திசைமாறிய பறவைகளின் கூடு

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

புதிய மாதவி


கவிஞர் சக்தி அருளானந்தம் மாநகரத்தில் திசைமாறித் தவிக்கும் பறவைகளின்
தவிப்பை தன் விரிந்த கவிதை வானத்தில் படம் பிடிக்கிறார்.
திசை மாறி பறந்து வந்த பறவைகள்,
பருவகால புலம் பெயர்தலாய் பல நுறு மைல்கள் கடந்து வந்து தன்னை, தன் இருப்பை முட்டையிட்டு அடைகாக்கும் பறவைகள்,
குஞ்சாக வெளிவந்ததெல்லாம் தன் கூட்டில் வளர வேண்டிய காக்கையின் குஞ்சுகள்
மட்டுமல்ல என்ற புரிதலுடன் வாடகைத் தாயாக மாறும் பறவைகள்,
சபிக்கப்பட்ட குயிலின் சோகக்கதை, கண்களில் பிறந்து வளர்ந்த கிராமத்து
மண்ணின் நினைவுகளை அடைகாத்துக் கொண்டு அடைக்கலம் தந்த நகரத் தெருக்களில் அகதியாய் அலையும் வாழ்க்கை, எதிர்பார்ப்புகளூடன் பிறந்த
மண்ணில் கால்வைக்கும் போது நினைவுகளில் வழ்ந்து கொண்டிருந்த எல்லா
தடயங்களும் மொத்தமாக காணாமல் போய்விடும் சோகம்…

இப்படியாக வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் கவிதைகளில்
கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் கவிஞர்.
கிராமத்து பின்னணியும் அதற்கான ஏக்கமும் கவிஞரின் பெரும்பாலான கவிதைகளில் பளிச்சிடுகிறது.
அந்த ஏக்கம் வெறும் இழப்பின் தாக்கமாக மட்டுமே இல்லாமல் சமூகப்பார்வையுடன்
முன்வைக்கப்படுவது மற்ற கவிஞர்களிடமிருந்து சக்தி அருளானந்தத்தை
வேறுபடுத்தும் புள்ளி.
உங்கள் கவனித்திற்கு என்ற கவிதையில் மிகச்சிறப்பாக இக்கருத்துருவாக்கத்தை
முன்வைத்திருப்பார்., இழந்து போன ஆற்றின் நினைவுகள், இன்று அதே ஆறு
சாக்கடையாய் மாறிப்போயிருக்கும் அவலம் இரண்டு கருத்துகளையும் இணைக்கும்போது சுற்றுப்புறச்சூழல் சார்ந்த சமூக அக்கறை என்ற தளத்தில்
கவிதைப் பயணிக்கிறது.

பொய்க்காத பருவமழை
இடைவிடாத அடைமழையாய்
சாக்கடையாய் உருமாறிய ஆற்றில்
கரையடங்கா பெருவெள்ளம்
கெக்கலித்து எக்காளமிட்டு
கழிவுகளூடன் ஓடுவதை
கால் நனைக்க முடியா துயருடன்
கண்டு நிற்கும் நம் குழந்தைகளை
கவனிக்காமல் கடக்கிறோம்
நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு
முன்பு நீயும் நானும்
தன்னுள் மூழ்கித் திளைத்து
முக்குளித்த நாள்களை கூறி அழததை
கவனிக்காமல் கடந்ததைப் போலவே.

இக்கவிதையின் ‘நம் கழிவுகளால் நாறிக்கிடந்த ஆறு” என்ற வரிகள்
சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம்
என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்லும் வலிமைமிக்கவை.

ஆண்டாளும் மீராவும் கொண்ட காதல் பக்தியை கொண்டாடும் சமுதாயம்
தன் வீட்டில் ஓர் ஆண்டாளையோ மீராவையோ இன்றுவரை உருவாக்கவில்லை.
பெண்ணிய வரலாற்றில் ஒரே ஒரு ஆண்டாள் தான்! ஏன்?

