மொழியின் கைதிகள்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

செல்வன்


“மனிதர்கள் உண்மையை உருவாக்குகிறார்கள்,கண்டுபிடிப்பதில்லை” என்று தாமஸ் குன் “கோபர்னிகன் ரிவல்யுஷன்” என்ற புத்தகதில் எழுதினார்.அவர் அறிவியலை மனிதனின் மற்றொரு மொழியாக தான் பார்த்தார்.அறிவியல் மற்றும் மற்ற துறைகள் நமக்கு காட்டும் உலகம் மனிதனால் உருவாக்கப்பட்ட உலகம் என்று இதற்கு பொருள்.வாக்கியங்களை உருவாக்கும் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு மொழியாகும்.

“உலகம் இருக்கிறது” என்ற சொற்றொடருக்கும் “உண்மை இருக்கிறது” என்ற சொற்றொடருக்கும் வித்யாசம் உள்ளது.மனிதன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் இருக்கும்,செடி,கொடி,மரம் எல்லாம் இருக்கும்.ஆனால் மனிதன் இல்லவிட்டால் உண்மை என்பது மறைந்துவிடும்.

இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் “வாக்கியங்கள் இல்லாவிட்டால் உண்மை என்பது இல்லை” என்ற அர்த்தத்தை உணர வேன்டும்.”வாக்கியங்கள் தான் உண்மையாகவோ பொய்யாகவோ முடியும்.வாக்கியங்கள் என்பவை மனிதனாலும், மனிதன் படைத்த மொழியாலும் உருவாக்கப்பட்டவை.ஆக மனிதன் மறைந்தாலும்,மனிதனால் உருவான மொழிகள் மறைந்தாலும் உண்மை என்பதும் மறைந்துவிடும்.

வாக்கியங்களை உருவாக்கும் ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு மொழியாகும்.உண்மை என்பது தனியாக அந்தரத்தில் தொங்கிக்கொன்டிருப்பதில்லை.மனிதன் வந்து என்னை கண்டு பிடிக்கட்டும் என்று அது காத்திருப்பதில்லை.உலகை மொழி மூலம் விவரிக்கும் மனிதன் ஒவ்வொரு நாளும் அந்த உலகை புதிய வர்னனைகளால் வர்ணிக்கிறான்.நேற்று இருந்த வர்ணனயை விட இன்று செய்யும் வர்ணனை அவனுக்கு பயன்படுகிறது.இன்றுள்ள வர்ணனயை விட நாளை வரப்போகும் வர்ணனை அவனுக்கு பயன்படும்.பயன்படும் வர்ணனயை அவன் உண்மை என்று சொல்கிறான்.ஆக எந்த வர்ணனை அவனுக்கு பலன் அளிக்கிறதோ அது தான் உண்மை.

இதில் ‘பலன்’ என்றால் என்ன என்று விளக்க வேண்டும்.இந்த பலன் என்பது நபரை பொறுத்து மாறும்.ஆக உண்மை என்பதும் நபரை பொருத்து மாறும்.ஓரு சிறு உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன்.

அழகான ஆப்பிள் ஒன்று மேஜயில் உள்ளது.இதை ஒரு வர்ண நிறுவன ஆராயிச்சியாளர்,ஒரு வாடிக்கையாளர்,ஆகியோர் பார்கின்றனர். வர்ணனைகள் உருவாகின்றன.

வாடிக்கையாளர்: “ஆப்பிள் சிவப்பு வண்ணத்தில் உள்ளது.”

வர்ண நிறுவன ஆராயசியாளர்:இந்த ஆப்பிள் மேல் பாகம் சப்பயர் ரெட் என்ற நிறத்திலும்,கீழ் பாகம் வெளிர்பச்சை கலந்த சிவப்புனிறத்திலும் உள்ளது.

இந்த இரு வர்ணைகலிலும் வாடிக்கையாளர் சொன்ன வர்ணனயை விட வ.ஆ சொன்ன வர்னனை உண்மைக்கு அருகே உள்ளது என்று கூற முடியாது.வெறும் கண்ணில் 7,000,000 வண்ணங்களை பார்க்கலாம்.என்ன வெளிச்சதில் பார்கிறோம் என்பதில் துவங்கி,எந்த கருவியில் பார்கிறோம் என்பது வரை நிறங்க்ள் வேறுபடும்.ஒரு ஆப்பிள் நிறத்தை பற்றி பல கோடிக்கனக்கான வர்ணனைகளை உருவாக்க முடியும்.ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வர்ணனை சரியாகவே தோன்றும்.

ஆக இந்த சூழலில் “அந்த ஆப்பிளுக்கு உண்மையான நிறம் என ஒன்று உள்ளது.அதை ஒவ்வொருவரும் கண்டு பிடிக்க முயல்கிறார்கள்” என சொல்வது தவறு.”ஒவ்வொருவரும் அந்த ஆப்பிளை வர்னிக்கிறார்கள்” என்று சொல்வது தான் சரி.

“உண்மை என்பது கன்டுபிடிக்கப்படுவது அல்ல,உருவாக்கப்படுவது” என்று தாமஸ் குன் சொன்னதின் அர்த்தம் இதுதான்.

