ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

லதா ராமகிருஷ்ணன்


ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!

எழுதியவர் – லதா ராமகிருஷ்ணன்
செயலர் – தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்
பொருளாளர் – வெல்·பேர் ·பவுண்டேஷன்
ஆ·ப் தி பிளைண்ட்

“இருட்டில் படிக்கும் எமது விழிகள்
சுட்டு விரல்கள்”

_கவிஞர் கோ.கண்ணனின் கவிதை வரிகள் இவை. ஆறே புள்ளிகளில் உலகின் அத்தனை மொழிகளையும் பார்வையற்றவர்களும் கற்க வழிசெய்தவர் லூயி பிரெயில்! அவருடைய 200ஆவது ஆண்டுநிறைவு விழா இந்த ஒரு வருடகாலமாக உலகெங்கும் பல்வேறு விழிப்புணர்வு இயக்கங்களின் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. சற்றே கனமான தாளில் மேடிட்டுக் காணப்படும் விதத்தில் அமையும் இந்த ஆறு புள்ளிகளின் பலதரப்பட்ட சேர்க்கைகள் பல்வேறு எழுத்துக்களை ஒவ்வொரு மொழியிலும் உணர்த்தி நிற்கின்றன. பிரெயிலின் உதவியோடு பார்வையற்றவர்கள் கல்வியறிவோடு கூட மொழியறிவு, உலக அறிவு போன்றவற்றையும் அடைய முடிகிறது. இன்று பார்வையற்றவர்கள் ஒலிநாடா, கணினி போன்றவற்றின் உதவியுடன் உயர்கல்வி கற்றும், மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு சவாலான பணிகளில் திறம்பட இயங்கி வருகின்றனர். என்றாலும், தங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும், சுயசார்புடைமைக்கும் பிரெயில் தான் இன்றளவும் ஆதாரமாக விளங்குகிறது என்று அவர்கள் ஒரே குரலில் தெரியப்படுத்துகின்றனர்.

லூயி பிரெய்லின் 200ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, லூயி பிரெயில் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கத்துடனும், பார்வையற்றவர்களாலும் மொழிபெயர்ப்பாளர்களாய் திறம்பட இயங்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்துடனும், வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி ப்ளைண்ட் என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு கேட்டுக் கொண்டதன்பேரில் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கமும், ‘வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட்’ம் இணைந்து பார்வையற்றவர்களுக்கான மொழிபெயர்ப்புப் பட்டறை ஒன்றை 12.10.08 அன்று பிற்பகல் 2 மணி முதல் சென்னை எழும்பூரிலுள்ள ஜீவனஜோதி அரங்கில் நடத்தின.

வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி ப்ளைண்டின் நிறுவனரும், தலைவருமான டாக்டர். ஜி.ஜெயராமன் ( இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலப் பேராசிரியராகத் திறம்படப் பணியாற்றியவர். இப்பொழுது மொழிபெயர்ப்புத் துறையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்; திரு. சிவராமன் (சென்னை மாநிலக் கல்லூரி விரிவுரையாளர்; செயல்திறனும், சமூகப் பிரக்ஞையும் நிறைய உள்ள இளைஞர். இவருடைய முயற்சியால் பார்வையற்றவர்களில் கணினிப் பயிற்சியும், தேர்ச்சியும் என்ற பொருளில் சமீபத்தில் சென்னையில் ஒரு செயல்விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் அமைப்பின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் ஒரு அமர்வாக இடம்பெற்ற இந்த கருத்தரங்கிற்கு கணினி சார் தொழிற்துறைகளைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் கணினியில் பார்வையற்றவர்கள் திறம்பட இயங்கிக் காட்டினர். அதன் விளைவாக, ஒரு சில நிறுவனங்கள் சில பார்வையற்றவர்களை சமீப சில மாதங்களில் வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளன), திரு.ரகுராமன் (உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து வருகிறார்; தற்காலப் பிரச்னைகள் குறித்து அழுத்தமான பல கருத்துக்களை எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுதி வருகிறார்), திரு.உதயராஜ் ( சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்), மற்றும் சில பார்க்குந்திறன் கொண்ட கல்லூரி மாணவர்களும் இந்தப் பட்டறையில் கலந்து கொண்டு லூயி ப்ரெயில் குறித்த எழுத்தாக்கங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தனர்.

