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது முப்பத்தோராவது நாளில் கல்வெட்டு வெளியிடும் வழமை இருந்து வருகிறது. சமீபகாலமாக இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாகச் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள்;, குறுநாவல்கள், மற்றும் அறிவியல் சம்பந்தமான செய்திகளை வெளியீடுவதில் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது. இதனை அடியொற்றி யாழ்ப்பாணம் தேவரையாளிக் கிராமத்து கந்தன் இல்லத்தைச் சேர்ந்த வே. புஸ்பமோகன் தனது தந்தையார் காசிப்பிள்ளை வேலாயுதம் நினைவு வெளியீடாக சிறுவர் கவிச்சரம் என்ற நூலினை வெளியீடு செய்துள்ளார்.

சிறுவர்களுக்காகத் தொகுக்கப்பட்ட கவிச்சரத்தின் பாடலாசிரியர் வதிரி கண. எதிர்வீரசிங்கம் ஆவார். எந்தப் பிள்ளைகளையும் கவரும் வண்ணம் அட்டைப் படத்தினை சிறப்பான ஓவியமாகத் தந்துள்ளார். இன்பமலை நிசாந் சிறந்த முறையில் சிவேன் கணினிப் பதிப்பகத்தில் அச்சிட்டுள்ளனர். இந்த நூலிலுள்ள தனித்துவமே பாடலாசிரியர் ஓவியர் கணினிப் பதிப்பகத்தார் மூவரும் தேவரையாளிக் கிராமத்தைச் சேந்தவர்கள் என்பதுதான்.

இந்தச் சிறிய நூலுக்கு கலாநிதி த. கலாமணி அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். அவர் ஆரம்பத்திலே ஒரு விடயத்தை முன்வைத்துள்ளார்.

சிறுவர் பாடல் எழுதுதல் என்பது எளிதான பணியன்று. சிறுவர்களின் உளவிருத்திப் பருவம் நோக்கி பொருத்தமான சொல்தேர்ந்து ஓசை நயத்துடன் சந்த நடையில் சிறுவர் பாடல் எழுதப்பட வேண்டும். எனத் தனது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார். இவரின் கூற்றின்படி பாடலாசிரியரின் பாடல்கள் நடைபோடுகின்றன.

பாடலாசிரியர் தனது உள்ளத்திலிருந்து இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார். “மனித வாழ்வு மாண்புற இரு நம்பிக்கைகள் வேண்டும் ஒன்று இறை நம்பிக்கை மற்றது தன்னம்பிக்கை” இவ்வாறு ஒரு செய்தியினை வெளியிடுகின்றார். இறை நம்பிக்கை என்பதில் எனக்கு உடன்பாடுமில்லை என்றாலும் ஒரு பொதுவான கருத்து மட்டும் சொல்லலாம் என நினைக்கின்றேன். இறை நம்பிக்கை என்பது ஒவ்வொருவரது மனம் சம்மந்தப்பட்ட விடயம். நோன்புகள் விரதங்கள் வழிபாடு போன்றவை எல்லாம் தெய்வீக சக்தியிலே நினைவைச் செலுத்தி உலகத்தின் நினைவிலே ஏற்படும் மனச் சஞ்சலங்களை நீக்கி மனதிலே தெளிவையும் நிம்மதியையும் ஏற்படுத்துவதற்காக ஏற்பட்டவையாகச் செல்லப்படுகின்றன.

அடுத்து பாடலாசிரியரின் நன்றியுணர்வு இது நிச்சயமாகச் சிறுவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று வளர்ந்து வருவோர் அல்லது வளர்ந்து விட்டோம் என்று நினைப்போர் தாம் ஏறிவந்த ஏணியை மறந்து விடும் நிலமைகள் உள்ள ஒரு சமுதாயத்தில் வாழுகின்றோம். தனது குருவான கவிஞர் சிவ. கணேசலிங்கத்தையும் தன்னை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கவிஞர் வதிரி சி.இரவீந்திரனையும் நன்றியுணர்வோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூவற்கரையான் பாமாலை ஊடாக தனது பயணத்தைத் தொடங்கிய ஒருவர் கடவுளைப் பாடி மனிதனைப் பாடத் தொடங்கி தற்போது சிறுவர்களுக்காக பாடல்களை எழதியுள்ளார். வளர்ந்த மக்களுக்கு அவர்களுடைய குறையை எடுத்துக் கூறியிருக்காவிட்டால் போதும் என்று நிற்கவில்லை. வந்த குறைகள் வளரும் குழந்தைகளின் வேர் கொள்ளாதவாறு அடியோடு களையத் தெரிய வேண்டுமென்று விரும்பி சிறார்களுக்காகப் பாடி சிறார்கள் வளர்ந்து குடிமக்களாகும் போது நாட்டிற்குரிய நல்ல மக்களாக விளங்க வேண்டுமென்று ஆசை கொள்கிறார்.

‘தன்னம்பிக்கை பற்றிக் குறிப்பிட்டுள்ளது சிறார்களுக்கு இது முக்கியமாக ஊட்டப்பட வேண்டிய ஒன்று. தன்னம்பிக்கை பற்றி அமெரிக்க அறிஞன் எமர்ஷன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

தன்னையே நம்புவது தான் வெற்றியின் முதல் இரகசியமாகும். இதுவே வீரத்தின் சத்தாகுமென்று எடுத்துரைக்கின்றார். வீரத்தின் சத்து என்று எடுத்துரைக்கும் காரணம் தன்னையே நம்புவதற்கு ஒருவனுக்கு அளவற்ற துணிச்சல் வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறில்லை.

