யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

சு. குணேஸ்வரன்



1. ‘நாட்டியம் – நாடகம்’ நூல் வெளியீடு

கடந்த 11.02.2009 அன்று யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நாடக மன்றத்தினால் திருமதி புனிதவதி சண்முகலிங்கத்தின் ‘நாடகம் – நாட்டியம்’ என்னும் நாடக நூல் வெளியீடு இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திருமதி றஞ்சிதம் குட்டித்தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வாழ்த்துரையினை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வ. செல்வராஜாவும், வெளியீட்டுரையை எழுத்தாளர் ச. இராகவனும், மதிப்பீட்டுரைகளை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் க. திலகநாதனும், ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் பா. இரகுபரனும் நிகழ்த்தினர்.

ஏற்புரையினை நூலாசிரியர் நிகழ்த்தினார். நிகழ்வின்போது நூலில் இடம்பெற்ற நாட்டிய நாடகப் பிரதிகளில் ஒன்றான ‘அறத்தொடு நின்ற அன்பினள்’ என்ற நாட்டிய நாடகமும் கல்லூரி மாணவிகளால் ஆற்றுகை செய்யப்பட்டது. நிகழ்வுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நூலுக்கான ஓர் அறிமுக நிகழ்வு பின்னர் நெல்லியடி – கட்டைவேலி ப நோ. கூ. சங்க கலாசார கூட்டுறவுப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த 13.03.2009 அன்று சங்கத் தலைவர் த. சிதம்பரப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக இந்துநாகரித்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம்> யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி ஆசிரியர் கே. கனகேஸ்வரன் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர். நூலாசிரியர் திருமதி புனிதவதி அவர்கள் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ‘நிஜமல்ல நிழல்கள்’ கவிதை நூல் வெளியீடு

வடமராட்சி இமையாணனைச் சேர்ந்த இளங்கவிஞர் எஸ். செல்வதாசனின் ‘நிஜமல்ல நிழல்கள்’ என்னும் கவிதை நூல் வெளியீடு 23.02.2009 அன்று ஆசிரியர் கே. கனகேஸ்வரன் தலைமையில் இமையாணன் அ. த. க பாடசாலை மண்டபத்தி;ல் இடம்பெற்றது.

வலிகாமம் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளர் இ. தமிழ்மாறன் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். வரவேற்புரையை த. பிரபாகரனும், வாழ்த்துரைகளை இமையாணன் அ. த. க பாடசாலை ஆசிரியர் கா. சிவம், மற்றும் க. பாலன் ஆகியோர் நிகழ்த்தினர்.

வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இரா. இராஜேஸ்கண்ணனும், மதிப்பீட்டுரையை யா/அம்பன் அ. மி. த. க பாடசாலை ஆசிரியர் சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர். நன்றியுரையை செ. லக்சுமிகாந்தன் நிகழ்த்தினார். நூலாசிரியர் எஸ். செல்வதாசன் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்