பயிலரங்கில் கலந்து கொள்ளும் பார்வையற்றவர்களுக்கு மொழிபெயர்க்க வேண்டிய பிரதியை வாசித்துக் காட்டவும், அவர்கள் மொழிபெயர்ப்பதை எழுதித் தருவதிலும் உதவுவதற்காக மாணாக்கர்கள் சிலரும், வேறு சில ஆர்வலர்களும் பயிலரங்கில் பங்கு கொண்டனர்). யாரும் யாரிடமும் கலந்தாலோசித்து மொழிபெயர்ப்பை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அரங்கில் சில அகராதிகள் வைக்கப்பட்டன. பங்கேற்கும் பார்வையற்றவர், அவருக்குப் படித்துக் காட்டுபவர், அவர் சொல்வதை எழுதுபவர் என்று இருவர் அல்லது மூவர் அடங்கிய சிறு குழுக்களாகப் பிரிந்து அமர்ந்து கொண்டு மொழிபெயர்ப்பை மேற்கொண்டவர்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டரை மணிநேர முடிவில் வட்டமாக அமர்ந்து தங்களுடைய மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் ஆர்.சிவகுமார், இதுவரை தலைமைப் பொறுப்பிலிருந்த பேராசிரியர் கோச்சடை, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆரம்பமுதலே பலவகைகளிலும் உதவிபுரிந்து வரும், சமூக அக்கறை கொண்ட திரு.த.வெ.நடராஜன் மற்றும் திரு. ஜெயராமன் பயிலரங்கும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலும் பயனுள்ள முறையில் நடந்தேறப் பலவகையிலும் உறுதுணையாக இருந்தனர். மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், மொழிபெயர்ப்பு குறித்து நாடிய தெளிவுகளுக்கும் தக்க பதில்களை திரு. சிவகுமார், திரு.கோச்சடை, திரு.ஜெயராமன் ஆகியோர் முன்வைத்தனர்.ஒரு மொழிபெயர்ப்பை செய்யத் தொடங்குவதற்கு முன்பு யாருக்கு , எதற்கு, எந்த நோக்கத்திற்கு முதலிய கேள்விகளுக்கு நமக்கு நாமே நிறைவான பதிலளித்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றார் திரு.ஜெயராமன். மொழிபெயர்க்க அமரும்போது மொழிபெயர்ப்பு குறித்த எந்தக் கருத்தியலும் நமக்கு உதவ வராது என்று குறிப்பிட்ட திரு.ஆர்.சிவகுமார் சிறந்த மொழிபெயர்ப்பாளராக இயங்க கடுமையான உழைப்பும், வாசிக்கும் ஆர்வமும், பயிற்சியும் மிகவும் அவசியம் என்றார்.இலக்குமொழிக் கலாச்சாரம், மரபோடு பொருந்துமளவில் மொழிபெயர்ப்பது சிறந்தது என்று குறிப்பிட்ட திரு.கோச்சடை தமிழில் மொழிபெயர்க்கும்போது முடிந்தவரை தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும் என்றார். ‘தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்க’த்தின் தோற்றத்திற்கும், செயல்பாட்டிற்கும் முக்கியக் காரணகர்த்தாக்களில் ஒருவரான தோழியர் அமரந்த்தா அன்று வெளியூரில் இருந்ததால் பயிலரங்கம் பயனுள்ளதாக அமைய தனது வாழ்த்துகளை அனுப்பித் தந்திருந்தார்.