14 பாடல்களை சிறுவர்களுக்காகத் தந்துள்ளார். தொகுப்பில் ஒரு நாளுக்குரிய நிகழ்வுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. சிறார்கள் பாடி ஆடி மகிழ்வாக இருப்பது போன்று ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பாடல்களை நிகழ்காலத்திற்கு முக்கியம் கொடுக்கப்பட்டு ஆக்கியுள்ளார். பண்டிதத் தனமில்லாத சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடமை என்ற ஒரு சக்தி காலையில் நம்முடன் எழுந்து இரவில் எம்முடன் ஓய்வெடுத்துச் செல்கிறது. அது நம்முடைய அறிவின் செயலில் பிணைந்து கிடக்கிறது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் நிழல் போல் நம்மைப் பின்பற்றுகின்றது என்கிறார் அறிஞர் கிளாட்ஷ்டோன். பாடலாசிரியர் கடமைகளை ஒரு நாள் நிகழ்வின் ஊடாக உணர்த்துகின்றார். ஆலயத்தில் ஆரம்பித்து துயிலும் பொழுது வரை சிறார்கள் கடமை எது உறவுகளின் கடமை எது என உணர்த்தப்படுகின்றது. சமூகவியலாளர்களின் கருத்துப்படி தாய் தன் குழந்தைகளைச் சமூகமயப்படுத்துபவள் என்ற கருத்துண்டு.

‘ஆலயம்’ என்ற பாடல் ஆலய வழிபாட்டு முறைகளையும் ஒழுக்க முறைமைகளையும் எடுத்துக் கூறி ‘அம்மா’ என்ற முதல் உறவைக்காட்டி தாய்மையின் உயிர்த் துடிப்பை வடித்துக்காட்டுகின்றது.

‘அம்மா எங்கள் செல்வம்
அவளே அழியாச் செல்வம்
எம்மைக் காவல் செய்வார்
அன்பை மழையெனப் பொழிவாள்’

அடுத்துக் கூறுகின்றார்

நோய்ப் பிணி வந்தால் மருந்தாவாள்
பால் தனைச் சுரந்தே விருந்தாவாள்
காய் கனி தந்தே மகிழ்ந்திடுவாள்
கற்பகத் தருவாய் வாழ்ந்திடுவாள்

இவ்வாறான வரிகள் சிறுபராயத்திலேயே அர்ப்பணிப்போடு வாழும் வாழ்வே உயர்வானது எனப் புரிய வைத்து சமுதாயத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்க முயற்சி செய்கிறார்.

‘அப்பா’ ‘குரு’ போன்ற பாடல்கள் அவர்களது கடமைகள் எவை என்பது பற்றிச் சுட்டிக் காட்டுகிறார். சிறார் பாடுவதாக காட்டப்பட்டு பெரியவர்களாகிய அம்மா அப்பா குரு தாத்தா போன்றோரின் இவை எனச் சொல்லப்படுவது பாடலாசிரியரின் தனித்துவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

காலைப்பொழுது என்ற பாடல் வரிகளில் வீட்டுப்பாடங்கள் முடிந்தனவா எனச் சரிபார்த்துக் கொள்ளப்பட்டு மீண்டும் திறனை மனதில் பதிய வைத்தும் பாடசாலை செல்வதையும் காட்டியுள்ளார்.

‘தாத்தா’ என்ற பாடலில்
சயிக்கிள் ‘கரியரில்;’ என்னையிருத்தி
சிறுகதை சொல்லியே ஓடிடுவார்
குலுங்கிக் கீழே வீழாதிருக்க
கட்டிப் பிடிக்கவும் சொல்லிடுவார்!

தாத்தாவோடு சிறார்கள் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பர். காரணம் இவர்களிடமிருந்து எதிரான செயற்பாடுகள் எதுவும் வரவே வராது. சிறுபராயத்தில் சிறார்களுக்கு கதை கூறுவதன் முலம் நல்லவிதைகள் அவர்களின் மனதில் ஊன்றப்படுகின்றது.

‘வகுப்பறை’ என்ற பாடல் வகுப்பில் எவ்வாறு இருப்பது என்பதையும், விளையாட்டு என்ற ‘பாடல்’ உடல் உள நலன்கள் எவ்வாறாகக் காக்கப்படும் என்று கூறி வீடுதிரும்பல் என்ற பாடலூடாக சின்ன சின்ன சந்தோசங்கள் சிறார்களுக்காக காத்திருக்கின்றது, ‘மாலைப் பொழுதில்’ நண்பர்களோடு உரையாடுதல், கதைகளைக் கேட்பது, பாடிமகிழ்வது போன்றவை சிறார்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

‘பகிர்ந்துண்ணல்’ என்ற தலைப்பில் வரும் பாடல் மிக முக்கியமாகக் கருதப்படவேண்டும். இன,மத,வர்க்க, பேதம் மிக்க சமுதாயக் கட்டமைப்புக்குள் சிக்குண்டு தவியாய் தவிக்கிறோம். இங்கே பாடலாசிரியர் சிறார்களுக்கு பகிர்ந்துண்ணலின் முக்கியத்துவத்தை வெளியிடுகிறார்.

ஏழை பணக்காரனென்ற
ஏற்றத் தாழ்வுகள் மறப்போமே
கூழைக் குடிப்பினும் பகிர்ந்திங்கே
கொடுத்து வாங்கிக் குடிப்போம்

உண்மையான அகக்கல்வி முறையே இங்கேதான் ஆரம்பிக்கின்றது. சகோதரத்துவம் பகிர்ந்துண்ணல் ஊடாக ஊட்டப்படுகின்றது. பாடலாசிரியரின் பாடல்கள் அனுபவம் செறிந்த எழுத்துக்கள். ஆளுமையைத் தெரியப்படுத்துகின்றன.

Series Navigation

புலவர் சீடன்

புலவர் சீடன்