படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

விஜயன்


தினகரன்
ஒரு புதிய அனுபவம்
வெள்ளி, அக்டோபர் 5 2007

தமிழகத்தில் தொழில் வளம் பெருக விரைவில் புதிய தொழில் கொள்ளை (கொள்கை) இந்த தலைப்புச் செய்தியில் கொள்கை என்று இருந்த வாசகம் என் மூளைக்கு கொள்ளை என்றே பதிவானது.
இப்படி சில வார்த்தைகள் அதன் வரி வடிவத்திற்கு மாறாக வேறு பொருளில் உங்களுக்கும் பதிவாகியிருக்கிறதா? அப்படி முரணாகப் பதிவாகிய செய்திக்கு கீழே மற்றொரு தலைப்புச்செய்தி
கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி, பா.ஜ.காவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.
2004ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்ட மன்ற தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் 224 இடங்களில் ஜனதாதள் 59, காங்கிரஸ் 69, ப.ஜா.கா 79 இதர கட்சியினர் 17 என்று யாருக்கும் பொரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.
கர்நாடகத்தில் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மையில்லாத ஒரு நிலை ஏற்பட்டு முதல் 20 மாதம் தரம் சிங் (காங்கிரஸ்) தலைமையில் ஜனதாதள் கூட்டணியில் ஒரு அரசு அமைத்து, 20 மாதத்தில், அது தேவகவுடாவின் மகன் குமாரசாமி (ஜனதாதளம் கட்சித்தலைவர்) தலைமையில் அந்த அரசுக்கு ஆதரவு வாபஸ் பெற்று அது கலைந்து, பஜாக அரசும், குமாரசாமி அரசும் தலா 20 மாதத்திற்கு மாற்றி, மாற்றி சுழற்ச்சியில் தலைமை ஏற்பதாக ஒப்பந்தமாகி குமாரசாமி முதல் 20 மாதம் அக்டோபர் 3 2007 வரை முதல்வராகவும், அதற்கு பின் ப.ஜா.க பிரதிநிதி யெடியாரப்பா முதல்வராகவும் ஆட்சி செய்வது என்ற “அதிகார பகிர்வு” ஒப்பந்தத்தில் குமாரசாமியை தலைமையாகக் கொண்ட மைனாரிட்டி அரசு ப.ஜா.க. துணையுடன் பதவியேற்றது. தற்போது 20 ஓவர் கிரிக்கெட் சீசன். ஓரு போட்டியில் முதலில் பாட் செய்த ஒரு அணி, தான் ஆடிய பிறகு அடுத்த அணி பேட் செய்யுமுன் ஆட்டத்தை விட்டு வெளியேறினால், அதை அழுகுனி ஆட்டம் என்று சொல்லி வெளியேறும் அணியை, ஆட்டத்தில் இருந்து ரத்து செய்ய மாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.
அரசியலமைப்பு பரிச்சயம் இல்லாதவர்களுக்கு ஒரு சிறிய சட்ட விளக்கம். நம் அரசியல் அமைப்பில் கட்சி ஜனநாயகம்தான் ஆதாரம். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் அறுதி பெரும்பாண்மை பெற்ற தனிக்கட்சி இருப்பின் அக்கட்சியின் தலைமையில் அல்லது எந்த கட்சியும் அறுதி பெரும்பாண்மை இல்லாவிடில் எந்தக்கட்சியின் தலைமையை உள்ளிருந்தோ அல்லது வெளியிருந்தோ ஆதரிக்கும் கட்சி ஆதரவுடன் அறுதிப் பெரும்பாண்மை ஆதரவு உள்ள கட்சியை ஆளுநர் ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் அப்படி பதவி ஏற்றவுடன் ஒரு குறுகிய காலத்தில் (ஒரு வாரத்தில்) ப்ளோர்டெஸ்ட் சட்டமன்றத்தில் ஓட்டு மூலம் ஆட்சி செய்பவர் தன் பெரும்பாண்மை பலத்தை நிரூபித்தால் ஆட்சி தொடரலாம். கடந்த சில தேர்தல்;களில், மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி, எந்த கட்சியும் தனியாக அறுதிப் பெரும்பாண்மை பெறாமல், கூட்டணி ஆட்சியே அமைகிறது. ஓரு வேளை மக்கள் எந்த கட்சியையும் முழுக்க நம்பாதது தான் காரணமோ?