மானசீகமாய் காதலாகி கசிவது
கடவுளோடாயினும்
உனக்கிசைவில்லை
மீராவோ திலகவதியோ

என்று ‘வெளி” கவிதையில் ஆணாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருக்கும்
பக்தியின் அடித்தளத்தை அசைத்துக் காட்டுவார் கவிஞர்.

இன்னொரு கவிதை ‘நிர்வாணம்’ முழுக்க முழுக்க பெண்ணிய விடுதலையை
பேசுகிறது.

எனக்குப் பொருந்தும் உடைகளை
எடுத்து வராமல்
உங்கள் ஆடைகளுக்கு
பொருத்தப் பார்க்கிறீர்களே என்னை
விடுங்கள் என்னை
நிர்வாணமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்

என்று ஒலிக்கிறது.
பெண், பெண்ணின் மொழி, பெண் விடுதலை அனைத்தும் பெண்ணிடமிருந்து
அவள் அனுபவத்திலிருந்து பிறக்க வேண்டும்

துரத்தல்களும் விடுபடல்களும் என்ற கவிதையில் இதுவரை யாரும் பேசாத
ஒரு கருப்பொருளை கவிதையாக்கியிருக்கிறார் சக்தி.
அதிகாலையில் 7 மணிக்கு சிறுவர்கள் பள்ளிக்கு பொதிசுமந்து கொண்டு
வரிசை வரிசையாக செல்வதைப் பார்க்கிறொம். 7 மணிக்கு தயாராக
அக்குழந்தை 6 மணிக்காவது எழுந்து தன்னைத் தாயார் செய்து கொள்ள
வேண்டி வரும். அப்படியான வாழ்க்கையை

கடிகார முட்களின் கூர் நுனிகள்
துளையிடுகின்றன
அவள் தூக்கத்தை

தூக்க கலக்கத்துடன் எழுந்தமர்கிறாள்
காற்றிறங்கும் பலூனென
கண்களில் வடிகிறது தூக்கம்

என்று காட்சிப் படுத்தி,

புத்தகப் பை மதிய உணவு
தண்ணீர்ப்பாட்டில் கொறிக்க சிறு தீனி
பொதியுடன் ஓடுவாள்
வருகையை ஒலிக்கும்
பள்ளிப் பேருந்தில் ஏற

கிடைத்த பொந்தினில்
பொதிந்து கொள்கையில்
கழிக்க மறந்த காலைக் கடனை
நினைவூட்டும் அடிவயிற்றின் வலி

என்று ஒரு நிதர்சனமான உண்மையை பேசியிருப்பார். கிட்டத்தட்ட எல்லோரும்
அறிந்த ஒரு விசயம், பிரச்சனை எனினும் இதை ஒரு சமூகப் பிரச்சனையாக,
பள்ளி குழந்தைகளின் பிரச்சனையாக பார்க்கத் தவறி இருக்கிறோம் இதுகாறும்
என்பதை சக்தியின் கவிதைகள் வாசகனுக்கு உணர்த்துவதில் வெற்றி
பெற்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

சக்தி கவிஞர் மட்டுமல்ல நல்ல ஓவியரும் கூட. அவர் கவிதைகளில்
மின்னும் காட்சிகளும் அக்காட்சிகளின் நுணுக்கமும் அவருக்குள் இருக்கும்
தூரிகையின் சாட்சியங்கள்.

நகரமழை என்ற கவிதையில் தார்ச்சாலையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியைக்
காட்சி படுத்துவார்.

மகரந்த தூளில்
சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல்
படபடக்கும் பட்டுப் பூச்சிகளாய்
தார்ச் சாலைத் தொட்டுத் தெறிக்கும்
மழைத்துளிகள்

என்பார். கரிய நிறத்தில் தார்ச்சாலை. தார்ச்சாலையில் படும் மழைத்துளியின்
தெறிப்பு.. மின்னும் சூரிய ஒளியில் வைரம் கலந்து பொன்னிறமாய்..
அக்காட்சி மகரந்தம் ஓட்டிய பட்டுப்ப்பூச்சியாய் மின்னுவாதக் காட்டும்
உவமையும் காட்சியும் ஓர் அற்புதமான ஓவியத்திரை.

