உள் பயணம்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

வைதீஸ்வரன்


இப்போதெல்லாம் பயணம் போவதென்றால் பயமாக
இருக்கிறது. வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில்
தான் சாத்தியமாகும் போலிருக்கிறது. வெளியே நடப்பதற்கு
தெருவும் இல்லை காற்றும் இல்லை.
வீட்டிற்குள்ளிருந்து வெளியே ஒரு வாகனத்துக்குள் பதுங்கிக்
கொண்டு மீண்டும் போகிற இடத்துக்குள் பதுங்கிக் கொள்ள
வேண்டிய பரிதாப நிலை இன்றைய சராசரி மனிதனுக்கு நேர்ந்து
விட்டது .
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று
சொல்லமுடிந்த ஒரு இறந்த காலம் இங்கே இறந்தே விட்டது.

இன்று கவிதைகள் அவ்வளவு சுலபமாக வெளி நடையில்
கிடைப்பதில்லை.. நாராசமான வாகன ஒலிகளும் சுவற்றோடு
உயிருக்கு பயந்து நகரும் பாதசாரிகளும் நாற்சந்துகளில்
ஏதாவது ஒரு பள்ளிக் கூடத்துக்கு பக்கத்தில் கும்பல் கும்பலாக
குடிக்கும் மதுக் கடைகளின் மதுர கீதங்களும் நரகத்தில்
நாம் சற்றும் வித்யாசமில்லாமல் வாழ்வதற்கு சௌகரியமான
அனுபவமாக இருக்கிறது. நம் கவிதைகளும் இந்த அழகைத் தான்
சொல்ல வேண்டியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமை கொள்கைகளில் அடிப்படையான ஒன்றான
ஒரு தனி மனிதன் தடங்கலின்றி அச்சமின்றி அன்றாடம் நடமாடும்
சுதந்திரம் இன்று அறை குறையாகத் தான் நடைமுறையில்
அரசியல் நிர்வாகிகளால் அமுல் படுத்தப் படுகிறது..
இப்படி நடை தள்ளாடிப் போன மனிதன் இன்றைய வீதிகளை
தன்னுடைய விதியாக ஒப்புக் கொண்டு ஊமையாகி போய் கொண்டிருக்
கிறான். தன்னுடைய அடிப்படை சௌகரியங்களை உரிமையை
உரத்த குரலில் கேட்டுப் பெற போதிய அவகாசமோ சக்தியோ
அவனுக்கு இல்லை.. அப்படி குரல் எழுப்பினாலும் அது சரியான
பான்மையோடு கவனிக்கப் படுமா என்று அவனுக்கு ஐயமாக இருக்
கிறது..
மேலை நாடுகளில் சில தடங்கல்களை நீக்குவதற்காக கட்டிய
வீட்டையே இடம் பெயர்த்து நகர்த்துகிறார்கள். ஒரு நகரத்தின்
மொத்த அமைப்பின் கலைத் தன்மை பழுது பட்டு விடாமல் ஒவ்வொரு
விஸ்தரிப்பையும் ஒவ்வொரு தெருவையும் ஒவ்வொரு வீட்டின்
கட்டிட அமைப்பின் பொருத்தத்தையும் பார்த்து பார்த்து திட்டம்
இடுகிறார்கள்.
இங்கே வீடுகள் கட்ட அனுமதி கொடுத்தபிறகு தெருவும்
இன்ன பிற சௌகரியங்களும் யோசிக்கப் படுகின்றன…
யாருடைய அஜாக்கிரதையாலோ நகரங்களில் திடீர்
திடீரென்று குப்பங்களிலும் ஏழைக் குடியிருப்புகளிலும் தீப்பிடித்து
ஒட்டுமொத்தமாக சாம்பலாவதை நாம் பார்க்கிறோம் ..அது ஒரு
நல்ல விபத்து தான். ஆனாலும் அந்த இடங்களில் மீண்டும்
எழுப்பப் படும் அடுக்ககங்கள் பழைய குப்பத்தின் அசௌகரி
யங்களை தக்க வைத்துக் கொண்டது போல் தோன்றுகின்றது.
ஒரு சமூக நல பணியாளர் சராசரி மக்களுக்கு தெருக்களின்
சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவத்துவதற்காக அறிவுரை
வாசகங்களை தெரு முனைகளில் எழுதி வைக்க வேண்டுமென்று
ஆசைப் பட்டார்.. நானும் ஆசையுடன் ஒரு வாசகத்தை எழுதிக்
கொடுத்தேன் ..
”’ குப்பைகளை தெருவில் போடாதே – பிறகு
தெருவைக் குப்பைக்குள் தேட வேண்டியிருக்கும் !!
அந்த பணியாளர் சிரித்து விட்டு ”இது கவிதை போல் இருக்கிறது..
இது சரி வராது.. ” என்று சொல்லிவிட்டு ”இங்கே குப்பைகளைப்
போடாதீர்கள் ” என்று எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதி
வைத்தார்.
அது யாருக்கும் புரியவில்லை என்பதை அங்கே கிடந்த
குப்பை கூளங்கள் பறை சாற்றிக் கொண்டிருந்தன !!

–வைதீஸ்வரன் –

Series Navigation

வைதீஸ்வரன்

வைதீஸ்வரன்