நாம் வாழும் உலகம் வர்ணனைகளால் புரிந்து கொள்ளப்படும் உலகம்.விதவிதமான துறைகள் விதவிதமான வர்னனைகளை உருவாக்குகின்றன.நமக்கு முன் இருந்தவர்கள் உலகை அவர்கள் பார்த்த விதத்தில் வர்னித்து அந்த வர்னனைகளை நமக்கு கொடுத்தார்கள்.நாம் உலகை புரிந்து கொள்வது அவர்கள் வர்னனைகளை வைத்து தான்.நாமும் உலகை நாம் பார்த்த விதத்தில்,புது வர்னனைகளை உருவாக்கி விவரித்து நம் பின்வரும் சந்ததிகளுக்கு வர்னனைகளை விட்டு செல்கிறோம்.அவர்கள் புது வர்னனைகளை உருவாக்குவார்கள்.

பழைய வர்னனைகலிலிருந்து புது வர்ணணைகளுக்கு ஒரு சமுகம் அல்லது மனிதன் நகருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல.ஐரோப்பாவை எடுத்துக்கொன்டால் 2000 வருடம் முன்பு “ஓரினசேர்க்கை பெருங்குற்றம்” என்ற வர்ணணை இருந்தது.சமூகம் மாற மாற 19தவது நூற்றான்டில் அந்த வர்ணணை “ஓரினசேர்க்கை தவறு ஆனால் சட்டப்படி குற்றமல்ல” என்று மாறி பிறகு இப்போது “ஓரின சேர்க்கை தவறு அல்ல,ஆனால் ஓரினத் திருமணம் தவறு” என்று வந்து நிற்கிறது.இன்னும் 10 அல்லது 20 வருடத்தில் “ஓரினத் திருமணம் சட்டப்படி சரி” என்ற வர்னனைக்கு அமெரிக்க சமுதாயம் மாறலாம்.

ரோர்ட்டி இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்தார்.”உன் முன்னிருந்த சமுதாயம் உனக்கு கொடுத்த வர்ணனைகள் எப்படி உருவாக்கபட்டவை என்று பார்” என்று சொன்னார்.”கண்னை மூடிகொன்டு அதை ஓத்துகொள்ளவும் வேண்டாம்,எதிர்க்கவும் வேன்டாம்” என்றார்.

ஆனால் நீட்சே இதற்கு ஒருபடி மேலே போனார்.’உடைத்து எறி சமூகம் உருவாக்கிய உன்னை” என்று நீட்ஷே முழங்கினார்.”அடுத்தவன் உன் எண்ணங்களை,உனக்கான வர்னனைகளை,உன் வாழ்க்கையை உருவாக்குவது நீ ஒரு மனிதனாக தோற்று விட்டாய் என்பதன் பொருள்” என்றார் அவர்.தான் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை வேறொருவர் திட்டமிடுவதை அவர் வெறுத்தார்.சமுதாயத்தின் பல்வேறு மொழிகளும்,பல்வேறு துறைகளும் தன் வாழ்கை,எண்ணம்,சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து வைத்திருப்பதையும் ,தான் அது போலவே ஆயிருப்பதயும் அவரால் கவிதாயானி ப்ளூம் போலவே தாஙக முடியவில்லை.

சமூகம் உருவாக்கிய மொழி எனும் சிறையை உடைத்தெறிந்து நம்மை நாமே புது மொழிகளையும்,புது வர்ணனைகளையும் கொண்டு உருவாக்கிக்கொள்ளுதல் ப்ளூம் சொன்னதுபோல் “நம்மை நாமே படைத்துக் கொள்ளுதல்”(giving birth to oneself) போன்றது.

நம்மை சிறைபிடிக்க மொழி பயன்படுத்தும் கருவி உண்மையாகும்.அறிவியலின் முன்னேற்ரத்தை அழித்து,மனிதனின் சிந்தனையை தடை செய்து,மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி உண்மையாகும்.

உண்மை என்பது கடவுளுக்கு அடுத்து மதிக்கப்படுவது.ஆனால் இந்த உண்மை என்பது ஒரு மாயமான் .உண்மை என்பதை நம்மில் பலர் Reality என்று நினைத்து கொண்டுள்ளோம்.ஆனால் Appearance மற்றும் reality நடுவே உள்ள வித்யாசத்தை நாம் உணர வேன்டும்.
நாம் காணும் தோற்றம் நமக்கு யாக தெரிவதற்கு காரணம் நாம் பயின்ற மொழியேயாகும்.15 வயது பெண்ணை கண்டு ஒருவனுக்கு அன்பு பொங்கும்,இன்னொருவனுக்கு தவறான ஆசை வரும்.இருவர் காணும் reality யும் ஒன்று தான் appearance தான் வேறு.இரண்டுமே appearance எனும்போதும் உண்மை இதில் எங்கிருந்து வந்தது?

முடிவாக எந்த விடையையும் சொல்லி இக்கட்டுரையை செயற்கையாக முடிக்க விரும்பவில்லை.விடை தெரியா கேள்விகளோடு வாழ நாம் பழகிக்கொள்வது நல்லது என்பதை மட்டும் உணர்கிறேன்.

www.holyox.blogspot.com

Series Navigation

செல்வன்

செல்வன்