எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

சுப்ரபாரதிமணியன்


கொங்கு நாட்டு எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாண்டு அறுபது வயதாகிறது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் இருந்த காலத்தில் கவிதைகளுடன் அவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் 12 நாவல்களும், சில மொழிபெயர்ப்பு நூல்களும் அடங்கும்.இலக்கியஅரசியல், மற்றும் தன்னை முன் நிறுத்தி செயல்படாதத்தன்மை தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களை தனிமைப்படுத்துவதை கண்கூடாகக் காணமுடியும். “ஈரம் கசிந்த நிலம் ” நாவலுக்காக கல்கத்தா பாரதிய பாஸா பரிசு, கோவை கஸ்தூரி žனிவாசன் பரிசு, தமிழ அரசுப் பரிசு உட்பட பல முக்கியப் பரிசுகளைப் பெற்றவர். சாகித்ய அகாதமியின் மாநிலக் குழு உறுப்பினராக இருப்பவர்.

ஆர்.சண்முகசுந்தரத்தின் பிரதேச களனும்,மனிதர்களும் ரவீந்திரனின் படப்புகளில் காணப்படுபவை. சண்முகசுந்தரத்துடனான நேரடிப்பரிச்சயமும், அவரின் படைப்புகளின் தாக்கமும் சுலபமாகத்தென்படும். நிதானமும், படைப்பிலிருந்து விலகாமல் கதை மாந்தர்களுடன் ஒன்றி ரவீந்திரன் இயங்குவதும் படைப்பின் முழு யாதார்த்தை உள்ளீடாகக் கொண்டிருப்பதும் விளங்கும். இவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களைப்பற்றியவையேயாகும். விளிம்பு நிலை மக்களைப்பற்றி தலித் அடையாளங்களுடன் இன்றைக்குப் படைப்புகள் பிரஸ்தாபிக்கப்படுகிற போது இருபது ஆண்டுகளுக்கு மேலாக இவரின் படைப்புகள் தலித் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருப்பதை அடையாளம் காண முடியும். கொங்கு பிரதேசத்தின் பல்வேறு இனக் குழு வாழ்க்கையைப்பிரதிபலிப்பவையாகவும், வட்டார சமூக வரலாறாகவும், சமூகத்தோடு உறவு கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து பதிவு செய்து வருபவர்.

இவரின் சமீபத்திய நாவல் ” மணிய பேரா “.
இந்த நாவல் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளுக்குள்ளும், அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து வரும் இருளர்கள் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையைப்பற்றிப் பேசுகிறது. இருளர்கள் கடவுளின் குழந்தைகள்.காடுகளில் கிடைக்கும் இயற்கை உணவுப் பொருட்களூம் தாவரங்களும், மரங்களும் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள். ஆனாலும் வெளியிலிருந்து வரும் மனிதர்களாலும் அவர்களைச் சார்ந்தவர்களின் கலாச்சார நியதிகளாலும் அவ்வப்போது தடுமாறுகிறவர்கள். தேன் கூட்டை அழித்து தேனை சேகரித்து விற்பது, விறகு பொறுக்குவது போன்றவை அவர்களின் அடிப்படைத்தொழிலாகிறது. மரங்களை வெட்ட, கடத்த அவர்கள் நிர்பந்தப்படுத்தப்படும் போது நிலைகுலைந்து போகிறார்கள். சிமெண்ட் கம்பனி வேலையை நாடிச் செல்லவேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் மனிதர்களால் பாலியல் ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள். உலகமயமாகக்கலும் அதன் பாதிப்புகளும் இருளர்களை žர்குலைக்கிறது. பெரும் முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் காடுகளை பங்கிட்டுக் கொண்டு ஆதிவாசிகளை காடுகளிலிருந்துப் பிரிக்கிறார்கள். தங்களின் ஆதாரமான மண்ணிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு பிரிக்கப்படுகிறார்கள். இயற்கை வளங்கள் பேராசைக்காக பங்கிடப்படுகின்றன. பல கொள்ளையர்களின் பாதுகாவல் இடமாக தங்கள் காடுகள் மாறுவதும் அதன’ல் காவல்துறை போன்றோரின் அத்துமீறல்களும் அவர்களை தடுமாற வைக்கின்றன. குடும்ப ரீதியானச் சிதைவும், தங்களின் இனக்குழு மரபு குறித்த நிலை மாறுபாடும் உணரப்படுகிறது. மத மாற்றங்கள் ஒரு வகையில் தங்களின் சுதந்திரத்தை உணர வைக்கிறதாக இருக்கிறது.

“பொம்பளை அத்து மீறினா பதியே அழியும் ” அன்ற நம்பிக்கை பெண்களை கட்டுப்பாட்டிற்குள் இயங்க வைக்கிறது. குடியானன் பெண்சாதி என்பது அவப்பெயர்போலவும் நிலைத்து விடுகிறது. பூமாதேவி பெத்த முதல் மக்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தாலும் தங்களின் žரழிவை உணர்ந்தவர்கள்.குடிசையில் ஒரு பகுதி சாமிக்கென்றாகி பூசாரி அருள் வந்து ஆடுவது பலருக்கு ஆறுதலாக இருக்கிறது.கொம்பன் யானைகளின் அட்டகாசம் மக்களை தூர ஓட வைக்கிறது. அதன் பீறிடல் அபாயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.தேனடைகளை எடுக்கிற மிதப்பில் இருக்கும் போது யானையின் பிளிறல் உயிர் மீது ஆசை கொள்ள வைக்கிறது.செம்மி, வள்ளை போன்ற நாயகளின் துணை வேட்டைக்கு மட்டுமில்லாமல் வாழ்க்கை வழித்தடத்தின் காவலுக்கும் துணையாக இருக்கிறது .ஆறுகளும், சிற்றோடைகளும் தேவார்தமாய் உணரவைக்கிறது .குரங்குகளோடு விளையாடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கிறது.கணவனைப்பிரிய நினைக்கும் பெண்களுக்கு சுலபமாக பந்சாயத்துத் தீர்ப்பும் கிடைக்கிறது.குழந்தைகளோடு தனிமைப்படுத்தப்படும் பெண்கள் தற்கொலை வரைக்கும் சென்று மீண்டு வாழ ஆசைப்படுகிறார்கள். மூப்பன்கள் தூது போய் அலுத்துப்போகிறார்கள். நரி, புலி ஆடுமாடுகளை அடித்துப்போட்டுப்போகிற போது தங்களின் ஜ“வாதாரமே அடிபட்டுப் போவதாய் உணர்கிறார்கள்.

புகை வண்டி இருப்புப் பாதை ஒன்று அவர்களின் மலைப்பிரதேசத்தையும் நகரத்தின் நுழை வாயிலையும் பிரிக்கிறது, மலைப்பகுதியிலிருந்து தப்பித்து வரும் ஜாதி மாறும் காதலர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிற இடமாக புகை வண்டி இருப்புப்பாதையை எடுத்துக் கொள்கிறார்கள். மலைபாம்புகள் அடிக்கடி படுத்துக்கிடக்கும் இடமாக அது இருக்கிறது. நேரமும் காலமும் இடமும் மிருகங்களுக்குத் தெரியுமா என்பது போல் அவை இருப்புப்பாதையை கடந்து போகின்றன், அடிபட்டு சாகின்றன. இடம் தெரியாமல் தப்பி விடும் வலிமையான மிருகங்களின் பிடியில் மனிதர்கள் அகப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.சின்னாம்பதி கற்பழிப்பு நிகழ்ச்சிகளும், வீரப்பனைத் தேடி வரும் காவல்துறையின் அத்து மீறல்களும் ஆதிவாசி மக்களை அலற வைக்கின்றன.புருசன்கள் கைடிவிட்ட பெண்களின் மகன்கள் மாடுமேய்க்கப்போகிற முதல் நாட்களிலேயே விலங்குகளிடம் அகப்பட்டு சாவைத் தொடுகிறார்களள். சாவை மீறின வாழ்க்கைக்காக புகை வண்டிப்பாதையை மீறி சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் , சிறு நகரங்களுக்கும் இடம் பெயர வேண்டி இருக்கிறது.உலகமயமாக்கலின் தாக்கங்கள் தங்களைத் துரத்துவதை உணராமல் கலி காலத்தின் செயல்களாக சிலர் வயிற்றுப்பிழைப்பிற்காக மலைகளை விட்டு கீழ் இறங்குகிறார்கள். இயற்கையும், வனப்பும் அதன் ஜாலங்களும் அவர்களுக்கு கனவுகளாக மாறுகின்றன. தங்களின் தொன்மங்களின் பெருமை கதைகளாகி அவர்களுடன் உலவுகின்றன.

இருளர்களின் ஆதிவாசிப்பெருமைப்பண்புகளும், உரையாடலும், ஏராளமானத் தொன்மங்களின் குவியலும் இந்த நாவலில் தீவிரத்தன்மையுடன் காணக்கிடைக்கிறது.தனிமனித மாற்றங்கள் விரிவாக பதிவாகியிருக்கின்றன.சமூக மாற்றங்களுக்கான தேவையையும், நம்பிக்கையையும் அவை கொண்டிருக்கின்றன என்பதுதான் இவரின் படைப்பின் உள்ளீடாக இருக்கிறது.

( மணியபேரா, திருவரசு புத்தக வெளியீடு, 13, தீனதயாளு தெரு, தி.நகர்
சென்னை-17 . பக்கங்கள் 450., விலை ரூ 110 )
srimukhi@sancharnet.in


Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்