ஞானம் கவிதையில் மரபியலான மெய்யியலுக்குள் நுழைந்து சக்தி தன் ஞானத்தை
எப்படி சிறைவைத்தார் என்பது புரியவில்லை. எல்லாம் விதி என்றும்
கல் சிலையாவதும் படியாவதும் நம் வசமில்லை என்றும் நினைப்பதும் தவறு.
யாரும் சிலைகளை படிகளாக்கலாம், படிகளை நிமிரித்து நடுகல்லாக்கி
வழிபடவும் செய்யலாம்.

அமர்பவன்
சித்தார்த்தனாயிருந்தாலே
போதி மரம் புத்தனாக்கும்
என்பது நிச்சயமாக புத்தன் என்ற மனிதன் புகட்டிய ஞானம் அல்ல.

பறவைகள் புறக்கணித்த நகரம்,
பிள்ளை பிடிப்பவள் அறை,
என்னோடு வந்து விட்ட என் கிராமம்,
பழையன கழிதலில்,
முன்பு பறவைகள் இருந்தன

மேற்சொன்ன கவிதைகளின் கிராமத்து வாசமும் சக்தி வரைந்திருக்கும்
கவிதைகளின் ஓவியமும் சக்தியின் தூரிகைக்கு பெருமை சேர்க்கும்
கவிதை ஓவியங்கள். கவிதைகளுடன் சேர்ந்திருக்கும் சக்தியின்
கோட்டோவியங்கள் கவிதைகளுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.சக்திக்கு வாழ்த்துகளுடன்,

சக்தியின் நட்சத்திர கவிதை

பழையன கழிதலில்
——————-

அணையாத அடுப்பு அன்றெங்கள் அடுப்பு
ஆக்கி அரித்து ஆகக் கடைசியாய்
அம்மா அடுப்பில் வைப்பாள் பால்பானையை
கனன்று கொண்டிருக்கும் ராட்டினத்தணலில்
சிவந்து முருகி ஏடுகட்டும் பால்மணம்
வீடு நிறைக்கும்.

அரையாடப் பருவத்தில் ஆற்றில் குளிக்கையில்
அரையாட உருவி அதிலேயே மீன்பிடிப்போம்
அக்காவும் நானும்
அயிரைக் குஞ்சுகளின் தலைவால் கிள்ளி
அம்மியில் சாந்தரைத்து அவள் வைக்கும்
மீன்குழம்பு
அவ்வளவு ருசி.. அதுவும் சட்டியில்தான்.

வெங்கோடை நாள்களிலோ
அசலூர் ஆட்கள் தாகம் தணிக்க
ஆற்று மணல் குவித்து திண்ணை மூலையில்
தண்ணீர் நிறைத்து வைப்பாள்
புத்தம் புது பானையொன்றில்
‘ஆத்தா நலாயிருப்பே’ அவங்க
வாய் வார்த்தை ஒன்ணு போதும்
வம்சம் தழைக்குமென்பாள்.

பொங்கலுக்கும் புரட்டாசிக்கும்
கொசவங்குடி கொண்டுவரும்
சட்டிப் பானைகளை தட்டிப் பார்த்து
அவள் வாங்குவது தனியழகு

அய்யனுக்குத் தெரியாமல் சேர்க்கும் சிறுவாடு
அரிசி பருப்பு உப்பு புளி மிளகாய்
அஞ்சறைச் சாமான்கள் அஞ்சும் மூணும்
அத்தனையும் அடுக்குப் பானைகளில்தான்.

‘சம்சாரி வீட்டில் சட்டிப்பான ஒடஞ்சா
வூட்டுக்கு ஆவாது’ அம்மாவின் நம்பிக்கை
கவனத்துடன் கையாள செய்யும்.

பொழுதெல்லாம் சட்டிப்பானைகளில்
புழங்கிய அம்மா
பானைகளற்ற என் வீட்ட
வீடென்பாளா?

———–

நூல்: பறவைகள் புறக்கணித்த நகரம்,
33 கவிதைகள்
வெளியீடு: இருவாட்சி பதிப்பகம், சென்னை 11.
பக்: 72, விலை. ரூ 40/

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை