கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்



South Indian Inscriptions Volume V எண் 552இல் திருவையாறு கோயில் கல்வெட்டு ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு விஜயநகர அரசர் வீரசாவன உடையார் காலத்தைச் சேர்ந்ததாகும். சக வருடம் 1303 (கி.பி. 1381) துன்மதி ஆண்டு திருவையாறு கோயிலில் பாண்டிக்குலாசினி வளநாட்டு சந்தலை (சந்திரலேகை என்பதன் திரிபு) கருப்பூரைச் சேர்ந்த கச்சி வீரப் பெருமாள் என்பவரின் மகன் பிள்ளையார்—ஞ்சனன் என்வருக்கு இக்கோயிலில் ‘ஸானான் வர்த்தினை’ என்ற மரியாதையை அல்லது சுதந்திரத்தை (சொகந்தரம் என்று இக்கல்வெட்டின் வரி 16இல் குறிப்பிடப்பட்டுள்ளது) வழங்கியுள்ளார்கள். இச்சுதந்திரத்தைப் பரம்பரைக் காணியாக சந்திராதித்தர் உள்ள வரை அனுபவித்துக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தப் பரம்பரை உரிமையை இக் கச்சிவீரப்பெருமாள் மகனுக்கு வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்த செயல் என்னவென்றால் இக்கோயிலின் மதில் சீர்குலைந்து இற்றுப் போய்க் கிடந்ததைச் சீர்படுத்தி, திருமண்டபத்தை மீண்டும் எழுப்பியது ஆகும். வரி 12, 13, 14 ஆகியவற்றில் இவ்வூரிலிருந்து மனிதர்கள் வேறு ஊர்களுக்குக் குடிபோய் ஊர் பாழாகிக் கிடந்த குறிப்புள்ளது. வரிகள் சிதைந்து போயுள்ளமையால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் படையெடுப்பால் இவ்வூரில் இவ்வழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஊகித்துப் புரிந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள கண்டியூரில் (கண்டூர்) ஏற்பட்ட அழிவுகள் பற்றி வாசப் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.

இத்தகைய சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட மனிதரின் பெயரினை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. —-ஞ்சனன் என்பதுதான் அவருடைய பெயரின் எஞ்சிய பகுதியாக உள்ளது. ஆனால், பிள்ளையார் (இளவரசர்) என்ற பட்டம் இவருக்கு இருப்பதால் இவர் அரச குலத்தவர் என்று நாம் அறிந்துகொள்ளலாம். அது மட்டுமின்றி, வர்த்தனை என்ற வரியினம் (Tax) மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாகும். ஜோடிவர்த்தனை என்ற வரியினம் விஜய நகர அரசர்களின் கல்வெட்டுகளில் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Quitrent என்று குறிப்பிடுவர். நிலத்தின்பால் நீக்க இயலாத அதிகாரபூர்வ உரிமை என்பதே இதன் பொருள். இதனை வசூலிப்பதற்கு அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு1. ஸானான் வர்த்தினை என்ற வழக்கும் இது போன்றதே எனத் தெரிகின்றது. ஆயினும், ஜோடிவர்த்தனைக்கும் முற்பட்ட ஒரு பழமையான வழக்கு என்றோ அல்லது பழமையான ஓர் அதிகாரத்தினை அங்கீகரித்து விஜய நகர அரசினர் அறிமுகப்படுத்திய வழக்கு என்றோ இதற்கு நாம் பொருள் கொள்ளலாம்.

சேர நாட்டில் கி.பி. 9-10ஆம் நூற்றாண்டுகளில் கோயின்மை, சாணாயிமை என்ற இரண்டு வரியினங்கள் குறிப்பிடப்படுகின்றன (பக்கம் 21, கேரள தேச வரலாறு, பதிப்பாசிரியர்: T. சந்திரசேகரன், கீழ்த்திசை சுவடிகள் நூலகப் பதிப்பு, சென்னை, 1960). கோயிலதிகாரியாக நியமிக்கப்பட்டுப் பயிற்சிபெறும் இளவரசர் தாம் அரசராவதற்கு முன்பு வசூலிக்கின்ற வரிகள் இவை. இவற்றுள் சாணாயிமை என்ற வரி ‘சான்றாண்மை வரியாக’ இருக்கலாம். அதாவது நீதிமன்றத்தில் வழக்கினைப் பதிவு செய்வதற்கு உரிய கட்டணம் போன்ற வரியாக இதனைக் கருதலாம். எனவே, ஸானான் வர்த்தினை, சாணாயிமை போன்ற இத்தகைய வரியினங்களைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டாலே சான்றோர் இனத்தவர்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உயர்வும் உரிமையும் எத்தகையன என்பது தெளிவாக விளங்கும்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழ நாட்டிலிருந்த நிலை பற்றி திருவையாறு கல்வெட்டால் அறிந்தோம். தென்பாண்டி நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட பிள்ளையார் கோயிலின் முன் நிற்கும் கல்தூண் கல்வெட்டை இந்திய அளவீட்டுத் துறையினர் படி எடுத்துள்ளனர் (ARE 271/1941). கி.பி. 1750இல் மதுரை பகுதியின் Renter-ஆகக் கருதப்பட்ட தீர்த்தாரப்ப முதலியார் ஆட்சி அதிகாரக் கல்வெட்டில் தென்பாண்டி நாட்டில் ஆட்சியதிகாரம் பெற்றிருந்த குட்டம் நாடார்கள் மற்றும் வேளாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன.

இக்கல்வெட்டில் வரும் குறிப்பில் “எந்த ஊரில் ஊரான் ஆன நிலைமைக்காரன் வாழ்ந்தாலும் அவர்களுக்கு வரி இல்லை” என்ற ஆணையைத் தீர்த்தாரப்ப முதலியார் (வேளாள குலத்தவர்) பொறித்து வைத்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். தென்பாண்டி நாட்டில் சில மரியாதைகளை அண்மைக்காலம் வரை நிலைமைக்காரர் என்ற நாடார் குலப் பிரபுக்கள் தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

அடிக்குறிப்பு:

1. தென்பாண்டி நாட்டில் நாடார்கள் quitrent வசூலித்ததற்கான ஓர் ஆதாரம்:
From all that I can find about them I am inclined to agree with those who consider them to have been the original possessors of the country. One strong argument in favour of this conjecture is that in the southern part of Tinnevelly the highest class of Shanars called Nadars are the acknowledged proprietors of the soil and even when a Nadar has sold a piece of land, he retains the right to a sort of quit-rent. Indeed, the system is very like that of our lords of Manor
– South Indian Sketches, Miss S. Tucker, James Nisbet & Co, 1842.

nellai.nedumaran@gmail.com

Series Navigation