நீடிக்க கூடியக் கூட்டணி என்பது ஒரு ஆக்ஸிமொரான் முரண்பாடான சொல் கூட்டணி என்பதே ஒரு சந்தர்ப்பவாதம். காங்கிரஸ் செக்யுலார், ஜனதாதளம் செக்யுலார் சேர்ந்து ஆட்சி அமைத்து பின் விரைவில் கலைத்து, ஜனதா தளம் செக்யுலார், ப.ஜா.கா கம்யுனல் பார்ட்டியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பவர்கள்; மறுபடி அதை வாபஸ் பெறும்போது செக்யுலார் கம்யுனல் தத்துவத்தை உதிர்ப்பார்கள். முதலில் என்.டி.ஏ.வில் ப.ஜா.கா. கூட்டணியில் இருந்த திமுக தற்போது யு.பி.ஏ.வில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. எனவே இந்த கட்சிகளின் அன்றைய பேச்சும்ஈ இன்றைய பேச்சும் ஒன்றல்ல் அப்பட்டமான சந்தர்ப்ப வாதம். அரசியலில் விவஸ்த்தைக் கிடையாது என்பதை மெருகாக நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை என்று சொல்லி பிதற்றுவார்கள்.
மீண்டும் குமாரசாமிக்கே வருவோம். ஓரு கட்சியின் சார்பில் பதவிப்பிரமானம் எடுக்கும் நபர் தான் அரசியலமைப்புச் சட்டப்படியும் சட்டப்படி ஆட்சி செய்வேன் என்று பிரமானம்; எடுத்தால்தான் முறைப்படி பதவி ஏற்க முடியும். ப.ஜா.கவும் ஜனதா தளமும் இரண்டு கட்சியுமே தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு ஆட்சி பகிர்வு ஒப்பந்தத்துடன் ஆட்சி தொடங்கி அதனடிப்படையில் கவர்னர், ஆட்சி அமைக்க ஒப்புதல் அளித்து, பெரும் பாண்மையையும் கூட்டணியாக நிரூபித்து ஆட்சி அமைத்து அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் தன் பங்கு ஆட்சியை 20 மாதம் அனுபவித்துவிட்டு, மற்றவர் பங்கு வரும்போது ஓடி ஒளிந்தால் அது சட்டப்படி சரியா? அழுகுனி ஆட்டம் இல்லையா? அதுபோன்று நினைத்து நினைத்து ஒப்பந்தத்தை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் “ஏன் ரத்து செய்யக்கூடாது?”
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆட்சியில் மாறி, மாறி முடிவெடுக்க எந்த மக்கள் அதிகாரம் கொடுத்தார்கள்? எந்த சட்டப்பிரிவில்? “எனவே கவர்னர் ஜனதா தளத்தின் ஆட்சி ஒப்பந்தத்தை அது சட்டப்படி செல்லத்தக்கது” என்று அமல்படுத்த வேண்டும் அப்படி அவருக்கு அதிகாரம் இல்லை என்று நினைத்தால் ஒப்பந்தத்தை மீறும் “கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும்.” ஒரு அரசாங்கம் அல்லது தனியார் காண்டராக்ட் மீறப்பட்டால், ஒப்பந்தக்காரரை ரத்து செய்வதில்லையா? பளாக்லிஸ்ட் செய்வதில்லையா? அப்படியானால், ஒப்பந்தத்தை மீறும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை மட்டும் ஏன் ரத்து செய்யக்கூடாது?
இந்திய அரசியலில் பிராந்தியக் கட்சிகளின் இந்த போக்குக்கு காரணம் சட்டத்தின் ஆட்சி, ரூல் ஆப் லா நலிந்து இருப்பதுதான் காரணம் என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை. சட்டத்தை மீறுவதே ஒரு ஜனநாயக அங்கீகாரமாக ஓட்டு அரசியல் இருப்பது ஜனநாயகத்தில் ஒரு கேலி கூத்து. நம் ஜனநாயகத்தில் கட்சி அரசியல், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட வேண்டும் என்றால் “அரசியல் கட்சிகளின் வரம்பு மீறிய செயல்களைக் கட்டுப்படுத்த ஒரு சட்டமும் அதைக் கண்காணிக்க ஒரு தனி அமைப்பும் தேவை”. மக்கள் பிரதிநிதிச் சட்டத்தில் “கட்சிகளை நெறிப்படுத்தும் ஒரு சட்டத்திருத்தம்” உடனடித் தேவை. கட்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கலைத்து தேர்தல் வைப்பதால் தவறு செய்யும் கட்சி ஞானஸ்தானம் பெறுவதில்லை.
நம்ம ஊரில்தான் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல அரசியல் கட்சிகள் எந்த சட்டக் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டவையல்ல, “இது என்ன சட்டத்தின் ஆட்சி? அரசியல் கட்சிக்கு, எந்த சட்டக் கட்டுப்பாடும் இல்லாமல்? அதனால் தான் அரசியல் (கட்சி அரசியல்) என்பது கேடு கெட்டவர்களின் கடைசி புகலிடம்” என்று சாமுவேல் ஜான்சன் சொன்னது உண்மையோ!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்