எந்த ரகம்?

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

ச.ஜயலக்ஷ்மி


ராஜதானி எக்ஸ்பிரஸ் சரியாக நாலு மணிக்குக் கிளம்பி விட்டது.என் தங்கை மாலுவுக்கும் அவள் கணவருக்கும்
டாடா சொல்லி விட்டு பெட்டிக்குள் பார்வையைச் செலுத்தினேன்.ஒரு இளம் தம்பதி அவர்களின் ஆறு வயதுப் பையன்.என் சீட்டில்
வெங்கட் ராவ் என்பவர்.லிஸ்டில் பெயர் பார்த்தேன்.30 வயதிருக்கலாம்.ஸைட் பெர்த்தில் அம்மாவும் பிள்ளையுமாக இருவர்.தாயாருக்கு 50-55 பையன் பெயர் ஸோனுவாம்.அப்படித்தான் கூப்பிட்டாள்.அவன் ஒரு காதில் மட்டும் கடுக்கன் அணிந்திருந்தான்.கறுப்புப் பேண்டும் கிளிப் பச்சையில் கட்டம் போட்ட முழுக்கைச் சட்டையும்.நல்ல உயரம்.எடுப்பான மூக்கு.

நான் டில்லியிலிருந்து விஜயவாடா போய்க்கொண்டிருந்தேன். எதிரிலிருந்த தம்பதியும் ராவும் விஜயவாடா போவ
தாகச் சொன்னார்கள்.கூர்காமிலிருந்து விஜயவாடா போவதாகவும் பையனின் லீவு முடிந்ததும் திரும்பலாம் என்றார்கள்.விஜயவாடவில் இறங்கும் பொழுது என் பெட்டிகளை இறக்கி உதவி செய்யும்படி மாலு சொல்லிவிட்டுப் போயிருந்தாள்.எனக்கு அவ்வளவாக ஹிந்தி பேச வராது.நிதானமாகப் பேசினால் கொஞ்சம் புரிந்து கொள்வேன்.ராவும் மற்ற இருவரும் தெலுங்கில் பேசி அறிமுகம் செய்து கொண் டார்கள்.ஸைட் பெர்த்தில் இருந்தவர்களைப் பார்த்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் தோன்றியது.ஆனால் அந்த அம்மா இடது பக்கம் மூக்குத்தி போட்டிருந்தாள்.பொதுவாக தமிழ் நாட்டில் வலது பக்கம் தான் மூக்குத்தி போடுவார்கள்.கைகளில் கலர் கலராக நிறைய கண்ணாடி வளையல்கள்.இடதுகையில் வாட்ச்.கோல்டு ·ப்ரேம் மூக்குக் கண்ணாடி.காதுமடலில் வரிசையாக வித விதமான தோடுகள்.கொஞ்சம் வித்தியாசமான அலங்காரம்!புடவை தோளில் நிற்க மறுத்து அடிக்கடி நழுவிக்கொண்டே இருந்தது.நல்ல உயரம் இருந்த போதிலும் அதிகமான பருமன்!புடவை நழுவிக்கொண்டே யிருப்பதைப் பார்க்க எனக்கு தர்ம சங்கடம்!புடவையை மடிப்புவைத்து பின் செய்து கொள்ளக் கூடாதோ என்று தோன்றியது.இதற்குள் பாக் செய்யப்பட்ட மாம்பழ ஜூஸ் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.ஸைட் பெர்த் அம்மா மட்டும் இன்னொரு பாக்கெட் வேணுமென்றாள்.பாக்கெட் வழங்கப் பட்டது.

ரயிலில் வழக்கமாகக் கொடுக்கும் கம்பளி,தலையணை,போர்வைகள் வந்தன.மணி ஆறு தான் ஆகியிருந்தபோதிலும்
எல்லோருமே சிரமபரிகாரமாகம் செய்துகொள்ள விரும்பினார்கள்.சிலர் படுக்கவும் தயாரானார்கள்.”நீங்கள் வேண்டுமானால் தாராளமாக காலை நீட்டி படுத்துக் கொள்ளுங்கள்”என்றார் ராவ்.அவர் குறிப்பறிந்து சொன்னது சந்தோஷமாக இருந்தது.ராவ் மேல் பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டார்.நானும் தாராளமாக காலை நீட்டி படுத்துக் கொண்டேன்.ஸோனுவின் அம்மா சத்தமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள்.ஹிந்தி,இங்லீஷ், தமிழ் என ஒரே மணிப்ரவாள நடை!ரயிலின் ஆட்டத்தில் நான் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டேன்.திடீரென்று ஒரே சத்தமும் கூப்பாடுமாகக் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தேன்.

மேல் பெர்த்தில் போய் படுத்த ராவ் ஸோனுவின் அம்மாவின் சத்தமான பேச்சினால் தூங்கமுடியாமல் போனதால்
ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.அவ்வளவுதான் ஸோனுவின் அம்மாவுக்கு ஒரெ கோபம்! தன் மணிப்ரவாள நடையில் வசை பாட
ஆரம்பித்து விட்டாள்.”ஆறு மணிக்கு என்ன தூக்கம் வேண்டியிருக்கு?பத்து மனிக்கு மேல பேசினால் நீ கேள்வி கேக்கலாம்.ரயில்ல பேசக் கூடாதுன்னு சொல்ல நீ யாரு?இது என்ன ஒங்கப்பா வாஙின ரயிலா?யூ ப்ளடி ·பூல்” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.
”இந்த வீணாவ யாருன்னு நெனச்சிண்டிருக்க?பெயர் வீணாவாம்.வீணை என்ன பாவம் செய்ததோ?யார் தான் அந்தப் பெயரைவைத்
தார்களோ!ஸோனுவும் தன் பங்குக்கு ”வயசில பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியுமா?”என்று கத்திக் கொண்டிருந்தான்.
வயதில் பெரயவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அவன் அம்மாவுக்கே தெரியவில்லையே!ராவ் போர்வையை இழுத்துப்
போர்த்திக் கொண்டு படுத்து விட்டார்.

ஒரு வழியாக இந்த அமளியெல்லாம் அடங்கிய பின் வீணாவின் தங்கை அடுத்த பெட்டியிலிருந்தவள் ஸ்வீட்
டப்பாவுடன் வந்தாள்.வீணா நாலைந்து ஸ்வீட் சாப்பிட்டாள்.ஆனால் தங்கையை ஏதோ குறை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.அவள்
எழுந்துபோக முயற்ச்சித்த போது,”ஏண்டி ஒங்க ஆம்படையான விட்டுட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க மாட்டியோ?நாங்கள்ளாம்
இப்படி ஒண்னும் அலய மாட்டோம்.அவரை ஒருத்தரும் கூட்டிண்டு போகமாட்டா” என்றாள் அதட்டும் குரலில்.தங்கை கணவருக்கு 55-60 வயதிருக்கும்.வீண அப்படிப் பேசியதை என்னால் ரசிக்க முடியவில்லை.நல்லவேளையாக எங்கள் பெட்டியில் இருந்தவர்களுக்கு வீணா சொன்னது புரியவில்லை.

இரவு தக்காளிசூப் வந்தபோதும் வீணா இன்னொன்று வேணும் என்றாள்.சூப் குடித்த பின் ஸோனு ஒரு டப்பாவை எடுத்து பலவிதமான மாத்திரைகளை வீணாவுக்குக் கொடுத்தான்.இத்தனை மாத்திரைகள் ஏன் என்று தோன்றியது.மறுநாள் காலையில் டீ
வந்தபோதும் ஸோனு ஒரு டீ அதிகம் கேட்டான்.செர்வர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுப் போனதை நான் கவனித்தேன்.வீணா
ஸோனுவிடம் ஏதேதோ பேசிக்கொண்டே யிருந்தாள்.”ஒனக்குக் கண்றோலே இல்லை.ஒன் ஒடம்பு தான் இங்கேயிருக்கு. புத்தியெல்லாம் எங்கேயோயிருக்கு.அவபின்னால போயிடுத்து.”என்றாள்.எனக்கு ஸோனுவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.ஸோனுவை விட்டு விட்டு எனெனிடம் பேச ஆரம்பித்தாள்.நான் யார்,எங்கே போகிறேன்,எத்தனை குழந்தைகள்,என்னை வழியனுப்ப வந்தது யார்,என் கணவர் வரவில்லையா போன்ற கேள்விகள்.பிறகு தன்னைப் பற்றியும் சொன்னாள்.

