எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

அசன் மைதீன்


“பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை, குகையை, கானகத்தை என எதையும் காணவோ அதன் நுட்பங்களை அறிந்துகொள்ளவோ விருப்பமற்று இருக்கிறார்கள். இதைவிடவும் விளையாட்டிலும், விஞ்ஞானத்திலும் ஆர்வமிருப்பவன் இலக்கிய ரசனை அற்றவன் என்ற ஒரு பொய்யான கற்பிதம் வேறு தமிழ் எழுத்தாளர்களை பீடித்திருக்கிறது.  உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, பார்த்தல்மே, பிரைமோ லெவி போன்று சரித்திரத்தை மட்டுமல்லாது விஞ்ஞானத்தையே ஒரு புனைவாக உருமாற்றும் பின்நவீன எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட காலகட்டத்தில் நொய்ந்த வார்த்தைகளால் தமிழில் கவிதைகள், கதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. ”
திரு எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ்ச் சூழலில் அதிகப்பக்கங்களுடன் பிரமாண்டமான நாவல்கள் வந்து கொண்டிருக்க மிகக்குறைவான பக்கங்களுடன் நாவல் இலக்கணங்களையும் வரையரைகளையும் சர்ச்சைக்கு உட்படுத்தும் விதமாக இந்நாவல் அமைந்துள்ளது.பின்னை நாவல் என்று அறியப்படுகின்ற இந்நாவல் நாவலற்ற நாவலாகவும் பயோகிராபி நூலாகவும்,ஆய்வுரை நூலாகவும் ஹிஸ்டிரியோகிராபி நூலாகவும் தன்னளவில் பல்வேறு சாத்தியங்களை கொண்டிருக்கிறது.கதைகளில் இதுவரை யாருமே நினைத்திராத உடைபடும் புனைக்கதை எனும் பிரஜைல் பிக்ஸன்(fragile fiction) உத்திமுறையாக கையாளப்பட்டிருக்கிறது.

மேற்குலகில் நாவல் மரணித்துவிட்டது என்ற விவாதத்தை தொடர்ந்து இந்த பின்னை நாவல் வந்திருப்பது மீண்டும் ஒரு நாவல் குறித்த விவாதத்திற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது.நாவலின் இலக்கணத்தையும்,விதிமுறைகளையும் சர்ச்சைக்குட்படுத்தும் இந்த நாவல் நாவல் மீதான மறுவாசிப்பினை கோருகிறது.வடிவமும்,உள்ளடக்கமும் மாத்திரம் சர்ச்சைச் செய்யப்பட்ட காலம் போய் இலக்கிய வகையினங்களை சர்ச்சைக்குட்படுத்துவது ஜான்பார்த் சொல்லுவது போல இலக்கியம் நீர்த்து போய்க்கொண்டு இருக்கிறது என்று எண்ண வழிகோலும். குறிப்பாக நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. அது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்றுசேர்ந்த முயற்சி. அதாவது ஒரு இசைக்கோர்வையை போல நாவல் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதுபோல காரண காரியங்களாகத் தொடரும் சம்பவங்களோ, நிகழ்வுகளின் வழியாக மட்டும் வளரும் கதைமுறையோ இனி அவசியமற்றது. அதற்கு மாறாக காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறது என்பதையும் காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின்மீது ஒன்று படிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிதல் நாவலின் முக்கியப் பணியாகிறது. லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அரசியல் கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ நாவலின் வேலையல்ல. மாறாக அரசியலின் ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வது இங்கு நாவலின் முக்கிய பங்காகிறது. சரித்திரம் குறித்து நமக்கு கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதில்தான் புனைவு வெற்றிப்பெறுகிறது எனத் தெரிவிக்கின்றன பின்நவீனத்துவ நாவல்கள். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்த சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச்செய்து புனைவின் வழியாகவே உலகை எதிர்கொள்வதுமே நம் கால நாவல்களின் பிரதானப்பாடு என்றிவை வெளிப்படுத்துகின்றன. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான ஜோஸ் சரமாகோ (Jose Saramago) (இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்), 1995ல் எழுதிய “கல் தெப்பம்” (The Stone Raft), நம் காலத்திய முக்கியமான அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி என்ற பகுதியில் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரு சாலையில் சிறிய கோடு போல பிளவு ஏற்படுகிறது. அன்று ஒரு நாய் அதை கண்டு ஊளையிடுகிறது. இதை பற்றிய புகாரை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விஷயம் பெரிதாக வளர்ந்தவுடன் இதை வைத்துக்கொண்டு எப்படி சம்பாதிக்கலாம் என்று அதிகாரவர்க்கம் திட்டமிடுகிறது. பிரச்சனை தீரவேயில்லை. முடிவில் சாலையில் ஏற்பட்ட அந்த சிறிய பிளவு கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பள்ளமாக விரிந்துக்கொண்டே போய் ஒரு நாள் ஒரு தெப்பம் மிதந்துப்போவது போல தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது. இப்படி பிரிந்து செல்லும் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த தெப்பம் தனியே ஊர்ந்துப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்வு அந்நகரின் நிர்வாகத்திலும் தனிநபர்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தும் விளைவுகளும் பிரிந்துசெல்லும் தெப்பத்திலுள்ள கதாபாத்திரங்களின் மனோநிலையும் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு தேசம் ஏதாவது ஒரு காரணத்தினால் துண்டிக்கப்பட்டு பிரிந்துபோகும் அபாயங்களின் பின்னணியில் இது போன்ற வேதனைகளும் வன்முறைகளும் உள்ளன என்று முன்னும் பின்னுமாக ஊடாடி நகர்கிறது நாவல்.
நேர்முகம் ஒன்றில் “சரமாகோ” இந்த நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் “ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே உள்ளன. இருப்பினும் கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு வழியாக இரண்டாக பிளவுப்பட்டு வருகின்றன. உண்மையில் ஐரோப்பா கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளியின் வழியாக பிளவுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும் அவர்களின் அதிகார அரசியலும்தான்” என்கிறார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக பலமுறை சிபாரிசு செய்யப்பட்டவரும், இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளர் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படுபவருமான “மிலோராட் பாவிக்” பெல்கிரேடில் வசித்து வருகிறார். அவரது “கசார்களின் அகராதி” (Dictionary of the Khazars) என்ற நாவல் ஆண் பதிப்பு, பெண் பதிப்பு (male edition, female edition) என்று இரண்டு விதங்களில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு பதிப்புகளுக்கும் உள்ள வேறுபாடு ஒரேயொரு பத்தி மட்டுமே. அதாவது பதினேழு வரிகள் மட்டுமே.
இந்த நாவல் அகராதியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அகராதி கசார்கள் என்ற இனக்குழுவின் அறிவுத்திரட்டு போல புனையப்பட்டிருக்கிறது. மரபான அகராதியின் வடிவத்தில் இது எழுதப்பட்டிருப்பதால் எங்கிருந்தும் வாசிக்கும் சுதந்திரம் இந்த நாவலுக்கு ஏற்படுகிறது.
கசார்கள் என்ற இனக்குழு கருங்கடலுக்கு வடக்கேயுள்ள வோல்கா டெல்டா பிரதேசத்தில் வாழ்ந்த இனக்குழுவாகும். இவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டுவரை வலிமையான அரசாட்சி புரிந்து வந்தனர். கசார்களின் அரசனொருவன் தான் கண்ட கனவிற்கு பலன் சொல்வதற்காக தனது தேசத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களை சேர்ந்தவரகளையும் அழைக்கிறான். அதன்படி யூதமதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என்ற மூன்று மதப்பிரிவுகளின் பிரமுகர்களும் அரசனின் கனவை விளக்க முயற்சிக்கிறார்கள். மூவரில் எவருடைய விளக்கம் தன்னை திருப்தி செய்கிறதோ அவருடைய மதத்தை தனது தேசமே தழுவ செய்வதாக அந்த அரசன் அறிவிக்கிறான். இந்த சிறிய புனைக்கதையினை துவக்கமாகக் கொண்டு இந்நாவல் கசார்களின் வாழ்க்கை எப்படி மூன்றுவிதமான அறிவு முறையைக் கொண்டுள்ளது என்பதை தனித்தனி தொகுதிகளில் விவரிக்கிறது.
தனது எழுத்தைப் பற்றி “பாவிக்” குறிப்பிடுகையில் “எனது எழுத்து கட்டிடக் கலையும், ஓவியமும் ஒன்று சேர்ந்த இசைக்கோலம்” என்கிறார். நம்முடைய நாட்டார் கதைகளைப் போன்ற விந்தையான கதைப்போக்கும், கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைக் கற்பனையும், சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்வதும் இந்த நாவலின் தனித்துவமான அம்சங்களாகக் கொள்ளலாம். ஆக இந்த முன்னுரையில் இருந்து கொண்டு பின்னை நாவலுக்கு செல்லுவது வாசகர்களின் மனத்தடங்கல்களை மாற்றுவதாக அமையும்.
படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் தன்னை இருத்திக்கொள்ள விழையும் சிறந்த வாசகன், ஒரு படைப்பு மேதையின் புத்தகத்தைத் தன் இதயத்தால் வாசிப்பதில்லை. மூளையால் கூட பெரிதும் வாசிப்பதில்லை. மாறாக, தன் முதுகுத்தண்டின் மூலமே வாசிக்கிறான்.
– விளாதிமிர் நொபொகோவ்



A POST NOVEL
வெளியீடு:புதுப்புனல்;சென்னை
விலை:ரூ 45/-
பக்: 96

Series Navigation

அசன் மைதீன்

அசன் மைதீன்

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அறிவிப்பு


அண்மையில் மதுரையில் புதியகாற்று மாத இதழ்ின் சார்பாக சென்னையை சார்ந்த புதுப்புனல் புத்தக

வெளியீட்டாளர்கள் எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச்சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம்.ஜி.சுரேஷ், ‘புனைக்கதைகள் எழுதி எழுதித் தேய்ந்து விட்டன.தேய்ந்த கத்தியை மேலும் மேலும் தேய்த்து அதன் மொண்ணைத்தன்மையை நீக்கும் முயற்சி தான் இப்போது எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

முஜீப் ரஹ்மான் தனது ‘தேவதைகளின் சொந்தக் குழந்தை ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலம்,தமிழ்ப் புனைகதையை அதன் மொண்ணைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்க்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது.