மொழிபெயர்ப்பில் கலந்து கொண்டவர்கள், குறிப்பாக மாணாக்கர்கள் இத்தகைய பயிலரங்கங்கள் இன்னும் பலர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், தொடர்ந்த இடைவெளிகளில் இத்தகைய மொழிபெயர்ப்புப் பயிலரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

AMET பல்கலைக் கழகத்தின் marine technology மற்றும் naval architecture ஆகிய துறைகளிலிருந்து நான்கைந்து மாணாக்கர்கள் ஆர்வத்துடன் பயிலரங்கில் பங்கேற்ற பார்வையற்றவர்களுக்கு உதவியாளர்களாக இயங்கி பயிலரங்கம் சிறக்க பெரிதும் உதவினார்கள். AMET கல்லூரியின் Students Affairs In-Charge காப்டன் ராஜேஷ் தனது மாணாக்கர்களை இந்தப் பயிலரங்கிற்கு உதவி செய்ய அனுப்பி வைத்ததோடு தானும் பயிலரங்கில் கலந்து கொண்டார். அவரும், அவரது தந்தையுமாக திரு. ஜெயராமன் மொழிபெயர்க்க படித்துக் காட்டியும், எழுதித் தந்தும் ஆர்வத்தோடு உதவி செய்தார்கள்.

மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை மாணாக்கர்கள் சிலரும் பயிலரங்கில் கலந்து கொண்டு, அல்லது பார்வையற்ற பங்கேற்பாளர்களுக்கு படித்துக் காட்டியும், எழுதித் தந்தும் உதவி நல்கினார்கள்.

இது ஒரு ஆரம்பகட்ட முயற்சி என்பதால் குறைந்த அளவு எண்ணிக்கையில் தான் பங்கேற்பாளர்களை இடம்பெறச் செய்திருந்தோம் போதிய நிதிவசதியிருந்தால் இத்தகைய மொழிபெயர்ப்புப் பயிலரங்குகளைத் தொடர்ந்த ரீதியிலும், இன்னும் அகல்விரிவாகவும் நடத்த முடியும்.

பயிலரங்கில் மொழிபெயர்க்கப்பட்டவைகளை புத்தகமாக வெளியிட வேண்டும். தற்கால நடப்புகள் குறித்த ரகுராமனின் கட்டுரைகள், பார்வையற்ற மாணவரான திரு.வெங்கடேஷன் எங்களிடம் தந்து வைத்துள்ள அவருடைய சிறுகதைகள் முதலியவற்றை அச்சிலும், பிரெய்ல் எழுத்திலும் நூலாக வெளியிட வேண்டும். லூயி ப்ரெய்ல் 200ஆவது ஆண்டுந்றைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் வெல்·பேர் ·பவுண்டேஷன் ஆ·ப் தி பிளைண்ட் பார்வையற்ற பள்ளி மாணாக்கர்கள், பெண்கள் முதலியோர்க்குச் சில போட்டிகள் நடத்தவுள்ளது. தமிழ்மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மொழிபெயர்ப்புத்திறன் குறித்த பல பார்வைகள், அணுகுமுறைகள், அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகளை, தமிழ்மொழிபெயர்ப்பாளர்களால் எழுதப்பட்டவைகளை தொடர்ந்த ரீதியில் நூலாக வெளியிடும் எண்ணம் கொண்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளிலும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதால் முடிந்தவர்கள் முடிந்த உதவிகளை இந்த இரண்டு அமைப்புகளுக்கும் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

மொழிபெயர்ப்புப் பயிலரங்கப் புகைப்படங்கள்:

1) திரு.ஜெயராமனுக்கு படித்துக் காட்டுகிறார் காப்டன் ராஜேஷ். திரு. ஜெயராமன் கூறுவதை எழுதுகிறார் காப்டன் ராஜேஷின் தந்தை.

2) திரு.ஜெயராமன், திரு.ஆர்.சிவகுமார், திரு. கோச்சடை

3) கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.

4) திரு.ஆர்.சிவகுமார் உரையாற்றுகிறார்.

5) திரு. ரகுராம் மொழிபெயர்த்துக் கூற அதை மாணவரொருவர் எழுதுகிறார்.

7) மாணவர் உதயராஜ் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்