வீணா பிறந்து வளர்ந்தது எல்லாம் வடக்கே தான் பாட்டதாரியாம்.வயது 52.தமிழ்நாடே பிடிக்காதாம்.கணவர் 2வருடங்
களுக்கு முன்னால் காலமாகி விட்டார்.சொந்த ·ப்ளட் டில்லியில் ரோஹிணியில் இருக்கிறது.ஸோனு ஒரே பையன்.திருமணமாகி விட்டது மருமகள் டெலிவரிக்காக அம்மாவீடு போயிருக்கிறாளவள் ரொம்ப ராங்கிக்காரி.குழந்தை பிறந்து ஒரு வருஷமாகிறதுஷாஅபரேஷன் ஆகியிருப்பதால் இன்னும் வரவில்லை.நாட்டுப் பெண் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பு.படிப்பும் அவ்வளவாகக் கிடையாது.அவளுக்கே அவ்வளவு ராங்கித்தனம் என்றால் இவ்வளவு படிச்ச எனக்கு எவ்வளவு ராங்கித்தனம் இருக்கும்?[அதான் பார்த்தாலே தெரிகிறதே!] இவனுக்கும் படிப்பும் போறாது வேலையும் போறாது.எல்லாமே மட்டம்” என்று ஸோனுவை மட்டம் தட்டினாள்.ஹிந்தியில் ஸோனா என்றால் தங்கம்.[இவள் தானே அந்தப் பெயரை அவனுக்கு வைத்திருப்பாள்!}

எனக்கு ஸோனுவின் நிலைமை புரிந்தது.டில்லியில் குறைந்த சம்பளத்தில் காலம் கழிப்பது மிகவும் கஷ்டம்.வீடு
வீணாவின் பெயரில் இருப்பதாலும் அவள் பென்ஷன் அவ்னுக்குத் தேவை என்பதாலும் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக இருக்க
வேண்டிய சூழ்நிலை!ரயிலில் இங்லீஷ் பேப்பர் கொடுத்ததும் ஸோனுவிடம்”பேப்பர் படி ஏ டு இஜட் படிக்கணும்.அப்பத்தான் நாலு
விஷயம் தெரியும்.ஒன்னோட இங்லீஷ் டெவெலப் ஆகும்”.ஒரு குழந்தைக்குத் தந்தையான ஸோனு என் கண்களில் ஹைஸ்கூல் மாணவனாகத் தோன்றினான்!மறுபடியும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.என் பெயர் ஜயலக்ஷ்மி என்று தெரிந்தவுடன் ”என்.ஆரூடம் பலித்து விட்டது! என் மன்னியின் பெயரும் அதுவே.அவளும் பார்க்க உங்களைப் போலவேயிருப்பாள்.எனக்கு அரூடம் தெரியும்னாலும் நீங்க கேட்டா சொல்ல முடியாது.குளிக்காமல் சொன்னால் பலிக்காது.என் காலடில பணமாக் கொட்டும். கபீர் என்ன சொல்லியிருகார் தெரியுமா?”மளமள வெண்று இரண்டு மூன்று தோஹே பாடல்கள் வெளி வந்தன.”எனக்கு ஜோயமும் தெரியும்.ஜயேந்திரர் அரெஸ்ட் ஆனதுக்கு அவர் ஜாதகத்தில இருக்கும் ராகு தான் காரணம். டில்லில நான் கோவில்,சர்ச்.மசூதி,குருத்வாரா,எல்லாம் போவேன் இதோ பாத்தேளா நான் மருதாணி இட்டுண்டிருக்கேன்.இப்ப வசந்த நவராத்திரி இல்லியா?நம்பள்ள விடோஸ் மருதாணி இட்டுக்க மாட்டா.ஆனா, நான் தேவி பக்தை அதனால மருதாணி இட்டுப்பேன்” என்று மூச்சு விடாமல் பேசினாள்.

இதற்குள் ஸோனு மேல் பெர்த்தில் போய் காலோடு தலைவரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.”ஏண்டா,
மூஞ்சிய மூடிண்டிருக்க?செத்துப்போனாத் தான் மூஞ்சிய மூடுவா.” ஒரு அம்மாவால் எப்படி இப்படிப் பேச முடிகிறது?
தமிழ் புரியா விட்டாலும் எப்படியோ புரிந்து கொண்டு அந்த தம்பதிகளும் கண்களாலேயே பேசிக் கொண்டதை நான் கவனித்தேன்.
”ஸோனு,இந்தப் புக்கைப்படி என்று ஒரு சின்ன புக்கை கொடுத்தாள்.அவன் அரை மனதோடு கையை நீட்டியதும் என்னடா பாக்கற?
துர்கா ஸ்தோத்திரம் படி என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுத் தானும் ஒரு ஷிர்டி பாபா படம் போட்ட புத்தகத்தை எடுத்துப் பிரித்து
படுத்துக் கொண்டு படிக்கலானாள்.