காஃப்கா,ஆந்த்ரே ழீத்,கொர்த்தஸார்,ஜே.ஆர்.ஆர்.டோல்கின் என்று விரியும் இவரது வாசிப்பு, எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை தேடி அலைவதைக் காட்டுகிறது.இந்த அலைச்சலே இவரை இது போன்ற சிறுகதைகளை எழுதுவதற்க்கு உந்தி இருக்கிறது என்லாம்.

பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றான ‘புதியன களைதலும்,பழையன புகுதலும் ‘ என்ற செயல்பாடு இவரது கதைகளில் சாத்தியப்பட்டிருக்கிறது.நவீன எதார்த்த சிறுகதை மரபுக்கு எதிராக பழைய கட்டு கதை மரபை இவர் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்.இதனால் இக்கதைகள் பிரதியின் வேட்கையை ஒத்திப் போடுகின்றன.இந்த ஒத்திப்போடுதல் இக்கதைகளை நெடுநீளாய்வுக் கதைகளாக மாற்றுகின்றன.எனவே தன்னளவில் இத்தொகுப்பு தன்னை ஒரு பின் -நவீனச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக உருமாற்றிக் கொண்டு விடுகிறது.

இத்தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறுகதைகள் இருக்கின்றன.பதினாறும் பதினாறு விதமான கதைகள்.ஆனால் இவை எல்லாமே கட்டுக்கதை மரபுக்குரியவை.ஓயாமல் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யதார்த்தக் கதை குவியலிலிருந்து வெளிப்படும் புழுக்கத்தையும் வெப்பத்தையும் தணிக்க வந்த கதைகளாகவே இவை எனக்குக் காட்சியளிக்கின்றன.சில கதைகளில் போர்ஹேயின் வாரிசாக முயற்சித்திருக்கும் இவர் சில கதைகளில் உம்ப்ர்டோ ஈகோவின் சீடராக மாற முயற்சித்திருக்கிறார்.

இக்கதைகள் பெருங்கதையாடல்களைத் தகர்க்கின்றன.குறுங்கதையாடல்களை விளையாட்டாக உருவாக்கிக் காட்டுகின்றன.இந்துக் கலாச்சாரம்,இஸ்லாமிய கலாச்சாரம் என்ற மையமும்,விளிம்பும் கலைக்கப்பட்டு ஒருவித பொதுமையான கலாச்சார வகைமையைக் கட்டமைத்துக் காட்டும் காரியத்தை இக்கதைகள் செய்கின்றன.

இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் ஏற்கனவே சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.பரிசுகள் பெற்றிருக்கின்றன என்ற விஷயம் மனதுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.இல்லாவிட்டால் இது போன்ற முயற்சிகள் அருகிவிடக்கூடும்.

கடினமான கோட்பாடுகளை வாசிப்பவர்களுக்கு கதைகள் எழுத வராது.கதை எழுதுபவர்களுக்கு கோட்பாடுகளோடு

பரிச்சயம் இருக்காது.நண்பர் முஜீப்புக்குக் கோட்பாடுகளிலும் நல்ல தேர்ச்சி இருக்கிறது.கதை எழுதுவதும் கைகூடி வந்திருக்கிறது.இது ஒரு நல்ல இணைவு.

தமிழைப் பொறுத்தவரை பின் நவீனத்துவ எழுத்துக்களின் வருகை என்பது மிகக் குறைவே.கறாராகச் சொல்வதாக இருந்தால், தமிழில் ரமேஷ்-பிரேமினுடைய மற்றும் என்னுடைய பிரதிகள் நீங்கலாக, வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட பின்நவீனத்துவ பிரதிகள் என்று எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.இச்சூழலில் ஒரு நம்பிக்கையூட்டும் பின் நவீன எழுத்தாளராக முஜீப் ரஹ்மான் என் கண்களில் படுகிறார்.அவரது இத்தொகுப்பை ஒரு வெற்றி என்று என்னால்,தாராளமாகச் சொல்ல முடியும்.அவர் தொடர்ந்து இயங்கி மேலும் வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை. ‘

அய்ம்பதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கோணங்கி,ரமேஷ்(பிரேம்),தேவேந்திர பூபதி,யவனிகாஸ்ரீராம்,ஆதவன் தீட்சண்யா,உமாமகேஷ்வரி,சி.சொக்கலிங்கம்,ஹாமிம் முஸ்தபா,நட.சிவகுமார்,ஹெச்.ஜி.ரசூல்,எம்.ஜி.சுரேஷ்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

—-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு