கடித இலக்கியம் – கடிதம் – 31

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 31

மட்றம்பள்ளி
4 2-85
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது. கடிதங்களில் கனவுகளைப் பங்கிட்டுக் கொண்ட பொற்காலம் மலையேறிப் போய்விட்டதோ
என்கிற பிரமை பிறக்கிறது.

எழுதாமலிருப்பதைவிடவும், சாத்தியப்படுகிறதோ சாத்தியப்படாதோ ஒரு விஷயம் சம்பந்தமாக இந்தக் கடிதம் எழுதுவதில் மகிழ்கிறேன்.

திண்டுக்கல்லில், பிப்ரவரி 9,10 (சனி,ஞாயிறு) தேதிகளில், இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசீய சம்மேளனத்தின் இரண்டு நாள் முகாம் நடைபெறுகிறது. JKயும் தேவபாரதியும் 8ஆம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டு 9 காலை திண்டுக்கல் வருகிறார்கள். திருப்பத்தூரிலிருந்து நான், வெங்கடாசலம், தண்டபாணி உள்ளிட்ட ஐவர் குழு ஒன்று 9ஆம் தேதி காலை அங்கு வந்து விடும். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள பல எழுத்தாளர்கள் அங்கு குழுமுவர். 10ஆம் தேதி ஞாயிறு, அணு ஆயுத எதிர்ப்புப் பேரணியும், பொதுக் கூட்டமும். 9ஆம் தேதி எழுத்தாள நண்பர்கள் கதை, கட்டுரை, கவிதை வாசிக்கலாம்; கலந்து பேசலாம்.

தங்களோடு பல நேரங்களில் தொடர்பு கொள்ள விழைகிறேன். காண்பதொன்றே களிப்பு தருகிற விஷயம். சகல வித்தைகளையும் காட்டி ஓய்ந்து, கடிதக் கலை அலுத்துவிட்டது. திண்டுக்கல் வரை இவ்வளவு பெரிய பயணம் போகிறோமே,
இந்த §க்ஷத்திராடனத்தில் சபாவும் சங்கமித்தால் நன்றாயிருக்கும் என்று மனசு நினைக்கிறது. அதுவுமின்றி, எழுத்தாளர் முகாமில், நம் ஆர்க்காட்டு ஜில்லாக்களின் தரப்பில் தாங்கள் இடம் பெறுவதும், நண்பர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்த நேர்வதும் – கடமையை ரொம்ப திவ்யமாக ஆற்றியது போல் ஆகும். தாங்கள் முகாமில் ஒரு சிறுகதையோ அல்லது வேறெதேனும் ஒரு படைப்போ வாசிப்பது சிலாக்கியமாக அமையும். அதற்குத் தக வருக.

வேலைப்பளு, நெருக்கடி, நேரமின்மை முதலிய எல்லா விஷயங்களும் எல்லோர் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வளவு பெரிய நீண்ட அற்புதமான வாழ்நாட்களைக் கவ்வி நிற்பது போதாதா? வெடுக்கென்று பிய்த்துக் கொண்டு இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலாவது, எதிர்பாரா விரைவில், எல்லாம் நல்ல படி அமைய நாம் சந்தித்தால், அது இறையருளுக்கு ஒரு நிரூபணம் போன்றதோர் நிகழ்ச்சியாகாதா – என்றெல்லாம் மனசு ஏங்குகிறது.

நாங்கள் திருப்பத்தூர் – சேலம் – நாமக்கல் – கரூர் – திண்டுக்கல் பாதையில் வருகிறோம். நீங்கள் வருவதானால், தங்களுக்குச் சௌகரியமான பாதையைத் தேர்க! நேரிலேயே சந்தித்து விடுகிற மகிழ்ச்சி கிட்டும் என்று நினக்கிறேன். அவசியம் வருவதற்கு முயற்சி செய்யவும்.

தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்? மனப்பாங்கை விவரியுங்கள். முடிந்தால் எனக்கு, பள்ளி விலாசத்துக்கு 8-2-85 வெள்ளி காலைத் தபாலில் கிடைக்கிற மாதிரியான ஒரு பதிலை எழுதுங்கள்.

தங்கள் பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்