டில்லியிலிருந்து விஜயவாடா வரை பயணம் போரடிக்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தேன்.வீணா இருந்த
தால் பயணம் சுவாரஸ்யமாகவே யிருந்தது.என் டயரியை எடுத்து ஏதோ எழுத ஆரம்பித்ததும் “ஏன் மாமி என்னப் பத்திஎழுதப் போறேளா” வீணாவின் குரல் என்னை யோசிக்க வைத்தது.சாப்பிடும் போது அவள் சாப்பிட்ட விதமும் அவள் பேச்சும் வித்தியாசமாக இருந்தது. பட்டதாரி என்கிறாள்,டில்லியி§யே வளர்ந்திருக்கிறாள்,பெரிதாகச் சத்தம் போட்டு ஏப்பம் விடுகிறாள்.இது என்ன நாகரீகம்?ஒரு சமயம் பார்த்தால் ராக்ஷஸி போல் அதட்டுகிறாள்,ஒரு சமயம் பார்த்தால் மிகவும் அன்பாகப் பேசுகிறாள்.ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி” என்று கமலஹாசன் பாடிய பாடல் நினைவு வந்தது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீணாவின் குரல் என் கவனத்தை ஈர்த்தது.” எங்கிட்ட ஒன் வாலாட்டாதே.ஒன் ஸஸ¥ரால் வீட்ல போய் பேசு. ஒனக்கு ஸெக்ஸ் வேணும்.நீ ஒரு பைத்தியம்.ஒரு பொண்டாட்டி போனா ஆயிரம் பொண்டாட்டி கெடைப்பா.ஆனா ஒரு அம்மா போனா இன்னொரு அம்மா கெடைக்க மாட்டா, தெரிஞ்சுக்கோ.எல்லாப் பொண்களும் குட்டிக் குட்டிக் கொழந்தைகளைத் தூக்கிண்டு வரா.இவ கொழந்தை பெத்து ஒரு வயசாகப் போறது.மஹாராணிக்கு வர முடியலை. செருப்பக் கழட்டி அடிக்கணும்”. ஒரு பொது இடத்தில் இப்படிகூடத் தன் மகனைமட்டமாகப் பேச முடியுமா.இப்படிப் பேசும் மாமியாரிடம் அந்தப் பெண் என்ன பாடு பட்டிருப்பாளோ?வீணாவை எந்த ரகத்தில் சேர்ப்பது?

ஒரே ஒரு தரமாவது ஸோனு தன் கோபத்தைக் காட்டமாட்டானா என்று நான் நினைத்தது வீண் போக வில்லை.
”என்ன, ரொம்ப பேசற.கொஞ்சம் வாயை மூடிண்டு வர மாட்டியா? அப்பா, ஸோனு வாயைத் திறந்து விட்டான்!வீணா ஏதோ முணு
முணுத்தவாறு இருந்தாள்.விஜயவாடா வந்ததும் நான் இற.ங்கினேன்.நான் கிளம்பு முன் ஸோனு வேகமாக என்னிடம் வந்தான்
‘மாமி,அம்மாவுக்குக் கொஞ்ச நாளா மெண்டல் டிப்ரஷன் ஆகியிருக்கு.டாக்டர் அவளை எங்காவது வெளில கூட்டிண்டு போய்விட்டு
வாங்கோன்னு அட்வைஸ் பண்னியிருக்கார்.அதனால தஞ்சாவூர்,கன்யாகமாரி போய் வரலாம்னு கெளம்பினோம்” என்றான்
ரயில் கிளம்பி விடவே ஸோனு போய் விட்டான்.

உண்மையிலேயே வீணாவுக்கு மெந்தல் டிப்ரஷனா,அல்லது அவன் அம்மாவை பற்றியும் அவனைப் பற்றியும் மற்றவர்கள்
தவறாக நினைத்து விடக் கூடாதே என்ற எண்ணமா?புரியவில்லை.வீணா எந்த ரகம்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்


vannaijaya@hotmail.com

Series Navigation

ச.ஜயலக்ஷ்மி

ச.ஜயலக்ஷ்மி